May 15, 2010

கரிச்சான் குஞ்சு - தோற்றம் தரும் முரண்கள்-வெங்கட் சாமினாதன்

கரிச்சான் குஞ்சுவை எண்பதுகளின் ஆரம்பத்தில் முதன் முதலாகப் பார்த்த போது அவருக்கு அறுபத்து ஐந்து வயதுக்கு மேலிருக்கும். முரண்களின் உருவமாக இருந்தார் அவர். நல்ல கருத்த பருமனான தேகம். நரைத்த சிறிய உச்சிக்குடுமி. மார்பின் குறுக்கே பூணூல். சமஸ்கிருதத்திலும், தமிழிலும் காவியங்களை ஆழ்ந்து படித்தறிந்திருந்த பாண்டித்யம். அன்றைய தமிழ்ச் சூழலில் தன்னை வெகுவாக அன்னியப்படுத்திக் கொள்ளும் தோற்றமும் ஆளுமையும். அன்றென்ன!. இன்றும் தான்.

karichankunju அப்போது அவர் தங்கியிருந்த கும்பகோணத்தில் அவரைச் சுற்றிச் சூழ்ந்த மிகச் சிறிய ரசிகர் கூட்டம் ஒன்று இருந்தது. அவர்களை விட்டால் தமிழ் நாட்டில் அவரை அறிந்தவர்கள், நினைவு கொள்கிறவர்கள் யாரும் கிடையாது. அது பரவாயில்லை. ஆனால் அவரைச் சூழ்ந்திருந்த ரசிகர் கூட்டம், இளம் வயதினர்களைக் கொண்டது. பொறி பறக்கும் இடது சாரிக் கொள்கையாளர்கள் அவர்கள். அவர்கள் எல்லோரும் அவரைத் தம் தந்தையாகப் பாவித்து மரியாதை செலுத்துகிறவர்கள். கனல் பறக்கப் பேசும் அந்தச் சூடுண்ட தலைகளை, குரல் எழுப்பிப் பேசியறியாத இந்த மனிதர் எப்படிக் கவர்ந்தாரோ தெரியாது. தன் கிட்டத் தட்ட நாற்பது வருட கால எழுத்து வாழ்க்கையில் அவர் ஒரு வரிகூட, மார்க்ஸீய வாதிகள் ஒப்புக்கொள்ளும் வரி ஒன்று கூட, எழுதியவரில்லை. அவர் கடைசியாக தேவி பிரசாத் சட்டோபாத்யாயாவின் What is True and Relevant in Indian Philosophy" புத்தகத்தைத் தமிழில் மொழிபெயர்த்தது ஒரு காரணமாக இருக்கலாமோ என்னவோ.

தற்கால தமிழ் இலக்கியத்தில் கரிச்சான் குஞ்சு முற்றிலுமாக அலட்சியப்படுத்தி ஒதுக்கப்படுவது போல வேறு ஒரு தமிழ் எழுத்தாளர் உண்டா என்பது சந்தேகம் தான். அவருடைய எழுத்துக்களோ, அவருடைய இலக்கிய ஆளுமையோ, அல்லது அவர் கொண்டுள்ள வாழ்க்கை தர்மங்களோ எதுவுமே இன்றைய தமிழ் சமூகத்தின் ஒரு சிறு பகுதியினரால் கூட, போற்றி மதிக்கப்படுவது ஒரு புறம் இருக்கட்டும்அந்தப் பேச்சுக்கே இடமில்லை, ஒப்புதலான ஒரு தலையாட்டல் கூட பெறவில்லை.

கரிச்சான் குஞ்சு தன்னையே அழித்துக்கொள்ளும் அடக்கம் மிகுந்தவர். அந்த அடக்கம் அவர் புனைபெயரிலும், அவர் எழுத்துக்களிலும் ஆரம்ப காலத்திலிருந்தே இருந்து வருவது. எழுதத் தொடங்கியதும் அவருக்கு ஆதரிசமாக இருந்தவர் முப்பதுகளின் மணிக்கொடிக்கால முன்னோடியான கு.ப.ராஜகோபாலன். கு.ப.ரா 'கரிச்சான்' என்ற புனைபெயரிலும் எழுதுவார். அவரைத் தன் இலக்கிய குருவாகவும் தந்தையாகவும் பாவித்தவர் தன்னை அந்தக் கரிச்சானின் குஞ்சாக வரித்துப்புனைபெயரிட்டுக்கொண்டார். தான் ஒரு நிழலே, தான் பெற்றதெல்லாம் தன் குருவிடமிருந்து பெற்றதே என்ற பிரகடனம் தான் இது.

அவ்வப்போதே வெகு அரிதாக எழுதினாலும், நாற்பது வருட கால நீட்சியில் குவிந்துள்ள எழுத்துக்கள் இப்போது கணிசமாகத் தோன்றினாலும், அவரது எழுத்துக்கள் அப்படி ஏதும் பெரும் கவனிப்பு பெற்றதாகச் சொல்ல முடியாது. அவரது எழுத்துக்கள், பிராபல்ய ரசனை பெற்றவையோ, அவ்வக்கால ·பாஷனை பிரதிபலிப்பவையாகவோ இருந்ததில்லை. விமர்சகர்களைக் கவரும் வகையிலும் அவர் எழுத்துக்கள் வடிவிலும் கருவிலும் இருந்ததில்லை. கரிச்சான் குஞ்சுவின் எழுத்துக்கள் வெகு ஜனங்களைக் கவராது போனதைப் பற்றி ஏதும் சொல்வதற்கில்லை. ஆனால் விமரிசகர்களின் பார்வையில் கரிச்சான் குஞ்சு பெற்ற அலட்சியம்தான் கேள்விக்குரியது.

கரிச்சான் குஞ்சுவின் படைப்பு முழுமையையும் பார்க்கும் போது அது நமக்கு, நம்மை விட்டுப் பின் தங்கி விலகிச் சொல்லும் உலகைச் சொல்கிறது. இருள் நிறைந்த பாதை ஒன்றை நமக்கு தம் ஒளி வீசிக் காட்டும் மின்மினிப் பூச்சிகள் போன்றவைதான் அவர் எழுத்துக்கள் என்று சொல்லத் தோன்றுகிறதுஅவை மொத்தமும் எழுப்பும் ஸ்ஸ்ஸ் என்று தொடரும் ஒலிப்பெருக்கு ஒரு வித புதிரும் மாயமுமான உணர்வைத் தரும். அவை ஏதும் ஒரு பூச்சியின் மின்மினுப்புமோ ஸ்ஸ்ஸ்ஸ¥மோ ஏதும் நமக்கு பெரிதாகத் தராமல் போகலாம். ஒவ்வொரு கதையும் ஒரு துணுக்குக் காட்சி ஒரு உணர்வு சட்டெனத் தோன்றி மறையும் துணுக்கு, ஒரு நாடகக் காட்சி, ஒரு சம்பவம், ஒரு கட்டத்தைப் பிரதிபலிக்கும் பாத்திரத்தின் ஒரு சலனம், இவையெல்லாவற்றையும் ஒட்டு மொத்தமாக நாம் பார்க்கும்போது, அவை கடந்த காலத்தின், வாழ்க்கையின் அடி நாதத்தை, தர்மத்தை, பார்வையை நமக்கு ஒரு இழப்புணர்வின் சோகத்தோடு சொல்லும். பிரச்சினை என்னவென்றால் இன்றைய தமிழ் சமூகத்தின் பெரும்பான்மைக்கு தாம் இழந்த மதிப்புகள், மதிப்புகளாகவே தோன்றுவதில்லை. அவற்றின் இழப்பும் சோக உணர்வைத் தருவதில்லை.

தன் எழுத்து வாழ்க்கையின் கடைசிக் கட்டத்தில், கரிச்சான் குஞ்சு பசித்த மானுடம் என்ற ஒரு நீண்ட நாவலை தரத் துணிகிறார். அது தான் அவரது படைப்பின் சிகரம் என்று தோன்றுகிறது. உண்மையில் இதில் அவர் இன்னுமொரு முரணை நம் முன் வைத்துவிடுகிறார். பசித்த மானுடம் என்னும் 400 பக்க நாவலின் பெரும்பகுதி இரண்டு பாத்திரங்களின் வாழ்க்கையில் - நாற்பது வருட கால நீட்சியில் - வெகு வேகமாக நிகழ்ந்து விட்ட சம்பவங்களைச் சொல்கிறது. இந்த நாவலில் நாம் காணும் கரிச்சான் குஞ்சுவின் எழுத்து, அவர் சிறுகதைகளில் காணப்பட்ட எழுத்தின் குணத்திற்கு மாறானது.

நாவலின் பிரதான பாத்திரங்கள் இருவரில், ஒருவன் அனாதை, கிராமத்து ஆசிரியர் ஒருவரால் வளர்க்கப்படுபவன். இன்னொருவன் ஒரு ஏழை குடும்பத்தவன். கண்டிப்பின்றி தத்தாரியாக வளர்பவன். அனாதைப் பையன் மிகவும் புத்திசாலி, venkat_swaminathan கிராமத்தில் உள்ள எல்லோருக்கும் பிரியமானவன். ஆனால் வாழ்க்கையில் இலக்கின்றி அலைந்து கொண்டிருப்பவன். ஒரு கட்டத்தில் அவன் வளர்ச்சியில் சில பணக்காரர்களின் வேண்டாத நட்புறவில் சிக்கிக் கொள்கிறான். விரும்பித்தான் அவர்களின் பாலியல் இச்சைக்கு இரையாகிறான். அத்தோடு பல பெண்களுக்கும் அவனிடம் மோகம் மிகுந்து அவனைச் சக்கையாக்கித்தான் விடுகிறார்கள். கடைசியில் வாழ்க்கையே பாழாகிவிடுகிறது. குஷ்டநோய் பீடித்து. ஏதும் சம்பாதிக்கும் வழியற்று வறுமையில் வீழ்ந்தவன் பிச்சையெடுக்கும் நிலைக்கு ஆளாகிறான். தன் வாழ்க்கையில் இவ்வளவு சோதனைகளுக்கு ஆளானவன், எதிர்கொண்ட இன்னல்களே அவனைப் புடம் போட்டது போல, இப்போது அவன் எல்லோருக்கும் உதவுகிறவனாக, மரியாதைக்குரியவனாக ஆக்கிவிடுகின்றன.

தத்தாரியாக வளர்ந்தவனோ கிராமத்தில் எல்லோருடைய வெறுப்பையும் சம்பாதித்துக்கொண்டு விட்ட காரணத்தால், முதலில் கிராமத்தை விட்டே வெளியேறி நல்லபடியாக வாழ்ந்து தன்னை வெறுத்தவர்களின் பாராட்டைப் பெற வேண்டும் என்று நினைக்கிறான். வெகு ஜாக்கிரதையாக தன் ஒவ்வொரு அடிவைப்பையும் திட்டமிட்டுச் செய்யவே அவனுக்கு விதியும் உதவுகிறது. ஒரு கட்டத்தில் மிகப் பெரிய செல்வந்தனாகிறான். வரும் சந்தர்ப்பங்களை பயன்படுத்திக்கொள்ளவும், தன்னை நாடி வந்தவர்களைக் கவர்ந்து தன் விருப்பத்திற்கு அவர்களை வளைத்துப் போடவும் தெரிகிறது. வியாபாரத்தில் குவித்த செல்வம் வாழ்க்கையில் அவன் ஆசைப்பட்டதையெல்லாம், அதிகாரம், பெண்கள், அந்தஸ்து என எல்லாம் பெற்றுத்தருகிறது. அவனை உதவாக்கரை என்று வெறுத்து ஒதுக்கியவர்கள் எல்லாம் இப்போது அவனிடம் பயத்துடன் நடந்து கொள்கிறார்கள். இருப்பினும், தான் வாழ்க்கையை வெற்றி கொண்டு அதன் சிகரத்தில் அமர்ந்துள்ளதாக எண்ணும் அதேசமயம் தான் வாழ்க்கையில் தோற்றுவிட்டதாக ஒரு எண்ணம் அவன் மனத்தைக் குடைகிறது. கடைசியில் தன் கிராமத்துக்கு ஒரு மகான் வந்து எழுந்தருளியுள்ளதாக, மக்கள் அவரைத் தரிசித்து ஆசிகள் பெறுவதாகக் கேட்டதும் தானும் அம்மகானைச் சரணடைவது என்று நிச்சயித்து அந்த மகானிடம் செல்கிறான். அந்த மகான் தன் சிறு பிராயத்தில் தன் கிராமத்திலேயே வளர்ந்த தன்னில் பொறாமையை வளர்த்த அந்த அனாதைப் பையனே தான்.

இவ்வளவும் அந்த நாவலைப் பற்றிச் சொன்னபிறகு, இது அதிகமும் கற்பனையான சம்பவங்களை இஷ்டத்துக்கு உருவாக்கிக் கோர்த்த, மிகை உணர்ச்சியாகக் கொட்டி நிரப்பிய தமிழ் சினிமாக்கதை போன்றிருப்பதாக எண்ணத் தோன்றும். ஆனால் உண்மை அதுவல்ல. நாவலின் 'உண்மையும்" அது விரிக்கும் வாழ்க்கையும் முற்றிலும் வேறு குணத்தவை. இந்த நாவலில் வரும் பாத்திரங்கள் எல்லாம், காவேரி நதி தீரத்தின் கிராமங்களில் காணும் மனிதர்கள் தான். வாழ்க்கைதான். அந்த கலாச்சாரம் தந்தது தான். நாவல் விரிக்கும் காலம் 1920-களிலிருந்து 1950-கள் வரைய கால கட்டத்தைச் சேர்ந்தது. கரிச்சான் குஞ்சு தன் நாவலை இரண்டு பிரதான பாத்திரங்களை மாத்திரமே எடுத்துக்கொண்டு அவர்கள் இருவரை மாத்திரமே மையமாகக் கொண்டு எழுதியிருப்பதான தோற்றம் தந்தாலும், அவர் எடுத்துக் கொண்டிருக்கும் நாற்பது வருட கால கட்டத்தின் பண்பாட்டையே, வாழ்க்கையின் கதியையே நம் முன் வைத்துள்ளதான ஒரு உணர்வை நமக்குத் தந்துவிடுகிறார்.

சிறு வயதில் கிராமத்தில் தத்தாரியாக இருந்த பையன் பின் தன் வழி கண்டு பல லக்ஷங்கள் கோடிகள் புரளும் வியாபார வெற்றி அடைவதும் மனிதர்களை தன் இஷ்டத்திற்கு வளைத்து ஆள்வது என்பதெல்லாம் நம்பத்தகுந்த விஷயங்கள் தான். நம் முன்னேயே நாம் வாழும் காலத்திலேயே இப்படிப் பல மாதிரிகள் தமிழ் வாழ்க்கையிலேயே உலவக் காண்கிறோம். அதே சமயம் கிராமத்து நல்ல பையன் பெற்ற வளர்ச்சியைப் பற்றி அப்படிச் சொல்ல முடியாது. அவன் வாழ்க்கையில் எல்லா பாலியல் உறவுகளையும் அனுபவித்துக் கடந்து குஷ்டரோகியாகி, பின்னர் மனம் திருந்தி ஞானியாகிறான் அவன். அவன் வாழ்க்கை யில் கண்ட மேடு பள்ளங்களோ, அவன் மனம் பெற்ற கோணல்கள் நிறைந்த வளர்ச்சியோ, பின்னர் அவன் சமூகத்தின் வழிபடற்குரிய ஞானியாக மாறுவதோ, இந்த வாழ்க்கையின் அடியோட்டமாக, சொல்லாது குறிப்பிடப்படும் தத்துவ நோக்கோ, எல்லாம் அசாதாரணமான ஒரு சங்கிலித் தொடரில் தோன்றினாலும், இவை வலிந்து புகுத்தப்பட்ட கற்பனையல்ல. இவையெல்லாம் தமிழ் கலாச்சார சரித்திரத்தில், அதன் இலக்கிய, தத்துவார்த்த மரபில் வேர்கொண்டவை தான்.

17- 18- 19-ம் நூற்றாண்டுகளில் தலை சிறந்த கவிஞர்களாகவும் இசைவல்லுனர்களாகவும், பாடகர்களாகவும் இருந்த ஞானிகள் பலரை தமிழ் நாடு கண்டுள்ளது. பட்டினத்தார், அருணகிரிநாதர், சதாசிவ பிரம்மேந்திரர் போன்றோர் வாழ்க்கை இம்மாதிரியான வளர்ச்சிப் போக்கையும் சம்பவங்களையும் கண்டது தான். இம்மகான்களின் போலி மாதிரிகள் உண்டு தான். இம்மகான்களின் வாழ்க்கையை போலி செய்யும் திருகல்களையும் நாம் காண்போம் தான். அவைதான் இன்றைய தமிழ் வாழ்க்கையை நிரப்புகின்றன. இத்திருகல்களே கூட அவற்றின் உயரிய மரபின் சத்தியத்தை வலுயுறுத்துவனதான்.

அறிவார்த்தம் மறுத்த அகங்காரம் மிகுந்த நாஸ்திகத்தையும் போலியான உள்ளீடற்ற ஆஸ்திகத்தையும் கடந்த ஒரு தத்துவார்த்த நிலை நாவலின் அடிநாதமாகப் படர்ந்திருப்பது. ஒரு வேளை அது தான் இந்த குடுமியும் பூணூலுமாகத் தோற்றமளிக்கும் இந்த வயோதிகரை, கனல் கக்கும் இளம் வயது இடது சாரிக் கொள்கையாளரும் மதித்து மரியாதை செய்யும் மனிதராக்கியுள்ளதோ என்னவோ. இருக்கலாம், ஓரளவுக்கு, ஒரு வேளை.

1.3.07

******

flow1
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

2 கருத்துகள்:

செம்மலர் செல்வன் on May 17, 2010 at 12:39 AM said...

பசித்த மானிடம் ஒரு அருமையான புதினம்.. எத்தனை முறை படித்து இருப்பேன் என நினைவில் இல்லை..
தமிழின் மிகச் சிறந்த புதினங்களில் ஒன்றாக போற்றத்தகுந்தது ,கரிச்சான் குஞ்சு அவர்களின் பசித்த மானிடம்..

நேசமிகு ராஜகுமாரன் on February 15, 2012 at 8:23 AM said...

பசித்தமானுடத்தை மறுவிமர்சனத்துக்கு தகுதியானவர்களைக் கொண்டு உட்படுத்த வேண்டும்.கரிச்சான்குஞ்சு போன்ற எழுத்தாளர்களை மறுவாசிப்பு செய்வது இளைய தலைமுறை இலக்கியவாதிகளை மெருகேற்றும்.அழியாச்சுடர்கள்-அருமையான இலக்கியக்களஞ்சியம்.அது மேலும் வளர எல்லா தமிழ் எழுத்தாளர்களும் தம்மால் இயன்ற பங்களிப்பைச் செய்யவேண்டும். வாழ்த்துக்கள்!- நேசமிகு எஸ்.ராஜகுமாரன்

Post a Comment

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்