Nov 30, 2009

வாழ்க்கை-சி.சு.செல்லப்பா

சி.சு.செல்லப்பா

பகவான் கொடுத்த சொத்து, பூமி என்றெல்லாம் தாம் சொல்லிக் கொள்ளும் அந்தக் களிமண் கட்டிப் பரப்பு அத்தனைக்கும் அந்த வெயிலில் கொத்துக்காரன்தான் ராஜா.

”போயும் போயும் நிலம் வந்து வாங்கினோமே, பாழாய்ப்போன ஊரிலே, குடி தண்ணிக்கு வழி இல்லை. எடுத்துக்கிட்டு வாடா அரிவாளை, பெட்டியிலே இருந்து” என்ற வார்த்தைகளுக்கு முன்பு நடந்த விஷயங்கள் வருமாறு:

peter-hudson-painting

பட்டுப் பட்டுப் பழகிப்போன மிராசுதார் மாமாவுக்கே தாங்க முடியாத வெப்பம். அறுப்புக் களம், பட்டுப் படைக்கிற வெயில். நிழலின் சாயை பர்லாங்கு தூரத்துக்கு விழாத ஒரு பொட்டலிலே-சுடுகாட்டிலே என்று கூடச் சொல்லலாம். அறுகங்கட்டை வெளியிலே களம் கூட்டி இருந்தாள் பள்ளி. ஏறிப்போயிருந்த ஒற்றை வண்டி நிழலிலே ஏறும் வெயிலுக்குத் தக்கபடி ஒதுங்கி ஒதுங்கி ஒண்டுவதைத் தவிர வேறு ஒரு வழியும் இல்லை. கண்முன்னே அனல் பூச்சி பிடித்து ஓடிக்கொண்டிருக்கிறது.

மாமாவின் வாயிலிருந்து வார்த்தை சீறி விழுந்தது. ”ஏன் புள்ளே, ஏன், அந்தக் கரட்டுமேலே கூட்டிவைக்கிறதுதானே? குத்துக்கல்லு குத்துக்கல்லா இருக்குமே – களத்துலே நெல்லு களமாக் கிடக்கும்.”

”இல்லேப்பா. வகையாக் களம் சிக்கல்லே. வேணுமினா……..”

”அது எப்படிச் சிக்கும்? அறுகங்கட்டையிலே செதுக்கினாத்தானே களம் கூட்டறபோது அறுப்புக்காரன் ‘இதுக்கு மேலே கூட்டவல்லீங்க, நெல்லு நின்னுக்கிது’ன்னு விட்டுட்டுப் போயிடுவான்? அதெல்லாம் கோளாறாகத்தான் செய்வே, உன்பாட்டைப் பாத்துக்கிறதுக்கு?”

”அவருதான் இங்கிட்டுக் கூட்டச் சொன்னாரு.”

”அவன் சொன்னானா? ஏன் சொல்லமாட்டான்? வீடு அந்தா இருக்குது. தலைச்சுமையா வெக்கட்டைக் கொண்டுட்டுப் போயிரலாம். பள்ளக்களத்திலே வச்ச மழை பெய்தால் அவதிப்படறது ஐயன்தானே? அவனவன் பாடுதாண்டா அவனுக்கு. என்னடா, மணி இரண்டாச்சு. பொளுது சாஞ்சுக்கிட்டு வருது. இன்னும் களத்துலே கட்டைக் காணோம். இவனெல்லாம் கொத்துக்காரன்னு வந்து பேசிக்கிட்டான்.”

மிராசுதாரர் மாமாவின் படபடப்பை அதிகரிக்கச் செய்வதற்கு அங்கு இருந்த சந்தர்ப்பம் ஒவ்வொன்றும் உதவி செய்ததே தவிர, குளுமைக்கும் சுமுகத்திக்கும் அங்கே ஏது இல்லை.

பகவான் கொடுத்த சொத்து, பூமி என்றெல்லாம் தாம் சொல்லிக் கொள்ளும் அந்தக் களிமண் கட்டிப் பரப்பு அத்தனைக்கும் அந்த வெயிலில் கொத்துக்காரன்தான் ராஜா. அவன் இஷ்டப்படிதான் அங்கே, இருபது ஆட்கள் நாலைந்து நடை சும்மா கரைமேலே அரை மைலுக்குமேல் சுருட்டி நடந்து கதிரடித்துச் சாற்றுப் பார்த்துப் பொலிவிட்டு அளவு பிடித்துக் குறிபோட்டு நெருஞ்சியும் கள்ளியும் புடைசூழ ஊருக்குத் திரும்பப் பவனி போகவேண்டும்.

இருட்டிலே போகவேண்டிய அந்தப் பாதையைப் பற்றி ஒரு வார்த்தை. புழுதி ஒட்டிக்கொள்ளும் பாதையில் நேரே, ஒரு பக்கம் நெருஞ்சி, மறுபக்கம் கொடிக்கள்ளி, இரண்டோடும் உறவு கொண்டாடாமல் நடந்து போனால்தான் பிழைக்கலாம். வண்டிப்பாதையும் அதுதான். வலத்துக் காளையின் கால்கள் கள்ளிக்கட்டைகளுக்கு இடுக்கிலும், இடத்துக் காளையின் குளம்புகள் நெருஞ்சி படர்ந்து கிடந்த மண் புற்றுக்கள் மீதும் சதக் சதக்கென மிதித்துப் போடும்போது உள்ளுக்குள்ளே உட்கார்ந்து போகிற ஆத்மாவுக்குக் கோயில்கட்டி வைத்துவிடலாம். வண்டிக்காரன் பாடு தீராப்பொறி.

இந்த ரீதியில் பவனி வந்து இறங்கின நிலையில் அறுகங்கட்டைக்களம், பள்ளி தந்திரம், பொட்டலடி, காலிக் களம், அனல் ஓட்டம் இத்தனையும் சேர்ந்தனவே. ”களத்திலேதான் கட்டைக் காணோம்; வயிற்றிலே இரண்டு இளநீரையாவது போட்டு வருவோம்” என்று அரிவாளை எடுத்து வரச் சொன்னார் மிராசுதார் மாமா. குடி தண்ணீருக்கு வசதி இல்லாத ஊரில் நிலம் வாங்கின சலிப்புக் குரலில் கலந்தது.

அதற்குப் பதில் உடனே வந்தது. ”சாமி, சாமி! அப்படிச் சொல்லாதீங்க. தங்கம் பெத்த நிலமில்லெ! மவராசன் கையிலெ தங்கமான்னா சொரியுது? என்ன ஐயா கவுண்டரே! நீ சொல்லு.” இதைச் சொன்ன உருவம் முறுக்கு மீசையும் முண்டாசும் தடிக்கையுமாக வண்டி அணைப்பில் நின்று கொண்டிருந்தது. அந்தப் புரவுக்கு அவன் தலைக்காவல்.

”காளி முத்தண்ணன் சொல்றது சரிதான். ஜமீன்தார் காலத்துலே ஒருதவா இங்கிட்டு வந்திருப்பாருன்னா நினைச்சே? அவனவன் சாப்பிட்டு ஏப்பம் விட்டுட்டுப் போனது போனது, வந்தது வந்ததுதான்” என்பது கவுண்டரின் பதில். பிரஸ்தாப சந்தர்ப்பத்தில் மிராசுதார் மாமாவின் வயலை வாரத்துக்கு ஒப்புக்கொண்ட உழுபடைக்காரன் அவன்.

”ஆமாடா, எல்லாரும் மச்சுவீடு கட்டித்தானே பிழைக்கிறீங்க? பார்க்கிறேனே. ஐயனும் அசந்தா ஒரு கை……”

”ஹ§ம். இந்தா சொல்றீங்களே. துரோகம் நினைச்ச நாய் அந்த பாருங்க: செட்டியாருக்கு அரைமா, ராவுத்தருக்குக் காணி கிரயம்.”

”ஏன்? வீடு நிலைக்கோட்டையானுக்குன்னு ஒத்தி வைத்துப் போட்டுப் பருத்திக் காட்டிலே பழி கிடக்குது, அண்ணாந்து பாத்துக்கிட்டு” என்று சேர்வையும கவுண்டருமாக ஆளுக்குப் பாதி சொல்லி நிறுத்தினார்கள்.

‘ஹ§ம்! நீங்க சொல்றேள். எல்லாத்துக்கும் புத்தி இருந்துச்சுன்னாத்தானே? கால்கஞ்சி அரைவயித்துக்காவது குடிக்கணுங்கிற நினைப்பு வேண்டாம்? சரி, தோப்பைப் பாத்துட்டு வறேன். கவுண்டா, கருதுக்கட்டு வந்தவுடனே குறுக்கிக் கிழக்காலே போடச் சொல்லிப் படப்பை நெட்டுக்குப் போட்டு ரெவ்வெண்டு அடி அடிச்சுப் போடச் சொல்லு.”

”சரி; போய் வாங்க. என்னவோ, எங்கப்பன், பெரிய ஐயா காலத்துலே இருந்து தர்மதுரை காலிலே விழுந்து கிடக்கிறோம். நீங்க பாத்து எதுவும் பண்ணிக்கிட்டாத்தான். உங்க கையை விட்டுமாத்திரம் நிலம் பறந்திச்சு, அப்புறம் இது நிலம்னு ஆகும்னு பாத்தீங்க? ஹ§ம், ஏது?”

”அதெல்லாம் குழையக் குழையத்தான் பேசுவே! சரி. சந்தணக்குடும்பா! நட. காளிமுத்தா, சும்மாத்தானே நிக்கிறே?”

”வாறேன், போங்க.”

மாமா புறப்பட்டவுடன் இரண்டு மூன்று முண்டாசுகள், தடிக்கம்புகள், அரிவாள்கள் எல்லாம் துணை புறப்பட்டன. இத்தனை பேச்சுக்கும் இடையில் மௌனக்குரலாக – ஆனால் எனக்குள்ளே பேசிக்கொண்டிருந்த – என் உருவமும் சேர்ந்து கொண்டது.

நீர் வறட்சி உண்டாக்கும் இந்த வெப்பத்தை எதிர்த்து எவ்வளவு நேரந்தான் சமாளிக்க முடியும். ஹாஸ்டல் அறைகளிலும் கடற்கரை ஓரத்திலும் ஜிலுஜிலுவென்ற காற்றை வாங்கிக் குஷியாகக் காலங் கழித்த உடலுக்கு என்னவோ நப்பாசை, ஒரு களத்துக்குப் போய் அறுவடை பூராவும் தெரிந்துகொண்டு விட வேண்டுமென்று. அப்புறம் நானும் கிராமவாசி. ‘கிராமத்துக்கு போ’ என்று கூவும் கூட்டத்தில் கோவிந்தா போடலாம் அல்லவா?

மேலே சொன்ன ரீதியிலே பேசிப் பேசிக் கிராமங்கள் அலுத்துப் போனதாகத் தெரியவில்லை. அலுப்புச் சலிப்பு இல்லாமல் பரஸ்பரம் முகஸ்துதியையும், ஏச்சையுமே பரிமாறிக்கொண்டு பண்பட்டுப்போன தாக்குகளாக அத்தனையும் பட்டன எனக்கு. அங்கு நடந்து வரும் செய்கைகளுக்கு மேலே பேச்சு அதிகம் என்ற நினைப்பு ஊறியது. கீழே வரும் தொடர் சம்பாஷணைகள் இதை வலியுறுத்துவன.

அந்தரத்தில் கம்பி மேல் நடப்பதற்கும் வரப்பு மேலே நடப்பதற்கும் வித்தியாசம் இருப்பதாகத் தெரியவில்லை. அத்தனை கைவீச்சும் நிதானமும் வேண்டி இருந்தன.

சமாளித்து எட்டு வைப்பதற்கு தார் ரோடிலே எட்டிப் போடும் எட்டு அங்கே செல்லாது. நண்டு வளைகளுக்கும், மடைகளுக்கும், மேலே குத்துக் குத்தாக நின்ற களிமண் கட்டிகளுக்கும் மேலாகத் தாறுமாறாக நிதானமில்லாமல் போட்ட என் கால்களைப் பார்த்துப் பின்னாலே வந்த முண்டாசு, “சின்ன ஐயாவுக்கு நடந்து பழக்கமில்லே போலிருக்கு. பையப் போங்க, சாமி” என்று கூறவும் அதை ரஸித்து அத்தனை பட்டிக்காட்டுச் சிரிப்புகளும் கிளம்பின. ‘பட்டிக்காட்டானா?’ என்று ஓர் இடத்தில் ஏளனமாகப் பேசப்படுகிறது. இங்கேயோ இந்தச் சிரிப்புகள் ‘பட்டினத்தானா?’ என்று ஏளனம் செய்கின்றன.

வரப்பு வரப்பாகக் கடந்து கொண்டிருந்தோம். திடீரென்று, “ஸ்ஸ்…. இருடா. அதென்ன சப்தம்? அழுகைமாதிரி இருக்கே? அதென்னாடா சந்தணம்?” என்று மாமா கேட்டார். என் காதிலும் அப்போது ஓலக்குரல் விழுந்தது.

சந்தணம் விளக்கினான். “ஆமாங்க. நம்ம செங்குளத்து ஐயரு மகன் இறந்து போயிருச்சு, அந்த பொழுது உச்சிக்கு வர நாலு நாழிக்கு முந்தி, சின்னப் பள்ளிக்கூடத்திலே படிச்சுக்கிட்டு இருந்துச்சுங்க இல்லையா?”

“ஆமாடா. பத்து நாளா உடம்பு குணமில்லேன்னு பேசிண்டா. ஒரே பிள்ளை. போயிருச்சா? அடப்பாவமே!”

“அந்தக் கிழட்டு ஐயரு போடற சப்தம் எம்மாந் தூரத்துக்குக் கேக்குது? அடேயப்பா! சகிக்கலீங்க” என்று காளிமுத்தன் தொடர்ந்து சொன்னான்.

“ஹ§ம்; போகுது. அதுக்குத் தலைவிதி முடிஞ்சுது. அல்பாயுசு. அவ்வளவுதான். யாருடா அது அங்கே? வேலுதானே, கொடிக்காலுக்கு அங்கிட்டு?”

‘பார்’ வேலைக்காரன் கைமாதிரி மாமாவின் வாயிலிருந்து சடாரென்று மாறி தொனியில் வார்த்தை கிளம்பினதை நான் க்ஷணத்தில் கிரஹிக்காமல் இருக்க முடியவில்லை. ஏனென்றால் ஒரு மரணச் செய்தி காதில் விழவும் சாவின் தன்மையைக் கொஞ்சம் நினைத்துப் பார்க்கிற உள்ளத்தில் நினைவு மறைந்து போகுமுன் புது அர்த்தபுஷ்டியான வார்த்தைகளைத் தொடரமுடியவில்லை.

“ஆமாங்க, வேலுதான்-ஏ, தேவாய்யோய்…” என்று கூவினான் சந்தணம்.

“அட, அவனாக வரானா பார்ப்போமே. கெடுத்து விட்டாயே காரியத்தை, அவசரக் குடுக்கை! விட்டுப் பார்க்காமே? ஒளிஞ்சுக்கிட்டுத் திரியறான் அவன்.”

“இல்லீங்க. இங்கிட்டுத்தான் வருவாரு” என்றான் காளிமுத்தன்.

செங்குளத்து ஐயர் மகன் சாவுப் பேச்சிலிருந்து மாறின சம்பாஷணைக்கு அந்தச் சுற்றுப்புறமே ஒத்துக்கொண்டுவிட்டது. தேவனும் காது கேட்கும் தூரத்தில் வரவே மாமா, “சந்தணம், தேவரு இங்கிட்டு எதுக்கு வாராரு? அவருக்கு இப்போ பெரிய இடமா சிக்கிக்கிருச்சு, லக்ஷ¤யமா பண்ணுவார்?” என்று கிண்டல் செய்துகொண்டே நடந்தா‘.

வேலு மேல்துண்டை எடுத்து மரியாதைக்காகப் புஜங்களில் வளைத்துக் கொண்டே, “ஆமா, பண்ணையை விடப் பெரிய பண்ணை இந்தச் செங்கட்டான் பட்டியிலே ரொம்பப் பேரில்ல இருக்காங்க?” என்றான்.

மறுபடியும் பல்லவி ஆரம்பம்.

“ஆமாடா, சக்கரையாப் பேசுவே இல்லே? போன வருசத்துக் குத்தகைப் பணம் பாக்கி கிடக்குது. தீர்க்க வழியில்லே, போகிற இடம் வருகிற இடம்னு.”

“அது இல்லாமே எங்கிட்டுப் போயிருங்க? பருத்தி போட்டிருக்கேங்க. அந்த விளைச்சலை அப்படியே கொண்டிட்டு வந்து கொடுத்திடணும்னுதான் நேத்துக்கூடச் சந்தணம்கிட்ட சொல்லிக்கிட்டு இருந்தேங்க. என்னப்பா, சந்தணம்?”

“வேலிக்கு ஓணான் சரியான சாக்ஷ¤தான்–தோப்புக்குக்கடவு எங்கேடா? மேற்கே இருந்தா?”

“இல்லீங்க. ஆட்டுக்கார பசங்க துட்டு பண்ணுதுங்கன்னு அடைச்சுப்புட்டேங்க. கிழக்காலே வாங்க” என்று சந்தணம் முன் ஓடிக் கடவு பிடுங்கிவிட்டு வழியில் கிடந்த முட்களை ஒதுக்கி எறிந்து தள்ளி நின்றான்.

அழுகைச் சப்தம் பலத்து வந்து விழுந்தது.

“மாமா, அதோ பாருங்க” என்று தோப்பை அடுத்துள்ள ஓடையின் மறுகரையைச் சுட்டிக் காட்டினேன்.

“இதுதான் இந்த ஊருக்கு மசானம்; இப்போ பேசிக்கொண்டிருந்தோமே, அந்தப் பையனைத் தகனம் செய்ய வந்திருக்கிறார்கள். சரி, நாம்ப மேற்கே போவோம். அவர்கள் போன பிறகு இங்கே வருவோம். கண்றாவியைப் பார்க்காமே திரும்பு” என்று கால்களைத் திருப்பிக் கிழக்கு நோக்கிப் போட்டார்.

“அதான் சரீங்க, எதிர்க்க நின்னா மாதிரியாத்தான் இருக்கும். வாங்க சாமி-சின்ன சாமி” என்று என்னை அழைத்த பிறகுதான் நானும் சேர்ந்து அடி எடுத்து வைத்தேன். அந்தத் தோற்றத்தையே அதுவரையில் பார்த்துக் கொண்டிருந்துவிட்டேன்.

முதல் தடவையாக மசானத்தை அப்போதுதான் பார்க்கிறேன். நகரத்துத் தெருக்களில் பாடைகள், அழுகை, சங்கு, தம்பட்ட முழக்கங்களோடு எங்கேயே மூலை திரும்பிப் போவதைத்தான் பார்த்திருக்கிறேன். வாழ்க்கை ஓய்ந்து போய் அலுப்பு ஆற்றிக் கொள்வதற்காக ஏற்படுத்தி இருந்த அந்த இடத்தைப்பற்றி ஒன்றும் தெரியாது. விவரம் தெரியாத, ஆனால் மிகவும் கோரமான ஒரு கற்பனைதான் எனக்கு யூகம், கேள்வி இரண்டின் மூலமாகவும் பதிந்திருந்தது- அந்தக் கோரமான கற்பனையை நடப்போடு ஒப்பிட்டுப் பார்த்துக்கொண்டே நடந்தேன். சில எட்டுக்களுக்கு ஒருதரம் கண்மட்டும் திரும்பித் திரும்பி அலறலும் கூட்டமும் நிறைந்த அந்த இடத்தைப் பார்த்துக்கொண்டே இருந்தது.

முதல் பார்வையில் ஓடையின் எதிர்க்கரையில் ஒரு மேட்டின் நடுவே அடுக்கி இருந்த விறகு எருக்களிடையே பளிச்சென்று தெரிந்தது. அந்தச் சின்ன உருவம். அடுத்த கண் வீச்சின்போது மேலே மேலே அதன் மீது எருக்களை அடுக்கிக் கொண்டிருந்தார்கள். ஐயோ, ஒவ்வோர் எருவும் அந்தச் சிறு உடலை மறைக்கும்போது எத்தனை குரல்கள் அலறித் துடித்தன! ஒவ்வோர் அலறலும் என்னைக் குலுக்கி எடுத்தது. சகிக்க முடியாமல், “என்ன கண்ராவி இது!” என்று எல்லோருக்கும் முன்னால் காலடிகளை எட்டிப்போட்டேன். அழுகைக் குரல்கள் என்பின் குறைந்து தங்கிவிட்டன. ஆனால் அந்தச் சித்திரம் மாத்திரம் என் கண்ணிலே தங்கிவிட்டது.

எத்தனையோ மேட்டுத்துண்டுகள் ஆற்றோரங்களிலும் ஓடையடிகளிலும் படிந்து கிடக்கின்றன. அவைமீது மிதித்துப் போயிருக்கிறேன். குப்பையும் கூளமும் சாம்பலும் அமோகமாகக் கிடக்கும். ஒருவித விசேஷமும் அவைபற்றின நினைவுகளில் சம்பந்தப்பட்டதில்லை. அந்த மேட்டுத் துண்டுகளைப் போலத்தான் இதுவும் ஒன்று. மேடு பள்ளம் நிரம்பின மண் தரை. இதற்கு மட்டும் மசானம் என்ற தனிக்குறிப்பு எதற்கு? ஆமாம். இதோடு சாவு சம்பந்தப்பட்டிருப்பதனால்தான்; மற்ற இடங்களோடோ வாழ்வு இணைக்கப்பட்டிருக்கிறது. அதுதான் வித்தியாசம். சந்தர்ப்ப பேதத்திலே அர்த்தம் கொடுக்கும் நாம் இட்ட காரணப் பெயர் அது.

வேறு எந்த விதத்தில் இயற்கையானது மசானத்துக்கும் அடுத்துள்ள இடங்களுக்கும் மாறுபாடு காட்டுகிறது? ஊருக்கு வெளியே தனித்து ஓடிவரும் இதே ஓடை ஊருக்குக்குள்ளும் ஓடிவருகிறது. சாவு குடி இருக்கும் சின்ன மண்மேடு இந்த மசானம். என் வாழ்வு குடி இருக்கும் பெரிய மண்மேடு அந்தக் கிராமம். இயற்கையின் ஆதரவில் எந்த இடத்தையும் மசானமாகச் செய்து விடுவதில் என்ன கஷ்டம் இருக்கிறது?

“இதுதான் அம்பி, நம்ப பெரிய தோப்பு; ஐயாயிரம் தென்னைக்குக் குறைச்சல் இல்லை” என்று தோப்பைக் காண்பிக்கும் மாமாவின் குரல் காதில் விழவும் மனத்தோடு பேசுவதை நிறுத்திச் சுற்று முற்றும் பார்த்தேன். தென்னந்தூறுகளிடையே வந்துகொண்டிருந்தோம்.

வேலு முன்னோடி இரண்டு தென்னங் கீற்றுக்களை இழுத்து வந்து போட்டான். உட்கார்ந்துகொண்டோம். அண்ணாந்து பார்த்தேன். சிலந்திக் கூடுகள்போல் பசுந் தென்னோலைகள் பின்னி வீசிப் பரந்த மட்டைகளுக்கு அடியில் மரத்தோடு ஒட்டிப் பச்சைப் பசேலெனக் குலை குலையாகச் சிறிதும் பெரிதுமாகக் காய்கள் தொங்கிக் கொண்டிருந்தன. தாக உணர்ச்சி உடனே உண்டாயிற்று. “சீககிரம் இளநீர் போடச் சொல்லுங்க, மாமா” என்று அவசரப்படுத்தினேன்.

“இங்கே தோப்பு இல்லாட்டா?” என்று மாமா சிரித்துக்கொண்டே கேட்டார்.

“அது வேறே கேள்வி” என்றேன்.

“எந்த மரத்துலே போடட்டுங்க?” என்று இடுப்பில் அரிவாளைச் செருகிக்கொண்டே சந்தணம் அண்ணாந்து பார்த்தான்.

தோப்புக்காரன்–உனக்குத் தெரியாதா? போடு வளுக்கைப் பதமா.”

“முத்தினதா இருந்தா அப்புறம் பாத்துக்கோ” என்று நான் சேர்த்தேன்.

சந்தணம் மரத்தில் ஏறி இளநீர்களை வெட்டித்தள்ள, வேலு வெட்டிக் கொடுக்க, மாமாவும் நானும் மாறி மாறி உள்ளே தள்ளிக்கொண்டிருந்தோம். தொண்டை இனித்துக் குடல் குளிர்ந்தது.

திடீரென்று வேலு ஆரம்பித்தான்: “பாவம், செங்குளத்து ஐயரு பாடு இனிமே ரொம்ப அம்பலமாப் போயிருச்சுங்க. அந்த ஒரே மகன் மேலே உசிரை வச்சுக்கிட்டு இருந்தாரு.”

இளநீர் சாப்பிடும் உற்சாகத்தில், அது உடலில் ஏற்றின குளுமையில் கொஞ்சம் மறந்திருந்த அந்தக் காட்சி மறுபடியும் ஞாபகத்துக்கு வந்துவிட்டது.

“ஆமாடா. அந்த மருமகன் வீட்டோட வந்து இருந்துவிடலாம்; ஐயருக்கு வேறு வழி இல்லை” என்று மாமா தொடர்ந்தார்.

“நல்லதுக்கா மருமகன் வாச்சு இருக்கிறாரு! அவர் மூணே நாள்ளே எல்லாத்தையும் கொட்டை பாத்திட்டுப் போயிருவாரு. ஊரிலே அவரைப் பற்றி என்னென்ன பேச்சுக் கிளம்புதுங்க!” என்று சந்தணம் கலந்துகொண்டான்.

“இன்னைக்குத்தானா தெரியும்? வேணும் அந்த ஐயருக்கு அன்னைக்கே நாலு சாத்துச் சாத்தி லஜ்ஜைய வாங்கிட்டு இருந்தா வழிக்கு வந்திருக்கும் அதை விட்டுப்போட்டு..” என்று மாமா இழுத்தார்.

“அதைச் சொல்லுங்க. அப்படிச் செய்துட்டு இருந்தா இந்தாத் தொலைக்கு வந்திருக்காதுங்க” என்று பண்ணையின் தீர்ப்புக்கும் நியாய உணர்ச்சிக்கும் பண்ணைக்காரச் சந்தணம் ஒத்து ஊதினான்.

“போகுது; அவன் அவன் தலைவிதிப்படி நடக்கிறது. நமக்கு என்ன? ஆமாம், அந்த முருகங்குளத்துக் காணியை ராவுத்தர் விலைக்குப் பேசிக்கிட்டு இருக்கிறாராமே? அதை இழுத்துப் போட்டிடலாமா? என்ன யோசனை?” என்று பேச்சைச் சடாரென்று மறுபடியும் முறித்து எங்கேயோ திருப்பினார் பண்ணை. திடீர் திடீரென மாறின தோரணை காட்டுவது அவருக்கு எவ்வளவு சுளுவாக இருந்தது என்பதுதான் எனக்குத் திகைப்பை ஊட்டியது. வாஸ்வதம்! செங்குளத்து ஐயரின் பிள்ளை மரணம், அவர் குடும்ப விஷயம். அந்தப் பேச்சுக்கு அவ்வளவு அவகாசந்தான் கொடுக்க முடியும். மீதி நேரம் தம் குடும்பத்தின் சுகம், தம் சம்பந்தமாக அக்கரைகளுக்குத்தான். இது யதார்த்தந்தானே?

என் மனப்போக்கு இப்போதும் தன் வழியே தொடர்ந்தது. ஆனாலும் வெளி வார்த்தைகள் காதிலே வந்து தாக்கிக்கொண்டிருந்தன.

சந்தணம் கொஞ்சம் கிட்ட நெருங்கி மெல்லிய குரலில் இழுத்தான். “என் காதிலேயும் பட்டதுங்க. இணைசேர்ந்த நிலம் ஒரே தாக்கா அமஞ்சு போயிருங்க. புரவிலேயே ஓங்கின கை நம்முதுதான். எப்படியாவது முடிச்சுப்புடுங்க.”

கலகலத்த சிரிப்பு மாமா உதடுகளிலிருந்து வெளிவந்தது. “ஆமாடா, உனக்கு இன்னும் இரண்டு காணி பார்வைக்கு வகையாச் சேருதில்லே! சிபார்சு செய்யமாட்டே? வேலு! சந்தணம் யோசனையைக் கேட்டியா?”

“சொல்றது சரிதாங்க. வாங்கிருங்க. காலத்துக்கு நான் உழுதுப்படறேன்க” என்று வேலு கண்களைக் சிமிட்டிக்கொண்டே பல்லைக் காட்டிக் கூறினான்.

“பாருடா! அனவன் தன் தன் பாட்டைப் பாத்துக்கப் பேசறான்; திருட்டுப் பயலுக!”

இருவரும் அசட்டுச் சிரிப்புச் சிரித்துக்கொண்டார்கள். “பண்ணை நிழல்லே நிக்காட்டி எங்களுக்குப் பிழைப்பு ஏது?” என்றான் வேலு.

“அதைச் சொல்லுங்க” என்று ஆமோதித்தான் சந்தணம்.

மாமா குரலை உயர்த்தி, நிலமா! போங்கடா போங்க. கிஸ்திக்குப் பணம் இல்லே. களஞ்சியத்து நெல்லை ஏன்னு கேப்பாரில்லே. மேலைக்குத் தான் அதைப்பத்திப் பேச்சு. நெல்லு ஏறின விலைக்கு இப்போ போகல்லேன்னா..? சரி களத்திலே கட்டு வந்திருக்கும். போகலாம் வா, அம்பி” என்று துண்டை உதறிக்கொண்டு எழுந்தார்; “சந்தணம், அங்கிட்டு எட்டிப் பாரு, அவுங்கப் போயிட்டாங்களான்னு. தோப்பைச் சுத்திப் பாத்துவிட்டு போவோம்” என்றார்.

சந்தணம் போய்வந்து, போய்விட்டதாகச் சொன்னான்.

தோப்பைச் சுற்றிக்கொண்டு மேலைக் கோடிக்குப் போனோம். என் கண்கள் தாமாகத் தோப்புக்கு வெளியே பார்த்தன. சற்று முன் அலறல் நிறைந்து கிடந்த அந்த இடத்தில் அமைதி பதிந்து இருந்தது. அவர்கள் எல்லோரும் தங்களால் முடிந்தமட்டும் அழுதுவிட்டுப் போய்விட்டார்கள். இப்போது அங்கே ஒன்றியாகக் கிடந்த உடலுக்குக் காட்டின மரியாதையும் அவ்வளவுதான்.

விறகும் எருவும் அரைகுறையாக முன்பு அடுக்கி இருந்த இடத்தில் பூரணமாக மேலே ஈரமண் அப்பி மெழுகி இருந்தது. லேசான புகைச் சுருள்கள் அதன் பக்கங்களில் வெளியேறிக்கொண்டிருந்தன. ஒன்றியாகக் கிடந்த உடல் என்று சொன்னேன்; தவறு. இரண்டு உருவங்கள் ஏதோ முனகிக்கொண்டிருந்தன. வார்த்தை தௌ¤வில்லை. செய்கை கண்களில் விழுந்துகொண்டிருந்தது. அந்தப் புது ஈர மண்மேட்டைச் சுற்றிவந்து புகைவரும் இடுக்குகள் வழியே குச்சியை விட்டுக் குத்திக்கொண்டிருந்தன; உள்ளே கனியும் கனலைத் தூண்டிவிடும் முயற்சி அது. பிணத்தின் சாந்தியைக் குலைக்கும் வேலையில் அவர்கள் ஈடுபட்டிருப்பதாகத் தோன்றவில்லை. அதைப் பூரணமாக்கும் வேலையில்தான் ஈடுபட்டிருந்தார்கள். அவர்கள் வேலை அது.

இத்தனை பேரும் அலக்ஷ¤யமாய் விட்டுப்போன உடல் அது. மசானத்தில் கொண்டு போட்டதோடுகூட இருந்து பழகின அத்தனை பேருடைய பொறுப்பும் தீர்ந்துவிட்டது. எங்கேயோ சம்பந்தமில்லாத இரண்டு ஜீவன்களிடம், மேற்கொண்டு அந்த உடலோடு உறவு கொண்டாடும பொறுப்பைச் சுமத்திவிட்டுத் தம் தம் வேலையைக் கவனிக்கப் போய்விட்டார்கள். எரிந்து கிடக்கும் சாம்பலை மிகுந்த அக்கறையோடு பார்க்க நாளை வரப்போகிறார்கள். அதுவரை இந்த மேட்டிலே பழிகிடக்கும் இந்த இரண்டு உருவங்களும் சாம்பலைப் பத்திரமாக அவர்களிடம் ஒப்படைக்கப் போகின்றன. என்ன அக்கறையடா இவர்களுக்கு; விசித்திரம்!

என் நடையிலே மசானம் என்ற அந்த மேடு என் முதுகுக்குப் பின் விழுந்துகொண்டிருந்தது.

பண்ணைப் பார்க்கும் பள்ளிக்குக் களத்துச் ‘சிந்துமணி’யில் கவனம். காளிமுத்தனுக்கும் உழுபடைக் கவுண்டனுக்கும் பண்ணையோடு உறவு கெடா திருப்பத்தில் சிரத்தை. மிராசுதார் மாமாவுக்குக் குத்தகை ஜரூராக வசூலாவதிலும், நிலம் இணைசேர்ப்பதிலும் அக்கரை. சந்தணத்துக்கு இன்னும் இரண்டு காணி பார்வைக்குச் சேருவதில் ஆத்திரம். வேலுவுக்கு நிலம் உழுவதில் ஆசை. பொசுக்கவந்த கூட்டத்துக்கு வீடு திரும்பும் அவசரம். எனக்கு இளநீர் சாப்பிடுவதில் உற்சாகம் என்று வைத்துக்கொள்ளுங்களேன்- இப்படி அவனவன் பாடு அவனவனுக்குப் பெரிது. சின்ன ஆத்மா பிரிந்ததில் ஒன்றிற்கும் குந்தகம் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. ஆனால் இந்த இரண்டு ஆத்மாக்களுக்கு மட்டும் அதைக் கரையேற்றுவதில் இவ்வளவு அக்கரையா? இவ்வாறெல்லாம் மறுபடியும் நிழலோட்டம். எட்டி நடந்தோம் களம் நோக்கி.

திடீரெனப் பின்னால் ஓர் ஒற்றைக் குரல் வெடித்துக் கிளம்பியது.

“மாயப் பிரபஞ்சத்தில் ஆனந்தம் வேறில்லை.”

அந்த இடமே எதிரொலித்தது. எங்கிருந்து என்று அறியத் திரும்பப் போனேன்.

“வஞ்சமில் லாதமெய்க் காதல்அல் லாதில்லை”
என்று இரண்டு குரல்கள் ஜதையாக முடித்தன.

பிரமித்துப் போய் நின்றேன். அந்த ஆனந்த கீதம் மண் மேட்டிலே பிணத்தைக் குத்திக்கொண்டிருந்த அந்த இரு உருவங்களின் உச்சரிப்பு. என் பிரமிப்பு அடங்கு முன்னரே அடுத்து எத்தனையோ வரிகள் மளமளவென்று காற்றில் கலந்துவிட்டன.

பிரபஞ்சம் மாயம்: சந்தேகமில்லை. வேதாந்தம் அந்தத் தத்துவத்தை மூளையில் திணித்திருக்கிறது. ஆனால் எது ஆனந்தம்? சாவா? சாவாக இருந்தால் பொருத்தந்தான். ஓய்வில் ஆனந்தந்தானே! இல்லை, இத்தனை பிணங்களையும் குத்திக் குத்திச் சாந்திகொடுக்கும் அந்த ஜீவன்களின் வேலையில் ஆனந்தமா? அதுவும் சரிதான். உணர்ச்சிக்கு இடம்கொடுத்து, வரும் பிணத்துக்கெல்லாம் கண்ணீர் விட்டுக்கொண்டிருக்க அந்த ஜீவன்களுக்கு அவகாசம் கிடையாது. மரமரத்துப்போன யந்திரவேலை அவர்களுடையது. வேலையில் உற்சாகம் வேண்டும், அலுப்புத் தெரியாதிருக்க. அந்த உற்சாகத்திலே உதட்டிலிருந்து கிளம்புகிறது பாட்டு. அவ்வளவுதான். முதலடி அந்த இடத்திலிருந்து தனித்துவந்து விழுந்திருந்தால் பொருத்தமற்றதாகச் சொல்ல முடியாது. ஆனால் அந்த இரண்டாவது அடியோடு கலக்கவும் எவ்வளவு அசந்தர்ப்பமாகிவிடுகிறது! சாதல் குடி இருக்கிற இடத்தில் காதலின் ஸ்தானத்தை நிர்ணயிக்கிறது; மசான பூமியினின்று காதலர் சோலையை உண்டாக்கிவிடுகிறது கற்பனை உள்ளத்தில். இந்த நினைப்பில் என் உள்ளம், சிலிர்த்தது. இயற்கையின் பகைப்புலத்தில் என்ன முரணான சித்திரம்!

உழன்றேன்; அதன் மறுபக்கம் நினைவுக்கு வந்தது. வாஸ்தவம்! சாதலுக்கும் காதலுக்கும் இயற்கை ஒருவிதமான பாரபக்ஷமும் காட்டுவதில்லை. அதன் அணைப்பில்தான் காதல் பிறக்கிறது. நிலவும் தென்றலும் மணமும் குளுமையும் காதல் போதையைச் சிருஷ்டிக்கின்றன. சாவுக்கும் இயற்கைதான் தாய். மூச்சு நிற்றலும் காற்றுப்போக்கின் தடையும் சக்தியில் ஓய்வும் காதல் மயக்கத்தைச் சிருஷ்டிக்கின்றன. இந்தத் தென்னந் தோப்பிலே காதல் கூவும் பக்ஷ¤! எதிர்மேட்டிலே சாதல் ஓலமிடும் ஜ்வாலைத் தீ! எல்லாம் இயற்கையின் பகைப்புலத்தில்!

ஆனாலும் சாவின் எதிரில் காதலை நினைக்கவே முடியவில்லை.

இவ்வளவு எல்லாம் முரண்பாட்டை நினைத்து நான் குழம்பினேனே; எதிரே இருந்த குரல்கள் அந்த வரிகளைக் கொஞ்சமாவது சிந்தித்து உச்சரித்திருக்குமா? நிச்சயமாக இருக்கவே இராது. பிரமாதமாக அவர்கள் காட்டும் அக்கரையைச் சிலாகித்துப் பேசினேனே; அது எவ்வளவு தப்பு! அவர்களுக்கும் பொறுப்பில்லை. அவர்கள் செய்வது ஒரு முறைவேலை, ஊதியத் தொழில், பள்ளி, காளிமுத்தன், கவுண்டர், மிராசுதார் மாமா, சந்தணம், வேலு, நான் இவர்களைப் போன்றவர்களே அவர்களும். இதுதான் வாழ்க்கை.

flow1
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

0 கருத்துகள்:

Post a Comment

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்