Feb 2, 2011

கண்ணாடி-அசோகமித்ரன்

டிசம்பர் குளிருக்கு அந்தக் கோட்டு மிகவும் இதமாக இருந்தது. ஏனோ தினமும் அதைப் போட்டுக் கொள்ள முடிவதில்லை. கோட்டைப் போட்டுக் கொண்டு செருப்புக் காலுடன் வெளியே போனது கிடையாது. ஆதலால் பூட்ஸ். ஆனால் அந்தப் பூட்ஸைப் போட்டுக்கொள்ளும்போதே சுண்டுவிரல் வலித்தது. அரை மைல் நடந்து, நகர ஆரம்பித்துவிட்ட பஸ் பின்னால் ஓடி அதில் தொத்திக் கொண்டதும் வலி பொறுக்க முடியாத அளவுக்குப் போய்விட்டது.

இவ்வளவிற்கும் அந்த பூட்ஸ் நான் குறைந்தது இரண்டாண்டு காலம் தினமும் போட்டுக்கொண்ashokamitran-214x300 டு திரிந்ததுதான். அப்புறம் ஐந்தாறு இண்டர்வியூக் காலங்களில் அணிந்து கொண்டிருக்கிறேன். அதெல்லாம் நான் வேலையை விட்டு ஒருவருடம் ஆவதற்குள். அப்போதெல்லாம் சுண்டுவிரல் வலித்ததாகத் தெரியவில்லை. ஒருவேளை வேலை கிடைத்துவிடும் என்று எதிர்பார்ப்பு-- மன நிலையினால் உடலின் மறு கோடி வலி உரைக்காமல் இருந்திருக்கலாம். இப்போதோ இந்த வேலைக்கு நான் பொருத்தம், என்னுடைய திறமைகள் இவர்களுக்கு ரொம்பப் பயனுள்ளதாகத் தோன்றும், இந்த வேலை கிடைத்தால் கடைசிப் பையனுக்கு டான்ஸில் ஆபரேஷன் உடனே ஏற்பாடு செய்துவிடவேண்டும் என்றெல்லாம் மனதில் தோன்றுவது கிடையாது. யாராவது ஓடிவந்து 'நீ உடனே ஒரு வேலை கேட்டு விண்ணப்பம் எழுதிப் போடு ' என்றால் அந்தப் பணியை எப்படியெல்லாம் ஒத்திப்போட முடியுமோ அப்படியெல்லாம் செய்வேன். பார்க்கப் போனால் விண்ணப்பம் எழுதியே ஆகவேண்டும் என்று நான் காகிதமும் பேனாவுமாக உட்கார்ந்துகொண்டால்கூட 'அன்பார்ந்த ஐயாவுக்கு ' மேல் எழுத்தே ஓடாது. ஆனால் பூட்ஸ் மட்டும் நன்றாக வலிக்கிறது.

பூட்ஸ் அழுத்தி வலிக்கிற காலும் தொளதொள கோட்டும் ரெக்ஸைன் கைப் பையுமாக அமைந்தகரை மார்க்கெட் பஸ் ஸ்டாப்பில் இறங்கினேன். ஆவடி என்னும் இடம் சென்னைக்கு வடக்கே (அல்லது வடமேற்கே) இன்னும் வெகு தூரத்தில் இருந்தாலும் புது ஆவடி ரோடு அந்த மார்க்கெட்டுக்கும் முன்னாலேயே தொடங்குகிறது என்று கேட்டுத் தெரிந்துகொண்டிருந்தேன். ஆதலால் பஸ் வந்த வழியிலேயே சிறிது தூரம் நடந்து வந்தேன். கண்ணில் பட்ட முதல் டாக்ஸியை நிறுத்தினேன். நான் போக வேண்டிய இடத்தை முதலிலேயே சொல்லி 'இந்த வண்டி வராது ' என்று பதில் கிடைத்துத் திண்டாடிய நினைவுகள் நிறைய உண்டு. ஆதலால் ஒன்றுமே சொல்லாமல் கணப்போதில் வண்டியில் ஏறி உட்கார்ந்து கொண்டேன். மீடர் போடப்பட்டது.

'எங்கே போகணும் ? '

'புது ஆவடி ரோடு. '

'எங்கே ? '

'டிரேட் ஃபேர். உலக சந்தை ஆபீஸூக்கு. '

வண்டி முடுக்கப்பட்டு, அந்த இடத்திலேயே முழுக்கத் திரும்ப இருந்தது.

'இங்கே எங்கே போறீங்க ? புது ஆவடி ரோடு அந்தப் பக்கமில்லே இருக்கு ? '

'நீ எங்கே போகணும் ? புதுசா எக்ஸிபிஷனுக்குக் கட்டிட்டு இருக்காங்களே, அங்கத்தானே ? '

'ஆமாம். ஆனா அது புது ஆவடி ரோடில்தானே இருக்கு. '

'ஆமாம் சாமி. அதுக்கு இந்தப் பக்கந்தானே வழி. '

'புது ஆவடி ரோடு அங்கே பச்சையப்பாஸ் காலேஜ் கிட்டேனாப்பா தொடங்கறது ? '

'எக்ஸிபிஷன் இந்தப் பக்கம் சாமி. நான் அங்கேந்து இப்பத்தானே வாரேன். '

'நான் எக்ஸிபிஷனாண்டை போகலை. ஆபீஸூக்குப் போகணும். அது புது ஆவடி ரோடிலேதான் இருக்கு. '

எதிரே பூதாகாரமான லாரி ஒன்று நின்று கேவலமாக ஹார்ன் அடித்தது.

'எக்ஸிபிஷன் ஆபீஸ் எக்ஸிபிஷனண்டை இல்லாமே எங்கேயிருக்கும் சாமி ? நான் இப்போ அங்கேந்துதான் வாரேன்னு சொல்லறேன். '

'அதெல்லாம் தெரியாதப்பா. புது ஆவடி ரோடுன்னா புது ஆவடி ரோடுதான். '

இப்போது எங்கள் பின்னால் வரிசையாக இரு பஸ்கள், மற்றும் கார்கள் மாட்டு வண்டிகள் எல்லாம் நின்றுகொண்டிருந்தன.

'நீ போப்பா. புது ஆவடி ரோடு போன்னா போயேன். '

வண்டி சீறிக்கொண்டு கிளம்பி அரை நிமிஷத்திற்குள் புது ஆவடி ரோடு தொடக்கத்திற்குச் சென்றடைந்து நின்றது. 'இப்போ எங்கே போகணும் ? '

'நீ இந்த ரோடிலேயே போயிண்டிரு. நான் சொல்லறேன். '

டாக்ஸி வேகமாகப் போய்க்கொண்டேயிருக்க நான் பதட்ட நிலையில் சீட் விளிம்பில் உட்கார்ந்துகொண்டு சாலை இருபுறங்களிலும் மாறி மாறிப் பார்த்துக்கொண்டேயிருந்தேன். டாக்ஸி ஒரு மைலுக்கு மேலாகப் போயிருக்கும். நிறைய வீடுகள் வந்தன. காரியாலயமாக ஒன்றும் தட்டுப் படவில்லை. இந்தத் தேடலில் டாக்ஸி டிரைவரின் ஒத்துழைப்புக் கிடையாது என்கிற சூழ்நிலை. திடீரென்று ஒரு விஷயம் நினைவுக்கு வந்து எனக்குப் பகீரென்றது. முன்பு ஒரு சமயம் வேறொரு காரியாலயத்திற்கு ஹாடோஸ் சாலை என்று விலாசம் கொடுத்திருந்தது. ஒரே ஃபர்லாங்கு நீளமிருக்கும் ஹாடோஸ் சாலையில் ஒரு மணி நேரம் அலைந்து திரிந்த பிறகு அந்தக் காரியாலாயம் ஹாடோஸ் சாலையில் பிரிந்து போகும் ஒரு சந்துக் கோடியில் இருந்தது தெரிய வந்தது. அதேபோல இந்த உலகச் சந்தையும் ஒரு சந்தின் கோடியில் காரியாலயம் அமைத்துக் கொண்டிருந்தால் ?

திடாரென்று வீடுகள் முடிந்து சாலை ஒரு மேட்டில் ஏறி ஒரு திறந்தவெளிப் பிரதேசத்தில் திரும்பியது. அப்போது டாக்ஸியிலிருந்து பார்த்ததில் உலகச் சந்தை விளம்பரங்கள் எல்லாவற்றிலும் காணப்பட்ட கோபுரம் வெகுதூரத்தில் தெரிய வந்தது. ஆனால் புது ஆவடிச் சாலை அதை நோக்கிச் செல்லவில்லை. 'இது புது ஆவடி ரோடுதானே ? ' என்று கேட்டேன். நான் கேட்டது என் காதுக்கே சரியாகக் கேட்கவில்லை.

இன்னும் ஒரு மைல் சென்றபின் டாக்ஸி மீண்டும் நின்றது. 'இப்படியே போனா ஆவடிக்குப் போகலாம். ஆனா எக்ஸிபிஷனாண்டை போகமுடியாது. '

நான் அதற்குள் என் கலவர நிலையிலும் ஒரு முடிவிற்கு வந்துவிட்டிருந்தேன். 'சரி எக்ஸிபிஷனுக்கே போங்க. அங்கே போய்க் கேட்டுண்டு போகலாம். '

டாக்ஸி புதிதாகப் போடப்படும் மிக அகலமான சாலையில் திரும்பியது. பெரிய சரளைக் கற்களைப் போட்டு சமதளமாக்கியிருந்தார்கள். இன்னும் தார் போடவில்லை.

டாக்ஸி கடகடவென்று சப்தமெழுப்பிக்கொண்டு மெதுவாக முன்னேறியது. சரளைக் கற்கள் சக்கிரத்தடியில் அழுந்தித் தெறித்து விழுந்தன. கோபுரம் சிறிது சிறிதாகத் தோற்றம்கொள்ள ஆரம்பித்தது. அத்துடன் இன்னும் பல கட்டிடங்கள் புதுமையான விநோதமான உருவங்களில் எழுப்பப்படுவதும் தெரிந்தது. இன்னும் இரு வாரங்களில் சந்தை தொடங்கியாக வேண்டும். ஏற்கெனவே செய்து முடித்த வேலை மலைக்க வைக்கும்படியாக இருந்தது. அதே நேரத்தில் இன்னும் செய்ய வேண்டியது ஏராளமாக இருக்க வேண்டும் என்றும் தோன்றிற்று. எவ்வளவு லட்சக் கணக்குச் செலவில் எவ்வளவு ஆயிரம் பேர் எவ்வளவோ நாட்களாகச் செய்து வரும் விவரம் எனக்கு ஒழுங்காக அறிந்துகொள்ள முடியவில்லை. அந்தக் காரியாலயம் எங்கே என்றுகூடச் சரியாகத் தெரியாது.

சந்தை முன்வாசல் எதிரே டாக்ஸி நின்றது. முன் வாசலுக்கு முன்னே, சாலைக்கு மறுபுறத்தில் ஒரு புது தனிக் கட்டிடம். போர்டெல்லாம் ஒழுங்காக மாட்டியிருந்தார்கள். இவ்வளவு குறுகிய காலத்தில் அங்கே தோட்டம் போடப்பட்டுச் சில செடிகளில் பூக்கள்கூடத் தோன்றியிருந்தன.

என் ரெக்ஸைன் பையைத் தூக்கிக்கொண்டு கீழே இறங்கினேன். நிற்கவே முடியாமல் பூட்ஸ் வலித்தது. 'உன் டிரிப்புக்கு முன்னாலே இதே இடத்திலேந்துதான் நான் வாரேன். ' புது ஆவடி ரோடு என்று நான் பிடிவாதமாக இல்லாதிருந்தால் எப்போதோ இங்கு வந்து சேர்ந்திருக்கலாம். செலவு மிகவும் குறைந்திருக்கும்.

டாக்ஸியை அனுப்பிவிட்டு அந்தக் காரியாலயம் முன்னால் நின்றேன். கல்யாணத்திற்காகத் தைத்த கோட்டும் காலை நசுக்கும் பூட்ஸும் வேஷமணிந்து கொண்டு இங்கு வந்து நின்றது பொருத்தமாகப் படவில்லை. குளிருக்கு அடக்காமாயிருந்தது என்பதைத் தவிர.

காரியாலயத்திற்குள் சென்றேன். தற்காலிகமாகக் கட்டப்பட்ட கட்டிடம். ஆனால் தடபுடலான மேஜை நாற்காலி, சோபாக்கள். சுவரில் பெரிய பெரிய வரைபடங்கள், போஸ்டர்கள். வரவேற்பறையில் ஒரு சோபாவில் சாய்ந்திருந்த ஒரு நபரைத் தவிர வேறு யாரும் கிடையாது. ஒரு கணத் தயக்கம். அந்த சோபாவிடம் சென்று 'விளம்பர அதிகாரி எங்கேயிருக்கிறார் ? ' என்று கேட்டேன். அந்த ஆளின் கோட் துணிக்கும் டையின் தரத்திற்கும் நான் ஆங்கிலம் தவிர வேறு மொழியில் பேசியிருக்க முடியாது. அவன் பதில் தராமல் சாய்ந்து கொண்டிருந்தான். நான் மீண்டும் கேட்டேன். 'அங்கே கேளு, ' என்று அவன் ஹிந்தியில் சொன்னான். அவன் கைகாட்டிய திசையில் டெலிபோன் ஸ்விட்ச்போர்டு இருந்தது. நான் அங்கே போய் நின்றேன். சோபா ஆளும் எழுந்து வெளியே போய்விட்டான். நான் இன்னும் அவனை ஏதாவது கேட்டுக் கொண்டிருப்பேன் என்று எண்ணியிருக்கலாம்.

ஒரு காரிடாரிலிருந்து ஒருவன் இரைந்துகொண்டே வந்தான். அவன் கையில் கத்தைக் காகிதங்கள் இருந்தன. டெலிபோன் ஸ்விட்சுபோர்டில் ஒரு சிறு வட்டப் பட்டை கிர்கிர்ரென்று சப்தமெழுப்பிக் கொண்டிருந்தது யாரோ பாவம், வெகுநேரமாகக் காத்துக் கொண்டிருக்கவேண்டும்.

வந்தவன் ஒரு பித்தானைக் கீழே தள்ளி டெலிபோனைக் காதில் மட்டும் வைத்துக் கொண்டு கேட்டுவிட்டு இருகம்பிகளை இரு துளைகளில் நுழைத்தான். ஒரு கைப்பிடியை இருமுறை சுற்றி டெலிபோனைக் கீழே வைத்தான். 'என்ன வேணும் ? ' என்று என்னைத் தமிழில் கேட்டான்.

'விளம்பர அதிகாரியைப் பாக்கணும். '

'எதுக்கு ? '

'பாக்கணும் '

டாக்ஸி டிரைவருக்கு நான் ஏற்படுத்திய மனநிலையை இவனுக்கும் ஏற்படுத்திவிட்டேனோ என்று சந்தேகிக்க வைக்கும் ஒரு கண இடைவெளி.

'இந்த காரிடாரிலே நேராப்போய் அஞ்சாவது கதவு. '

அந்த காரிடாரில் நடக்கும்போது நான் நொண்டுவதாக உணர்ந்தேன். டெலிபோன் ஆள், 'அஞ்சாவது ரூம், அஞ்சாவது ரூம், ' என்று கத்தினான். முதல் நான்கு அறைகளுக்கு ஒரு பொதுத் தன்மை. ஐந்தாவது அறை ஏர்கண்டிஷன் செய்யப்படாமல் சாதாரணமாக இருந்தது. அந்த அறையில் உட்கார்ந்திருந்த விளம்பர அதிகாரியும் சாதாரணமாக, ஒரு வேளை அவரும் சுண்டுவிரலை நசுக்கும் பூட்ஸைப் போட்டுக் கொண்டிருக்கிறாரோ என்று சந்தேகப் படும்படி, உட்கார்ந்திருந்தார். அதிக விற்பனையாகும் தினசரிப் பத்திரிகைகள் பலவற்றை மேஜைமீது விரித்து வைத்துக் கொண்டு ஒரு சிவப்பு பென்சிலால் சில பகுதிகளைக் குறியிட்டுக் கொண்டிருந்தார். அப்பகுதிகள் இன்னும் பதினைந்து நாட்களில் தொடங்கப்போகும் உலகச் சந்தையின் விளம்பரங்கள்.

'என்ன சார் வேணும் ? ' என்று தமிழில் கேட்டார்.

நான் விவரமாக சொன்னேன்.

'எவ்வளவு வருடமாகப் பத்திரிகை வெளிவரதுன்னு சொன்னேள் ? '

'இது அஞ்சாவது வருடம். இந்த நாட்டிலிருக்கிற முக்கியமானவங்க எல்லார் கைக்கும் இது போறது.'

'என்ன சர்குலேஷன் ? '

நான் சொன்னேன். நாட்டில் முக்கியமானவர்கள் எண்ணிக்கை சிறிது குறைவாகத்தான் இருந்தது.

'அடுத்த வாரம் வாருங்களேன். கேட்டுப் பார்க்கிறேன். ஸ்பெசிமன் காபியும் டாரிஃபும் கொடுத்துட்டுப் போங்கோ, ' என்றார்.

என்னிடம் அதற்கும் மேலும்கூட இருந்தது. உலகச் சந்தை சேர்மேனுக்கு விண்ணப்பம், விளம்பர அதிகாரிக்கு ஒரு தனிக் கடிதம். கடைசி ஆயுதமாக உபயோகிக்க வேண்டியது அது. அந்தக் கட்டத்தை அடைந்தாகி விட்டது என்றே எனக்குத் தோன்றிற்று. அவர் தன் கடிதத்தைப் பிரித்துப் படித்தார். 'ஓகோ, உங்க பத்திரிகையிலே கோதண்டராமும் இருக்காரா ? எவ்வளவு நாளா வெளிவரதுன்னும் சொன்னேள் ? ' என்றார்.

நான் சொன்னேன். அவர் ஒருகணம் எதையோ ஞாபகப்படுத்திக் கொள்வதுபோலத் தோன்றினார். 'ஏன் சார், இதுதானே மிஸ்டர் எஸ். ஆர். வாசுதேவனும் இன்னொருத்தரும் சேர்ந்து ஆரம்பிச்ச பத்திரிக்கை ? ' என்று கேட்டார்.

'ஆமாம். '

'வெரிகுட், வெரிகுட். மிஸ்டர் வாசுதேவன் எப்படி இருக்கார் ? '

நான் பதிலே சொல்லாமல் சமாளித்தேன். 'வாசுதேவனும் நானும் சேர்ந்துதான் பாட்னாவிலே இருந்தோம். அவர் அங்கேயிருந்து டில்லிக்குப் போய் விட்டார். நான்தான் இடியட் மாதிரி மெட்ராஸ் வந்தேன். '

எனக்கு அவருடைய பூட்ஸ் பற்றி மறுபடியும் நினைக்கத் தோன்றியது.

'வெரி எண்டர்பிரைசிங் டைப். எப்படியிருக்கார் ? ஜமாய்ச்சிண்டிருப்பாரே ? '

நான் எவ்வித அர்த்தமும் தோன்றாத ஒரு சிரிப்புச் சிரித்தேன். 'ஆமாம் ' என்றேன்.

விளம்பர அதிகாரி தொடர்ந்து, 'வெரி எண்டர்பிரைசிங் டைப். அவர் இருந்து கூடவா உங்கள் சர்குலேஷன் இப்படி இருக்கு ? '

இப்போது வெறுமனே சிரித்தேன்.

'உங்களுக்கு வரவு செலவுக்குக்கூட கட்டிவராதே ' நீங்க என்ன பண்ணறேள் இதிலே ? '

நான் சொன்னேன். இம்மாதிரிக் கேள்விகளுக்கு என்றே நான் பதில் தயாரித்து வைத்து, நான்கைந்து ஆண்டுகளாக உபயோகித்து வருகிறேன். விஷயம் அவ்வளவு புரியவும் புரியாது, அவர்கள் மீண்டும் கேள்விகளும் கேட்கமாட்டார்கள்.

'வாசுதேவனும் நானும் சேர்ந்து பாட்னாலே இருந்தப்போ அநேகமாத் தினமும் பாட்னா பத்தி எதாவது பேப்பர்லே வந்திண்டேயிருக்கும். ஒரு தடவை ஒரு ஆர்மி பார்ட்டிக்குப்போயிட்டு--காட், அன்னி ராத்திரி ஒரே ரகளையாப் போயிடுத்து. பிளாக்கவுட் வேறே. வாசுதேவனாலே நிக்க முடியலே, ஆனா ஒரு டாங்காவாலாவை அடிச்சுட்டான். அப்பல்லாம் நீங்க பொறந்திருக்கக்கூடமாட்டாங்க. சாயந்திரம் கிளப்புலே போய் உக்காந்துண்டா நானும் அவனும் எட்டு மணிக்குள்ளே அரை பாட்டில் விஸ்கி தீத்துடுவோம். எப்படியிருக்காரோ இப்போ ? நீங்க கடைசியா எப்போ பாத்தீங்க ? '

நான்கு ஏர்கண்டிஷண்ட் அறைகளுக்குப் பக்கத்திலேயே ஒரு சாதாரண அறையில் வேலை பண்ண வேண்டியிருந்த அந்த மனிதர் அந்தச் சூழ்நிலையில் அதற்கு முன்னர் இவ்வளவு உற்சாகமாக இருந்திருக்கவே மாட்டார் என்பது போல எனக்குத் தோன்றியிருக்க வேண்டும். வாசுதேவன் எங்கள் பத்திரிகையுடன் எப்போதோ துண்டித்துக் கொண்டுவிட்டதை நான் அவரிடம் சொல்லவில்லை. 'அது ஒரு காலம். அந்த மாதிரி இனிமே வரப்போறதில்லை. அந்த நாளே வேறு, ' என்றார்.

அவர் மிகவும் சந்தோஷமாக இருந்தார். நான் சொன்னேன், 'நீங்க சுலபமா ஒரு முழுப்பக்கம் எடுத்துக்கலாம். பின் அட்டைகூட எடுத்துக்கலாம். '

அவர் சந்தோஷம் தடைப்பட்டவராகத் தோன்றினார்.

'இது மாசப் பத்திரிகைதானே, சார். நீங்க ஒரு இன்ஸர்ஷன் தான் தரமுடியும், ' என்றேன்.

'ஆமாம், ' என்றார். பிறகு, 'நீங்க ஒரு பத்துநாளைக்கு முன்னாலே வந்திருக்கக் கூடாதா ? அம்பதோட அம்பத்தொண்ணா ஒரு மாதிரி சமாளிச்சிருக்கலாம். இப்பல்லாம் சேர்மென் ஒவ்வொரு செலவு அயிட்டத்துக்கும் என்ன என்னன்னு கேக்கறார், ' என்றார்.

'நாங்க உங்க ஃபேரை முழுக்க கவர் பண்ணறதா இருக்கோம். '

'அது சரி, அது வந்து, சேர்மென் கிட்டே காண்பிச்சு நீங்க அடுத்த இஷ்யூ கொண்டு வரத்துக்குள்ளே ஃபேரே முடிஞ்சிருக்கும். '

'அதுக்குத்தான் இப்பவே வந்தேன். '

அவர் இப்போது முற்றிலும் பழைய மாதிரியே ஆகியிருந்தார். அவர் சொன்னார்; 'நீங்க நாளைக்கு வாருங்கோ, உங்களுக்கு ஒரு பாஸ் வாங்கித் தரேன். '

'பாஸா ? '

'ஆமாம். ஃபேரேல்லாம் சுத்திப் பாக்கறதுக்கு. முடிஞ்சா இனாகரேஷனுக்கு இன்விடேஷன் அனுப்பறேன். அந்த லிஸ்டெல்லாம்கூட ஒருமாதிரி முடிச்சாச்சு. இருந்தாலும் பாக்கறேன். '

'எங்களுக்கு இருபத்தெட்டாந்தேதி வரைக்கும் கூட பிரஸ்ஸிலே ஃபாரம் ஓடிண்டிருக்கும். நீங்க இருபத்தைஞ்சாந்தேதி ரிலீஸ் ஆர்டர் கொடுத்தாக்கூட பின் ராப்பர்லே சேத்துண்டுடலாம். '

'நான் சேர்மனைத்தான் கேக்கணும். ஒவ்வொண்ணுக்கும் அவரைத்தான் கேக்க வேண்டியிருக்கு. அதான் ப்ராப்ளம். '

இப்போது அவர் ஒரு தனி அறையில் உட்காரும் அதிகாரியாகக் கூடத் தோன்றவில்லை.

'நாளைக்கு வாங்கோ நீங்க. நான் பாஸ் வாங்கித் தரேன். '

நான் எழுந்து நின்று கொண்டேன். அவரும் எழுந்து என் கையைப் பலமாகக் குலுக்கினார். அப்போது நானும் அவரும் ஒருமாதிரி இருந்தோம்.

'வாசுதேவனுக்குச் சொல்லுங்கோ, நான் அவரை ரொம்ப விசாரிச்சேன்னு, ' என்றார்.

எனக்கு வாசுதேவனைக் கொஞ்சமும் தெரியாது. 'சரி, ' என்றேன்.

அவர் மீண்டும் தினசரிப் பத்திரிகைகள் குவியலில் மூழ்கினார். நான் காரிடாருக்கு வந்து, நான்கு ஏர்கண்டிஷண்ட் அறைகளைத் தாண்டி வரவேற்பறையையும் கடந்து வெளியே வந்தேன். வெயில் சுளீரென்று அடிக்க ஆரம்பித்திருந்தது. நான் கோட்டைக் கழட்டி மடித்துக் கையில் தொங்கவிட்டுக் கொண்டேன். கால்வலி கொஞ்சம் குறைந்த மாதிரி இருந்தது. அந்தக் கட்டிடத்தின் வெளிப்புறமாகவே நடந்து அதன் பின்புறத்தை அடைந்தேன். ஒரு மூடிய கதவுக்குமேல் 'ஆண்கள் ' என்று எழுதியிருந்தது.

***

flow1
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

5 கருத்துகள்:

இரவிசங்கர் பாண்டியன் on February 3, 2011 at 8:47 AM said...

அருமையான பதிவு, சாமானியனின் வாழ்க்கையை மிகச் சாதாரணமாக காட்ட, அசோகமித்திரனால் தான் முடியும்...

இரவிசங்கர் பாண்டியன் on February 3, 2011 at 8:55 AM said...

அருமையான பதிவு, சாமானியனின் வாழ்க்கையை மிகச் சாதாரணமாக காட்ட, அசோகமித்திரனால் தான் முடியும்...

kannan jagannathan on February 3, 2011 at 5:44 PM said...

சந்தை முன்வாசல் எதிரே டாக்ஸி நின்றது. முன் வாசலுக்கு முன்னே, சாலைக்கு மறுபுறத்தில் ஒரு புது தனிக் கட்டிடம். போர்டெல்லாம் ஒழுங்காக மாட்டியிருந்தார்கள். இவ்வளவு குறுகிய காலத்தில் அங்கே தோட்டம் போடப்பட்டுச் சில செடிகளில் பூக்கள்கூடத் தோன்றியிருந்தன. now cknc collage anna nagar, near anna nagar tower

இராஜராஜேஸ்வரி on February 8, 2011 at 12:46 PM said...

எனக்கு வாசுதேவனைக் கொஞ்சமும் தெரியாது. 'சரி, ' என்றேன். எதிர்பாராத வரிகள்.

Jegadeesh Kumar on July 18, 2011 at 12:03 PM said...

அந்த அறையில் உட்கார்ந்திருந்த விளம்பர அதிகாரியும் சாதாரணமாக, ஒரு வேளை அவரும் சுண்டுவிரலை நசுக்கும் பூட்ஸைப் போட்டுக் கொண்டிருக்கிறாரோ என்று சந்தேகப் படும்படி, உட்கார்ந்திருந்தார்.

ஒரு மூடிய கதவுக்குமேல் 'ஆண்கள் ' என்று எழுதியிருந்தது.

இந்த இரண்டு வாக்கியங்களுக்காகத்தான் முழுகதையுமோ?

அசோகமித்திரன் ஏன் கதையைப் பட பாடென்று முடித்து விடுகிறார்?

Post a Comment

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்