Dec 30, 2009

மீதமிருக்கும் சொற்கள்!-எஸ்.ராமகிருஷ்ணன்

எஸ். ராமகிருஷ்ணன்  iகதாவிலாசம்
அசோகமித்திரன்


‘அலிபாபாவும் நாற்பது திருடர்களும்’ படத்தில் திருடர்களாக நடித்தவர்களில் எவரையாவது நினைவிருக்கிறதா? ‘கர்ணன்’ படத்தில் யுத்தக் காட்சியில் வரும் தேரோட்டிகளில் எவர் முகமா வது ஞாபகத்தில் இருக்கிறதா? நீங்கள் இதற்கான பதிலை யோசித்துக்கொண்டு இருக்கும் போது, நான் கடந்த காலத்தின் சாலையில் சில மைல் பின்னால் போய்விட்டு வந்துவிடுகிறேன்.

3661536473_c4cb3d4b2c_m

தேனாம்பேட்டையின் குறுகலான ஒரு பிள்ளையார் கோயில் சந்தில் இருக்கிறது ஒரு மரக் கடை. அந்தக் கடைக்கு யார் உரிமையாளர் என்று நான் பார்த்ததே கிடையாது. அவர் எங்கோ மார்த்தாண்டத்தில் இருக்கிறார் என்பார்கள். எப்போதாவது மரக் கடையில் ஊதுவத்தியும் பூமாலைகளுமாக சாமி படங்கள் புத்துணர்ச்சி பெறும் நாளில், அவர் ஊரிலிருந்து வந்திருக்கிறார் என்பது தெரியும். கடையைக் கவனித்துக் கொள்வதற்கு கேசவன் என்ற நண்பன் பொறுப்பாக இருந்தான்.

கேசவன் கடையை விட்டு வெளியே போவதேயில்லை. ஆனால், அவனுக்கு எல்லாவற்றையும் தெரிந்துகொள்ள  வேண்டும் என்ற ஆசை அதிகமாயிருந்தது. இதற்காக சினிமா, இலக்கியம், அரசியல் என்று சகல தரப்பு நண்பர்களையும் இரவு நேரத்தில் கடைக்கு வரச் சொல்லி டிபன் வாங்கிக் கொடுத்து, கைச்செலவுக்குக் காசும் கொடுத்துப் பேசிக்கொண்டு இருப்பான். பேச்சு பல நேரங்களில் பின்னிரவைக் கடந்து சென்றுவிடும்.
அந்தக் கடையில் நடராசன் என்ற வயதானவர் வேலைக்கு இருந்தார். வயது அறுபதைக் கடந்திருக்கும். ஒடிசலான தோற்றம். பழுப்படைந்து போன வேஷ்டியை உடுத்தியிருப்பார். டீ வாங்கி வருவதற்கும் சிகரெட், பழம் வாங்கி வருவதற்கும் அரை மணிக்கொரு தரம் நடந்துகொண்டு இருப்பார். இரவு எத்தனை மணியானாலும் தனது பழைய சைக்கிளில் ஏறிச் சென்று எங்கிருந்தாவது சைனா டீ வாங்கிக்கொண்டு வருவார். மற்றபடி அவருக்கென்று மரக் கடையில் ஒரு படிக்கட்டு இருந்தது. அதில் உட்கார்ந்தபடி மற்றவர்கள் பேசுவதைக் கேட்டுக்கொண்டே இருப்பார். யாரிடமும் அவர் பேசி நான் பார்த்ததே இல்லை. எப்போதாவது சில நேரம் மறைவாக அவர் சிகரெட் புகைப்பதைப் பார்த்திருக்கிறேன்.

ஒரு இரவு கேசவனின் கடையில் பேச்சு நீண்டு, மணி மூன்றாகிவிட்டது. டீ வாங்குவதற்குப் போன நடராசன் திரும்பி வந்தால் டீயைக் குடித்துவிட்டு சபை கலைந்துவிடலாம் என்று யாவரும் காத்துக் கொண்டு இருந்தோம். நேரம் கடந்துகொண்டு இருந்ததே தவிர, அவர் வரவே இல்லை. ஏமாற்றத் துடன் கேசவன் மோசமான கொச்சை வார்த்தைகளால் நடராசனைத் திட்டியபடி கடையை மூடிவிட்டு தனது ஸ்கூட்டரை எடுத்துக் கொண்டு புறப்பட்டான்.

நானும் இன்னொரு நண்பனும் ஆட்டோ கிடைக்காமல் நடந்தே திருவல்லிக்கேணி அறைக்குப் போவது என்று நடக்கத் துவங்கினோம். ராயப்பேட்டையை நெருங்கும்போது மணிக்கூண்டு பக்கமிருந்து சைக்கிளில் வந்துகொண்டு இருந்தார் நடராசன். அவரைப் பார்த்ததும் நண்பன் டீ குடிக்கும் ஆசையில் ‘நடராசன்!’ என்று கத்திக் கூப்பிட்டான். அவர் கவனிக்காதது போல சைக்கிளில் போய்க்கொண்டு இருந்தார். ‘ஏய் நடராசன்!’ என்று அவன் கத்தினான். அவர் வேகவேகமாக அருகில் வந்து நின்று கோபத்துடன், ÔÔபோடா மசிரு... நடராசன் என்ன உன் வீட்ல சாணி அள்ளிப் போடுற வேலையா செஞ்சுக்கிட்டு இருக்கான். உங்களுக்கு எல்லாம் என்னடா தெரியும். நானாவது உழைச்சுச் சாப்பிடுறேன்... நீங்க எல்லாம் நக்கித் தாண்டா பிழைக்குறீங்க!ÕÕ என்று ஆவேசமாக சைக்கிளில் மாட்டியிருந்த ஃபிளாஸ்கை எடுத்து சாலையில் வீசியெறிந்தார். அதிர்ச்சியில் நண்பனது முகம் வெளிறிப்போனது. அவருக்கு என்ன ஆயிற்று என்று தெரியவில்லை... சைக்கிளை எடுத்துக்கொண்டு தேனாம்பேட்டைக்குப் போய்விட்டார்.

இரண்டு நாட்களுக்குப் பிறகு கேசவ னின் கடைக்குப் போனபோது எப்போதும் போல நடராசன் அதே படிக்கட்டில் உட்கார்ந்திருந்தார். அவர் முகத்தில் சலனமேயில்லை. நானும் நடந்த எதை யும் காட்டிக்கொள்ளவே இல்லை.

அன்றிரவு நான் அறைக்குத் திரும்பும் போது நடராசனும் தனது சைக்கிளை உருட்டிக்கொண்டு என் கூடவே வந்தார். இருவரும் எதையும் பேசிக் கொள்ளவேயில்லை.
அறையை நெருங்கும்போது அவர் தணிவான குரலில், ‘‘தெரியாமப் பேசிட் டேன் தம்பி. மன்னிச்சிருங்க. அன்னிக்கு டீ வாங்கப் போன இடத்திலே சந்தேகப்பட்டு, என்னை போலீஸ் பிடிச்சு நாலஞ்சு அடி அடிச்சு, ‘நீ யார்டா... என்ன வேலை செய்றே?’னு கேட்டாங்க. என்ன சொல்றதுனு தெரியலை. பேசாம நின்னுட்டே இருந்தேன். ரெண்டு மணி நேரம் ஜாம் பஜார் ஸ்டேஷன்ல உட்கார வெச்சுட் டாங்க. அவமானமாப் போச்சு. அந்தக் கோபத்துலதான் உங்களைத் தப்பா பேசிட்டேன்’’ என்றார்.

அப்போதுதான் உறைத்தது. நடராசன் எந்த ஊர், எதற்காக இந்த வேலை செய்கிறார் என்று இத்தனை நாள் எதையும் கேட்டதே இல்லையே. இருவரும் மேன்ஷன் படிக்கட்டில் உட்கார்ந்துகொண்டோம். ‘‘உங்களுக்கு எந்த ஊரு? எப்போ மெட்ராஸ§க்கு வந்தீங்க?’’ என்று நடராசனைக் கேட்டேன். அவர் தலை கவிழ்ந்தபடியே சொன்னார்... ‘‘சார்! நீங்க ‘வஞ்சிக் கோட்டை வாலிபன்’ பார்த்து இருக்கீங்களா? ‘அலிபாபாவும் நாற்பது திருடர்களும்’ படத்தில் வரும் திருடங்க யாரையாச்சும் ஞாபகமிருக்கா?’’

எதற்குக் கேட்கிறார் என்று புரியா மல் பார்த்துக்கொண்டு இருந்தேன். அவர் குரல் கரகரத்தது... ‘‘நாப்பத்து மூணு படத்துல நடிச்சிருக்கேன் சார். எல்லாம் துணை வேஷம். குதிரையில வர்ற சேவகன், ஜெயில்ல கிடக்கிற கைதி. குதிரை வண்டிக்காரன். இப்படி இருபது வருசம் கோடம்பாக்கத்தைச் சுத்திட்டே இருந்துட்டேன். ஒரு படத்துலகூட ஒரு வார்த்தை பேசுனது கிடையாது.

ஊமைப்படம் காலம் முடிஞ்சு எப்பவோ பேசும் படமா மாறிருச்சு. ஆனா, என்னை மாதிரி ஊமையா, படத்துல ஒரு வசனம்கூடப் பேசாம நடிச்சுக்கிட்டு இருக்கிறவங்க நூத்துக் கணக்கிலே இருக்கிறோம். ‘வள்ளி திருமணம்’ நாடகத்திலே வேலன், வேடன், விருத்தன்னு மூணு வேஷம் கட்டிப் பாடினவன் சார். ‘ராஜபார்ட் நடராசன்’னு சொன்னா அவ்வளவு பேரு.

சினிமாவுல போனா கிட்டப்பா, மகாலிங்கம் மாதிரி வந்திரலாம்னு சொன்னாங்க. என் நேரம்... படத்துல ஒரு வார்த்தை பேசுறதுக்கே சான்ஸ் கிடைக்காமப் போயிருச்சு. நடிக்க வந்த இடத்துல எப்படியோ பழக்கமாகி, டான்ஸ் ட்ரூப்ல உள்ள சரோஜானு ஒரு பொண்ணைக் கட்டிக்கிட்டேன். குடும்பமும் சரிப்படலே. வாலிபத்துலே பாட்டு பாட்டுனு பெத்தவங்களைக் கூட கவனிக்காம அலைஞ்சேன். இன்னிக் குப் பாருங்க... கிழிஞ்ச காகிதத்துக்கு இருக்கிற மதிப்பு கூட எனக்குக் கிடையாது!’’

இருவரும் மௌனமாக உட்கார்ந் தோம். நட்சத்திரம் ஒன்று வானில் எரிந்து மறைந்தது.
‘‘வள்ளி திருமணப் பாட்டு இப்பவும் ஞாபகமிருக்கா?’’ என்று கேட்டேன். கவிழ்ந்த தலை நிமிர்ந்து கொண்டது. ‘மேயாத மான்... புள்ளி மேவாத மான்’ என்ற பாடலை அவர் தனது நடுங்கும் குரலில் பாடத் துவங்கினார். பாட்டு பாதியில் உடைந்து சிதறியது. அவர் வாயைப் பொத்திக்கொண்டு அழுதார். பிறகு, வேஷ்டியால் முகத்தைத் துடைத்த படி எழுந்து தன் சைக்கிளை எடுத்துக் கொண்டு புறப்படத் தயாரானார்.

நடராசனைக் கட்டியணைத்துக் கொள்ள வேண்டும் போலிருந்தது. முதல் முறையாக ‘நடராச அண்ணே!’ என்று கூப்பிட்டேன். அவர் சைக்கிளை உருட்டியபடியே, ‘‘தப்பா ஏதாவது பேசியிருந்தா மன்னிச்சிருங்க தம்பி!’’ என்று சொல்லியபடி இருளில் போய் மறைந்தார்.

காலம், ஆசைகளைக் கரையானைப் போல் தின்று தீர்த்துவிடுகிறது. ஜெயிக்கவும் முடியாமல் திரும்பிச் செல்லவும் முடியாமல் தவிக்கும் மனிதர்களின் கோபமும் வேதனையும் நகரமெங்கும் புதைந்து கிடக்கின்றன. விருப்பம் தோற்றுப் போகும் போது கிடைப்பதைப் பற்றிக் கொண்டு வாழப் பழகிவிடுகிறார்கள். ஆனால், அடிமனதில் ஒரு பூரானைப் போல ஆசைகள் சுருண்டு கிடக்கின்றன. என்றாவது ஒரு நாள் தமது திறமைகள் அங்கீகரிக்கப் படக்கூடும் என்ற நம்பிக்கை மட்டுமே அவர்களிடம் இருக்கிறது.
தமிழ் நாவல்களிலே சினிமா உலகின் நிஜத்தைத் துல்லியமாக எடுத்துக்காட்டும் ஒரேயரு நாவல் மட்டுமே உள்ளது. அது அசோகமித்திரனின் கரைந்த நிழல்கள்.

தமிழ் சினிமாவின் உண்மையான வரலாறு அந்த நாவலில்தான் உள்ளது. சினிமாவில் சந்தர்ப்பங்கள் நெருங்கிய மனிதர்களைக் கூட எப்படி எல்லாம் ஏமாற்றச் செய்கின்றன என்பதையும், ஒரு திரைப்படத்தின் வெற்றிக்கும் தோல்விக்கும் பின்னால் எத்தனை பேரின் உழைப்பும் வாழ்க்கையும் பின்னப்பட்டிருக்கிறது என்பதையும் அந்த நாவல் முழுமையாக வெளிப்படுத்துகிறது.

சினிமா உலகின் நிஜத்தை முகத்தில் அறைவது போலச் சொல்லும் அசோக மித்திரனின் ஒரு சிறுகதை இருக்கிறது. அக்கதை ‘புலிக் கலைஞன்’. ‘காலமும் ஐந்து குழந்தைகளும்’ என்ற அசோக மித்திரனின் சிறுகதைத் தொகுப்பில் அது இருக்கிறது. நானே இருபது முறைக்கும் மேலாகப் படித்திருக்கிறேன். நடிக்க ஆசைப்பட்டு வரும் இளம் நண்பர்கள் பலருக்கும் படிக்கத் தந்திருக்கிறேன். படித்து முடித்த பலரும் பெருமூச்சுடன், வார்த்தைகள் அற்ற நிலையில் தலை கவிழ்ந்து கொள்வதையும் கண்டிருக்கிறேன்.

சாகித்ய அகாதமி பரிசு பெற்ற அசோகமித்திரன் தமிழ் இலக்கியத்தின் சாதனையாளர். தமிழ் இலக்கியத்துக்கு உலக அளவில் அங்கீகாரம் பெற்றுத் தந்தவை இவரது கதைகள். அமெரிக்க இலக்கியங் களைத் தமிழில் அறிமுகம் செய்த தனிப்பெருமை இவருக்குரியது. இவரது நாவல்கள் ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள் ளன. ஆங்கிலத்திலும் தொடர்ந்து எழுதி வரும் அசோகமித்திரன், அயோவா பல்கலைக்கழகத்தில் எழுத்தாளர்களுக்கான சிறப்புப் பயிலரங்கில் கலந்து கொண்டவர்.

இவரது சிறுகதைகள் மொத்தமாகத் தொகுக்கப் பட்டு இரண்டு தொகுதிகளாக வெளிவந்துள்ளன. தற்போது இவர் எழுதிய கட்டுரைகள் இரண்டாயிரம் பக்க அளவில் இரண்டு தொகுதிகளாக வெளிவந்துள்ளன. பதினெட்டாவது அட்சக்கோடு, தண்ணீர், ஆகாசத்தாமரை, ஒற்றன், மானசரோவர், போன்றவை இவரது முக்கிய நாவல்கள்.
அந்தக் கதை ஒரு அனுபவம். கண்ணாடிக் கோப்பை கை தவறி விழும்போது மனது கொள்ளும் பதைபதைப்பு போல உணர்ச்சி நிலை. கதையின் பிரதான பாத்திரம் காதர். அவ னது பாஷையில் சொல்வதானால் ‘டகர்பாயிட்’ காதர். அதாவது (டைகர் ஃபைட்) புலிச்சண்டை போடும் காதர்.

புலி வேஷம் போடுவதில் அவன் சாமர்த்தியசாலி. ஒரு நாள் சினிமா கம்பெனி ஒன்றுக்கு நடிப்பதற்கு வேஷம் கேட்டுச் செல்கிறான் காதர். வேஷம் இல்லை என்று துரத்தப் படுகிறான்.

அவனோ தனது திறமையைப் பார்த்துவிட்டு வேஷம் தருமாறு சொல்லியபடி கையோடு கொண்டு வந்திருந்த புலித் தலை முகமூடியை மாட்டிக்கொண்டு சட்டென நான்கு கால் பாய்ச்சலில் நாற்காலி மீது பாய்ந்து தாவி புலி போல குலை நடுங்கும் முறையில் கர்ஜனை செய்கிறான். நிஜப் புலியே நேரில் வந்தது போலிருக்கிறது. அவன் உடலில் புலியின் கோடுகள் தோன்றி மறைவது போலிருக்கிறது.

மேஜை, நாற்காலி என தாவித் தாவி, கடைசியில் மின்சார விசிறி உயரத்துக்கு எகிறி தரையில் விழுகிறான். ஆவேசம் அடங்கி யது போல அவன் உடல் தளர் கிறது. புலி வேஷம் கலைந்து, ‘எனக்கு ஏதாவது ரோல் நடிக்க வாய்ப்பு தருவீர்களா?’ என்று மன்றாடும் மனிதனின் உருவமாக மாறுகிறது.

சினிமா கம்பெனிக்காரர்களுக்கு அவனை என்ன செய்வதெனத் தெரியவில்லை. படப்பிடிப்பின்போது வேஷம் தருவதாகச் சொல்லி, சாப்பிட்டுப் போகும்படி இரண்டு ரூபாய் சில்லறையைத் தேடி எடுத்துத் தரு கிறார்கள். அவன் காசை வாங்க மறுத்துவிடு கிறான். சில மாதங்களுக்குப் பிறகு, வேஷம் தருவதற்காக அவனைத் தேடி கடிதம் போடும் போது, அவன் அந்த விலாசத்தில் இல்லை என்று கடிதம் திரும்பி விடுகிறது என முடிகிறது கதை.

எங்கே போனான் அந்தப் புலிக் கலைஞன்? அவனது குடும்பம் என்ன ஆனது? சினிமாவில் நிஜ யானையே கோமாளிபோல டவுசர் அணிந்து பைக் ஓட்டுவதற்கும், பந்து போடுவதற்கும் பழக்கப்படுத்தப் பட்டுவிட்ட சூழலில் புலிக்கலைஞன் என்னதான் செய்வான்? புலியாக வாழ்வதற்குப் புலிகளா லேயே முடியவில்லை என்ற நிஜம் அவனுக்கு இந்நேரம் புரிந்திருக்குமா? வாழ்க்கையின் பற்சக்கரங்கள் கருணையற்று அவனை மென்று துப்பிவிட்டன. ஆனாலும், அவன் காலத்தின் மனசாட்சியைப் போல அழிவற்று இருந்துகொண்டே இருக்கிறான்.

புலிக்கலைஞனைப் படிக்கும் போதெல்லாம் இது கற்பனையாக இருந்துவிடக் கூடாதா என்று மனது ஏங்குகிறது. ஆனால், நிஜம் புலியின் கண்களைப் போல கதையெங்கும் மினுங்கிக்கொண்டு இருக்கும்போது, எப்படி என்னை நானே ஏமாற்றிக் கொள்வது?
ஜெயித்தவர்களின் கதைகள் ஒவ்வொன்றும் ஒருவிதத்தில் இருக்கின்றன. தோற்றுப் போனவர்களின் கதையோ பெரும்பாலும் ஒன்று போலத்தான் இருக்கிறது. தோல்வி என்று அதை சொல்ல முடியுமா எனத் தெரியவில்லை. புறக்கணிப்பின் பெயர் தோல்வியா என்ன?

Dec 27, 2009

திரை - கு.ப.ரா

கு.ப.ரா

தான் வந்து இரண்டு நாட்களாகியும் ராஜம் தன்னிடம் பேசக்கூட மாடிக்கு வராதது அவனுக்கு மிகவும் வியப்பாக இருந்தது. தான் ஒரு விதமாகவும் பிசகு செய்ததாக அவனுக்குத் தெரியவில்லை. ஆகையால் அவள் கோபித்துக் கொண்டிருப்பாள் என்பதற்கும் இடமில்லை. அதுவுமின்றித் திருமண மான பிறகு, முதல் முதலாக அப்பொழுதுதான் அவளைப் பார்க்க வந்திருந்தான். அதற்கு முன் நேரில் கண்டு பேசினதே இல்லை. ஆகையால் எந்தக் காரணத்தைக் கொண்டும் அவள் அதற்குள் கோபித்துக் கொள்ள முடியாது.

modern-art-10

ஒருவருக்கொருவர் இடைவிடாமல் கடிதங்கள் எழுதிக்கொண்டார்கள். அவற்றில் அவ்வளவு ஆர்வத்துடனும் உணர்வுடனும் எழுதிவிட்டு, நேரில் வந்தபோது ஏன் அவள் அப்படி இருந்தாள் என்பதுதான் அவனுக்குப் புரியவில்லை. தின்பண்டம், பலகாரம், காப்பி எல்லாம் மாமியார் கொண்டுவந்து வைத்தாள். தாம்பூலம் மடித்து வந்தது, அதை யார் மடித்தார்கள்?

மாடி அறையில் அவன் தனியாக எவ்வளவு நேரந்தான் அவளை எதிர்பார்த்துக் கொண்டு இருப்பது? பகலெல்லாம் எதிர்பார்த்தான்; இரகசியமாக வருவாளோ என்று இரவில்கூட வெகுநேரம் விழித்துக் கொண்டு படுக்கையில் கிடந்தான்.

கடிதத்தில் வெகு துணிச்சலாக எழுதிவிட்டாள். நேரில் கண்டவுடனே வெட்கம் மேலிட்டு விட்டது போல் இருக்கிறது! ஒருவேளை அப்படி அசடுபோல் கடிதத்தில் எழுதி விட்டோமே என்று பயந்தே தன்னிடம் வராமல் இருந்தாளோ என்று எண்ணினான்.

என்ன சமாதானம் செய்து கொண்டாலும் அவள், அவ்வளவு அருகில், தன்னிடம் வராமல் இருந்ததன் காரணம் அவனுக்கு விளங்கவே இல்லை.

இரண்டாவது நாள் இரவு எட்டு மணி. தொலைவில் கோவிலிருந்து திருவிழாக் கொட்டு முழக்குச் சத்தம் கேட்டது. தெருவில் பெண்கள் கும்பல் கும்பலாகக் கோவிலுக்குப் போய்க் கொண்டிருந்தார்கள். சாளரம் வழியாக உள்ளே விழுந்த வெண் நிலவு அவனது இருதயத்தை வலைபோட்டு வெளியே இழுப்பதுபோல இருந்தது. வெளியுலகத்து இன்பம் அவனை 'வா, வா' என்று அழைத்தது. ஆனால் அப்பொழுது அவனுக்கு அதெல்லாம் காதில் ஏறவில்லை. அந்த அழகு அவன் கண்களில் படவில்லை. அவன் உள்ளம் முழுவதும் ராஜத்தின் மேல் இருந்தது. அவள் எழுதின கடிதங்களின் வாக்கியங்களும் அவளுடைய முகமும் கண்களுமே அவன் முன் நின்றன.

அன்றிராவாவது கட்டாயம் ராஜம் தன்னிடம் வருவாள் என்று எண்ணினான். நடுப்பகல் வேடிக்கையாக மைத்துனனைப் பார்த்து, "உன் அக்கா இந்த ஊரில்தானே இருக்கிறாள்?" என்று கேட்டான். அதைக் கேட்டுக் கொண்டிருந்த மாமியார்கூடக் கொஞ்சம் பதறிப் போய் ஏதோ குசுகுசுவென்று யாருடனோ பேசினாள். யாருடனோ என்ன, 'அவளுடன்' தான். ஆகையால் தன்னுடைய மனநிலையை ஒருவாறு அவர்கள் அறிந்திருந்ததால் அன்றிரவு கட்டாயம் வருவாள் என்றே எதிர் பார்த்தான். முதல் நாளிரவு பாவம், வெகுநேரம் எதிர்பார்த்துக் கொண்டிருந்த சிரமத்தால் தன்னை அறியாமல் தூங்கிப் போய்விட்டான். மறுநாள் காலையில் அவனுக்குக் கோபமும் துக்கமும் வந்து, காப்பி வேண்டாம் என்று சொல்லி விடலாமா என்றுகூட எண்ணினான்.

கீழே வீணை மீட்டும் சத்தம் கேட்டதும் சற்று நேரத்திற்கெல்லாம் சங்கராபரணத்தில் "தாரி சூசுசுன்னதி நீது ப்ரியா" என்ற ஜாவளியை யாரோ பாடிக்கொண்டே வாசித்தார்கள். வேறு யார்? அவள்தான்!

"உன் காதலி உன்னை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறாள், உன் வழி நோக்கிக் கொண்டிருக்கிறாள்" என்று பொருள்படத் தொடங்கிய அந்தப்பாட்டு, படுக்கையறையின் அலங்காரத்தைக் கவர்ச்சி கரமாகச் சித்தரித்தது. இசையும் பாட்டுமாகக் கலந்து அவனது உள்ளத்தை உருக்கின.

"ஆகா! நல்ல ரசிகையாக அல்லவா இருக்கிறாள் ராஜம்! ஏன் இருக்க மாட்டாள் அவளுடைய கடிதங்களே அவ்வளவு கதையாக இருந்தனவே! என்ன வாசிப்பு, என்ன சாரீரம். இதற்கு மேற்பட்ட இன்பம் கிடையா... ஆனால் இதோடு அவளுடைய வாய் வார்த்தை ஒன்றை, என் முன்பு, என் ku.ba.ra பக்கத்தில், நான் கேட்டால்... இன்பத்தின் மின்னொளியைப் பாய்ச்சும் அவளுடைய கைபட்டதும் எழும்பும் இனிமை என்னுள் பாய்ந்தால் என்ன பேறு பெறுவேன்! ராஜம் வேண்டுமென்றுதான் இப்படி ஏக்கத் தீயிட்டு என் உள்ளத்தை வாட்டுகிறாளோ? எதற்காக இந்தச் சோதனை? என் கடிதங்களில் காணவில்லையா அவள், என் உள்ளத்தின் வேட்கையை? பெண்ணின் கொடுமை உன்னிடங்கூடத்தான் இருக்கிறது. உன் இங்கிதமும், புத்தியும், தேர்ச்சியும், ஈரமும் எங்கே? உன் கடிதங்களிலேயே நின்றுவிட்டனவே அவை! இல்லை, இது சரியன்று. ராஜம் உடனே வீணையைக் கீழே வைத்துவிட்டு என்னிடம் வா! அந்த வீணை எதற்கு உனக்கு? என் இருதய வீணையை மீட்டி வாசி, சுருதி கலைந்து கிடக்கிறேன் நான். குழைவற்றிருக்கிறேன். உன் இழைக்கும் விரல்களால், என்னைச் சுருதி கூட்டிச் சரி செய்து, உன் விரல் விந்தையால், விண்ணொலி கொள்ளச் செய்" என்று உணர்ச்சி மேலிட்டவனாய்த் தனக்குள்ளேயே பிதற்றிக் கொண்டிருந்தான் அவன்.

"உன் காதலி வழி நோக்கிக் கொண்டு கத்திருக்கிறாள்" என்ற பல்லவி திரும்பத் திரும்ப ஓர் ஏக்கக் குரலாக வந்து அவன் காதில் தாக்கிற்று. அவனுக்கு அங்கே இருக்க முடியவில்லை. எழுந்து கீழே இறங்கிப் போனான்.

முற்றத்திலிருந்த மாடிப்படியின் உச்சியில் நின்று கொண்டு கூடத்தைப் பார்த்தான். அங்கே கையில் வீணையுடன் உட்கார்ந்திந்தாள்! ராஜம் அல்ல! அவளுடைய தமக்கையாகத்தான் இருக்க வேண்டும். ஆமாம் அவள் பிறந்த வீட்டில் இருப்பதாகத்தான் சொன்னார்கள். அவள் ஒரு வருஷத்திற்கு முன்பு கணவனை இழந்தவள், பாவம்! அவள் கதை ஒரு சோக நாடகம். எல்லோரும் கதை கதையாகச் சொன்னார்கள். நிரம்பக் கெட்டிக்காரி: அழகு என்றால் அப்படி; கணவன் ஒரு குடிகாரன்; ஈரல் வீங்கி இறந்தான். குடும்பம் என்று அவள் நடத்தி அறியாள்.

அவளா வீணை வாசித்தது! ஏன் அப்படி வாசித்தாள்? வீட்டில் மற்ற எல்லோரும் எங்கே? கோவிலுக்குத்தான் போயிருக்க வேண்டும் - ராஜம் கூட! ஒருவரும் வீட்டில் இல்லாதபொழுது, ஏன் இவள், அவன் கேட்கும்படி வீணையை எடுத்து வைத்துக் கொண்டு இப்படி உருக வேண்டும்?

திடீரென்று அவன் உலுக்கி விழுந்தான். ஒரு வேளை கடிதங்களெல்லாம் இவள் எழுதினவைதாமோ? ராஜத்தின் பெயரை வைத்து இவள்தான் அப்படி உள்ளத்தைக் கொள்ளை கொண்ட முறையில் எழுதினாளோ? ஆமாம், அப்படித்தான் இருக்க வேண்டும்! இல்லாவிட்டால் அவ்வளவு எழுதினவள் இப்போது அருகில்கூட வராமல் இருப்பாளா?

மடமடவென்று அவன் மாடிப்படி இறங்கினான். வீணையும் கையுமாக உட்கார்ந்திருந்த சரசுவதி சட்டென்று வீணையைக் கீழே வைத்துவிட்டு எழுந்திருந்தாள், உள்ளே போய் மறைந்து கொள்ள. அதற்குள் அவன் அவள் அருகில் வந்துவிட்டான். ஒன்றும் செய்யாமல் அப்படியே திகைத்து நின்றாள் சரசுவதி.

கூடத்து மின்சார விளக்கின் வெளிச்சத்தில் அவளது உருவம் நன்றாகத் தெரிந்தது. அவளது உடம்பும் உடையும் ஒரே வெள்ளையாக இருந்தன. தலைமயிரை அசிரத்தையாக முடிந்திருந்தாள். நெற்றியில் குங்குமம் இல்லாததால் அவளது முகம் காலை நேரத்துச் சந்திரன் போல வெளுத்த சோபையற்று இருந்தது. ஆனால் சிறிது நேரத்துக்கு முன்பு வாசித்த பாட்டால் ஏற்பட்ட உணர்ச்சிப் பெருக்கில் அதில் இருந்த சோகம் கொஞ்சம் மறைந்து சற்றே ஒளிர்ந்தது.

"நீதானா கடிதங்கள் எழுதினது?" என்று அவன் உடனே கேட்டான்.

"இல்லை, - அவள்தான் எழுதினாள் - அதாவது" என்று ஒன்றும் மேலே சொல்ல முடியாமல் திகைத்தாள் சரசுவதி.

"உண்மையைச் சொல்லிவிடு!"

"அதாவது அவள் சொன்னாள் - நான் எழுதினேன்" என்று அவள் இழுத்தாள்.

"நிஜமாக!"

"அவள் உள்ளம் சொல்லிற்று, நான் பார்த்து எழுதினேன்."

"எப்படித் தெரியும்?"

"எப்படியா -" என்று கேட்டுச் சற்றுத் தயங்கினாள் சரசுவதி.

பிறகு திடீரென்று அவள், "எப்படியா? நான் நினைத்தது போலத்தானே அவள் நினைத்திருக்க வேண்டும்? ஆகையால் அப்படியே எழுதிவிட்டேன்" எனச்சொல்லிவிட்டு, சொல்லக்கூடாததைச் சொல்லிவிட்டது போலவும் கதிகலங்கினவள் போலவும் நாலு புறமும் பார்த்தாள்.

"மாப்பிள்ளை! நீங்கள் இங்கே நிற்கக்கூடாது. மாடிக்குப் போய்விடுங்கள். அவர்கள் வந்து விடுவார்கள். குடி முழுகிப்போகும்" என்று கெஞ்சினாள் பிறகு.

அவன் தீர்மானமாக அங்கே நின்றான்.
"என்னை ஏன் கூப்பிட்டாய்?" என்று ஏக்கப் பார்வையுடன் கேட்டான்.

"கூப்பிட்டேனா! ஐயோ! இல்லையே! தெரியாமல் செய்திருந்தால் மன்னியுங்கள் - இல்லை - கூப்பிடவில்லை. பிசகு!" என்று சரசுவதி நிலை தவறினவள் போல் பதற்றத்துடன் பேசினாள்.

"ராஜத்தின் மூலமாக -" என்று அவன் ஆரம்பித்தான்.

"இல்லை - வேண்டாம் - எல்லாம் மறந்துவிடுங்கள் தவறு"

"எப்படி மறப்பது சரசுவதி? மறக்கும்படியாகவா எழுதியிருந்தாய் நீ?"

"மன்னியுங்கள்; பிசகு செய்துவிட்டேன் இப்படி ஆகுமென்று தெரியாது!"

"நான் கட்டை என்று எண்ணினாயா?"

"தப்பிதம், தப்பிதம்!" என்று வெறி பிடித்தவளைப் போல சொன்னாள்.

"தப்பிதம் இல்லை; சரசுவதி, உண்மையை எழுதினாய், அல்லவா?"

அவள் குற்றவாளியைப்போல் நடுநடுங்கினாள், உணர்ச்சி மேலிட்டு அழலானாள்.

"சரசுவதி! பயப்படாதே, அம்மா! நீ ஒன்றும் குற்றம் செய்யவில்லை. உண்மையாகவே கட்டைபோல இருந்த என்னைச் செப்பனிட்டு வாத்தியமாக்கி விட்டாய்!"

"இல்லை, இல்லை. அப்படிச் சொல்லாதேயுங்கள்! ராஜந்தான்! நீங்கள் அவள் சொத்து. அவள்தான் உங்களை உருக்க உரிமை பெற்றவள். அவள் எழுதியதாகவே எண்ணுங்கள்."

"இந்தப்பாட்டு -"

"அவள் பாடியதுதான். தேர்ச்சி இருந்தால், அறிந்திருந்தால், அவளே இப்படிப் பாடியிருப்பாள்."

"பாடியிருப்பாள்! - தேர்ச்சியிருந்தால்தானே? சரசுவதி, தைரியமாக நீதான் அவற்றை எழுதினது சொல்லேன், என்ன பிசகு?"

"ஐயோ, கூடாது."

"ஏன்?"

"நான் - நான் - எனக்குக் கை ஏது எழுத? எனக்கு வாய் ஏது - பாட? அவள்தான் என் கை, அவள் தான் என் வாய். அவள் மூலந்தான் எனக்கு வாழ்க்கை. அவள் மூலந்தான் என் உயிர்."

"இன்னும் வேறொன்றும் இல்லையா?" என்று அவன் இளகிக் கொண்டான்.

"உண்டு - அதையும் சொல்ல வேண்டுமா என் வாய் திறந்து?" என்று சரசுவதி ஒருவிதமான அமைதியுடனும் ஏக்கத்துடனும் தன்னையே மறந்து கேட்டுவிட்டாள்.

கோவிலுக்குப் போயிருந்தவர்கள் திரும்பி வந்து வாசற் கதவைத் தட்டினார்கள்.

அவன் மாடிக்குப் போனான். அவள் உள்ளே போனாள்.

இருவருக்கும் நடுவில் மறுபடியும் திரை வந்து கூடிற்று.

ஆனால் திரை என்ன அறியும்?

"ராஜம்! மாடிக்குப் போ!" என்றாள் சரசுவதி, சற்று நேரம் கழித்து.

********

நன்றி:   விட்டல் ராவ் தொகுத்த 'சிறந்த தமிழ்ச் சிறுகதைகள்' என்ற தொகுப்பிலிருந்து. வெளியீடு: கலைஞன் பதிப்பகம், 10, கண்ணதாசன் சாலை, தியாகராய நகர், சென்னை - 600 017

Dec 26, 2009

கயிற்றரவு - புதுமைப்பித்தன்

புதுமைப்பித்தன்
"கள்ளிப்பட்டியானால் என்ன? நாகரிக விலாசமிட்டுத் தொங்கும் கைலாசபுரம் ஆனால் என்ன? கங்கையின் வெள்ளம்போல் காலம் என்ற ஜீவநதி இடைவிடாமல் ஓடிக்கொண்டிருக்கிறது... ஓடிக்கொண்டே இருக்கும். தயிர்க்காரி சுவரில் புள்ளி போடுகிற மாதிரி, நாமாகக் கற்பனை பண்ணிச் சொல்லிக்கொள்ளும் ஞாயிறு, திங்கள், செவ்வாய்க்கிழமைகள் எல்லாம் அடிப்படையில் ஒன்றுதானே. பிளவு-பின்னம் விழாமல் இழுக்கப்பட்டு வரும் ஒரே கம்பி இழையின் தன்மைதானே பெற்றிருக்கிறது. இல்லை, இல்லை. சிலந்திப்பூச்சி தனது வயிற்றிலிருந்து விடும் இழைபோல நீண்டு கொண்டே வருகிறது. இன்று-நேற்று-நாளை என்பது எல்லாம் நம்மை ஓர் ஆதார எண்ணாக வைத்துக் கொண்டு கட்டி வைத்துப் பேசிக் கொள்ளும் சவுகரியக் கற்பனைதானே. நான் என்ற ஒரு கருத்து. அதனடியாகப் பிறந்த நானல்லாத பல என்ற பேத உணர்ச்சி, எனக்கு முன், எனக்குப் பின், என்ற நாமாக வக்கணையிட்டுப் போட்டுக் கொண்ட வரிகள்... இவை எல்லாம் எத்தனை தூரம் நிலைத்து நிற்கும்... நான் என நினைத்து, நினைக்கும், நினைக்கப்போகும் பல தனித் துளிகளின் கோவை செய்த நினைப்புத்தானே இந்த நாகரிகம்....கூட்டு வாழ்வு என்ற வாசனையையொட்டி, மனசு இழைத்து இழைத்துக் காட்டும் மணற் சிற்றில்தானே இந்த நாகரிகம்...மகா காலம் என்ற சிலந்தியின் அடிவயிற்றிலிருந்து பிறக்கும் ஜீவநதியின் ஓரத்தில் கட்டிவைத்த மணற்சிற்றில்....என்ன அழகான கற்பனை'' என்று உச்சிப்போதில் பனை மூட்டினடியில் குந்தி உட்கார்ந்திருந்த பரமசிவம் பிள்ளை நினைக்கலானார்.
asstract-pictures
துவர்த்து முண்டில் அவர் கட்டியிருந்த ஒற்றைப்பிரி முண்டாசுக்குத் தப்பிய சிகைத்தலையில் வெயில் தாக்கியது. குனிந்து குந்தியிருந்த பனைநிழல்வாக்கில் வெயில் சற்றுப் படாதபடி ஒரு பக்கமாக நகர்ந்தார். முள்ளும் முனையுமாக நின்ற ஊவாஞ்செடி, கருவேலங்கன்று பெருந்துடையில் குத்தியது. மறுபுறமாக விலகிக் கொண்டார். குனிந்து கவனித்துக் கொண்டிருந்தவருக்கு நினைவு பிரபஞ்ச யாத்திரை செய்ததென்றாலும், மலத்தில் மாண்ட குடல்புழு கண்ணில் விழுந்தது. 'மலப்பிறவி...பல ஜன்மம், பல மரணம். சீச்சீ...' மனம் குமட்ட வேறு ஒரு பனை மூட்டினடியில் போய் அமர்ந்தார். அது விடலிப் பனை. சற்றுத் தாழ்வாக இருந்ததனால் நிழலும் சுமாராக இருந்தது. முள் குத்தலும் இல்லை. ஆனால் சரல் குத்தியது.

மனமோ 'பிறவா நெறி' காட்டாமல் மீண்டும் மீண்டும் மலப்புழு மாதிரி உடற் கூறின் விளைவாக எழுந்த அவசரங்களின்பால் விழுந்து குமைந்தது.

'மனம் என்ற ஒன்று உடம்பைவிட்டுத் தனியாக, அதன் அவசியம் இல்லாமலே இயங்கக்கூடிய ஒன்றா அல்லது நாதத்துக்கு வீணை என்ற சாதனம் அவசியமாக இருப்பது போலத்தானா... நான் பிறப்பதற்குமுன்... என்னைப் பற்றி எனக்குப் பிரக்ஞையுண்டா? என்னைப் பற்றி, இப்பொழுது என்னைப்பற்றியுள்ள சூழ்நிலைக்குத்தான் பிரக்ஞையுண்டா?

'இந்தப் பனை, இந்தப் பனை விடலியெல்லாம் என் பிரக்ஞைக்குள் பட்டது. இது முளைத்தது எனக்குத் தெரியும். இது முளைப்பதற்கு முன் இந்தக் கட்டாந்தரை, இந்த நிழல்கூட அற்று இருந்தது தெரியும். முந்திய ஆடிக் காற்றில் விழுந்ததே அந்தப் பனை. அது எங்கு நின்றது என்றுகூட நிதானிக்க முடியாமல் வரட்டுக் கட்டாந்தரையாகத்தானே கிடக்கிறது... நான் பிறப்பதற்கு முன்பு... பரமசிவம்பிள்ளை என்ற ஒருவன் விருப்பு வெறுப்பு, ஆசை, துயரம், கவலை, பொறுப்பு முதலியவற்றுடன் கூடிய ஒரு ஜந்து, வாழையடி வாழையாக வரும் விளையாட்டின் வித்தைகளை வாலாயமாகக் கற்று, அதற்கு இசைந்தோ pudu5 இசையாமலோ விளையாடி... பிறகு பரமசிவம் என்ற பெயர் மட்டும் போகுமிடத்துக்கு வழி வைத்துவிட்டு, வந்த வழியைப் பார்த்துக்கொண்டோ அல்லது புது வழியிலோ போய்விடும் ஒரு தோற்றம்... ஒரு பொம்மலாட்டம்! பொம்மலாட்டம் என்று எப்படி நிச்சயமாகச் சொல்ல முடியும்? சூத்திரக் கயிறு இழுக்கிறதா அல்லது சூத்திரதாரன் உண்டா? நிச்சயமாக எப்படி இருக்கிறது அல்லது இல்லையென்று இரண்டில் ஒன்று சொல்லிவிட முடியும்? வருகிற வாசல், போகிற திசை இரண்டுந்தான் தெரிகிறது. வருகிறது ஒரு யோனித் துவாரம். போகிறது மற்றொரு யோனித் துவாரம்...பிரகிருதி என்ற அன்னையிடந்தானா? அல்லது கருவூரிலிருந்து கருவூருக்குச் செல்லும் பாதைதான் மனித வாழ்வா? முடிவில்லா வித்தையா? முறையில்லாத் தந்திரமா?

கைலாசபுரத்து ஆற்றங்கரை பனை மூட்டடியிலே உட்கார்ந்த பரமசிவம் பிள்ளையின் மனம் 'தான்' இல்லாத ஒரு காலத்தைச் சற்றுச் சிரமத்துடன் கற்பனை பண்ணத் தொடங்கியது.

சுமார் அரை நூற்றாண்டுக்குமுன் கைலாசபுரத்திலும் சூரியோதயம், சூரியாஸ்த மனம் தெரிந்து கொண்டுதானிருந்தது. அப்பொழுது ஆற்றங்கரைக்கு வரும் பாதையில் அத்தனை காரைக் கட்டிடங்கள் கிடையாது. புழுதி கிடையாது. சுகமான மருதமர நிழல் உண்டு. மாடு படுத்திருக்கும். மனித நாகரிகமே அந்தப் பிராந்தியத்தில் அப்பொழுது உட்கார்ந்து அசை போட்டுக்கொண்டிருந்த மாதிரிதான் தென்பட்டது. ஆனால் இயக்கம் இருந்து கொண்டுதானிருந்தது. ஞாயிற்றுக்கிழமை மடிந்து திங்கட்கிழமை பிறக்கிறது. எந்த வினாடிக்குள் என்று யாருக்காவது நிர் தாரணமாகச் சொல்ல முடியுமா? நாமாக முடுக்கிவிட்ட கெடிகாரம் சொல்லுவதும், நாம் சொல்லுவதும் ஒன்றுதான். ஞாயிற்றுக் கிழமையாகவே இருந்து கொண்டு வந்தது, திங்கட்கிழமை என்று நாம் சொல்லும் படியாகிவிட்ட ஒரு தன்மைபோல், நாகரிகம் அங்கே உட்கார்ந்து அசை போட்டுக் கொண்டிருப்பது போலத் தென்பட்டதும் ஒரு தோற்றந்தான். அது அப்படியே உட்கார்ந்து கொண்டே இருந்தால், இப்பொழுது காரைக் கட்டிடங்கள் எப்படி முளைத்திருக்கும்? மருத மரத்து நிழல் இன்னும் இருந்து கொண்டிருக்குமே! அப்பொழுது காற்றடித்தது; மழை பெய்தது; நதியில் வெள்ளம் வந்தது; பனை மரங்கள் சாய்ந்தன; விறகாயின. விட்டமாயின. விடலிகள் முளைத்தன. சூரியாஸ்தமனம், சூரியோதயம்... ஆற்றங்கரைப் படிக்கல்லில் அழகியநம்பியா பிள்ளை வேட்டி துவைப்பார். உட்கார்ந்திருந்து அழுக்குத் தேய்ப்பார். ஆற்றில் மூழ்கிக் குளிப்பார். நின்று திருநீறு அணிவார். அனுஷ்டானாதிகள் செய்வார். படிமீது மருதமர நிழல்கள் கவிந்திருக்கும். ஆனால் இப்போது படிக்கல் சரிந்துவிட்டது. பாதை உண்டு. மணலிலும் தெற்றுக்குத்தாக நிற்கும் படிகளை மறைத்தும் தண்ணீர் ஓடும். இப்பொழுது மருதமரம் இல்லை. வெயில் உண்டு; கல் வழுக்கும்.

அன்று ஐம்பது வருஷங்களுக்கு முன்னால் கருவூரிலே வீரிய வெள்ளம் பிரவகித்தது. அதிலே விளைந்த அனந்தகோடி பீஜங்களிலே ஒன்று நிலைத்தது. அனந்த ஜீவ அணுக்களிலே அதற்கு மட்டும் அதிர்ஷ்டம் என்பதா? அல்லது நிலைக்க வேண்டும் என்ற பூரண பிரக்ஞையுடன் அது நிலைத்ததா? எப்படியானாலும் இந்த அணு இல்லாவிட்டால் இன்னொன்று நிலைத்தது; ஒன்றியது; உருவம் பெற்றது; உணர்வு பெற்றது; மீனாயிற்று; தவளையாயிற்று; வாலிழந்தது; குரங்காயிற்று; சமாதி நிலையிலே உறங்க லாயிற்று... சிசுவாகி, கைக்கட்டை விரல்களை உள்ளங்கையில் மடக்கி விரல்களைக் கொண்டு மூடிக் குண்டுக்கட்டாகக் காத்திருந்தது.

கைலாசபுரத்திலே மரங்கள் மொக்குவிட்டன. பூ மலர்ந்தது. தேன் வண்டுகள் போக்குவரத்து வைத்துக் கொண்டன. மரமும் சூலுற்றது. பிஞ்சுற்றது.

கருவூருக்கு வடக்கே உதாரபுரியிலே§யிருந்து ஹ¥ங்காரம் போன்ற அலறல் பிறந்தது. வேதனையிலேகுரல் பிறந்தது. கைக்கட்டை விரல்களை உள்மடக்கிப் பிடித்துக் கொண்டு தலைகுப்புற வந்து விழுந்தது ஒரு பிண்டம் - ஒரு ஜன்மம். பிரக்ஞை வந்தது. கட்டு மலம் போயிற்று... ஜன்மம் வீறிட்டது. கைகளையும் கால்களையும் சுண்டி உதறிக்கொண்டு அழுதது. கருவூர்க் கயிற்றைக் கத்தரித்து விட்டார்கள். தனி ஜன்மமாயிற்று. தனித் தன்மை பெற்றது. முலை சுவைத்தது. உறங்கியது. அழுதது.. முலை சுவைத்தது.

கைலாசபுரத்திலே மரங்கள் காய்த்தன. கொத்துக் கொத்தாக, பச்சை பச்சையாகக் காய்த்துத் தொங்கின. மரத்தையே தரையில் இழுத்துக் கிடத்திவிடும் போலிருந்தது அந்த வருஷத்துக் காய்ப்பு.

நிலவொளியிலே நிலா முற்றத்திலே அழகிய நம்பியாபிள்ளை குழந்தையொன்றை வைத்துக் கொஞ்சுகிறார். குழந்தை கொஞ்சுகிறது.

''அப்பா யாரு?'' என்று கேட்கிறார் அழகிய நம்பியாபிள்ளை.

குழந்தை தனது நெஞ்சைத் தட்டிக் காட்டியது.

"முட்டாப் பயலே, நான்தாண்டா அப்பா! நீ பரமசிவம், பரமசிவம் பிள்ளை!'' என்றார் அழகிய நம்பியா பிள்ளை.


''அப்பா யாரு?'' என்றார் அழகிய நம்பியா பிள்ளை.

குழந்தை அவரது நெஞ்சைத் தொட்டுக் காட்டியது.

''பரமசிவம் யாரு?'' என்று கேட்டார் அழகிய நம்பியாபிள்ளை.

''நான்'' எனத் தனது நெஞ்சைத் தட்டிக் கொண்டது குழந்தை.

''போடு பக்காளி போடு! பத்துப் பக்காளி போடு!'' எனக் குழந்தையை மெய்மறந்து குதூகலத்தில் பந்துபோல் தூக்கிப் போட்டு விளையாடினார்.

குழந்தை பரமசிவமாகி நான்-நீ-அவன் என்ற பேதாபேதப் பிரக்ஞையுடன் வாழையடி வாழையாக இருந்துவரும் விளையாட்டைக் கற்றுகொள்ள ஆரம்பித்தது. அம்மா-அப்பா-தெரு-ஊர் எனப் பரிச்சய விலாசம் படிப்படியாக வளர்ந்தது. வாத்தியார், பிரம்படி, பிறகு கல்வி, சில்லறை அறிவு, பிரம்புக் கொட்டடியிலும் மற்றப்படி இனிக்கின்ற, அவசியமான, பிரியமான ஞானச் சரக்குகளை வேற்று அங்காடிகளிலும் பரமசிவம் பெற்றார். சீனி இனிக்கும் - நெருப்பு சுடும் - அப்பா கோபிப்பார் - கடவுள் மன்னிக்க மாட்டார் என்ற நேர் அனுபவ, அனுபவ சூன்யக் கருத்துக்கள் எல்லாம் நான்-என்னுடைய என்ற அடித்தளம் இட்ட ஒரு மனையில் சுவர் எழுப்பிக் கட்டிடம் அமைக்க ஆரம்பித்தது. பள்ளிக்கூடம்-பரமசிவம்-அடி-உதை-பலம்-பலவீனம்-சடுகுடு முதலிய பாதைகளில் செல்ல, கிழமைகள் என்ற கால அமைதி தாரளமாக வசதி செய்து கொடுத்தது.

அழகிய நம்பியா பிள்ளையின் வேலைகளை மேற்கொள்ளும் கட்டம் வந்தது. பரமசிவம், பரமசிவம் பிள்ளையானார். உடல் வாட்ட சாட்டமாக அமைந்தது. உடம்பில் வலு, நெஞ்சில் உரம், மனசில் நம்பிக்கை, தைரியம், வீட்டில் சமைத்துப் போட, பிறகு வம்ச விருத்திக் களமாக்கிக் கொள்ள ஒரு யவுதி... உச்சுவாச நிச்சுவாசத்தைவிட என்ன சுகம், போகம். உடலில் உள்ள வலு வீரியமாகப் பெருக்கெடுத்து ஜீவ தாதுக்களை அள்ளி விசிறியது. இப்பொழுது கிழமைக்கும் வாரத்துக்கும் மாதத்துக்கும் ஓடும் வேகந்தான் என்ன? கஷ்டம்-வருத்தம்-கசப்பு-ஏமாற்றம்-கடன் வாங்கி அதற்குள் ஐந்து வருஷங்களா?.. என்ன ஓட்டமாக ஓடுகிறது. மணல்கூண்டு சரிகையில் கடைசி மணல் பொடி விரைந்து ஓடி வருவது மாதிரி என்ன வேகம்? நிஜமாகத் திங்களும் செவ்வாய்களும் இப்போதுதான் இவ்வளவு வேகமாக ஓடுகின்றனவா?... அல்லது நான்தான் ஓடுகிறேனோ? நான் யார்? இந்த உடம்பா? தூங்கும்போது, பிறக்குமுன் இந்த நான் எங்கிருந்தது? இந்த நான்தான் ஓடுகிறதா? பெட்டியடிக் கணக்கு. இடுப்பொடிக்கும் உழைப்பு, குனிந்து குனிந்து இன்னொருவன் பணமூட்டைக்குத் தலையை அண்டை கொடுத்து கழுத்தே சுளுக்கிக் கொண்டதே. முதுகிலே கூன் விழுந்துவிட்டது. பிறனுக்கு நலம் பார்த்து நாலு காசு சேர்த்து வைத்துக் கண்ணிலும் வெள்ளெழுத்து. வீட்டிலே பூனை படுத்திருக்கும். பொய்மை நடமாடும். வறுமையும் ஆங்கே பெற்றெடுத்த பிள்ளையுடன் வட்டமிட்டுக் கைகோத்து விளையாடும். மனையாளுக்கு கண்ணிலே இருந்த அழகு - ஆளைத் தூண்டிவிட்டு இழுக்கும் அந்த அழகு எங்கே போயிற்று? கையில் ஏன் இந்த வறட்சி? வயலோ ஒத்தி.. வீடோ படிப்படியாக மூலப் பிரகிருதியோடு லயமாகிவிட யோக சாதனம் செய்கிறது. விட்டமற்றுப் போனால் வீடும் வெளியாகும்... அப்பொழுது அழகிய நம்பியா பிள்ளை எங்கே? அவர் மகன் பரமசிவம் எங்கே? எல்லாம் பரம ஒடுக்கத்திலே மறைந்துவிடும். எத்தனை துன்பம், எத்தனை நம்பிக்கைக்காக எத்தனை ஏமாற்று, எத்தனை கடவுள்கள்? வாய்க்கு ருசி கொடுக்க ஓரு கடவுள்... வயலுக்கு நீர் பாய்ச்ச ஒரு கடவுள்... வியாச்சியம் ஜயிக்க, சோசியம் பலிக்க, அப்புறம் நீடித்து, நிசமாக உண்மையில் பக்தியாய்க் கும்பிட... எத்தனையடா எத்தனை? நான் தோன்றியபின் எனக்கு என்று கடவுள்கள் தோன்றினார்கள்? எனக்கே இத்தனையென்றால் என்னைப் போன்ற அனந்தகோடி உயிர்-உடம்புகள் கொண்ட ஜீவ நதியில் எத்தனை? ஆற்று மணலைக்கூட எண்ணிவிடலாம். இந்தக் கடவுளர்களை? ஒருவன் பிறந்தால் அவனுடன் எத்தனைக் கடவுளர்கள் பிறக்கிறார்கள். அவனுடன் அவர்கள் மடிந்து விடுகிறார்களா? 'நான்' மடிந்து விடுகிறதா? அப்பொழுது ஒருவேளை அவர்களும் இந்த நானோடு போய்விடக்கூடும்... இந்த நானையும் மீறித் தங்கிவிடுகிற கடவுளர்களும் உண்டு. அவர்கள்தான் மனம் என்ற ஒன்று காலவெள்ளத்துக்கு அருகே அண்டிவிளையாடும் மணல் வீட்டைப் பந்தப்படுத்த முயலும் சல்லி வேர்கள்... பரமசிவம், 'பரமசிவம்! உனக்கு ஏதுக்கடா இந்தச் சள்ளை! அதோ, காலடியில் பாம்புடா, பாம்பு...

கயிற்றரவு!'

காலம் ஒரு கயிற்றரவு?

பரமசிவம் பிள்ளையைக் கட்டிலிலிருந்து எடுத்துத் தரையில் கிடத்திவிட்டார்கள். பாம்பு கடித்தால் பிழைக்க முடியுமா? போகிறவருக்குப் புண்ணியம் சேர்க்கத் தலைமாட்டில் உட்கார்ந்து யாரோ தேவாரம் படித்தார்கள். பரமசிவம்பிள்ள ஏறிட்டுப் பார்த்து சிரமத்துடன், 'தூரத்தில் இருந்து படித்தால் கேட்பதற்குச் சுகமாக இருக்கும், பக்கத்திலிருந்தால் காதில் வண்டு குடைகிற மாதிரி தொந்தரவாக இருக்கிறது' என்றார்.

கண்ணை முழுவதும் திறக்காமலும் முழுவதும் மூடாமலும் அரைக்கண் போட்டபடி உலகைப் பார்ப்பதிலே அவருக்கு ஓர் ஆனந்தம் இருந்தது. நிம்மதி இருக்கிறது. தூரத்திலே தேவாரம்... தண்ணீரடியில் முங்கி உட்கார்ந்திருக்கும்போது கேட்கும் தூரத்து ரீங்காரம் மாதிரி சுகமாக இருக்கிறது. அதோ தெரிகிறது என் புஸ்தகம்... என்னுடைய கால் கட்டைவிரல்தான்... ஸ்மரணையில் கால் இருக்கிற மாதிரி தெரியவில்லையே... கண்ணுக்குத் தெரிந்தால் மட்டும் போதுமா? ஸ்மரணைக்குப் புலனாக வேண்டாமா? கால் கட்டைவிரல் ரொம்ப தூரத்திலிருக்கிறதோ... இரண்டு மைல் தூரத்தில்... சீ எட்டு மைலாவது இருக்க வேண்டும்... அதோ அந்த புஸ்தகம். இப்பொழுது அதுவும் தூரத்தில் தெரிகிறதோ... அதில் என்ன எழுதி வைத்திருந்தேன்... கணக்கா... சுவடியா? அழகியநம்பியைக் கூப்பிட்டுக் கேட்கவேண்டும். எது இருந்தால்தான் என்ன? நாம் செத்துப்போனால் இந்தக் கால் கட்டைவிரல் சாம்பலாகத்தானே... அது எவ்வளவு நேரம் எனக்குத் தெரியப்போகிறதோ... கொஞ்சம் நிம்மதியாகப் பார்த்துக் கொண்டே இருப்போமா? அதுவும் சுகமாகத்தானிருக்கிறது. கணணை மூடினால்... அப்பா என்ன சுகம்... மூச்சு நின்றது. கைக்கட்டைவிரல்கள் உள்வாங்கின. கட்டுமலம் வந்தது. நான் சுழன்றது. ஸ்மரணை சுழன்றது. உயிர் - ஆமாம்; உயிரும் அகன்றது... அன்று கருவூரிலே உருவற்று நிலைத்த பிண்டம் இன்று உருவுடன் வதங்கிக் கிடந்தது.

சாம்பல் காற்றோடு போச்சு; பெயர் பெயரோடு போச்சு.. மனிதமனம் இம்மாதிரி அனந்தகோடி கூடுகளைக் கட்டிக் கட்டி விளையாடியது. கைலாசபுரத்து மருதமரம் நிழல் கொடுத்தது. மரம் பூத்துக் காய்த்தது. பழுத்தது... ஆற்றில் தண்ணீர் மணலிலும் படியிலும் தவழ்ந்து ஓடியது. என்ன? காலவெள்ளம் தேக்கற்று ஓடிக் கொண்டே இருந்தது. அதிலே வரையில்லை, வரம்பில்லை, கோடுகூடத் தெரியவில்லை. கருவூரிலானாலென்ன? காட்டூரிலானாலென்ன? சமாதியோ பிரக்ஞையோ எதுவானாலென்ன?

நான் ஓடினால் காலம் ஓடும். நான் அற்றால் காலம் அற்றுப் போகும். காலம் ஓடுகிறதா? ஞாயிறு - திங்கள் . செவ்வாய் - நான் இருக்கும் வரைதான் காலமும். அது அற்றுப்போனால் காலமும் அற்றுப்போகும் - வெறும் கயிற்றரவு!

பரமசிவம் பிள்ளை எங்கே?


காதம்பரி, ஏப்ரல் 1948

Dec 25, 2009

வெறும் செருப்பு - ந. பிச்சமூர்த்தி

  ந. பிச்சமூர்த்தி

அதுவரையில் தீர்மானத்துடன் வராதிருந்த மனது அன்று ஒரு முடிவுக்கு வந்துவிட்டது. முதலையின் பிளந்த வாயைப்போன்ற செருப்புடன் எத்தனை மணிகள்தான், எத்தனை நாட்கள்தான் ஓட்டமுடியும்? நடக்கும் போதெல்லாம் செருப்பின் கீழ் அட்டை மடித்துக் கொள்ளும். அப்பொழுது ஒட்டகையின் முதுகின்மேல் நடப்பது போன்ற வேதனையும் கஷ்டத்தையும் அடைந்தேன். நல்லவேளை அன்று மனதே உத்தரவு கொடுத்துவிட்டது.

100_7089_PS01
விர்ரென்று கடைத்தெருவுக்குச் சென்று நவீன செருப்புக் கடைக்குள் நுழைந்தேன். கடைக்காரப் பையன் விதவிதமான செருப்பு, பூட்ஸ¤ தினுசுகளை என் முன் கொணர்ந்து பரப்பினான். அதையும் இதையும் புரட்டிப் பார்த்து தோல் வந்த கப்பல், கப்பல் கிளம்பிய நாடு, நாட்டின் கால்நடை வளம் இவ்வளவையும்பற்றி ஆராய்ச்சி செய்துவிட்டு முடிவாக ஒரு ஜோடி ஸ்லிப்பர் ஆறரை ரூபாய்க்கு வாங்கினேன்.

சிவப்பு ஸ்லிப்பர், மஞ்சள்நூல் தையல், மேல்புறத்தில் தாமரைப்பூ - இவ்வளவு லட்சணங்களுமுள்ள ஸ்லிப்பர் என் சொத்தான உடனே அதை அனுபவிக்காமல் இருக்க முடியுமா?

காலில் மாட்டிக் கொண்டே வீட்டை நோக்கி திரும்பினேன். பட்டென்று ஸ்லிப்பர் கால் அடிபாகத்தில் படுவதினால் பின் பராக் யாரோ சொல்லிக் கொண்டு வருவது போலிருந்தது. அரசர்களுக்கு முன்னால் பராக் சொல்லிக் கொண்டு வருவார்களாமே, எனக்குப் பின்னால் சொன்னால் போதாதா? ஒவ்வொரு ஒசையைக் கேட்டதும் என் மனது கம்பீரமாய் விரிந்தது. புதுச்செருப்பு வாங்கினால் புது மனிதனல்லவா? வானத்தைத் தொட்டுவிடக்கூடிய உன்னதமும் தெம்பும் நெஞ்சில் குமிழியிட்டன. முன்புறம் மார்பைத் தள்ளி தெருவெல்லாம் நடந்து வந்தேன்.

வீட்டை அடைந்ததும் ஸ்லிப்பரைத் துடைத்து சுவரில் மாட்டினேனோ இல்லையோ? ஒரு நினைப்பு வந்தது. பழைய செருப்பு இருந்த இடத்திற்குப் போய்ப் பார்த்தேன். இனி அதை எடுத்து எறிந்து விடலாமா என்று யோசித்தேன்.

இவ்வளவையும் என் மனைவி கவனித்து வந்தாள் என்பது அவள் கேட்ட கேள்வியிலிருந்து தான் விளங்கிற்று.

''நான் கிழவியாகி விட்டால் என்னையும் தள்ளித்தான் விடுவார்கள், இல்லையா? கேள்வி சுருக்கென்று மனதில் தைத்தது. காலுடன் காலாய் எவ்வளவு கஷ்ட சுகங்களில் அது என்னை தாங்கி வந்திருக்கிறது. அவ்வளவு ஈரமில்லாமல் எடுத்தெறியப் போகலாமா? என் மனதில் இரக்கமில்லை என்று நினைக்க நான் விரும்பவில்லை. ஆகையால் என் யோசனையை கைவிட்டுவிட்டு, என் ஜோலியைப் பார்க்கப் போனேன். புலனெல்லாம் ஒடுங்கித் திண்ணை மூலையில் குந்தியிருக்கும் கிழவியைப் போல் செருப்பு மூலையிலே கிடந்தது. இளைய தாரத்துடன் உலாவப்போகும் எழுச்சியுடன் புது ஸ்லிப்பர் மாட்டிக்கொண்டு ஆபீசுக்குப் போய் திரும்பினேன்.

வீட்டிற்கு வந்து உட்கார்ந்த ஐந்து நிமிஷத்திற்குள்ளாகவே, ஒரு தந்திக் கிடைத்தது. உயிருக்குயிரான நண்பன் காலமாகி விட்டதாக அதில் கண்டிருந்தது. என்னால் செய்தியை நம்ப முடியவில்லை. நானும் தந்தியில் குறிப்பிட்டிருந்த நண்பனும் ஒரு வாரத்திற்கு முந்தி தான் ஒரு கல்யாணத்திற்கு சேர்ந்து போயிருந்தோம். சேர்ந்து சாப்பிட்டோம். பகலொளியும் இரவு நிலாவும் படுக்கப் போகும் வரையில் பேசித் தீர்த்தோம். சேர்ந்தே தூங்கினோpichchamurthy2ம். நண்பன் உடம்பிலோ மனத்திலோ எவ்விதமான நோயும் தென்படவில்லை. பின் செய்தியை எப்படி நம்பமுடியும்? ஆனால் பொய்த் தந்தி கொடுக்கக்கூடிய விஷமிகள் யாரும் எனக்கோ என் நண்பனுக்கோ இல்லை. பின் செய்தியை எப்படி நம்பாமலிருப்பது? குழப்பம். மனது தெளியவில்லை. மறுநாள் மற்றொரு கடிதம் வந்தது. வேறொரு நண்பன் எழுதியிருந்தான். அந்தக் கடிதத்தைப் படித்த பிறகு சந்தேகத்திற்கே இடத்தைக் காணோம்.

கிராமபோன் தட்டு ஓடிக்கொண்டிருக்கும் பொழுதே சாவி குறைவினால் பிறக்கும் அவ ஒலியைப்போல் என் நெஞ்சின் துயர் எழுந்தது. தாங்கமாட்டாமல் விம்மி விம்மி அழுதேன். எவ்வளவு நேரம் அழுதேன் என்று யார் கண்டது?

எதிர்வீட்டுப் பையனொருவன் கோவில் மணி கணீரென்று அடிப்பதுபோல்,

''ஆண்டாண்டுதோறும் அழுதுபுரண்டாலும்
மாண்டார் வருவரோ மாநிலத்தில்''

என்று பாடினான்.

என் அழுகை தானே நின்றுவிட்டது. இனிச் செய்ய வேண்டியதைப் பற்றிய நினைப்பு எழுந்தது. சாயங்கால ரயிலில் நண்பன் ஊருக்குப் போய், அவன் வீட்டிலுள்ளவர்களுக்காவது தேறுதல் சொல்லிவர வேண்டியது என் கடமை என உணர்ந்தேன்.

மாலை ஐந்து மணி ரயிலுக்கு ஒரு பாடியையும் ஜிப்பாவையும் மாட்டிக் கொண்டு கிளம்பி வீட்டு ரேழிக்கு வந்தேன். சுவரில் புது ஸ்லிப்பர் அசட்டுப் பெண்ணைப் போல் இளித்துக் கொண்டிருந்தது. ஸ்லிப்பரை எடுத்துக் காலில் மாட்டப் போனேன்.

''கல்யாணத்துக்குப் போகிறாயா குஷாலாக?'' என்று மூலையில் இந்த பழஞ் செருப்பு முனகுவது போல் தோன்றிற்று. கொஞ்சம் தயங்கினேன். காலையில் புது ஸ்லிப்பர் வந்தது. மாலையில் செய்தி வந்தது. ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லை என்று அறிவு சொன்ன போதிலும் நெஞ்சு கேட்கவில்லை.

அதற்குள் என் ஆபீஸ் நண்பன் ஒருவன் வந்தான். ''என்ன யோசித்துக் கொண்டு ரேழியில் நிற்கிறாய்?''

''ஒன்றுமில்லை''

''நான் இதோ ரயிலுக்குப் போகிறேன். மத்தியான்னம் இடி போன்ற அந்தச் செய்தி வந்தது. கடவுள் என்கிறார்களே அது எனக்கு விளங்கவில்லை. சரகு உதிர்வதில் வண்டு வருந்துவதில்லை. தளிரும் பூவும் உதிர்ந்து தரையில் கிடக்கும்பொழுது எவ்வளவு வண்டுகளும் தேனீக்களும் அவைகளை மொய்த்துக் கொண்டு புலம்புகின்றன!''

''எனக்கும் செய்தி வந்தது. என் நெஞ்சே சூன்யமாகி விட்டது. இதோ நானும் புறப்பட்டுக் கொண்டிருக்கிறேன்.''

''பின்னே கிளம்பு''

கிளம்பு என்று சொன்னபிறகு கூட நான் கொஞ்சம் தயங்கினேன்.

''என்ன யோசனை?''

மனதை வேரோடு பிடுங்கினது போல் நிலைகுலையச் செய்யும் துயரம் மூண்டிருக்கும் வேளையில் ஸ்லிப்பர் போட்டுக் கொள்ளலாமா கூடாதா என்று யோசிக்கலாமா என்ற நினைப்பு வரவும் மூலையில் கிடந்த பழஞ்செருப்பு அடக்கத்துடன் கண் காட்டிற்று. அதைப் போட்டுக் கொண்டு கிளம்பினேன்.

ரயில்வே ஸ்டேஷன் போகும் வரையில் ஒரே யோசனை. புது ஸ்லிப்பர் வந்தது நன்மைக்கன்று. ஒருநாளைக்குள் ஒரு உயிரைக் கொண்டு போய்விட்டதே; அதை மாதக்கணக்கில் வைத்துக் கொண்டால் என்னவெல்லாம் நேரிடும் அல்லது என்னதான் செய்யக்கூடாது? இதே யோசனையில் மெளனமாக இருந்தேன்.

ரயில்வே ஸ்டேஷன் மாடிப்படி ஏறும்பொழுது ஒருதரம் செருப்பின் அடி அட்டை பின்புறமாக மடித்துக் கொண்டது.

''என்ன தடுமாறுகிறாயே?'' என்றான் நண்பன்.
''ஒன்றுமில்லை. செருப்பு அடி அட்டை கிழிந்துபோய் ஒன்றுக்கொன்று சம்பந்தமற்றும் போயின. அட்டை மடித்துக் கொண்டு இடறிவிட்டது. நல்லவேளை விழாமல் தப்பித்தேன்.''

பிறகு நாங்கள் பேசவில்லை. என் மனது மறுபடியும் ஓடத் துவங்கி விட்டது - கிழிந்த செருப்புகளைப் பற்றிய ஞாபகங்கள்.

ஸ்டேஷன் பிளாட்பாரத்தில் வந்து உட்கார்ந்தோம். ரயில் கிளம்புவதற்கு இரண்டு மணி நேரம் இருந்தது. நண்பன் பிளாட்பாரத்தில் நிலவின் கீழ் வேஷ்டியை விரித்துப் படுத்துக் கொண்டான். எனக்குப் படுக்கத் தோன்றவில்லை. உம்மென்று... உட்கார்ந்திருந்தேன்.. சிறிது நேரத்திற்கெல்லாம் திடீரென்று யோசனை ஒன்று முளைத்தது.

''உன்னிடத்தில் ஒரு ஹூக் இருக்கிறதா?'' என்றேன்.

''எதற்கு?''

''இந்த இரண்டு அட்டைகளையும் சேர்த்து ஹூக் போட்டுவிட்டால் இந்த மாதிரி அட்டை மடியாது.''

''இதென்ன, செருப்பையே கடவுளாக்கித் தியானம் செய்கிறாயே - தூக்கி எறிந்தாலும் போச்சு, தைக்கச் சொன்னாலும் போச்சு.''

பேச்சு நியாயமாகத்தான் பட்டது சரிதான் என்றேன். ஆனால் மனதில் பல மட்டங்கள் இருக்கின்றன என்பதும், மேல் மட்டம் பேசினால் அடிமட்டம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என்பது இல்லை என்றும் பின்னர்தான் தெரிந்து கொண்டேன்.

கால் மணிநேரத்திற்குப் பிறகு என் கை என்னை அறியாமலேயே ஒரு செருப்பை எடுத்துவிட்டது. என் கண்கள் இருள் குகை ஒன்றைக் காணும் ஆச்சரியத்துடன் அச்செருப்பின் பிளந்த அட்டைகளைப் பார்த்துக் கொண்டிருந்தன. மன உலகத்தில் ஒரு பெரிய சர்ச்சை நடந்து கொண்டிருந்தது. மனத்தின் நடுமட்டம்...'' அதெல்லாம் சரிதான்.. நீ போகும் காரியமென்ன? நாளைப்போய் மெனக்கட்டு செருப்பைத் தைத்துவிடுவாயா? முடியுமா?'' மனத்தின் மேல் மட்டம்; ''அதற்கென்ன, வேண்டாமே. செருப்பையே எறிந்துவிட்டால் போகிறது. சொத்தே போய்விடுமா? நஷ்டம் தாங்காதா?''

நடுமட்டம் ''அதுவா போச்சு! வீணடிக்கவே கூடாது அப்படியாவது பணம் பெருத்த ஆளா? சாதாரணமாக தோட்டத்திற்குப் போவதற்கும் இந்த மாதிரி சந்தர்ப்பங்களுக்கும் உபயோகப்படுமே, மூத்தாளும் முட்டுக்கு உதவுவாள் என்று பாட்டி சொல்லவில்லையா?''

படுத்திருந்த நண்பன் எழுந்து கண்கொட்டாமல் என்னைப் பார்த்துக் கொண்டே, ''நீ என்ன யோகியா, கருமியா, தெரியவில்லையே! யோகியைப் போல ஒரே எண்ணத்தில் லயித்திருக்கிறாயே... ஆனால் லயித்திருக்கும் விஷயமோ சிறியது. கருமியைப் போல் கிழிந்த செருப்பைக்கூட தடவிப் பார்க்கிறாயே'' என்றான்.

புண்ணில் நெருஞ்சி முள் குத்தியது போலிருந்தது. சிவனே என்று மன ஓட்டத்தை அடக்கி, மல்லாந்து படுத்துக் கொண்டேன்.

சிறிது நேரத்திற்கெல்லாம் ரயில் வந்தது. நானும் நண்பனும் ஏறிக் கண்ணயர்ந்தோம்.

காலைக் கரிச்சான் குரல் துயிலைக் கலைத்தது. கண் விழித்து வெளியே தலை நீட்டிப் பார்த்தேன். வானத்தின் கிழக்கு மைதானத்தில் செம்மறி ஆட்டு மந்தைப்போல் மேகத் துணுக்குகள் விரைந்து கொண்டிருந்தன. இருளில் வினோதமான தேத்தாங் கொட்டையைப் போட்டது போல் ஒளி தெளிந்து மேலே தோன்றிற்று. அடுத்த ஸ்டேஷன் நாங்கள் இறங்க வேண்டிய இடம். நண்பன் மட்டும் தூங்கிக் கொண்டிருந்தான்.

மனதில் இரண்டு நிலைகள்தான் இருப்பதாக நினைத்த நான் மூன்றாவது நிலை ஒன்றிருப்பதை அப்பொழுது உணர்ந்தேன். பரந்தவெளி உலகின் காலை அமைதியில் உள்ளுலகினின்று ஒரு மெல்லிய குரல் கேட்டது.

''நீ வரும் வேலை நினைவிருக்கிறதா? உடம்பு உயிர் என்றெல்லாம் சொத்துரிமை கொண் டாடுகிறாயே அது சரியா? யோசித்துப் பார், நேற்றிருந்தான், இன்றிறந்தான். பழுத்தும் உதிரலாம். பழுக்காதும் விழலாம். பழுக்காது விழுந்த வேதனை - உயிரின் விசித்திர விபரீதப் போக்கல்லவா உன்னை இங்கே இழுத்து வந்திருக்கிறது. வெறும் செருப்பு ஒரு பொருளா? அதைப்பற்றி யோசிக்க அவ்வளவு பிராணனை செலவழிப்பது நியாயமா?''

இக்குரல் பேசியபொழுது உள்ளத்திலே பெரிய அமைதி நிலவியிருந்தது. மாறுபட்ட மன அலைகளே காணோம். ஏறிவரும் ஒளியையே நோக்கிக் கொண்டிருந்தேன். மனத்தில் அசைவே இல்லை. அதற்கு ஏற்றாற்போல, அசைந்து கொண்டிருந்த ரயிலும் ஸ்டேஷனை அடைந்து நின்றுவிட்டது.

நண்பனை எழுப்பி வண்டியை விட்டு இறங்கி மாட்டுவண்டியில் ஏறி நண்பன் வீடு சென்றோம். பச்சைக் குழந்தைகள் - சூதுவாதற்ற மனைவி - இவர்களை கொழுக் கொம்பற்றுத் துடிக்கும் கொடி போல பரிதவிக்கவிட்டுச் சென்ற ஒரு குடும்பத் தலைவன் - வயது அதிகம் ஆகாதவன் - எதிர்பாராமல் திடீரென்று காலகதி அடைந்தவன் - அவன் மறைந்துவிட்ட பிறகு எவ்விதமான ஆறுதல்தான் சொல்ல முடியும்? வாய் திறந்து வார்த்தைகளைக் கொட்டாமல் பகல் முழுதும் கழித்தோம்.

மத்தியானம் மணி மூன்றிருக்கும். ஊருக்குத் திரும்புவதற்காக வண்டி நிற்கும் இடத்திற்குக் கிளம்பினோம்.

சரியான வெயில். மூன்று என்றாலும் தலைவெடிக்கிறது. பொடி ஒட்டுகிறது. நான் காலை மாற்றி மாற்றி நொண்டி போல் தத்தித்தத்தி நடந்தேன்.

அப்பொழுதுதான் என்னுடன் கூடவந்த நண்பன் என் காலைக் கவனித்தான்.

''செருப்பெங்கே? இந்த வீட்டில் மறந்து வைத்துவிட்டு வந்தாயா?'' என்றான்.

''அதெல்லாம் மறக்கவில்லை.''

''அப்படி என்றால் வேண்டுமென்றே வைத்துவிட்டு வந்தாயா?''

''அதுவுமில்லை''

''பின்?''

'' ஒரு நிமிஷம் தயங்கினேன்.

''பின் செருப்பெங்கே?''

''ரயிலிலேயே வைத்துவிட்டேன்.''

''மறந்துவிட்டாயா?''

''இல்லை. நினைப்புடனேயே விட்டுவிட்டேன்.''

இரவில் நான் செருப்பு மயமாய் இருந்ததையும் இப்பொழுது செருப்பையே விட்டு விட்டதையும் பற்றியோ என்னமோ நினைத்துக்கொண்டு ஆச்சரியத்தால் வாய் திறந்து ஒருவினாடி நின்றான். பிறகு என்னவென்று கேட்டான்.

“கிழியாத செருப்பைக்கூட அவன் திடீரென்று விட்டுச் சென்றுவிடவில்லையா? ஒரு ஒட்டைச் செருப்பைப்பற்றி பெரிய துயரத்தின் முன்னிலையிலே என் மனது அவ்வளவு குழப்பலாமா என்ற எண்ணம் உதித்தது.”

''எப்பொழுது?''

''இந்த ஊர் ரயில்வே ஸ்டேஷனை அடைந்ததும்!''

''பிறகு?''

''ரயிலை விட்டு இறங்கியபொழுது செருப்பை மாட்டிக் கொள்ளாமல் இறங்கிவிட்டேன்.
அவ்வளவுதான்.''

நண்பன் பேசவில்லை. ஒரு வினாடி கழிந்தது.

''ஆமாம். இந்த உடம்பும் செருப்புத்தான். உயிரென்னும் வழிப்போக்கன் எப்பொழுதும் எந்த நிலையிலும் இதைக் கழட்டி எரியலாம். யாரால் தடுக்க முடியும்?'' என்றான்.

Dec 24, 2009

அபிதா- லா.ச.ரா

     வண்டியின் கதிவேகத்தில் எதிர்வண்டிகள் மேலேயே சரிந்து விடும் போல் கடந்தன. மில்களின் ராக்ஷஸப் புகைப் போக்கிகள், மில் காம்பவுண்டில் நிலக்கரி மலைகள், ரயில் திடீரென இறங்கும் பள்ளத் தாக்குகள், உடனே தொத்திக் கொண்டு ஏறும் சரிவுகள், மலைகள், மலையைக் குடைந்து சுரங்கங்கள், சுரங்கத்துள் நுழைந்ததும் ஓட்டச் சத்தம் அன்றி மற்றனைத்தும் அதனுள் மூழ்கிப் போன காரிருள், சுரங்கத்தினின்றும் வெளிப்பட்டதும் கண்ணை உறுத்திக் la_sa_raகொண்டு பெருகும் ஒளி வீழ்ச்சி, அகன்ற மைதானங்கள், அடர்ந்த காடுகள், காடுகளில் மேயும் மான் கூட்டங்கள் தலை  நிமிர்கையில் மேலே கிளை பிரிந்த கொம்புகள், கட்டான் கட்டானாய் வண்டி வேகத்தில் முகம் திரும்பும் வயல்களில் பயிர்களின் பச்சை நடுவில் சிவப்பும் மஞ்சளும் வெள்ளையும் உதாவுமாய் ஆண் பெண்களின் ஆடைகள், கூந்தல் முடிச்சுகள், கொண்டைகள், வானில் பகல் பூரா சூர்யசக்கரம் உழுது உருண்ட பாதையில் முளைத்துப் பழுத்துப் பல ரங்குகளில் சாய்ந்த ஒளிக்கதிர்கள், புலவியில் பூமியைக் கவ்விக் கடித்து மேல் கவிந்த வான்கவானில் சிந்திய விந்துவெனக் கட்டிய நக்ஷத்ரக் கூடுகள், நேரம் முதிர்ந்து எழுந்து தோப்புகளிடையே எங்களுடன் கூடவே குதித்து ஓடிவரும் நிலா திடீரெனக் கிளைகளின் சிக்கலினின்று விடுபெற்று ஆகாய வீதியில் உருண்டதும் பாலத்தடியில் உருவிவிட்ட ஜல ஜரிகையின் தகதகப்பு, 'திடும் திடும்' என அதிர்ந்து கொண்டு எங்களைக் கடக்கும் பாலங்களின் இரும்புத் தூலங்க -

     - இத்தனையும் கோத்து ஊடுருவிய உள்சரடாய் வண்டியின் பெருமூச்சு; ஒரு சமயம் அதன் ஊதல் உவகையின் எக்காளம்; ஒரு சமயம் வேகத்தின் வெற்றிப் பிளிறு; மறுசமயம் அது இழுத்துச் செல்லும் சிறு உலகத்தின் சுமை கனத்தினின்று இழுத்த பாகாய், அது செல்லுமிடம் சேரும் வரை, அதன் கர்ப்பத்தில் தாங்கிய அத்தனை மக்களின் அவரவர் விதியின் தனித்தனி சஞ்சலங்கள், பிரிகள் ஒன்று திரித்த ஓலக்குரல் தீனக்குரல் -

     சாவித்ரி முகம் பூரா விழிவட்டம்.

     முந்தாநாளிரவிலிருந்தே பச்சைக் குழந்தை மாதிரி ஜன்னலோரத்தைப் பிடித்துக் கொண்டுவிட்டாள்.

     அவளைப் பார்த்தால் ஒரு பக்கம் சிரிப்பு வருகிறது. அடக்கிக் கொள்கிறேன். வலது பொட்டில் அடை நரை தோய்ந்திருக்கிறது. (நரையை ஒப்புக் கொள்ள மாட்டாள். "பூசணிக்காய் நறுக்கிய கையோடு நினைவு மறதியா தொட்டுண்டுட்டேன்." இன்னொரு சமயம் அதுவே தேனைத் தொட்ட கையாக மாறிவிடும்.) கொஞ்ச நாளாகவே இடது கண்ணில் நீர் வடிகிறது. கண்ணாடி போட்டுக் கொள்ள மறுக்கிறாள். முகம் கெட்டு விடுமாம்.

     "அப்படி ஒரு கண் அவிஞ்சு போனால் இன்னொண்ணு இருக்கு. அதுவும் போச்சுன்னா, கையைப் பிடிச்சு, அழைச்சுண்டு போய், 'இதுதாண்டி தாஜ்மஹால்', 'இதுதான் காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில்', 'இதுதான் அகண்ட காவேரி', 'இதுதான் நம் பூர்விகம், சொந்த மண்ணைத் தொட்டுக் கண்ணில் ஒத்திக்கோ, வாயில் கூட கொஞ்சம் அள்ளிப் போட்டுக்கோ'ன்னு அப்புறமாவது இடம் இடமா அழைச்சுண்டு போய்க் காண்பிக்க நீங்கள் இருக்கேள். இல்லையா? அப்படி ஒரு கொடுப்பினை இல்லாட்டாலும் போறது. காலடியில் கல் தடுக்கினால் பிடிச்சுக்க மாட்டேளா? ஏன் சும்மாயிருக்கேள்? 'ஆஹா அதுக்கென்ன?'ன்னு மெப்புக்கேனும் சொல்லக் கூட வாயடைச்சுப் போச்சா? புருஷாளே இப்படித்தான்" - என்று எங்கேனும் கொண்டு போய் முடித்து, மூக்கைச் சிந்தி, உறிஞ்சி, சிடுசிடுத்து அடுத்தாற்போல் சிரித்துத் தானே ஓய்ந்துவிடுவாள்.

     "ஆமாம், நான் இப்படியெல்லாம் இல்லாட்டா நீங்கள் எனக்குக் கட்டியிருக்கும் அசட்டுப் பட்டத்தை எப்படி நிலை நாட்டிக்கறது?"

     பாவம், அவள் ஆத்திரப்படுவதில் ஆச்சர்யமில்லை. நானாவது வியாபார நிமித்தமாய் சுற்று வட்டாரம் போய் மீள்வதுண்டு. பிரயாணத்துக்கே அவளுக்கு வாய்ப்பில்லை. எங்களுக்கு உறவுகள், வேண்டியவர் வேண்டாதவர் எல்லோரும் எங்களைச் சுற்றியே இருந்துவிட்டார்கள். அத்தனை பேரும் அவளைச் சார்ந்தவர்களே. பிழைப்பைத் தேடி தூரதேசம் வந்துவிட்ட இடத்தில் எனக்கென்று தனியாகத் தாயாதிகளை முளைக்க வைக்க முடியுமா?

     கண்டதே காக்ஷி
     கொண்டதே கோலம்
     வந்ததே லாபம்
     இன்று இப்படிப் போச்சா?
     நாளை என்னவாகுமோ?


என நேரத்தைக் காசாக எண்ணி எண்ணிக் கழித்த அந்நாளில் :

     "அதோ அந்த வீட்டில் இன்று சமாராதனை"

     "இந்தக் கோவிலில் உச்சி வேளைக்கு உண்டைக் கட்டி"

என்று எனக்குக் கைஜாடையாகவே வயிற்றுக்கு வழிகாட்டியவன் எவனாயினும் அவன் வயதுக்கு என் வயது ஏற்ப என் அண்ணனோ தம்பியோ; தாகத்துக்குத் தவிக்கையில் ஏந்திய கையில் கிண்டி மூக்கு வழியோ குடத்து வாய் வழியோ ஜலம் வார்த்தவள் என் தங்கையோ, தாயோ.

     போன புதிதில் நாட்கள் இப்படிக் கழிந்த ஒரு வாரத்துள் ஒரு நாள் வயிற்றில் ஈரத்துணி, கண்ணில் உசிரை வைத்துக் கொண்டு சத்திரத்துத் திண்ணையில் அண்ணாந்து படுத்து, கூரை விட்டத்தில், என் கண்ணுக்குத் தெரியாமல், கண்ணில் நிற்கும் உசிருக்கு மட்டும் தெரியும் என் விதியேட்டைப் படித்துக் கொண்டிருக்கையில், மெனக்கெட்டு காரை நிறுத்தியிறங்கி என்னிடம் வந்து:

     "யாரப்பா நீ? முகத்தில் காவேரித் தண் தெளிந்து நிக்கறதே!" என்று தானே பேச்சுத் தொடுத்து, விவரம் வாங்கிக் கொண்டு, "சரி சரி - இதோ என் பிஸினெஸ் விலாசம்; நாளைக் காலை பத்து மணிக்கு வந்து சேர்" என்று உத்தியோகம் தந்தவன் கடவுள்.

     முதலாளி சொற்படி வரவுசெலவுக்கு இரண்டு கணக்கு எழுதினாலும் என் கணக்கு இரண்டுமே அவருக்குப் பிடித்திருந்தது.

     சுருட்டினது போக, சுரண்டினது போக, எஞ்சியது அசலுக்கு லாபம் என்கிற கணக்கில் லாபம் பெருகி, நாளடைவில் லாபம், முதலை விழுங்கிய பின், லாபத்திற்கு லாபம் திகட்டல் தட்டின பிறகு, நஷ்டமென்பது லாபத்தில் நஷ்டம்தான்.

     ஆனால் அந்த மனுஷன் தொட்டதெல்லாம் பொன். செல்வமும் இருக்குமிடத்தில் தான் சேர்ந்து கொண்டிருக்கும் என்பது அனுபவ ருசு. அவருக்குக் குறைவில்லை. அதனால் எனக்கும் குறையில்லை.

     ஒரொரு சமயம் எனக்குத் தோன்றுவதுண்டு, அன்று பட்டினியில் சத்திரத்துத் திண்ணையில் அண்ணாந்து படுத்து விட்டத்தில் என் விதியேட்டைச் சரியாகத்தான், என்னை அறியாமலே படித்திருக்கிறேன்.

     விளக்குக்கு ஏற்றினால் வெளிச்சம்.

     ஆனால் விடிவு என்னவோ வேளையில் தான்.

     பிறகு ஒரு நாள் மாலை, என்னை அவர் வீட்டுக்குக் கூட்டிப் போய், ஊஞ்சலில் தனக்குச் சரியாக உட்கார வைத்துக் கொண்டு:

     "சாவித்ரீ! டிபன் கொண்டு வா!" என்று அழைத்து அவள் வந்ததும்:

     "சாவித்ரீ, நமஸ்காரம் பண்ணு. பின்னால் இவன் உனக்குத் தோப்புக் கரணம் போட்டால் அது இவன் தலையெழுத்து. இப்போ நீ நமஸ்காரம் பண்ணுவதுதான் முறை. என்னப்பா, உனக்கு 'ஷாக்'கா? நான் 'பிஸினெஸ்' பண்றதே இப்படித்தான். சம்பந்தம் பண்றது ஒரு பெரிய 'பிஸினெஸ் டீல்' தான். உன் குலம், கோத்ரம் உன்னைக் கேட்டு நான் தெரிஞ்சுக்க வேண்டாம். என் பெண்ணை உனக்குக் கொடுக்க இந்த ரெண்டு வருஷமா உன்னைப் பற்றி எனக்குத் தெரிஞ்சது போதும். எல்லாமே தெரிந்த வரைக்கும் தானே! மிச்சமெல்லாம் துணிச்சல்தான். வாழ்க்கையின் நியதியே துணிச்சல் தான். என் பெண்ணுக்குத் தாயில்லாக் குறை ஒன்று தவிர வேறு பெருங்குறை யாரும் சொல்லிவிட முடியாது. பணக்காரப் பெண்ணுக்கு, பரிசாரகன் போட்டுக் கொடுத்த காப்பியை வெள்ளி டம்ளரில் ஆற்றிக் கொடுக்கத்தான் தெரியும், வேறொண்ணும் தெரியாது என்று நீ எண்ணாதே. வற்றல் குழம்பு, நாக்கு ஒட்டிக்கச் செவக்க, உணக்கையா சாவித்ரி நன்னா பண்ணுவாள். வற்றல் குழம்பும் சுட்ட அப்பளாமும் நம் சீமைக் குலதெய்வம். விருந்து சாப்பாட்டையெல்லாம் அதன் காலில் கட்டியடிக்க வேண்டும். எல்லா விருந்துக்கும் மருந்து அதுவே விருந்து. என்ன சொல்கிறாய்?"

     "இன்னிக்கும் வத்தல் குழம்புதான்!" சாவித்ரி கை கொட்டிச் சிரித்தாள். அவள் சிரிப்பு விளிம்பு உடைந்த சிரிப்பு. அவள் பற்கள் பளீரிட்டன. ("சாதாரண நெல் உமியைச் சுட்டுக் கரிப்பொடி தான். ஆண்கள் நீங்கள் கொண்டாடும் பேஸ்ட் அல்ல. பேஸ்ட்டுக்கு எனக்குப் பொறுமை கிடையாது.") சிரிக்கையில் புருவ நடுவில் மூக்குத் தண்டு சுருங்கிற்று.

     "உங்கள் மாப்பிள்ளை வரப்போறார்னு என்னிடம் ஒரு வார்த்தை முன் கூட்டிச் சொன்னேளா? இதோ ஒரு நிமிஷம் பொறுத்துக்கோங்கோ. நாம் பேசிண்டிருக்கற நேரத்துக்கு சர்க்கரையும் சாதமும் நிமிஷமா கரைஞ்சுடும். வீட்டுக்குப் பெண்ணும் நானே, பெண்ணைப் பெத்தவளும் நானேன்னு இருக்கு; நான் என்ன பண்ண முடியும்? அப்பாவே எப்பவுமே இப்படித்தான்! ஆனால் நான் தனியா சொல்ல என்ன இருக்கு? அவர் சுபாவம் இத்தனை நாளில் உங்களுக்கே தெரிஞ்சிருக்குமே!"

     மனம்விட்ட அவள் சிரிப்பில், என்னுடன் அவள் உடனே நேரிடையாகக் கொண்ட சகஜத்தில், எனக்குத் தன் சம்மதத்தைத் தெரிவித்த முறையில், அவள் பெண்மைக்குப் பங்கம் கற்பிக்கும் படியில்லை. அவள் சொன்னபடி, அவள் சூழ்நிலை அப்படி.

     ஆனால் சாவித்ரி ஒன்றும் சோடையில்லை. அவள் தனியழகு ஏதும் செய்து கொள்ளவில்லை.

     ஆனால் செல்வத்துக்கே ஒரு களையுண்டு.

     பிறவியிலேயே வளத்துக்கு ஒரு தோரணை உண்டு.

     உத்யோகம் தந்தவன் கடவுள்.

     பெண்ணைத் தந்தவன் மாமனார்.

     மாமனாரானதோடல்லாமல், அந்தச் சுருக்கில், அதே சாக்கில், பாட்டாளியிலிருந்து வியாபாரத்தில் என்னைத் தன்னோடு கூட்டாளியாகவும் ஆக்கிக் கொண்ட பின், எங்களுக்குக் கண் மறைவாக, ஆனால் தவறாமல் எங்கள் காது படும்படி எனக்கு double event என, சிப்பந்திகளிடையே பேர் வழங்கலாயிற்று. முதலாளிக்கு மாப்பிள்ளை, சொத்துக்கும் தத்து.

     ஆனால் அவர்கள் ஆத்திரத்தில் ஆச்சரியமில்லை. என் அதிர்ஷ்டம் எனக்கே பிரமிப்பாயிருக்கிறதே! கண் கூடாக நடப்பது கொண்டே கதை எழுதியாகிறதென்றாலும் கதையில் படிப்பது அனுபவமாக நிகழ்ந்திடில், அது சமாதானமாவதில்லை. அதில் கதையின் இன்பமில்லை. ஒரு தினுசான பீதிதான் தெரிகிறது. எந்தச் சமயம் கனவு கலைந்து எப்போ நனவில் விழிப்போ எனக் கனவு கலையும் சமயத்திற்கஞ்சி நனவை நானே எதிர்கொள்ளக் கண்ணைக் கசக்கிக் கொள்கிறேன். ஆனால் நான் காண்பதாக நினைத்துக் கொள்ளும் கனவேதான் நான் கண்விழித்த நனவு எனத் தெளியத் தெளியக் குழப்பம் தான் கூடுகிறது.

     மணமான புதிதில் சாவித்ரி என்னையடையத் தான் தான் அதிர்ஷ்டசாலி என்று சொல்லிக் கொள்ளும் போது எனக்கு ஒரு கேள்வி. அவள் பேச்சில் உபசாரம் எவ்வளவு, உண்மை எவ்வளவு?

     உண்மையில் கேலியா?

     உண்மையே கேலிதானா?

     ராஜா மணந்த பிச்சைக்காரி ராணியாகிவிடலாம்.

     ஆனால் ராணி மணந்த ஏழை, ராஜா இல்லை, என்றும் அவன் பிரஜைதான்.

     இப்படி எனக்குத் தோன்றக் காரணம் என் சந்தேக மனப்பான்மைதானோ, அல்லது ராணியை மணக்கும் உச்சத்துக்கு உயர்ந்த பின் அதனாலேயே நேர்ந்த உச்சக்குலைவோ, அல்ல என் வறுமை நினைவுகளிலிருந்து முற்றிலும் எனக்கு விடுதலையில்லையோ, அல்ல என் சிப்பந்திகளின் மறைமுகமான ஏளனமோ - இவையெல்லாமே சேர்ந்ததோ - நிச்சயமாகத் தெரியாது. ஆனால் ஒன்று புரிந்தது. நாளடைவில், எங்கோ நினைப்பின் அடிவாரத்தில் மனம் கசந்தது.

     என் வாழ்க்கை குறுக்குசந்தில் நுழைந்து தன் பாட்டை தப்பி விட்டது.

     முதலாளி மகளை மணந்த மூலம், எங்கோ, ஏதோ முறையில், என் நாணயம் பறிபோன உணர்வு.

     குளிக்கப் போன இடத்தில், குளத்தில் மூழ்கின சமயத்தில், விரலிலிருந்து மோதிரம் நழுவி விட்டாற்போல்.

     பிடிபடாத தாது இந்தக் கசப்பு, புரியாத கோபம், இனம் தெரியாத ஏக்கம், காரணம் காட்டாது ஏய்க்க ஏய்க்க, அதன் மூட்டம் மட்டும் எங்கள் உறவில் கவிந்தது.

     அற்ப விஷயத்தில் தான் ஆரம்பிக்கும். அடியெடுத்துக் கொடுத்தவன் நானாவேயிருப்பேன். ஒரு சொல்லுக்கு எதிர்ச் சொல் ஒன்பது சொல்; படிப்படியாக ஏறும் வார்த்தைத் தடிப்பில், சண்டையின் காரணம் மறந்து போய் வெற்றிக் கொடி கடைசி வார்த்தை யாருக்கு எனும் வீறாப்புத்தான் மிச்சம்.

     ஆனால் சாவித்ரியிடம் ஒரு குணம். அவள் கசப்பற்றவள். அவள் don't care மாஸ்டர். வார்த்தைகளைக் கொட்டிவிட்டு கோபத்திலிருந்து விடுதலை கண்டு, நேர்ந்ததை நிமிஷமாக மறந்து உடனே கலகலப்பாகி விடுவாள். மறதி அவள் வெற்றி. அவள் உயர்ந்த சரக்குத்தான் எனும் இந்த உள்ளுணர்வே என் வேதனை. கடித்த பற்களிடையில் சொல்லத்தகாத வார்த்தைகள் நாக்கு நுனியில் எனக்குத் தவிக்கும்.

     இடியும் மின்னலும் அடுத்துத் தடதடவென மழை. சண்டைப் போலவே சமரஸத்திலும் அவள் தான் முதல். ஆனால் பாம்புக்குப் படம் படுத்ததால் அதன் கோபம் தணிந்ததென்று அர்த்தமில்லை. சீற்றத்தின் வாலில் தொத்தி வந்த எங்கள் சமாதானமும் மூர்க்கம்தான். உண்மையில் அது சமாதானம் அன்று. வெட்கம் கெட்ட இளமை வெறி. அப்பட்டமான சுயநலத்தின் சிகரம். சண்டை வழி நிறைவு காணாத வஞ்சம் சதைமூலம் தேடும் வடிகால். ஊன்வெறி தணிந்ததும் மறுபடியும் தலைகாட்டுவது அவரவர் தனித்தனி எனும் உண்மைதான். தெளிந்ததனாலாய பயன் கசப்புத்தான்.

     ஒரு கூட்டில் இரு புலிகள் வளையவந்தன. ஒன்றையொன்று கவ்விக் கிழித்துக் கொண்டு ஒன்றில் ஒன்று புதைந்து ஒரு பந்தாகி உருள்கையில் எந்த சமயம் சண்டையிலிருந்து சமாதானம், சமாதானத்திலிருந்து சண்டையென்று அவைகளே அறியா. மூலக் குரூரத்தின் இரு விள்ளல்கள்.

     இம்மாதிரி முரட்டு வேளைகளின் அசதியின் இன்ப மயக்கத்தில் முனகுவாள்.

     "ஒரு குழந்தையிருந்தால் நமக்குள் இவ்வளவு வேற்றுமை யிருக்குமா?"

     "அது ஒண்ணுதான் குறைச்சல். எங்களால் முடியாமல் உங்களால் முடிந்தது இந்தக் குழந்தை பெறுதல் ஒன்றுதானே!"

     அவள் எழுந்து உட்காருவாள். மறுபடியும் எங்களைச் சூழ்ந்த அந்தரம் சிலிர்க்கும்.

     "எங்கள் வர்க்கத்தை நீங்கள் பழிப்பதன் அர்த்தம் என்ன? உங்கள் அம்மாயில்லாமல் உலகத்தில் நீங்கள் நேராவே entryயா? அவதார புருஷனாக்கும்!"

     பதில் பேச இயலாமல் எனக்கு வாயடைத்துவிடும்.

     என் தாயை நான் அறியேன். தோய்ப்பதற்குத் துணியைச் சுருட்டிக் கொண்டு வாய்க்காலுக்குச் சென்றவள் உச்சிவேளை தாண்டியும் திரும்பவில்லை.

     ஊரெல்லாம் தேடிவிட்டு, பிறகு கழனிக்காட்டில் துரவு கிணற்றில் கண்டெடுத்து உடலைத் தூக்கிக் கொண்டு வந்தார்களாம்.

     எங்கள் ஊரில் பெண்கள் கேணியில் இறங்கிக் குளிப்பதுண்டு.

     ஆனால் என் தாய்க்குப் பழக்கமில்லை. அவளுக்கு நீச்சலும் தெரியாது.

     நாலு பேர் நாலு விதமாகப் பேசிக் கொண்டனர்.

     வயிற்றில் நான் நாலு மாதப் பூச்சியாயிருக்கையில், நடுநிசியில் எல்லோரும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கையில் அம்மாவின் கை வளையலைக் கழற்றிக் கொண்டு ஓடிவிட்ட என் அப்பன், நான் பிறந்து மாதம் பத்தாகியும் இன்னும் திரும்பவில்லை.

     "தாம்பூலம் மாற்றிக்கு முன் என்னை ஒரு வார்த்தை கலந்திருந்தால் நான் தடுத்திருப்பேனே" எனத் தவித்தவர் எத்தனை பேர்!

     "எல்லாம் சொல்லிக்க வேண்டியதுதான்! ஏழை சொல் அம்பலத்திலேறுமா?" என்று ஒரு பொருமல்.

     "நமக்கேன் பாடு! ஆயிரம் பொய்யைச் சொல்லியேனும் ஒரு கலியாணத்தைப் பண்ணுன்னு சாஸ்திரமே கட்டளையிட்டிருக்கு!" இப்படி ஒரு சுக்ஷி தருமம் பேசிற்று.

     "எப்பவுமே இப்படியே இருக்குமா? ஒரு முடிச்சைப் போட்டு வெச்சால் பையன் திருந்திடுவான்னு பார்த்தோம். மறைச்சு வெச்சுப் பண்ணிட்டோம்னு எங்களைக் குத்தம் சொல்ற நாக்கு அழுகித்தான் போகணும். பையன் இதுவரை எங்கள் கண்ணெதிரிலாவது உலாவிண்டிருந்தான். பொண்ணு எங்கள் வீட்டைக் கால் மிதிச்ச வேளை முதலுக்கே மோசம் வந்தாச்சு" என்று பிள்ளை வீட்டார் புலம்பினர்.

     "இல்லாட்டா உங்கள் அந்தஸ்துக்கு இதுக்கு மேல் ஒஸ்தி என்ன எதிர்பார்த்தேள் சொல்லுங்களேன்! கேட்டுத்தான் தெரிஞ்சுக்கறேனே!" என நேருக்கு நேரே சவால் சிலர்.

     "இந்தா நீ ரெண்டு மாதம் வெச்சுக்கோ. அப்புறம் கூடப் பிறந்த தோஷம் ஒரு மாஸம் என்கிட்டே இருக்கட்டும். அப்புறம் கடைக்குட்டி நம்மைவிடப் பச்சையா வாழறான். அவன் ஆறுமாஸம் போடட்டுமே! அப்புறம் வருஷம் முடியறதுக்குள் மறு சுத்துக்கு நம்மிடம் வந்துடப் போறாள்! சும்மாவா போடப் போறான்? அவனுக்கு வாய்ச்சவள் லேசுப்பட்டவளா 'டேப்பா!' விழி நரம்பிலிருந்து நார் உரிச்சுத்தானே தன் குழந்தை குட்டிகளுக்குச் சட்டை கவுனிலிருந்து தெறிச்சுப் போன பொத்தானைத் தைப்பாள்!"

     உடன்பிறந்தான்மார்கள் இப்படி இட்ட பிச்சையும் விட்ட ஏலமுமாய் பிழைப்பு ஆனபின்னர், என்னதான் சதைத்தடிப்பானாலும் ஒருநாள் இல்லாவிட்டால் ஒருநாள் எந்தச் சொல் - எந்தத் தோளிடிப்பு - எந்த ஏளனப் புன்னகை எப்படித் தைத்ததோ? ஏற்கெனவே விளிம்பில் நடுங்கிக் கொண்டிருக்கும் கனத்தை இப்புறமோ அப்புறமோ தள்ளிவிட 'பூ' என்று வாயால் ஒரு ஊதலே போதும்.

     நாலு பேர் நாலு விதமாகச் சொல்லிக் கொண்டனர்.

     பழசு நினைவில் படமெடுக்கையில் காரணமற்ற கோபத்தில் காரணமிழப்பேன்.

     "என் தாயை நீ ஒன்றும் சொல்லவேண்டியதில்லை!" சீறுவேன்.

     "இதுக்கே உங்களுக்கு இப்படிப் பொத்துக்கறதே! என் வயிற்றில் பிறக்கப் போகும் பிள்ளைக்கும் அவன் தாயாரை நீங்கள் பழித்தால் அப்படித்தானே இருக்கும்!"

     ஆச்சரியத்துடன் எழுந்து உட்கார்ந்தேன். என் கண்களில் தோன்றிய வினாவுக்குப் பதிலாய்:

     "பிறந்தால் - என்று அர்த்தம்" என்பாள். அதில் என்ன திருப்தியோ?

     இரண்டு வழியிலும் விருத்தியிலாத வம்சம்.

     ஜன்னல் வழி உள்வழிந்த நிலவொளியில் ஆள் உயரப் படத்தினின்று அவள் தந்தை முகம் என்னைக் கடுக்கும். எனக்கு உடல், மண்டையெல்லாம் குறுகுறுக்கும். ஆள் போயும், படத்திலிருந்து என்னைக் கண்காணிப்பு.

     படத்தை எங்கள் அறையிலிருந்து அப்புறப்படுத்த அவள் அடியோடு மறுத்து விட்டாள்.

     "உங்களை அவர் என்ன செய்தார்? ஏன், தன் பெண், பங்கு, சொத்து எல்லாத்தையும் உங்களுக்கே கொடுத்து விட்டுப் போன குத்தமா?"

     "ஏன், முடிந்தால் தன்னோடு எடுத்துக் கொண்டு போகட்டுமே!"

     "இந்த மட்டும் கண்டுபிடிச்சு சொல்லிட்டேளே! நன்றியென்று ஒன்று நம்மிருவருக்குமே இருக்கட்டும்."

     "நல்லெண்ணங்கள், உணர்வுகள் எல்லாமே உனக்குத் தானே பிறவியிலேயே சாஸனம், எனக்கேது? அப்பா மேல் பக்தியில் கால்வாசி, கொண்டவன் மேல் இருந்தால் நம் வாழ்க்கை எப்பவோ உருப்பட்டிருக்கும்."

     "ஏன் இப்படி விஷமா கக்கறேள்? பக்தியென்று என்னிடம் என்ன எதிர்பார்க்கறேள்? என் தந்தையை நான் மறுத்து விட்டால் உங்களிடம் பக்தி கூடிவிட்டதா?"

     உடனே மறுபடியும் சண்டை.

     பேச்சுக்குப் பேச்சு பதிலுக்கு என் வாயை அடைக்கும் கேள்விகள் அவளிடம் எப்பவுமிருந்தது தான் என் புழுக்கம்.

     புயல் கடைந்த கடலில் கட்டுமரம் அலையுச்சியின் நுரை கக்கலின் மேல் சவாரி செய்தால் என்ன, அலையிறங்கி மிதந்தால் என்ன? அலை ஓய்வது என்பதில்லை.

     அடக்கி அடக்கித் திமிறத் தவித்த என் சீற்றத்தின் எதிரொலியாய், தாழ்வாரத்தில் மழைச்சாரல் சாட்டை வீசுகிறது. ஜன்னல் கண்ணாடியில் தாரை வழிந்த வண்ணம்தான். வெய்யில் பார்த்து நாள் மூணாயிற்று. அறையில் சுவர்கள் ஒட்டிய மூலைகளில் பகலிலேயே இருள் தேக்கத்தில் அவரவர் மனநிலைக்கேற்ப, உருவங்கள், முகங்கள், பெரும் வாய்கள், முழுவிழிகள், வீக்கங்கள் திரண்டு தம் ரஹஸ்யங்கள், அவஸ்தைகள் ஏதேதோ தம் ஊமையில் வெளியிட முயன்றன. அவைகளின் காலம் கடந்த ஏக்கம் நெஞ்சில் வண்டல் இறங்குகையில் தாளொணா அடிப்பாரம் மார்பை அழுத்துகிறது.

     ஜன்னலுக்கு வெளியே, இன்னும் ஒரு பெரும் உடைப்புக்கு முஸ்திப்பாய் ஒரு மேகத்திரள் குமைகிறது. இந்தப் பக்கமே இடைநிலையென்பதே கிடையாது. மழை பெய்தால் ப்ரளயம். வெய்யில் காய்ந்தால் sunstrokeதான்.

     மெழுகுவர்த்தியுடன் சாவித்ரி அறையுள் வருகிறாள். நேற்றிரவே மின்சாரம் தோற்றுவிட்டது.

     என் புருவங்களின் கீழிருந்து அவளை நோக்குகிறேன். அவள் கையில் பிடித்த மெழுகுவர்த்தியின் சுடரில் அவள் முகம் ரோஜாவின் செவ்விதழில் ஏற்றிக் கொண்டிருக்கிறது. எடுப்பான மூக்கின் கீழ், உதடுகள் சிற்பச் செதுக்கலில் அமைதியாக உறங்குகின்றன. நடு வகிடிலிருந்து கூந்தல் வங்கி வங்கியாய், நீர்வீழ்ச்சி போல் இருமருங்கிலும் இறங்குகிறது. அவள் உடுத்திய மஞ்சள் 'ஸேட்டின்' சேலை, அங்கத்திரட்சிகள் மேல் பாயும் அலைகளில், இந்த முக்கால் இருள், மிச்சம் கால் ஒளியாட்டத்தில் புலிக்கோடுகள் பிறந்து விளையாடுகின்றன.

     ஜன்னல் கட்டைமேல் மெழுகின் உருக்கை இரண்டு சொட்டு சொட்டி அதன் மேல் வத்தியை நட்டுவிட்டு நகர்கிறாள். அவள் நிழல் பெரிதாய்ச் சுவரை ஆள்கிறது. சாவித்ரியின் உடல்வாகும் சற்று வாளிப்புத்தான்.

     என் காலடியில் தரையில் அமர்கிறாள்.

     புலி.

     கையை எடுக்காது வரைந்த ஒரே கோட்டின் வளைவு நெளியான ஓட்டம்போல் அவள் உருவம், எனக்கு விட்டுச் சொல்ல இயலா ஏதோ முறையில், மெழுகுவர்த்திச் சுடரொளியில் இந்த அறையின் தோற்றத்துடன் - ஏன், இந்த வேனிலோடேயே இழைந்திருக்கிறது. நாங்களே இந்த சமயத்தின் ஓவியத்தின் வண்ணக் குழைவில் கலந்து, ஓவியம் உயிருடன் மிளிர்வதாய்த் தோன்றிற்று. அபூர்வமான அமைதி எங்கள் மேல் இறங்கிற்று. அதன் இதவை ஸ்பரிச பூர்வமாகவே உணரமுடியும் போல் அத்தனை மெத்து. புலியும் ஆடும், பாம்பும் இரையும், சாவித்ரியும் நானும் இந்த சமயத்துக்கு சமாதானம்.

     சோகச் சாயை படர்ந்து கவித்வம் நிறைந்து நெஞ்சில் பாயும் இந்த அருவியின் கரையில் எத்தனை நேரம் இப்படியே அமர்ந்திருந்தோமோ!

     புயலின் மையம் அமைதி.

     ஜன்னல் கண்ணாடிமேல் மழை தாரை வழிந்த வண்ணமிருந்தது.

     சகுந்தலையின் கண்ணீர்.

     "பளிச்" "பளிச்" மின்னல் போல் வலி கொடிபிரிந்து மார்புள் பாய்ந்தது. மாரைப் பிடித்துக் கொண்டேன். ப்ராணன் போய்விடும் வலி. ப்ராணன் போய்விடாதா?

     "என்ன யோசனை?" சாவித்ரியின் குரல் எங்கிருந்தோ வந்தது. "என்ன என்னவோ போலிருக்கேள்? எதை நினைச்சுண்டிருக்கேள்?"

     "கரடிமலை" என்றேன். தொண்டை கம்மிற்று. வார்த்தை என்னிடமிருந்து பிடுங்கிக் கொண்டு வந்தது.

     "கரடிமலையா?" அவள் புருவங்கள் கேள்வியில் நெறிந்தன.

     "நான் எங்கிருந்து இங்கு வந்தேனோ அந்த இடம்" சுதாரித்துக் கொண்டேன். எனக்கே ஆச்சரியமாயிருந்தது. என் புது வாழ்வைப் பற்றிக் கொள்ளும்பாடில், பற்றிய பின் மேல் படர்ந்த பாசியில், எத்தனை வருடங்களின் புதைவின் அடியினின்று கரடிமலை இப்போது எழுந்தது!

     "கரடிமலை என்பது ஒரு குன்று. குன்றின் பெயரே ஊருக்கு. கரடி நின்று கொண்டிருப்பது போல் குன்றின் உருவம்."

     "ஓ!"

     கரடிமலையின் நினைப்புடன் சாவித்ரியைப் பார்க்கையில் யாரோ அன்னியளைப் பார்ப்பது போல் இருந்தது. தூக்கத்திலேயே நடந்து வந்து திக்குத் தெரியா இடத்தில் விழித்துக் கொண்டாற் போல். யார் இவள்? ஓ, குறுக்கே முளைத்த மனைவியல்லவா?

     "ஏன் ஒரு மாதிரியா இருக்கேள்?"

     "இருக்கேனா என்ன?"

     திடீரென என் பக்கமாய்ச் சாய்ந்து என் கால்களை அணைத்துக் கொண்டாள்.

     "இந்த சமயம் நீங்கள் ரொம்ப அழகாயிருக்கேள்." பேச்சு மூச்சாய் எரிந்தது. "சில சமயங்களில் நீங்கள் ரொம்ப நன்னாயிருக்கேள். திடீர்னு வயசில் பாதியுதிர்ந்து சட்டையுரிச்சாப் போல். புருவம் மட்டும் நரைக்காமல் இருந்தால் இன்னும் நன்னாயிருப்பேள். நீங்களா மாட்டேள். நான் மையைத் தீட்டி விடட்டுமா?"

     "புருவம் நரைக்காமல் இருந்தால் நன்னாயிருப்பேன்."

     "தலை நரைக்காமல் இருந்தால் ரொம்ப நன்னாயிருப்பேன்."

     "நெற்றியில் கோடு விழாமல் இருந்தால் ரொம்ப ரொம்ப நன்றாகயிருப்பேன்."

     என்னுடன் ஆமோதனையில் தலையைப் பலமாக ஆட்டினாள்.

     "இன்னும் சற்று சதைப்பிடிப்பாயிருந்தால் - கழுத்து இவ்வளவு நீளமாக இல்லாமலிருந்தால்-"

     தலைநிமிர்ந்து என்னைச் சந்தேகத்துடன் நோக்கினாள். நான் கேலி பண்ணுவது இப்போதுதான் அவளுக்குத் தெரிந்தது.

     "உன் நிபந்தனைகள் இனி சாத்யமில்லை. அன்று, முதன் முதலாய் உன்னைப் பார்க்க இந்த அரண்மனைக்கு உன் தகப்பனார் என்னை அழைத்து வந்த போதே தோன்றியிருக்க வேண்டும். தவிர-"

     "ஏன் நான் வாயைத் திறந்தாலே என்னை வெட்டிக் கிணற்றில் போடக் காத்துண்டிருக்கேள்?"

     அவள் இடைமறிப்பைக் காதில் வாங்கிக் கொள்ளாமலே அதே மூச்சில் பேசிக் கொண்டே போனேன். எனக்கு லேசாய்த் திணறிற்று.

     "-தவிர, இந்த 'கண்டிஷன்கள்' எல்லாம் எங்களுக்குத்தான். உங்களுக்குத்தான் ஒரு வயதுக்கப்புறம் வயது முழங்காலுக்குக் கீழ் நின்றுவிடுமே!"

     அவளுக்குச் சிரிப்பு பீறிட்டது.

     "ஆமாம், உனக்குச் சிரிப்பாய்த்தானிருக்கும்!" எனக்கு ஏன் இவ்வளவு எரிச்சல்? அவளைப் பார்க்கவே திடீரென்று வெறுப்பாயிருந்தது. மொழுமொழுவென்று அந்த உடல், பெரிதாய், சற்று மேட்டு விழிகள், சிரிப்பில் பளீரிடும் பல் வரிசை, மோவாய்க்குழியில் இயல்பாய் ஒரு மறு, மோவாய்க் கடியில் லேசாய் உருப்படர்ந்து கொண்டிருக்கும் இன்னொரு மோவாய் - கன்னக் கதுப்புகள் - அங்கங்கள் ஒவ்வொன்றும் தனித்தனியாகக் கண்ணைக் கரித்தன.

     "இல்லை, நீங்கள் சொல்ற தினுசு வேடிக்கையாயிருக்கு."

     அவள் பக்கமாகச் சட்டென்று குனிந்தேன்.

     "இதெல்லாம் எதற்குப் பீடிகை? சமாதானம் பண்ணிக் கொள்கிறாய் என்று அர்த்தமா?"

     "ஆமாம்! சமாதானம்! வெற்றி!" உதட்டைப் பிதுக்கினாள். "என்ன அர்த்தமற்ற வார்த்தைகள்!"

     "என்ன, ஞானோதயமோ?"

     அவளுக்குக் கோபம் வரவில்லை. எங்கோ நினைப்பாய் என் பாதங்களை வருடினாள். "அலுப்புன்னு வெச்சுக்கோங்கோளேன்! உங்கள் வெற்றியை விட என் தோல்விதானே உங்களுக்கு முக்கியம்! அப்படியேதானிருந்துவிட்டுப் போகட்டுமே!"

     நான் அசதியுடன் தலைசாய்ந்தேன். எனக்குத் திருப்தியில்லை. தன் தோல்வியை அவள் தானே என்னிடம் தாம்பூலத் தட்டில் தந்தது, அதுவே அவள் வெற்றியாய்த் திரிந்து என் தொண்டையடியில் கசந்தது. இப்படித் தணிந்து, அவளை அவள் இயற்கைக்கு விரோதமாய்ப் பார்க்கவும் பிடிக்கவில்லை. ஒருவருக்கொருவர் ஒருவரிடமிருந்து ஒருவர் என்ன தான் வேண்டுகிறோம்? வாழ்க்கையில் இதற்குள்ளேயே இவ்வளவு தெவிட்டல். பாக்கி நாள் கழிப்பதெப்படி?

     ஒரு பெரும் இடி தூரத்தில் பிறந்து உருண்டு கொண்டே நெருங்கி வந்து தலைமேலேயே போல் நொறுங்கியது. யாக குண்டத்திலிருந்து எழுந்த அக்னிதேவன் கையில் ஏந்திய வெள்ளிப் பாயஸக் கிண்ணம் போல், அறை ஒரு வினாடி மின்னலில் பளீரிட்டு, அறையில் முன்னிலும் காரிருள் கவிந்து சூழ்ந்து கொண்டது. பலத்த மழை மறுபடியும் பிடித்துக் கொண்டது. மரங்கள், ஒப்பாரியில் தலைவிரி கோலத்திலாடின. இலைகளின் சந்து வழி, காற்று கத்தியே தன் காமத்தைத் தீர்த்துக் கொள்வது போல் ஊளையிட்டது.

     பக்கத்து அறையில் ஜன்னல் கதவுகளும் வாசற்கதவுகளும் 'பட்பட்'டென்று அடித்துக் கொண்டன.

     சமையலறையில் ஏதோ சாமான் உருண்டது.

     சாவித்ரி கவனிக்க எழுந்து சென்றாள்.

     இத்தனை அமர்க்களத்தினிடையே ஜன்னல் கண்ணாடி மேல் மழை தாரை ஒன்றன்பின் ஒன்று இடையறாது வழிந்த வண்ணமிருந்தது.

     மௌனக் கண்ணீர்.

     சகுந்தலை இப்படித்தானிருப்பாள்.

     மோனதாரை கழுவக் கழுவ கண்ணாடியே துல்லியமான மிருதுவாகிக் கொண்டிருப்பது போல் தோன்றிற்று.

     இத்தனை பெருக்கின் மூலக்காரணம் ஜலத்துளியின் முதற் கசிவிடம் போல் புஷ்பாஞ்சலியில் நெகிழ்ந்த இறைவனின் இதயம் இப்படித் தானிருக்குமோ?

**

Dec 23, 2009

ஆத்மாநாம் தன்னை நிராகரித்த கவிஞன்-குவளைக் கண்ணன்

குவளைக் கண்ணன்

”கவிதை என்று பிரிக்க முடியாது. கவிதை, கவிதை அல்லாதது என்று மட்டுமே பிரித்தாள முடியும். கவிதை அல்லாதது அப்பட்டமாகத் தன்னைத்தானே வெளிக்காட்டிக்கொண்டு விடுகிறது.

கவிதையானது என்றைக்குமே தனது இருப்பை மொழியின் மீதோ அல்லது அதனைப் பேசும் மக்கள் மீதோ திணித்ததில்லை. திணிக்க வேண்டிய அவசியமும் ஏற்பட்டதில்லை.'”

மேற்கூறிய வாசகங்கள் ஆத்மாநாமுடையவை.

பெருநகர்களில் தனிமனித இருப்பு சார்ந்த நெருக்கடியைத் தெரிவிக்கிற, ஒரு செடியின் இருப்பு வழியாக மனித இருப்பின் அடிப்படைச் சிக்கலை விளக்கிக்கொள்ள முயல்கிற, சகவாசியின் வேதனையைப் பார்ப்பதோடு, கும்பலின் மீதான வெறுப்பை athmanamஉமிழ்கிற (உதாரணம்: கட்டாந் தலைகள்), சுய தேடலுள்ள, குழந்தைகளின் உலகில் ஊடாடுகிற, விளக்குக் கம்பம், திருஷ்டிப் பொம்மை, திருஷ்டிப் பூசணி எனச் சாதாரணமாக நாம் தினசரி பார்ப்பவற்றை முற்றிலும் வேறாகக் கண்டு நமது வாழ்வினுள் கொண்டு வருகிற கவிதைகள், பட்டியலிடும் கவிதைகள், வாசகனிடம் நேரடியாகப் பேசும் கவிதைகள், இயக்கங்கள் தங்களது பிரச்சாரங்களில் உபயோகிக்கக்கூடிய அளவுக்குக் காட்டமான, அப்பட்டமான அரசியல் கவிதைகள், கேலி செய்யும் கவிதைகள், காதல் கவிதைகள் என்று பல்வேறு வகையான கவிதைகளையும் கொண்டது ஆத்மாநாமின் படைப்புலகம்.

'குட்டி இளவரசிக்கு ஒரு கடிதம்', 'குட்டி இளவரசி வந்துவிட்டாள்', 'புத்தம் புதிய' எனும் தலைப்பிலுள்ள கவிதைகள், குழந்தைகளின் உலகம் சார்ந்தவை. குட்டி இளவரசிக்கு ஒரு கடிதத்தில், குழந்தைகளின் புனைவுலகம் சார்ந்த ஷிநீஷீஷீதீஹ் எனும் நாய் வருகிறது அல்ல வருகிறான். நாய்களின் தலைவனைக் கௌரவிக்கக் கூட்டம் நடக்கிறது. அந்தத் தலைவன் எதற்காகக் கௌரவிக்கப்படுகிறான் தெரியுமா, பின்னால் சுமக்கும் பையைக் கண்டுபிடித்ததற்காக.

'குட்டி இளவரசி வந்துவிட்டாள்' கவிதையைப் பார்ப்போம்: டப்பியின் களிப்புகளைப் பரப்பி வைப்பாள்/ சுவற்று அழுக்கை ஈயெனப் பிடிப்பாள்/ கூக்கூவைத் தினம்தினமும் புதிதாய்க் காண்பாள்/ மக்கள் கூட்டத்தில் கூக்குரலிடுவாள்/ ஏறி இறங்கும் படிகள் அவள் உலகம்/ பார்த்தவரெல்லாம் அவளது தோழர்கள்/ பசி உடல் தவிர அழ ஒன்றும் இல்லை/ தனக்குள்தானே பொங்கும் மகிழ்ச்சி அவள்/ ஒவ்வொரு கணமும் மகிழ்ச்சியின் தொடர்ச்சியே/ பெயர் சொல்லி அழைத்தால் திரும்பிப் பார்ப்பாள்/ அவள் ஊடுருவல் பார்வை உம்மையும் மீறிச் செல்லும்.

குட்டி இளவரசி நடக்கக் கற்றுக் கொண்டவள்; அநேகமாக இன்னும் பேச ஆரம்பிக்கவில்லை. பசிக்கு அழுதால்தான் அழுகை. வளர்ந்தவர்களின் ஒழுக்கம்/ ஒழுக்க விதிகள் அவளுக்குப் பொருந்தமாட்டா. மக்கள் கூட்டத்தில் கூக்குரலிடுகிறாள். பார்த்தவரெல்லாம் அவளது தோழர்கள் . . . வளர்ந்தவர்களான நமக்குக் குழந்தையாகிற ஏக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அளவுக்குக் குழந்தைகளின் உலகைக் கவனித்த கவிதை இது. நாமும் குழந்தையாக இருந்தபோது இப்படித்தானே இருந்திருப்போம். சொல்லோடுதான் இப்போதைய குழப்பங்களும் துயரங்களும் நம்மிடம் வந்தனவா?

'பூச்சுக்கள்' என்ற தலைப்பிலுள்ள கவிதையைப் பார்ப்போம்.
வாழ்க்கைக் கண்ணாடியில்/ முகம் பார்த்து/ தலை சீவி/ பவுடர் பூசி/ வெளிக் கிளம்பினேன்/ பஸ் ஸ்டாண்டில்/ என்னைப் போலவே/ ஆண்களும் பெண்களும்/ அவரவர் வாழ்க் கைக் கண்ணாடியில்/ முகம் பார்த்து/ அலங்கரித்து/ காத்து நின்றிருந்தனர்/ வந்து போய்க்கொண்டிருந்த/ வாகனங்களில்/ பொதுமக்கள்/ வேற்றுமை காண இயலாவண்ணம்/ உட்கார்ந்து கொண்டும்/ நகர்ந்துகொண்டும்/ பயணம் செய்துகொண்டிருந்தனர்/ என்னுடைய வாகனம் வந்துவிட்டது/ இடிபாடுகளுக்கிடையே/ நானும்/ ஒரு கம்பியில் தொற்றிக்கொண்டேன்/ எங்கோ ஒரு இடத்தில்/ நிலம் தகர்ந்து/ கடல் கொந்தளித்தது/ ஒரு பூ கீழே தவழ்ந்தது.

இந்தக் கவிதையில் நகரத்தின் காலை நேரக் காட்சியொன்று தரப்படுகிறது. காலை நேரம் என்பதை எட்டிலிருந்து பத்து மணிக்குள் என்று வைத்துக்கொள்ளலாம். திங்கட்கிழமையில் இருந்து சனிக்கிழமைக்குள் ஏதோ ஒரு வேலை நாளாக இருக்க வேண்டும். இதில் வரும் கவிதை சொல்லி வீட்டிலிருந்து கிளம்பிப் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக நிற்கிறார். இவரைப் போலவே ஆண்களும் பெண்களும் காத்துக்கொண்டிருக்கின்றனர். பொதுமக்கள் அடையாளம் காண இயலாவண்ணம் பயணம் செய்கிறார்கள். இவரது வாகனம் வருகிறது. இவரும் ஒரு கம்பியில் தொற்றிக்கொள்கிறார். பெருநகரமொன்றின் வேலைநாட்களின் காலை நேரம் அதன் அத்தனை அவசரத்தோடும் அவதியோடும் கவிதைக்கான காட்சிப் பின்புலமாக நமக்குத் தரப்படுகிறது.

முதல் வரியிலிருந்தே, முதல் சொல்லிலிருந்தே கவிதை தொடங்கிவிடுகிறது. கண்ணாடியில் முகம் பார்த்து, தலை சீவி, பவுடர் பூசி, வெளிக் கிளம்பினேன் என்றாலே கவிதை சொல்லி வீட்டைவிட்டுப் புறப்பட்டதை நமக்குக் காட்டிவிடலாம். ஆனால் வாழ்க்கைக் கண்ணாடி என்கிறார். நாம் ஏன் வெளியே கிளம்புவதற்கு முன் கண்ணாடி பார்க்கிறோம் கண்ணாடியில் முகம் மட்டும்தான் தெரிகிறதா? ஒவ்வொரு முறையும் வீட்டைவிட்டுப் பொதுவெளிக்குள் நுழையும்முன் நாம் ஏன் மறக்காமல் கண்ணாடியிடம் நுழைவுச் சீட்டைப் பெற்றுக்கொள்கிறோம்? கண்ணாடிகள் பிரதிபலிக்கும் தன்மையுடையவை, நாம் உருவத்தைப் பார்த்தால் உருவத்தை. கண்ணாடியில் பார்த்து நமது உருவத்தைத் திருத்திக் கொள்கிறோம். உள்ளுக்குள் எப்படி இருந்தாலும் பொதுவெளிக்கு என்று முகத்தைத் திருத்திக்கொண்டுவிடுகிறோம். கவிஞர் கண்ணாடியில் வாழ்க்கையை, அல்ல கண்ணாடியையே வாழ்க்கையாகப் பார்க்கிறார். உட்கார்ந்துகொண்டு, நகர்ந்துகொண்டு பயணம் செய்யும்போது அடையாளம் காண இயலாதபடி ஆகிறோம். மேலும் பொதுமக்கள் என்பவர் நமது புலன் வெளிக்குள் வந்தாலும் நமது உணர்வுவெளிக்குள் வராதவர்தானே, யாரிடம் நமக்கு எதுவுமே தோன்றுவ தில்லையோ அவர்கள்தானே. இவருடைய வாகனமும் வந்துவிடுகிறது, கவிதைசொல்லியும் கம்பியில் தொற்றிக்கொள்கிறார். பேருந்தில் நின்றுகொண்டு நாம் எதையோ யோசித்துக்கொண்டிருக்கும்போது, சட்டென்று பேருந்து நகரத் தரையே நகர்வது போன்ற உணர்வு ஏற்பட்டு சட்டென்ற திகில் பொங்குமே, அப்படி ஆகிறது. கடைசி வரியில் கவிதை சொல்லி தனது எண்ண ஓட்டத்திலிருந்து நிகழ்கணத்துக்கு வந்து பேருந்துக்கு வெளியே பார்க்க, பேருந்து நகரும் திசைக்கு எதிர்திசையில் ஏதோ ஒரு பெண் நடந்துபோகிறாளா? அசைவுகள் நினைவுகளாகி இந்த நான்கு வரிகளும் அசைபோட்டு சொல்லப்படுகின்றனவா? இப்படி வாசிக்கலாம். மற்றொரு வாசிப்பாகப் பேருந்து நெரிசலில் தவிக்கிற அதே சமயத்தில் பூமியின் வேறொரு பகுதியில் பூமி நகர்ந்து, கடல் கொந்தளிந்துவிடலாம். வேறொரு இடத்தில் தனக்குக் கீழே தண்ணீரிலோ காற்றிலோ பூவொன்று தவழ்வதைக் கவிஞர் சொல்வதாகக் கொள்ளலாம். அதாவது முதலில் சொல்லப்பட்ட சந்தடியும் இரைச்சலுமான நகரக் காட்சியின் அருகில் பூமியின் வேறெதோ இடத்தில் வேறெதோ காலத்தில் நடந்த, நடக்கப் போகிற நிகழ்ச்சியை வைத்துக் கவிதைக்கும் வாழ்வுக்கும் அழகூட்டிவிடுகிறார். இப்படியும் வாசிக்கலாம்.

இந்தக் கவிதையில் 'இடிபாடுகளுக்கிடையே' என்ற சொல்லைக் கவனியுங்கள். நெரிசல் என்ற சொல்லே பொதுவாக உபயோகத்திலுள்ள சொல், தகர்ந்த கட்டுமானங்களைப் பற்றிச் சொல்லும்போது நாம் உபயோகிக்கிற சொல் 'இடிபாடுகள்' என்பது, இப்போது மீண்டும் இந்தக் கவிதையை வாசியுங்கள்.

ஆத்மாநாமின் கவிதை உலகை மேலும் அறிவதற்கு ஏதுவாகச் சில வரிகளைப் பார்ப்போம்:

முட்டிமோதிப் பார்க்கிறது கடல்/ மணலைத் தன் நீலப் புடவைக்குள்/ சுருட்டிக்கொள்ள* உங்கள் இருப்பை நிரூபிக்க/ முத்தத்தைவிட சிறந்ததோர் சாதனம் கிடைப்பதரிது . . . முத்தம்/ முத்தத்தோடு முத்தம்/ என்று/ முத்த சகாப்தத்தைத் துவங்குங்கள்* முன்பென்றால் நினைவு/ பின்பென்றால் கனவு/ இப்பொழுதென்றால் நான்* நானும் வேறான நானும் பொய்/ நான் இல்லை* சித்திரத்திற்கு குரல் இருக்க வேண்டும்/ அந்தக் குரலுக்கு உயிர் இருக்க வேண்டும்/ பார்ப்பவன் பேச வேண்டும்/ பேச்சில் தெளிவு வற்றாதது தெளிவு/ நீங்கள் ஒவ்வொரு வரும்/ ஒரு சமவெளியை நிரப்பிக் கொண்டிருக்கிறீர்கள்* எல்லோருமே/ ஒரே ஒரு புத்தகத்தைத்தான்/ படிக்கப்/ போகிறீர்கள்/ அது உங்கள் புத்தகம் தான்* இந்தக் கவிதை/ எப்படி முடியும்/ எங்கு முடியும்/ என்று தெரியாது./ திட்டமிட்டு முடியாது என்றெனக்குத் தெரியும்/ இது முடியும்போது/ இருக்கும் (இருந்தால்) நான்/ ஆரம்பத்தில் இருந்தவன்தானா.* உதிரும்/ மலரின்/ கணிதத்தை/ என்றாவது/ யோசித்திருந்தால்/ மட்டும்/ இது புரியும்* சரக்கென்று/ உடல்விரித்துக்/ காட்டும்/ கற்றாழையின்/ நுனியிலிருந்து/ துவங்கிற்று வானம்* வயல்களுக்கப்பால் இருந்த/ சூரியன் மேலே சென்றான்/ எருமைகள் ஓட்டிச் சென்ற/ சிறுவனின் தலையில் வீழ்ந்தான்.

மொத்தக் கவிதைகளில் பதினைந்துக்கு மேற்பட்ட சமூக/ அரசியல் கவிதைகள் உள்ளன. ஒருவகையில் தமிழில் இவ்வாறான கவிதைகளுக்கான முன்னோடி என்றுகூட ஆத்மாநாமைச் சொல்லலாம். இவ்வகைக் கவிதைகளில் நுட்பமானவையும் உள்ளன, அப்பட்டமானவையும் உள்ளன. இவ்வகைக் கவிதைகளின் சில வரிகளைப் பார்ப்போம்.

தூங்குபவர்களையும்/ தூங்குபவர்களைப் போல் நடிப்பவர்களையும்/ எழுப்பும் வார்த்தைக் கூட்டங்கள்/ புறப்பட்டாகிவிட்டது கருப்புப்படை* எனது சுதந்திரம்/ அரசாலோ தனி நபராலோ/ பறிக்கப்படுமெனில்/ அது என் சுதந்திரம் இல்லை/ அவர்களின் சுதந்திரம்தான்* மக்கள் சுபிட்சமாய் இருந்தனர்/ அவசரமாய் அவ்வப்போது ஒன்றுக்கிருந்து* இந்த நகரத்தை எரிப்பது/ மிகச் சுலபம்/ ஒரு தீப்பெட்டி போதும் . . . ஓசைகள் குறைந்த இரவில்/ எங்கேனும் துவங்கலாம் . . . தனியொருவன் எரித்தால் வன்முறை/ அரசாங்கம் எரித்தால் போர்முறை * மந்திரிப் பெயர் சூட்டிக்கொண்ட/ அரச குமாரர்கள் . . . ஜனநாயக சர்வாதிகாரம் . . . சூழ்ந் துறங்கும்/ மனித உரிமைகள்.

இவ்வகையிலான இரண்டு கவிதைகளைப் பார்ப்போம்:

'நன்றி நவிலல்' எனும் தலைப்பில்: இந்தச் செருப்பைப் போல்/ எத்தனை பேர் தேய்கிறார்களோ/ இந்தக் குடையைப் போல்/ எத்தனை பேர் பிழிந் தெடுக்கப்படுகிறார்களோ/ இந்தச் சட்டையைப் போல்/ எத்தனை பேர் கசங்குகிறார்களோ/ அவர்கள் சார்பில்/ உங்களுக்கு நன்றி/ இத்துடனாவது விட்டதற்கு.

'தும்பி' எனும் தலைப்பில்: எனது ஹெலிகாப்டர்களைப்/ பறக்கவிட்டேன்/ எங்கும் தும்பிகள்/ எனது தும்பிகளைப்/ பறக்கவிட்டேன்/ எங்கும் வெடிகுண்டு விமானங்கள்/ எனது வெடிகுண்டு விமானங்களைப் பறக்கவிட்டேன்/ எங்கும் அமைதி/ எனது அமைதியைப் பறக்கவிட்டேன்/ எங்கும் தாங்கவொண்ணா விபரீதம்.

இவை மட்டுமல்ல, பல்வேறு தொனிகளில் ஏற்கனவே சொன்னதுபோல் பதினைந்துக்கும் மேற்பட்ட சமூக, அரசியல் கவிதைகள் உள்ளன. இவ்வாறான கவிதைகளில் ஒன்று 'அவள்'. இந்த அவள் நீங்கள் நினைக்கிற 'அவள்' அல்ல, இது 1984க்கு முன்னர் எழுதப்பட்டது.

எந்த ஒரு கட்டுப்பாட்டுக்குள்ளும் இயங்க முடியாத ஒருவன் மட்டுமே படைப்பாளியாக முடியும். சுதந்திரத்தின் உச்சகட்டத்தில் இருப்பவன் மட்டுமே செயல்பட முடியும். புதிய புதிய திசைகளை அடையாளம் காண முடியும். படைப்பாளி தனக்குத்தானே கேள்விகளைக் கேட்டுக்கொண்டு பதில்களைக் கண்டுபிடித்துக்கொள்கிறான். அவன் தனக்குத்தானே குருவாகி சிஷ்யனுமாகித் தன்னையே நிராகரித்துக் கொண்டிருக்கிறான். தொடர்ந்து குருவின் சிலையை உருவாக்கும் உளிச் சத்தம் ஒன்றும் குருவின் சிலையை உடைக்கும் உளிச் சத்தம் ஒன்றும் கேட்கின்றன.

மேல் பத்தியிலுள்ளவையும் ஆத்மாநாமின் வாசகங்கள்தான். நம்மிடையே பல கவிஞர்களும் தம்மை நிறுவ முயன்று, தமக்கென்று ஒரு குறிப்பிட்ட ரீதியைத் தேர்ந்தெடுத்து, தம்மை மீண்டும் மீண்டும் நிறுவிக் கொண்டிருக்கையில், தன்னையே தொடர்ந்து நிராகரித்து வந்ததால்தான் பல்வகைப்பட்ட, பல ரீதியிலான கவிதைகளை அவரால் எழுத இயன்றிருக்கிறது. தமிழில் பலவகையான கவிதைகளை எழுதிய கவிஞர்களில் ஆத்மாநாம் ஒருவர். சரியாகச் சொல்வதானால் ஒரே ஒருவர்.

ஆத்மாநாம் பற்றி பிரம்மராஜன் எழுதியுள்ள வாழ்க்கைக் குறிப்பிலிருந்து Lithium, Hyportry, Largatyl, Fenargan போன்ற மருந்துகளை ஆத்மாநாம் தொடர்ந்து உட்கொண்டது தெரிகிறது. இவரது கவிதைகளில் 'ஒரு குதிரைச் சவாரி' என்கிற ஒரே ஒரு கவிதையில் மட்டுமே இந்த தனிப்பட்ட நிலைமை வெளியாகி வாசகனைத் துயருறச் செய்கிறது. எழுதுபவர்களது மன அவசங்களும் மன அலைவுகளும் மனச் சிக்கல்களும் கவிதையில் அதிகமாக எழுதப்படுகிற இந்தக் கட்டத்தில் கவிதை எழுதுபவர்கள் கவனிக்க வேண்டிய தன்மை இது. கவிதைக்கு ஆட்படுவதற்கும் கவிதையை ஆட்படுத்த நினைப்பதற்கும் உள்ள மிகப் பெரிய வித்தியாசத்தை ஆத்மாநாம் உணர்ந்திருக்கக்கூடும். மேலே குறிப்பிடப்பட்ட நான்கு மாத்திரைகளில் ஏதாவது ஒன்றைத் தொடர்ந்து உட்கொண்டுவரும் ஒருவரிடம் அவரது பெயர் கேட்கப்பட்டால், தனது பெயரைச் சொல்லக்கூட அவருக்கு நேரமெடுக்கும். ஆத்மாநாமுக்கு மனித உறவுகளிலும் சமூக வாழ்விலும் சிக்கலிருந்திருக்கலாம். இலக்கியத்தைப் பொறுத்தவரை அவர் ஒரு திடமான பரப்பில் நின்றிருந்திருக்கிறார். ஆத்மாநாம் கவிதைக்கு ஆட்பட்டவர்.

மொத்தம் நான்கே பக்கங்கள் வரக்கூடிய இவரது இரண்டு கட்டுரைகளும் பிரம்மராஜனுக்கு அளித்த நேர்காணலும் தமிழ்க் கவிதையியலுக்கு ஆத்மாநாமின் முக்கியப் பங்களிப்புகள். 'கவிதை எனும் வார்த்தைக் கூட்டம்' கட்டுரையில் எனது 'மனத்தில் தைத்த கவிதைகள்' எனத் தந்திருக்கும் கவிதை வரிகள், கவிதை பற்றிய புரிதலுக்குப் பெரிதும் உதவக்கூடியவை. இப்படி ஒரு பத்துக் கவிஞர்கள் அவர்களது மனத்தில் தங்கிய கவிதை வரிகளைத் தந்தால் அது தற்காலத் தமிழ்க் கவிதைகளின் உண்மையான வாசகருக்கு உதவக் கூடிய திரட்டாக அமையும்.

'ஆத்மாநாமைப் பற்றியும் கவிதை பற்றியும்' ஆத்மாநாம் - ஐ எனும் கட்டுரையில்:

தன்னிலிருந்து தானே விடுபடும் போது ஒருவன் மனிதனுக்கு ஒருபடி மேலே செல்கிறான் என்பவர், "உண்மையைத் தவிர வேறு எதுவும் இலக்கியமாக முடியாது என்பதில் நம்பிக்கை உள்ளவர்" என்று சொல்லி மேலும் "இலக்கியத் தொடர்பாலேயே வாழ்க்கை வாழத் தகுதியுள்ளதாக நினைக்கும் இவர், இலக்கியத் தொடர்பாலேயே வாழ்க்கை முடியுமோ என்று அஞ்சுகிறார்" என்று தன்னைப் பற்றிக் குறிப்பிடுகிறார். இலக்கியத் தொடர்பாலா முடிந்தது? முடிந்ததா?

06.07.1984 அன்று மரணத்தில் மூழ்கியது, 18.01.1951இல் பிறந்த ஷி.ரி. மதுசூதன். இதற்கு இருபது ஆண்டுகள் கழித்தும் இப்போதும் ஆத்மாநாம் இருக்கிறார், இன்னும் இருப்பார். கவிதைகளின் வாழ்வல்லவா கவிஞர்களின் வாழ்வு.

('கடவு' சார்பில் மதுரையில் நடத்தப்பட்ட 'கூடல்' கவிஞர்கள் சந்திப்பில் வாசிக்கப்பட்ட கட்டுரையின் விரிவாக்கம்)

ஆத்மாநாம் படைப்புகள்
பதிப்பாசிரியர்: பிரம்மராஜன்
காலச்சுவடு வெளியீடு
விலை ரூ. 150/

நன்றி: காலச்சுவடு இதழ்

Dec 19, 2009

அலையும் நுரையும்-எஸ்.ராமகிருஷ்ணன்

எஸ்.ராமகிருஷ்ணன் -- கதாவிலாசம்

கி.ராஜநாராயணன்

இது ஏழு ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. வாழ்க்கையில் முதல் முறையாக ஒரு நகையை அடமானம் வைப்பதற்காக வங்கிக்குச் சென்றிருந்தேன். மனைவியின் கழுத்தில் போட்டுப் பார்த்திருந்த நகையை, ஒரு காகிதத்தில் சுருட்டி சட்டைப் பையில் வைத்தபடி வங்கியின் முன்னால் காத்திருந்தபோது, அது வரை நகைக்கு இருந்த வசீகர மும் அழகும் காணாமல்போய் அது வெறும் ஜடப் பொருளாக இருந்தது.

  நகையை வாங்கும்போது மிக அழகான வெல்வெட் பெட்டியில் வைத்துத் தந்தது நினைவில் இருக்கிறது. அது ஒரு ஊதா நிற வெல்வெட். தங்கச் சங்கிலி அதில் ஒய்யாரமாகப் படுத்திருந்தது. அடமானம் வைக்கப் போகும்போது எதற்காக இத்தனை ஒப்பனை என்று 3754766806_03b61a4d8e_mநினைத்தோ என்னவோ, அதை ஒரு செய்தித்தாளின்கிழிந்த காகிதத்தில் சுருட்டி மடித்துக் கையில் தந்திருந்தாள். விருப்பமான பெண்ணுக்கு நகையை வாங்கித் தருவது வாழ்வின் சந்தோஷமான ஒரு தருணம் என்றால், அதை கழற்றி வாங்குவது வெகு வேதனை யான தருணம்!
வேம்பு பூத்திருந்த காலமது. கூட்டுறவு வங்கியின் படிகள் முழுவதும் வேப்பம்பூக்கள் சொரிந்து கிடந்தன. நான் காலடியில் கிடக்கும் பூவை கையில் எடுத்துப் பார்க்கக்கூட முடியாத கூச்சத்துடன் காத்திருந்தேன். பையில் நகையுடன்காத்துக்கிடப்பது ஏனோகோவலனை நினைவுபடுத்தியது.

கண்ணகியிடமிருந்து சிலம்பு வேண்டும் என்று கேட்பதற்கு முன்னால், மதுரை நகரின் வெளியில் உள்ள ஆய்ச்சியர் குடியிருப்பில், நீண்ட நாட்களுக்குப் பிறகு கண்ணகி சமைத்த உணவை ருசித்துச் சாப்பிடுகிறான். மனைவியின் அருமை அப்போதுதான் புரிகிறது. கடந்த காலத்தில் கோவலன் தவறு செய்துவிட்டதாக கண்ணகி நினைவு கூர்கிறாள். கோவலனும் நெகிழ்ச்சியுடன் ஒப்புக் கொள்கிறான். பிறகு, தயக்கத்துடன் தாழ்ந்த குரலில் அவளது காற் சிலம்பை கழற்றி வாங்கிக் கொண்டு செல்கிறான். காப்பியக் கதாநாயகர் களே எச்சில் விழுங்க முடியாத துக்கத்துடன் மனைவியிடம் இருந்து நகையைக் கழற்றி வாங்கும் நிலையில் இருக்கும்போது, சாதாரண மனிதர்கள் எம்மாத்திரம்?

வங்கியில் நகையை அடமானம் வைப்பதற்கு நிறைய விதிமுறைகள் இருந்தன. Ôநகையைப் பரிசோதனை செய்துபார்க்கும் பத்தர் வரும் வரை காத்துக் கொண்டு இருங்கள்Õ என்று சொன்னார்கள். என்னைப் போலவே அறுபது வயதான நபர் ஒருவர், பச்சை சேலை கட்டிய, எண்ணெய்ப் பசையில்லாத தலைகொண்ட நாற்பது வயது கிராமத்துப் பெண்மணி ஒருவர், பனியன் தெரிய சட்டை போட்டிருந்த வியாபாரி ஒருவர் என யாவரும் ஒரே பெஞ்சில் உட்கார்ந்திருந்தோம்.

எதிரில் இருந்த போர்டில் நகையை மீட்க முடியாமல்போய், ஏலத்துக்கு விடப்போகும் நபர்களின் பட்டியலும் முகவரியும், கட்ட வேண்டிய தொகையும் இருந்தன. நான் அந்தப் பெயர்களை ஒவ்வொன்றாகப் படித்துக்கொண்டு வந்தேன். சொற்பத் தொகை முந்நூறு ரூபாய்க்குகூட அடமானம் வைக்கப்பட்டு இருக்கிறது. அதுகூட மீட்க முடியாமல் ஏலத்துக்கு போகப் போகிறது. நகையை வைத்த நபரின் பெயர் சந்தானலட்சுமி என்றிருந்தது. முகம் காணாத சந்தானலட்சுமியைப் பற்றியும், அவளது வாழ்க்கையில் என்ன நடந்திருக்கும் என்பது பற்றியும் மனம் தானாக கற்பனையைக் கிளைவிடத் துவங்கியிருந்தது.
பத்தர் ஒரு பைக்கில் வந்து இறங்கினார். பாரியான உடம்பு. நெற்றியில் பெரிதாக குங்குமம் வைத்திருந்தார். இவரை நகைக்கடை பஜாரில் பார்த்திருக்கிறேன். அங்கிருந்த யாவரையும் பார்த்து ஒரு புன்னகை சிந்தியபடி உள்ளே நுழைந்தார். என் முன்னே நின்றிருந்த வயதானவர், தனது கையில் வைத்திருந்த மஞ்சள் பையிலிருந்து சிறியதும் பெரியதுமான நகைகளை அங்கிருந்த மேஜையில் கொட்டினார். நாலைந்து மோதிரங்கள், இரண்டு ஜோடி கம்மல்கள், மூன்று வளையல்கள், ஒரு கம்பி செயின். ஒரு ரெட்டை வடம் செயின்... பத்தர் ஒவ்வொரு நகையாக எடுத்துப் பார்த்து உரசிக்கொண்டு இருந்தார்.

தனது மகனுக்கு மலேஷியாவில் வேலை கிடைத்துள்ளதாகவும், அங்கே போவதற்குப் பணம் புரட்ட வேண்டும் என்று வீட்டில் தனது மனைவி, மருமகள் இருவரது நகைகளையும் அடமானத்துக்குக் கொண்டு வந்திருப்பதாகவும் வயதானவர் சொன்னார். அதில் சில நகைகளை அடமானம் வைக்க முடியாது என்று விலக்கிவைத்த பத்தர், மற்றவற்றை எடை போட்டுக்கொண்டு இருந்தபோது தராசுக்கு இரண்டு தட்டுகள் மட்டுமில்லாமல் மூன்றாவது தட்டாக எதிரே இருப்பவரின் மனதும் ஆடிக்கொண்டு இருப்பது தெரிந்தது.

நகையை அடமானம் வைப்பது என்ற பேச்சு இவர்கள் வீட்டில் எப்போது துவங்கியிருக்கும்..? ஒரு முணுமுணுப்புகூட இல்லாமல் இந்த நகைகளை கழற்றிக் கொடுத்திருப் பார்களா? ஏன்... மூன்று வளையல்கள் இருக்கின்றன. மருமகள் ஒரு வளையலாவது இருக்கட்டும் என்று கழற்றித் தர மறுத்துவிட்டாளா? மலேஷியா போகிறவன் தனது வேலைக்குப் பின்னால் இத்தனை பேரின் இழப்புகள் இருப்பதை உணர்ந்திருப் பானா? இந்த நகைகள் மீட்கப்பட்டுவிடுமா? எனக்குத் தொடர்பில்லாத, ஆனால், என்னால் தவிர்க்க இயலாதபடி மனம் கேள்வி களைப் பின்னிக்கொண்டே இருந்தது.

பத்தர் எல்லாவற்றையும் எடை போட்டு சீட்டைக் கொடுத்தபோது, அது ஐம்பதாயிரத்துக்கும் குறைவாகவே வந்தது. வயதானவர் தயங்கித் தயங்கி தனது சட்டைப் பையிலிருந்து குழந்தைகள் கழுத்தில் போடும் ஒரு முருகன் டாலரை எடுத்து நீட்டி, அது தனது நாலு வயதுப் பேத்தி லாவண்யா வின் கழுத்தில் கிடந்தது என்றும், அவள் தூங்கிக்கொண்டு இருந்தபோது இரவிலே கழற்றி எடுத்துவிட்டதாகவும், அதை அடமானம் வைக்காமலே சமாளித்துவிடலாம் என்று நினைத்ததாகவும் சொன்னார்.
பத்தர் அந்த நகையையும் எடை போட்டுப் பார்த்தபடி சரியாக ஐம்பதாயிரம் ரூபாய் கணக்கு வருகிறது என்றார்.

வயதானவர் மௌனமாக எடைத் தட்டைப் பார்த்தார். அது காலியாக ஆடிக்கொண்டே இருந்தது. சீட்டை வாங்கிக்கொண்டு உள்ளேயிருந்த மற்றொரு வங்கி ஊழியரின் கையெழுத்தைப் பெறுவதற்கு நடந்துபோனார். அடுத்து நின்றிருந்த நான் கூச்சத்துடன் எனது சட்டைப் பையிலிருந்த நகையை வெளியே எடுத்து அவரிடம் நீட்டினேன். என்னைக் கவனிக்காமல் பத்தர் சிறிய சுருக்குப் பை ஒன்றில் வெற்றிலைகளைத் திணிப்பது போல் அடமானத்துக்குப் பெற்றிருந்த நகைகளைத் திணித்தார்.
எனக்குப் பின்னால் நின்றிருந்த கிராமத்துப் பெண்மணி, நான் அடமானம் வைக்கும் நகையின் மாடலை ஆசையோடு பார்த்தாள். பத்தர் தந்த சீட்டை எடுத்துக்கொண்டு நான் உள்ளே நுழைந்த போது, அந்த வயதான நபர் அதே மஞ்சள் பையில் பத்து ரூபாய், இருபது ரூபாய் கட்டுகளை வாங்கிக்கொண்டு வெளியே வந்தார்.

வாசலில் ஒரு பைக்கில் அவரது பையனும், பேத்தியும் காத்திருந்தார்கள். பையன் எதையும் கேட்டுக்கொள்ளவில்லை. சிறுமி மட்டும் அந்தப் பெரியவரைப் பார்த்ததும் முகத்தைச் சுளித்தபடி Ôபோ... தாத்தா! நான் யார் கூடயும் பேச மாட்டேன். அம்மா, என் டாலர் செயினை கழட்டிவெச்சிட்டுத் தர மாட்டேங்குறா... கேட்டா திட்டுறாÕ என்று மழலைக் குரலில் சொன்னாள். தாத்தா அவளைத் தூக்கிக்கொண்டு “உனக்கு நான் ஜிலேபி வாங்கித் தர்றேண்டா கண்ணு!” என்றார்.

அந்தச் சிறுமி உதிர்ந்து கிடந்த வேப்பம்பூக்களை ஆசைஆசையாகக் கை நிறைய அள்ளினாள். பார்த்துக்கொண்டு இருந்தபோதே ஒரு வேப்பம் பூவை காதில் வைத்து, ‘கம்மல் எப்படியிருக்கு தாத்தா?’ என்று கேட்டாள். தாத்தாவோ, அவளது அப்பாவோ பதில் சொல்லவில்லை. என்னை நிமிர்ந்து பார்த்துவிடுவாளோ என்று தயக்கத்துடன் நானும் தலை குனிந்துகொண்டேன். அந்தச் சிறுமி தானாகவே, ‘நல்லாயிருக்கு!’ என்று சொல்லியபடி பைக்கில் ஏறிக்கொண்டாள். அவர்கள் புறப்பட்டுப் போய்விட்டார்கள்.
வீடு திரும்பிய என்னைப் பார்த்து, ‘பத்து நிமிஷத்து வேலை. இதுக்குப் போய் எதுக்கு இத்தனை பதற்றம்?’ என்று கேலி செய்தாள் மனைவி. அந்தக் கோடை முழுவதும் வேப்பம்பூக்களைப் பார்ப்பது என் குற்ற உணர்ச்சியை அதிகப் படுத்துவதாக இருந்தது.

ராட்சச ராட்டினத்தில் பெட்டிகள் சரேலென்று கீழே இறங்கும்போது அடிவயிற்றில் ஏற்படும் பதைப்பு போல, வாழ்க்கையின் சுழற்சி நம்மை நிலைகுலைக்கின்றது. ஆனாலும், மேலே போவதும் கீழே இறங்குவதும் தானே ராட்டினம்! நாள்பட யாவும் பழகிப் போய்விடுகின்றன. நகரத்துக்கு வந்த பிறகு நண்பர்கள் சர்வ சாதாரணமாக கையில் உள்ள மோதிரத்தை அடமானம் வைப்பதையும், பைக்கை அடமானம் வைத்துப் பணம் புரட்டுவதையும், நாலைந்து கிரெடிட் கார்டுகளும் கண்ட பிறகு, சாலையோரத்தில் தன் உடம்பில் தானே சவுக்கால் அடித்துக் கொள்ளும் நபரைப் போலத்தான் வாழ்வு நம் யாவரையும் வைத்திருப்பது புரிந்தது.

இந்த நிகழ்வுக்குப் பிறகிலிருந்து, தினசரி பேப்பர்களில் வரும் ஏல விளம்பரங்களைக் காணும்போதெல்லாம்அந்த நபர்கள் அனைவரும் எனக்குமிக நெருக்க மானவர்கள் போல் உணர்வேன். நீங்களும், நானும், முகம் தெரியாத யாவரும் அடமானம் வைக்கும் தராசுத் தட்டின் முள்ளை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்த வர்கள்தானே என்று பெயரில்லாத பந்தம் ஒன்று உருவாகிவிடுகிறது.

கதவு என்று ஒரு கதை. ஒரு குடும்பத்தில் ஏற்படும் சரிவைச் சொல்லும் அற்புதமான கதை. எழுதியவர் கி.ராஜநாராயணன். கரிசல் இலக்கியத்தின் முன்னோடி. மண்ணின் வாசனையும் ருசியும் கொண்ட எழுத்து இவருடையது. நவீன தமிழ் இலக்கியத்துக்கு கரிசல் பூமியை அறிமுகப்படுத்திய பெருமை இவரையே சாரும். இவரது கதையுலகம் அதுவரை தமிழ் இலக்கியத்தில் இடம் பெற்றிராத அசல் கிராமத்து முகங்களைப் பதிவு செய்தது. நம் காலத்தின் மூத்த கதை சொல்லியான கி.ராஜநாராயணன் மக்கள் மொழியிலே இலக்கியம் படைப்பவர்.
கதவு” கதை வெளியாகி நாற்பது வருடங்களுக்கும் மேலாக கடந்துவிட்டது. ஆனாலும், இன்று வாசிக்கும்போதும் அதன் ஈரம் அப்படியே இருக்கிறது. அக்கதை எட்டு வயது லட்சுமியும் அவளது தம்பி சீனிவாசன் என்ற சிறுவனும் வாசற் கதவில் ஏறிக்கொண்டு கதவாட்டம் ஆடுவதில் துவங்குகிறது.

பகல் நேரங்களில் அம்மா கைக் குழந்தையைப் பார்த்துக் கொள்ளச் சொல்லி வீட்டில் விட்டு விட்டுப் போன பிறகு, அவர்கள் கதவில் ஏறிக் கொண்டு, அதை ஒரு பஸ் போலக் கற்பனை செய்து கொண்டு முன்னும் பின்னுமாக ஆடி விளை யாடுவது ஒரு வாடிக்கை. ஒரு நாள் லட்சுமி எங்கிருந்தோ கொண்டுவந்து ஒரு தீப்பெட்டிப் படம் ஒன்றை கதவில் ஒட்டி அழகு பார்க்கிறாள்.

ஒரு நாள் தீர்வை கட்டத் தவறியதால் கிராமத்து தலையாரி நாலு ஆட்களோடு வந்து, வீட்டு கதவைப் பிடுங்கி எடுத்துக்கொண்டு போய் விடுகிறான். அதை லட்சுமியால் தாங்க முடியவில்லை. அவள் கரைந்துகொண்டு இருக்கிறாள். கதவில்லாத வீட்டைக் கண்டதும் லட்சுமியின் அம்மாவுக்கு அடிவயிற்றில் இருந்து வேதனை எழும்புகிறது. அவள் குழந்தைகள் பார்ப்பதைக்கூடப் பொருட்படுத்தாமல் அலறி அழுகிறாள்.

கூலி வேலைக்காக மணிமுத்தாறு போயிருந்த லட்சுமியின் அப்பா, பல நாட்களாக வீடு திரும்பவேயில்லை. கார்த்திகை மாசத்துக் குளிரில் கதவில்லாத வீட்டில் வாடைக்காற்று ஊசி குத்துவது போல அவர்கள் உடம்பைத் துளைக்கிறது. குளிர் தாங்க முடியாமல் கைக்குழந்தை இறந்துபோகிறது.
ஒரு நாள் சீனிவாசன் தங்கள் வீட்டுக் கதவு, சாவடியின் பக்கத்தில் நிராதரவாகக் கிடப்பதைக்கண்டு அக்காவிடம் ஓடி வந்து சொல்கிறான். அவர்கள் ஓடி அதை ஆசையோடு தொட்டுத் தடவுகிறார்கள். அதில் பற்றியிருந்த கரையானை லட்சுமி தனது பாவாடையால் துடைக்கிறாள். இந்தச் சந்தோஷத்தில் சீனிவாசனைக் கட்டிக்கொண்டு முத்தமிடுகிறாள். இருவரின் கைகளும்பலமாக கதவைப் பிடித்துக்கொண்டு இருந்தன என்பதோடு கதை முடிகிறது.
திருவிளையாடல் புராணத்தில், பிட்டுக்கு மண் சுமந்தபோது, சிவன் வேலை செய்யவில்லை என்று அவரது முதுகில் அடி கொடுக்கிறார்கள். அந்த அடி ஊரில் இருந்த யாவரின் முதுகிலும் விழுந்தது என்று வருகிறது.

புராணம் சொல்வது நிஜமோ, பொய்யோ தெரியாது. ஆனால், வாழ்வில் நமது அவமானமும் வேதனைகளும் நமது குழந்தைகளின் முதுகிலும் அடியாக விழுகின்றன என்பது மறுக்க முடியாத உண்மை. சிவனும் முதுகில்அடிபட்டவர் என்பதால்தானோ என்னவோ, அவர் மீதும் நெருக்கமான அன்பு வருகிறது. என்ன செய்வது... மண்புழுவுக்கு இரண்டு தலைகள் இருந்தும் அது மண்ணில்தான் ஊர்ந்துகொண்டு இருக்கிறது. வாழ்வின் இயல்பே இதுதான் போலும்!

சாகித்ய அகாடமி விருது பெற்ற கி.ராஜநாராயணன், கரிசல் இலக்கியத்தின் பிதாமகர். கோவில்பட்டியின் அருகில் உள்ள இடைசெவல் கிராமத்தைச் சேர்ந்தவர். சுனை நீரைப்போல சுத்தமானதும்ருசிமிக்கதும் இவரது எழுத்து. 1958-ல் சரஸ்வதி இதழில் இவரது முதல் கதை வெளியானது. இவரின் கதையுலகம் கரிசல் வட்டாரத்து மக்களின் நம்பிக்கை களையும், ஏமாற்றங்களையும், வாழ்க்கைப்பாடுகளையும் விவரிப்பவை.

கி.ரா. என்று நண்பர்களால் அழைக்கப்படும் கி.ராஜநாராயணன் இயல்பில் ஒரு விவசாயி. ஒரு தேர்ந்த கதை சொல்லி. ‘நான் மழைக்குத்தான் பள்ளிக்கூடம் ஒதுங்கியவன். பள்ளிக்கூடத்தைப்பார்க்காமல் மழையைப் பார்த்துக்கொண்டு இருந்துவிட்டேன்’ என்று தன்னைப் பற்றிக் கூறிக்கொள்ளும் கி.ரா., பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் சிறப்பு பேராசிரியராக வேலை செய்த பெருமைக்குரியவர். நல்ல இசை ஞானம் கொண்டவர்.

கோபல்ல கிராமம், கிடை, வேஷ்டி, கதவு, கோபல்லபுரத்து மக்கள், கரிசல் காட்டுக் கடுதாசி, பிஞ்சுகள், அந்தமான் நாயக்கர் போன்றவை இவரது முக்கிய படைப்புகள். கரிசல் வட்டார அகராதி என்று மக்கள் தமிழுக்கு அகராதி உருவாக்கிய முன்னோடி இவரே. இலக்கிய சிந்தனை விருது, தமிழக அரசின் விருது உள்ளிட்ட தமிழின் முக்கிய இலக்கிய விருதுகள் பெற்ற, எண்பது வயதான கி.ரா. தற்போது பாண்டிச்சேரியில் வாழ்ந்து வருகிறார்.

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்