May 10, 2010

மீனுக்குள் கடல் - பாதசாரி

 
பாதசாரி கவிதைகள்

ஈக்குஞ்சு

ஈக்குஞ்சு ஒன்று கண்டேன் ஆஹா... sep24-book021
என்னுயிரைப் பகலில்
கலகலப்பாக்கியதொரு ஈக்குஞ்சு தான்
எவ்வளவு அற்புதம்...
இரவுகளில்கூட பெரிய ஈக்கள் மேலும்
வாஞ்சை வந்து விடுகிறது
‘குற்றமும் தண்டனையும்’ நாவலுக்குள
வந்து கண் மறைக்கையில்
வெளியில் எடுத்துவிடுவேன் பெரிய ஈயை –
முன்னொரு நாள் என் மூக்கின் மேல் சிந்தின
திருநீறை என்னவள் துடைத்த மென்மையாக.
பகல் ஒரு குல்கந்து வியாபாரி
இரவே எனக்கு ரோஜாத்தோட்டம்.
ஒரு சொம்பு சிறுவாணித் தண்ணீர்
ஒரு நண்பரின் கடிதம்
ஹோட்டலில் காஃபியைத் தன் கையால்
ஆற்றி வைத்த ஒரு புதிய சர்வர்
தவிரவும் வேறென்ன
இன்று பகலில் ........
ஆத்மார்த்தமாக செய்த செயல் என்னவோ
குண்டூசி கொண்டு
(என்) சீப்பில் அழுக்கெடுத்தது தான்.......
ஒரு குழந்தையாய்
இரவில் என் மடிமீது
மலர்ந்து சிரிக்கும்
பால் மணம் மாறாத
என் டைரி.

உறுமல்

ஒரு கொய்யாப்பழம்போல
இல்லை
ஒரு உருளைகிழங்குபோல
இல்லை
ஒரு புளியம்பழம்போல
இல்லை
காலத்தில் நான்
பழுத்துக் கொண்டிருக்கிறேன்
ஒரு புலியின் முதுகில்
சீழ்க் கொப்புளம்போல…

அழகான சாட்டை
என் இறுதி மூச்சாக நான் வெளியேறுமுன்
வந்து நிற்கிறாய் சிட்டுக்குருவியே
இதுவரை என்னிடம்
எதுவும் நீ எதிர்பார்த்ததில்லை
ஆனால் உன்னிடம் நான் தெரியத் தவறியது ஏராளம்
ஒரு பறவை இறப்பதற்கும்
ஒரு மனிதன் எனும் பெயரில் நான் இறப்பதற்கும்
உள்ள வித்தியாசமும் புரிகிறது இப்போது
புத்தகங்கள் மட்டுமே கூடி நிற்க இறப்பது
என்பது கூட வேதனையில்லை
உன் பாடல்களில்
எவ்வளவோ கேட்டிருக்கலாம்
சுடரின் இறுதிப்புள்ளி இக்கணம்
பாமரக் கண்ணின் கடைசி அசைவில்
புலப்பட வேறு உயிர் காணேன் சுற்றிலும்
கரெக்ட் டயம் பார்த்து தெரு இறங்கி
கடலை பொரிக்காரனிடம் கையேந்தும் வீட்டுநாய்
அடிக்கடி மரமேறி காக்கா முட்டை திருடும் அறைப்பூனை
புகைப்பட அப்பாவின் காலர் குடிக்கும் கறையான்கள்
புத்தகங்கள் புகுந்து அசிங்கப் படுத்திய கரப்பான்கள்
என் முன்னால் கூச்சமின்றிப் புணரும் பல்லிகள்
இரவில் உடலேறி இம்சிக்கும் பெண் கொசுக்கள்
ஒரு ஜீவனைக் காணவில்லை
நான் சொல்லிக் கொண்டு போக
புருஷனுக்குத் தெரியாமல் பலதடவை பிணங்களுக்கு
கொஞ்சம் தலைக்கு வெண்ணையும்
காட்டுக்கு வறட்டியும்
இலவசமாகத் தந்த ஒரே அக்காவும் எங்கோ
தொலைவூரில் சாணி தட்டும் ஓசை கேட்கிறது
நான் வெளியேறிய பின்னால்
சிலர் வரக்கூடும் மனித உடையில்
ஜென்மம் நீங்கின ஒரு கவிஞனைக் காண
இருதயம் நிற்கும் முன்பே இறந்து விட்ட மனிதர்களில்
நானும ஒருவன் என்பதெல்லாம்
நீ அறிந்தது தானே என் சிட்டே
இனியொரு சிறு உதவி
உன் பாடல்களின் வழிகளிலெல்லாம்
இவ்விதயத்தின் கடைசி வரிகளையும் சேர்த்துப்பாடு
மனித உடை தரித்த உயிர்களே
மன்னித்து விடுங்கள் ஒரு மனிதனை
இறுதிவரை அவனின் சாதனை
அழகான சாட்டை செய்ய முயன்றது தான்
அழகான சாட்டை. ஆமாம் அழகான............

பேசும் வாழ்க்கை

அன்று சைக்கிளின் மீதிருந்து
அந்தப் புன்னகையின் கையுயர்த்தல்
நேற்று ஸ்கூட்டரிலிருந்து புன்னகையின் கையுயர்த்தல்
(நான் என்றும் காலத்தின் மீது நடையில்)
இடையில் மாதக்கணக்கில்
இருவரும் சந்திக்காமல் ஆனாலும்
சந்திக்கும் நாளின் இதயத்திலிருந்து
அதே புன்னகையின் கையுயர்த்தல்
சுமார் எட்டு வருடங்களாக
சந்திப்பு நேராத நாட்களில்
எங்களைக் குறித்து கிஞ்சித்தும் சிந்தனையே
எனக்கிருக்காது. அவருக்கும் அப்படித் தானிக்கும்
அவர் எங்கோ பக்கத்தில் தான்
ஒரு கம்பெனியில் வேலை பார்க்கவேண்டும்
என்ன பேர் என்ன வேலை எங்கே வீடு தெரியாது
ஒரு வார்த்தை பேசிக்கொண்டதில்லை
வீட்டுப் பூந்தொட்டியில் வெங்காயப் பயிரென்றான
இன்று –
என் முகம் இறந்த தாய்
எனக்கு முகம் திருப்பும் தந்தை
எனக்கு முகம் மறுக்கும் உறவுகள்
என் முகம் புரியா நண்பர்கள்
இருந்தாலும்
நேர்தலுக்கான திட்டமோ
நேர்தலுக்கான எதிர்பார்ப்போ
நேர்தலுக்கான ஏக்கமோ
இல்லாமல்
அந்த புன்னகையின் கையுயர்த்தல்
என்றேனும்
இவ்விதந்தான்
வாழ்க்கை முகங்கொடுத்து
என்னோடு பேசுவது.

 நன்றி:   ”மீனுக்குள் கடல்” தொகுப்பு .  தமிழினி வெளியீடு.

*****

flow1
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

1 கருத்துகள்:

Ramprasath on June 13, 2010 at 3:01 AM said...
This comment has been removed by the author.

Post a Comment

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்