Nov 23, 2011

தியாகமூர்த்தி - புதுமைப்பித்தன்

     செங்காணி என்ற திவ்வியப் பிரதேசத்தைப் பற்றி, நீங்கள் எந்தப் பூகோள சாஸ்திரத்தையோ, படங்களையோ, காருண்ய கவர்ண்மெண்டார் மனமுவந்து அருளிய நன்மைகளில் ஒன்றாகிய கெஜட்டுகளையோ திருப்பித் திருப்பிப் பார்த்தாலும் கண்டுபிடிக்க முடியாது. ஆனால் எனது வார்த்தையையும் அந்தப் பெயர் தெரியாத புலவர் இசைத்த, pu.pi

     தருவைக்கு மேற்கே செங்காணி வெள்ளம்
     தானே வந்தால் இங்கு விடுவானே தோணி 

என்ற மேற்கோள் வரிகளையும் நம்புவதாக இருந்தால்தானே மேலே சொல்ல முடியும்.

     தானே எப்பொழுதாவது வெள்ளம் வந்தால் தோணி விடக்கூடிய அந்த ஆற்றிற்கு ஒரு தாம்போதி, மேற்கே இருக்கும் செங்காணியையும் கிழக்குக் கரையில் இருக்கும் தருவைத் திருப்பதியையும் பிணித்து நின்றது.

தாம்போதியைக் கடந்ததும் சாலையின் பக்கத்தில் ஒரு புளியமரம். அதன் பக்கத்தில் இருந்த இரும்புப் பட்டடை வீடு என்ற முறையில் சின்னாபின்னமாக நின்ற ஒரு குடிசையில் இருபது வருஷங்களுக்கு முன் ராமசாமிப் பத்தரின் திருஅவதாரம் இனிது நடந்தேறியது.

     தகப்பனாரைப் போல் ஓட்டைக் கட்டை வண்டிக்குப் பட்டை போடுவது, பஞ்சத்தில் அடிபட்ட மாடுகளுக்கு லாடம் அடிப்பது, பொழுது போக்காக ஆணிகளைச் செய்து குவிப்பது என்ற கொல்ல சமூகத்தின் வைதிக நடவடிக்கைகளுக்கும், காலம் இருக்கிற தர்பாரில், தனது அபூர்வமான புத்தி விசாலத்திற்கும் ஒத்துவராது என்று கண்ட ராமசாமிப் பத்தர், தலைமுறை தலைமுறையாகத் தம் தகப்பனார் வரையில் வந்த செங்காணி மான்மியத்தை முடித்துக் கொண்டு திருநெல்வேலிக்குச் சென்று குடியேறினார்.

     முதலில் 'ஸைக்கிள்' 'கடிகாரம்' ரிப்பேரில் ஆரம்பித்து, வரவர 'மோட்டார் கண்டக்டர்', 'டிரைவர்', பிறகு 'மெக்கானிக்' என்ற பருவங்களைக் கடந்து, தமக்குத்தாமே சொந்தமாக வைத்துக் கொண்ட மோட்டார் என்ஜினீயர் என்ற பட்டத்துடன் 'ஒர்க் ஷாப்' என்ற பெயருடைய ஒரு கொல்லப் பட்டடையை ஸ்தாபித்தார்.

     இந்தப் பத்து வருஷங்களில் பத்தரைக் கையில் பிடிக்க முடியாது. கையில் பணம் ஓட்டமிருந்தால் யாரும் அப்படித்தான். ஏறாத தாசி வீடு இல்லை; உடலில் வாங்காத வியாதி இல்லை.

     இந்தக் காலத்தில்தான் பையன் கெட்டுப் போய்விடுவான் என்று எண்ணி அவருடைய உறவினர்கள் கல்யாணமும் செய்து வைத்தார்கள். அந்த அம்மாணி மூன்று வருஷத்தில் இரண்டு பெண் குழந்தைகளைப் பத்தருக்கு ஒரு பொறுப்பாக வைத்துவிட்டுக் காலமானாள்.

     உறவினர்கள், ராமசாமிப் பத்தரின் குடும்ப வாழ்க்கையில் கவலைப்பட ஆரம்பிக்கு முன்னமே 'ஒர்க் ஷாப்' அவர்கள் தடுத்து விடலாம் என நம்பியிருந்த அந்த நிலைமைக்கு வந்துவிட்டது. எங்கே பார்த்தாலும் கடன். வேலைக்காரர் தொல்லை. வேலையும் அவர் குறித்த நேரத்தில் முடித்துக் கொடுக்க முடியாததனால் மற்ற கம்பெனிகளைத் தேடிவிட்டன.

     இந்த மாதிரி நிலைமை விரைவில் நீங்கிவிடும் என்ற நம்பிக்கையிலேயே ஒரு பத்து வருஷம் கழிந்தது.

     மனிதன் ஒரு நிலைமை வரையில்தான் பொறுத்துக் கொண்டு இருக்க முடியும். தலைக்கு மேல் வெள்ளம் சென்றால்?

     ஒரு சுப தினத்தில் 'ஒர்க் ஷாப்' கதவடைக்கப்பட்டது. அடைத்ததனால் அவருடயை நிலைமை மேலோங்கி விடவில்லை. 'செட்டி இருந்தும் கெடுத்தான், இறந்தும் கெடுத்தான்' என்ற கதைதான்.

     கொஞ்சநாள், தம் வயசு வந்த பெண்களின் கதியை நோக்கிக் கண்ணீர் விட்டுக்கொண்டு, ஊரைச்சுற்றி வந்தார். கடன் தொல்லை, பெண்களின் பொறுப்பு, எல்லாம் சேர்ந்து அவரை நாற்பது வயசிலேயே ஊக்கங்குன்றிய கிழவனாக்கிவிட்டன. உடல் வன்மையாவது இருக்கிறதா? பழைய சல்லாப காலங்களில் சேகரித்த 'முதல்' வீணாகப் போகவில்லை. மருந்து என்ற சிறிய தடையுத்தரவிற்குப் பயந்து இத்தனை நாட்கள் பதுங்கியிருந்த வியாதிகள் மீண்டும் உறவாட ஆரம்பித்தன. 

******
 
       'இண்டோ -யூரோப்பியன் மோட்டார் மெக்கானிகல் ஒர்க்ஸ்' முதலாளியான ராமானுஜலு நாயுடு அவருக்கு ஒரு பிட்டர் வேலை கொடுத்தபொழுது, 'அன்ன தாதா' என்று அவரை மனமாரப் புகழாமல் இருக்க முடியுமா? நீரும் நானும் இந்த மாதிரி இரண்டு பெண் குழந்தைகளை வைத்துக் கொண்டு அதன் பொறுப்பை ஏற்றுக்கொண்டு வேலையில்லாமல் திண்டாடியிருந்தால் அம்மாதிரித்தான் புகழ்வோம்.

     மாசம் 20 ரூபாய் சம்பளம். காலை 6 முதல் இரவு எப்பொழுது பட்டடை அடைக்கப்படுகிறதோ அவ்வளவு நேரமும் வேலை.

     இம்மாதிரி ஒரு வருஷம் கொஞ்ச நாட்கள் சற்றுக் கவலையற்ற தரித்திரம். பொருளாதார மந்தம் என்று நீட்டி முழக்கிச் சாய்மான நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு அடித்து விளாசுகிறார்களே, அதுவும் வந்தது. அதைப்பற்றிய தத்துவங்கள், காரணங்கள் எல்லாம் உமக்கும் எனக்கும் பத்தி பத்தியாக நுணுக்கமாக எழுதத் தெரியும்; பேசவும் தெரியும். ராமானுஜலு நாயுடுவுக்குத் தெரிந்ததுபோல் நமக்கு ஸ்பஷ்டமாகத் தெரிந்தது.

ராமானுஜலு நாயுடு நல்ல குணமுள்ளவர்தாம். சில சமயங்களில் ஐந்து பத்து முன்பின் யோசியாமல் கொடுத்து உதவுகிறவர்தாம். ஆனால் பணம் சேர்ப்பதற்குத்தான் அவர் சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு வந்தாரே ஒழிய, தொழிலாளிகளுக்குத் தர்மம் செய்து புண்ணியம் சம்பாதிக்க வரவில்லை.

     அவருடைய சிக்கனக் கத்தி விழுந்தது. பத்துப் பேர் வெளியே போக வேண்டியிருந்தது. அதில் ராமசாமிப் பத்தரும் ஒருவர். கெஞ்சினார்கள்; கூத்தாடினார்கள். பத்து ரூபாய் - பாதி சம்பளம் - கொடுத்தால் கூடப் போதும் என்றார்கள். ராமானுஜலு நாயுடு சத்திரம் கட்ட வரவில்லையே!

     நல்ல பசுமாடு இருக்கிறது. வேளைக்கு இரண்டு படி பால் கறக்கிறது. அதற்குப் பருத்தி விதை, தீனி என்ன? ராஜயோகந்தான். கண்ணும் கருத்துமாகத்தான் கவனிக்கிறோம். மாடு கிழடாகி, வறண்டு போய்விட்டால் வைத்துக் கொண்டு கும்பிடவா செய்கிறோம்? தோலின் விலைக்காவது தள்ளிவிடவில்லையா? அதில் ராமானுஜலு நாயுடு செய்ததில் என்ன குற்றம்? அது அப்படித்தான். அது நியாயந்தான். இப்பொழுது அதைத் தப்பு என்று சொல்லுகிறவன் முட்டாள், பைத்தியக்காரன்.

*****

     ராமசாமிப் பத்தருக்குச் சம்பளத்தை வாங்கிக் கொண்டு வரும்போது எதுவும் தோன்றவில்லை. நாலு நாள் சம்பளம் எத்தனை நாட்களுக்குப் போதும்? பிறகு என்ன செய்வது? வேறு எந்தக் கம்பெனியில் எடுப்பார்கள்? எடுத்தாலும் இந்தக் கதிதானே! உலகமே ஓர் இதயமற்ற திருக்கூட்டம் என்று பட்டது. நெற்றிக்கண் இருந்தால் எல்லாரையும் எரித்துச் சாம்பலாக்கியிருப்பார். இல்லாததனால் நேராகச் சாராயக் கடைக்குப் போனார்.

     இனி என்ன செய்வது?

     இனி என்னதான் செய்வது? எல்லாவற்றையும் தொலைத்துவிட்டுக் காவியைக் கட்டிக் கொண்டு பிச்சை எடுக்க வேண்டியதுதான். சீ! பிச்சையா! அதைப் போல கோழைத்தனம் உண்டா? நம்மைத் திருடுகிற இந்தப் பயல்களைக் கொள்ளையடித்தால் எந்தத் தர்மசாஸ்திரம் ஓட்டையாகப் போகிறது?

     'இரவு பத்துப் பதினொரு மணிக்கு ராமானுஜலு நாயுடு தனியாகத் தான் கணக்குப் பார்த்துக் கொண்டு இருப்பார். ஒரு கை பார்த்தால் தான் என்ன?'

     வீட்டிற்கு வந்து மிஞ்சி இருக்கிற சில்லறையைப் பெண்களிடம் கொடுத்தார். கொடுத்தது, சாப்பிட்டது எல்லாம் மெஷின் மாதிரி. மனசு அதில் லயித்துவிட்டது.

     "என்ன அப்பா, இப்படி இருக்கே?" என்றதற்கு ஒன்றும் சொல்ல முடியவில்லை. 

    திடீரென்று இருவரையும் கட்டிச் சேர்த்து முகத்தில் மாறி மாறி முத்தமிட்டார். ஹிந்து சமுதாயத்தில் வயது வந்த பெண்களை முத்தமிடத் தந்தைக்கு உரிமையே இல்லை. இருவரும் திடுக்கிட்டார்கள். குடித்துவிட்டாரோ என்ற சந்தேகம். பயந்து நடுங்கினார்கள்.

     "நமக்கு நல்ல காலம் வந்துவிட்டது. நாயுடு எனக்கு ஐம்பது ரூபாயில் பட்டணத்தில் வேலை பார்த்துக் கொடுத்தார். வழிச்செலவிற்குப் பணம் ராத்திரி தருகிறேன் வா என்றிருக்கிறார்" என்று சொல்லிவிட்டு வெளியே வந்து தமது தீர்மானத்தை நிறைவேற்றப் புறப்பட்டார்.

     எதிர்பார்த்தபடி நாயுடு தனியாகத்தான் இருந்தார்.

     "வா ராமசாமி, நான் என்ன செய்யட்டும், நீதான் சொல். நீ இங்கே வருவதில் பிரயோஜனமில்லை" என்றார் நாயுடு.

எனக்கு நீங்கள் கொடுத்தது பத்தாது" என்றார் ராமசாமி. குரல் வித்தியாசமாக இருந்தது.

     குடித்துவிட்டு வந்திருக்கிறானோ என்று நாயுடு சந்தேகித்து, "நீ நாளைக்கு வா" என்றார்.

     "நாளைக்கா! பார் உன்னை என்ன செய்கிறேன். என் குடும்பத்தை நாசமாக்கிவிட்டாயே, திருட்டு ராஸ்கல்" என்று அவர்மேல் பாய்ந்து மேஜையின் மேல் இருந்த நோட்டுக்களில் கையை வைத்தார்.

     நாயுடு மட்டும் தனியாக இருந்தது உண்மைதான். அதற்காக உலகமே நடமாட்டமற்றுப் போய்விடுமா? ராமசாமி வெகு லேசாகப் பிடிபட்டார்.

     நாயுடுவிற்கு அசாத்தியக் கோபம். "உண்ட வீட்டில் கெண்டி தூக்கிய பயலை விடுகிறேனா பார்" என்றார்.

     விவரிப்பானேன்?

     பலவந்தத் திருட்டுக் கேஸாகியது. ஆறுமாசக் கடுங்காவல்.

     பத்தர் பாடு கவலையற்ற சாப்பாடு. எந்தத் தொழிலாளர் சங்கம் திருட்டுத் தொழிலாளியின் குடும்பத்திற்கு இந்தமாதிரி உதவி செய்ய முடியும்? நியாயமான உலகமல்லவா?

     பெண்களின் நிலைமையைப் பற்றி எழுதக் கூசுகிறது.

     ஜன்மாந்திர விதி என்ற ஒரு மகத்தான காரணத்தைக் கண்டுபிடித்த ஹிந்து சமுதாயத்தில் இது இயற்கைதானே?

********

காந்தி, 5-9-1934

Nov 22, 2011

வெளியில் ஒருவன்-சுகுமாரன்

வெளியில் ஒருவன்

பரிவில்லாதது வீடு
வெளிக் காற்றில் ஏராளம் விஷம் sukumaran
சோகை பிடித்த தாவரங்கள்
நீர்நிலைகளில் சாகும் பறவைகள் மிருகங்கள்  .
பிச்சைக்காரியின் ஒடுங்கிய குவளையில்
சரித்திரம் கெக்கலிக்கும்.
தேசக் கொடிகளின் மடிப்பவிழ்ந்து
எங்கும் பொய்கள் கவியும்.
ஒன்று அல்லது மற்றொன்று -
விலங்குகளை இழுத்து நகரும் மனிதர்கள்.

திசைகளில் அலைந்து திரும்பிய பறவை சொல்லிற்று
மனிதர்கள் எரிக்கப் படுவதை
பெண்கள் சிதைக்கப் படுவதை
குழந்தைகளும் சங்கீதக் கருவிகளும் பிய்த்தெறியப் படுவதை
பூக்களும் கவிதைகளும் மிதிக்கப் படுவதை
‘மூலதனத்தின்’ பக்கங்கள் ஈரமற்றுப் போனதை
கடவுளின் மகுடத்தைப் பேய்கள் பறித்துக் கொண்டதை
சகோதரர்களுக்குக் கோரைப் பற்கள் முளைத்ததை.

பாதுகாப்பற்றது வெளி
தற்கொலைக்கும் துப்பாக்கி முனைக்கும் நடுவில்
நமது வாழ்க்கை. 
இரண்டு குரோத பற்சக்கரங்களுக்கு இடையில்
நமது காலம்.
நாம் எதிர்பார்த்திருக்கிறோம்
அணுகுண்டு வெடிப்பின் கடைசி நொடிக்காய்.
எனினும்
வயலின் ஸ்வரங்களாய்ப் பொழியும் மழை
தாமிரச் சூரியன்
பறவைகள் பச்சிலைக் காற்று குதூகல முகங்கள்
அக்குளில் சிறகு பொருத்தும் இசை - இவற்றுக்காய்க்
காத்திருக்கிறது நம்பிக்கை
பனிப்பாறைகளைப் பிளந்து மூச்சுவிடும் செடிபோல.

கையில் அள்ளிய நீர்

அள்ளி
கைப்பள்ளத்தில் தேக்கிய நீர்
நதிக்கு அந்நியமாச்சு
இது நிச்சலனம்
ஆகாயம் அலைபுரளும் அதில்
கை நீரைக் கவிழ்த்தேன்
போகும் நதியில் எது என் நீர்?

******

Nov 15, 2011

மூங்கில் குருத்து - திலீப்குமார்

கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடிப்பதற்கு முன்பே கோவையிலிருந்த தையல் கடைகளில் வாரக்கூலி முறை அமல்படுத்தப்பட்டிருந்தது. திரு.கிருஷ்ணாஜிராவ் கடையிலும் அப்படித்தான்.
வாராவாரம் வியாழக்கிழமை தட்டி-பாஸ் தயவில் ’குலேபகாவலி’, ‘குலமகள் ராதை’ போன்ற ஒப்பற்ற ‘திரைக்காவியங்களை’ இரண்டாவது ஆட்டம் பார்த்துவிட்டுக் கனவுக்கன்னிகளின் திரட்சிகளை மனத்திற்குள் ஆலிங்கனம் செய்து, லுங்கியைக் கறைபடியச் செய்து கெட்டுப்போய்dilipkumar5க் கொண்டிருந்த அநேகம் கடைப் பையன்களைப் போலத்தான் நானும். அண்ணன் சென்னைக்கு ஓடித்தொலைத்தாயிற்று. அக்காவை நீலகிரியில் ஒரு எஸ்டேட் மானேஜருக்குத் தாரை வார்த்தாகிவிட்டது. அக்காவின் அழகு அவளுக்குக் கொஞ்சம் அதிர்ஷ்டத்தையும் கூட்டிக் கொடுத்தது. தம்பிக்கு ஐம்பது ரூபாயில் ஒரு ரெடிமேட் ஃபாக்டரியில் வேலை. எனக்குத் திரு கிருஷ்ணாஜிராவ் கடையில்.
தறிநெய்கிற தேவாங்கச் செட்டிமார்கள் அதிகமாகப் புழங்குகிற தியாகராஜ புதுவீதியில் இட்லி விற்கும் ஒரு விதவைச் செட்டிச்சியின் வீடு. கட்டடவியலுக்குக் களங்கம் கற்பிக்கிற ஒரு வினோதமான கர்ப்பக்ரஹம் அது. இருளைக் கிழித்து உள்ளே நுழைந்தால், இருபத்தி நாலு வயதில் அப்பாவை இழந்த அம்மா வெள்ளையணிந்து கோட்டுருவமாய்ச் சமைந்து காணப்படுவாள். ஆஜானுபாகுவாயிருந்த அப்பா மூல வியாதி முற்றி ஆசனவாயிலிருந்து ரத்தம் கசியக்கசியக் கதறிய அந்தக் கடைசிக் கதறல் என் நாலு வயது மனத்தில் வடுவாய்ப் பதிந்துவிட்டது. அந்த நாட்களில் அம்மாவின் அழுகுரல் கூரையிலிருந்து அடிபட்டுச் சரியும் காகத்தின் மழுங்கின கரைதலைப் போல் இருக்கும். இன்றும் அக இரைச்சலற்ற அமைதியான இரவுகளில் அந்தக் குரல் எப்போதாவது உயிர்த்தெழும்.
திரு கிருஷ்ணராஜி ராவ் மராத்தியர். குள்ளம், குண்டு நிறைய கெட்ட வார்த்தைகள் பேசுவார். நிறையக் குடிப்பார் என்றாலும் தொழிலில் படுகில்லாடி. இதன் விளைவாகவே வெள்ளைக்கார கலெக்டர்களுக்கும் அதிகாரிகளுக்கும் மிகவும் நெருக்கமானவராக ஒரு காலத்தில் திகழ்ந்தார். மல்யுத்த வீரன் கிங்காங்குக்கு “சூட்” தைத்து அதன் கச்சிதத்தில் அந்த மாவீரன் மயங்கி, உற்சாகத்தில் திரு ராவை, குழந்தையைத் தூக்குவதுபோல் தலைக்கு மேல் உயர்த்திக் கொஞ்சி விட்டுப் போனதும், பெருந்தலைவர் காமராஜர்க்குக் கதர்ச்சட்டை தைத்துக் கொடுத்ததும் இவரது நீண்ட தொழில் வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்வுகள்.
அந்த நாட்களில் இவர் சம்பாதித்த பணம் ஏராளம்! சினிமா எடுத்துத் தோற்றுப்போனது போக மிச்சத்தைப் போத்தனூரின் ஆங்கிலோ - இந்தியப் பரத்தைகளிடம் கரைத்துவிட்டார். இப்போது, காலேஜ் காண்ட்ராக்டிலும், கிழடாய்ப் போய்விட்ட இவரது இளம் வாடிக்கையாளர்களின் தயவிலும் வண்டி ஓடிக் கொண்டிருக்கிறது.
சுபிட்சத்திலிருந்து தரித்திரத்திற்குச் சரிந்த திரு ராவின் வீடு, தையற்கடை, நவாப் ஹகீம் ரோடின் கோடியில் ஒரு சினிமாக் கொட்டகைக்கு எதிரில் இருந்தது. மேஜை, நாற்காலிகள், ‘கௌண்டர்கள்’, தையல் இயந்திரங்கள் அனைத்துமே நவீனமற்றுச் சிதைந்து பழமை பகரும். ஒரு கம்மிய இருள் கடைக்குள், எப்போதும்.
செவ்வகமாயிருந்த கடையின் பின்பகுதியை வீடாக உபயோகித்துக் கொண்டிருந்தார் திரு,ராவ். ஒரு குமாரனையும் மூன்று குமாரத்திகளையும் திரு ராவுக்காகப் பெற்றுத்தந்த திருமதி லக்‌ஷ்மிபாய் கொள்ளை அழகாக இல்லாவிட்டாலும் தளராத உடம்புக்காரி. நல்ல உடம்பு. நாற்பத்து மூன்று வருஷங்களை விழுங்கிவிட்டு முப்பதாய் காட்டுகிற வசீகரம். திரு ராவ் குடித்து விட்டு இவளை அறைந்தும் குத்தியும் அவள் இடது காது செவிடாகி இருந்தது. மூத்த பெண் சுமித்ரா பியுசி படித்துக்கொண்டு, ‘சிமெண்ட்டா’ல் மெழுகின, ‘பாவ’மில்லாத முகத்துடன், மதிய வேளைகளில் பாவாடை விலகி, கால்கள் தெரியக் கிடப்பாள். (வீட்டுக்குள்ளிருந்த தொலைபேசி, திரு.ராவ் இல்லாத சமயமொன்றில் கிணுகிணுத்ததனால் கிட்டிய தரிசனம்). இரண்டாவது பெண் கௌரிக்கு வயது பதின்மூன்று. நீண்ட பெரிய கண்கள். நீண்ட நாக்கு. அடுத்தது பையன். எட்டு வயதில் சொத்தைப் பற்களுடன் எல்லோரையும் திட்டிக் கொண்டுத் தாவும் வானரம். கடைசியாய் ’லட்டு’ என்ற சுலோச்சனா. மூணு வயது.ஒரு நாளைக்கு முப்பது தடவை மலம் கழிப்பவளாக இருந்தாள்.
கோபிநாத்ராவ், பத்மநாத் ராவ் , கோவிந்த ராவ், தேஷ் பாண்டே, ரகுநாத் ராவ், பாண்டுரங்க ராவ், மல்லிகார்ஜுன ராவ் என்று ஒரு ஏழை மராட்டியர் பட்டாளத்தையே வேலைக்கு அமர்த்தியிருந்தார் ராவ். சில்லரை பண்ணுகிற சுகுமாரன் (வயது 10) மலையாளி. கணக்குப் பார்க்கிற நான் குஜராத்தி. கணக்கு என்றால் ஏதோ பெரியபெரிய பேரேடுகளைப் புரட்டிப் புரட்டி எழுதுகிற வேலை இல்லை. திரு. ராவ் இல்லாத சமயங்களில் வசூலாகும் பணத்தைக் கணக்கு வைத்து, அவர் வந்து வெற்றுடம்போடு அமர்ந்து ‘கத்திரி’ மார்க்கைச் சப்தத்துடன் உறிஞ்சி ஊதிக்கொண்டிருக்கிற சுமுகமான மனநிலையில் விவேகத்துடன் கொடுத்துவிட வேண்டும். என் சக ராவ்கள் தினம் ஒன்று இரண்டு என்று வாங்கும் முன்பணத்தைப் பற்று எழுத வேண்டும். அளவு எடுக்கும் போது குறித்துக்கொள்ள வேண்டும். குறித்ததைத் துணியுடன் ஒரு துண்டுக் காகிதத்தில் எழுதி கட்டிங் மாஸ்டர் கோபிநாத் ராவிடம் கொடுக்க வேண்டும். (கோபிநாத் ராவ் 50 களின் இந்திப்பட வில்லன்களைப் போல மங்கிய முகத்தில் அம்மைத் தழும்புகளோடு கண்கள் ஜ்வலிக்க, பார்ப்பவர்களைக் கலவரப்படுத்துகிற மனிதன். திரு ராவுக்கும் இவனுக்கும் ஏற்படும் சச்சரவுகளின் போது 32ஐ 22 ஆக வெட்டித் தள்ளிவிடுவான். தான் எழுதித் தரும் துண்டுச் சீட்டிலும் மாற்றிவிட்டு என்னையும் மாட்டிவிடுவான். பிறகு என் கற்பும், என் அம்மாவின் கற்பும் திரு ராவின் நாக்கில் துவண்டு சிதைந்து பறிபோகும்),
கடையில், எத்தனை முறை தட்டினாலும் போகாத தூசியைத் தட்ட வேண்டும். கௌரிக்கு லீவ் லெட்டர் மற்றும் ‘எக்ஸ்கர்ஷன்” பற்றிய காம்போசிசன் எழுதித்தர வேண்டும். ‘லட்டு’வைக் கொஞ்ச வேண்டும். மிச்சமிருக்கிற நேரத்தில் ஒரு கணக்குப் புத்தகத்தை முன்னால் பிரித்துப் போட்டுவிட்டு மேஜைக்கு மேலே தொங்கும் மங்கிப் போன கண்ணாடியில் கணக்குப் பார்க்கிற பாவனையில், முகத்தை வெறித்துக் கொண்டிருக்கலாம்.
அன்று சனிக்கிழமை.
திரு ராவ் காலையிலேயே வெளியே கிளம்பிவிட்டிருந்தார். எதிர்க் கொட்டகையில் திலகங்களில் ஒருவர் நடித்த புதிய திரைப்படம். இரண்டரை மணிக் காட்சிக்கு டிக்கெட் கிடைக்காதவர்கள் மாலைக் காட்சிக்கு இப்போதே நிற்க ஆரம்பித்திருந்தார்கள்.
இரட்டை வேடக் கதாநாயகர்களில் முதலாமவன் தாடியும், கந்தல் துணியுமாக வெறிக்க, இரண்டாமவன் ஆக்ரோஷமாகச் சிங்கத்தோடு சண்டை போட்டுக்கொண்டிருந்தான். அருகில் கதாநாயகி சம்பந்தமே இல்லாதவள்போல் பெரிய ஒற்றை மார்பைப் பக்கவாட்டில் காட்டியபடி இளித்துக்கொண்டிருந்தாள். அந்தப் புகழ்பெற்ற கதாநாயகியின் மூக்கு, அவள் நிஜ மூக்கை விட லேசாக மழுங்கியிருந்தது என்றாலும் போஸ்டர் வரைந்தவன் - தமிழ்க் கதாநாயகிகளுக்கு முலையையும், தொடையையும் தவிர வேறு எதுவும் எடுப்பாக இருக்கக் கூடாது என்று அறிந்த - புத்திசாலி, மூக்கில் கோட்டை விட்டதை முலையில் சரிக்கட்டி இருந்தான்.
கோபிநாத்ராவ் வாசலில் நின்றபடி வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான். கடைக்குள் அமைதியாக இருந்தது.
பொதுவாக இந்த நேரத்தில் ‘ராவ்’கள் எல்லோரும் உற்சாகமாகப் பேசிக்கொள்வார்கள். தையலைப் பற்றி, தையல் இயந்திரங்களைப் பற்றி, அங்கே இல்லாத ‘காஜா’ எடுக்கும் இயந்திரங்களைப் பற்றி... இந்தப் பேச்சுகள் எங்கிருந்து துவங்கினாலும் அநேகமாக எல்லாச் சந்தர்ப்பங்களிலும் பாலுணர்வு சம்பந்தப்பட்ட விஷயங்களிலேயே சென்று முற்றுப்பெறும். - எல்லா இந்திய சர்ச்சைகளையும் போல். அன்று அது பற்றிக்கூட பேச ஒன்றுமில்லாததுபோல மௌனமாக இருந்தார்கள் எல்லோரும்.
அன்று வசூல் பிரமாதம் இல்லை. பிற்பகல் மூன்று மணிவரை பதினைந்து ரூபாய்கூட வரவில்லை. இதற்குள் எல்லோரும் என்னிடம் ஓரிரு முறை வசூல் எவ்வளவு என்று தனித்தனியாகக் கேட்டுத் தெரிந்துகொண்டிருந்தார்கள். மாலைக்குள் இருநூறு ரூபாயாவது ஆனால்தான் அனைவருக்கும் கூலி தர முடியும். ஆகும் என்ற நம்பிக்கை யாருக்கும் இல்லை.
திரு ராவின் ஊழியர்களுக்கு இம்மாதிரியான இக்கட்டுகள் புதியவை அல்ல. மாதத்தின் கடைசி வாரத்தில், அநேகமாக எல்லா மாதங்களிலும், இப்படி நடந்துவிடும். சென்ற மாதம் திரு ராவ் பெங்களூர் சென்றிருந்தபோது வசூலே ஆகாத ஒரு சனிக்கிழமையன்று திருமதி லக்ஷ்மிபாய் எல்லோருக்கும் இரண்டுலிட்டர் அரிசி கொடுத்தனுப்பினாள். ஆனால் திரு ராவ் இம்மாதிரியான அதீதச் செயல்களில் இறங்கமாட்டார். இன்று பணம் வராவிட்டால் அரிசி கூட இல்லாமல் வெறும் கையோடு செல்லவேண்டியது நிச்சயம்.
எல்லோரும் கூலியைப் பற்றிய பீதியில் அரைமனத்துடன் வேலை செய்து கொண்டிருந்தார்கள்.
புதிதாய்க் கல்யாணமானவன் பத்மநாத் ராவ், தாய்வீட்டிலிருந்த தன் மனைவியை அழைத்து வர, கூலியைத் தவிர இருபது ரூபாயை முன்பணமாக எதிர்பார்த்தவன். உற்சாகம் குன்றி அடிக்கடி எழுந்துசென்று பீடிகுடித்துக்கொண்டிருந்தான்.
எனக்கு அம்மாவின் ஞாபகம் வந்தது. அவள் கூட எதிர்பார்த்துக் கொண்டிருப்பாள். இன்றோடு அரிசி தீர்ந்தது என்று மதியமே அறிக்கைவிட்டிருந்தாள். மறுநாள் அப்பாவின் ’திவசம்’ வேறு.திவசத்தன்று பிராமணனுக்குப் போடுகிற சாப்பாடு அப்பாவைச் சென்றடைகிறதோ இல்லையோ, இப்படி மாதக் கடைசியில் செத்துப் போய் கழுத்தறுத்திற்க வேண்டாம் என்று நினைத்துக்கொண்டேன். பின் அதற்காக வருத்தப்பட்டேன். தொடர்ந்து, நான் பெரியவனான பின் அப்பாவின் திவசத்திற்கு ஊரையே கூட்டி சாப்பாடு போடவேண்டும் என்று லஜ்ஜையன்று மனது உறுதி பூண்டது.
அண்ணாவும் கருணாநிதியும் கொடி கட்டி ஆண்டுகொண்டிருந்த காலம். தமிழக லாட்டரிக்கு மக்கள் நாயாக அலைந்துகொண்டிருந்தார்கள். அரிசி மட்டும் மலிவாய்க் கிடைத்தது. வாடையடிக்கிற பழுப்பு நிறத்தில், ரூபாய்க்கு இரண்டு படி!. அம்மா அதற்குச் செல்லமாக பெயர் கூடச் சூட்டியிருந்தாள், ‘ரப்பர் சம்பா’ என்று. இல்லாத வேலைக்காரியையும் சேர்த்து நாலு பேருக்கு 12 கிலோ, கோதுமை 4 கிலோ, எல்லாம் சேர்த்து பதின்மூன்று ரூபாய் சொச்சம். தம்பியின் முதலாளி முன்பணம் தராத ராட்சசன். என் வாரக்கூலியில் ரேஷன் வாங்க வேண்டும் என்பது தான் வழக்கமான திட்டம். நான் வாசலைநோக்கியபடியே அமர்ந்திருந்தேன் நிறைவேற.
பாண்டுரங்கராவ் சுகுமாரோடு பேச ஆரம்பித்தான்.
எதிர்த் திசையிலிருந்து தெருவைக் கடந்து திரு ராவ் வருவது தெரிந்தது. நன்றாக வெயிலில் அலைந்ததால் முகம் கிழடு தட்டிய ஆப்பிள் பழம் போல் சிவந்திருந்தது. அவர் ஒவ்வொரு அடியை வைத்த போதும் அவர் தொந்தி குலுங்கி குலுங்கி ஆடியது. திரு ராவின் தொந்தியானது மற்றெல்லா தொந்திகளைவிடவும் பிரத்தியேகமானது.
ரோமம் இல்லாத மார்புக்கு கீழே, மேல்வயிற்றில் ரகசியமாய்த் துவங்கி, அமைதியாய் முன் எழுந்து அவசரமில்லாமல் அரைவட்டம் போட்டு, பின் ‘வெடுக்’கென்று இறங்கிச் சரிந்து மறைந்தது அது. ராஜ வம்சத்து அழகிகளின் அழகான மார்பகங்கள், மதுக்கிண்ண வார்ப்புகளுக்கு மாதிரிகளாய்த் திகழ்ந்த மேற்கத்திய கதைகள் நம்மில் பலருக்குத் தெரியும். ஆனால் வடிவ நேர்த்தி பற்றி அதிகம் கவலைப்படாத இந்தியக் குயவர்களுக்கோ, கால்பந்து தயாரிப்பாளர்களுக்கோ இது தெரிந்திருக்க நியாயமில்லை. இதன் விளைவாகவே ரொம்பவும் துரதிர்ஷ்டவசமாக திரு ராவின் தொந்தி பார்ப்பாரற்றுக் குலுங்கிக் கொண்டிருந்தது.
மற்ற ராவ்கள் கவனிக்கும் முன் திரு ராவ் கையிலிருந்த துணிப்பொட்டலத்தை மேஜைமேல் போட்டபடி உள்ளே நுழைந்தார். நான் ஏற்கனவே எழுந்துவிட்டிருந்தேன்.
திரு ராவ் வந்ததை அறியாத பாண்டுரங்க ராவ் தனக்குத் தெரிந்த ஒரு மலையாளக் கெட்ட வார்த்தைக்குச் சுகுமாரிடம் அர்த்தம் கேட்டு அவனைச் சீண்டிக்கொண்டிருந்தான். திரு ராவ் மௌனமாக ஒரு ஒற்றனைப் போல் அவர்களையே கவனித்துக் கொண்டு நின்றார்.
மற்ற ராவ்கள் எல்லோரும் ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டு காத்திருந்தார்கள்.
நாணிச் சிணுங்கிச் சிரித்தபடித் தலைநிமிர்ந்த சுகுமாரன் திரு ராவைக் கண்டதும் திகைத்து மிரண்டு போனான். திரு ராவுக்குக் கோபம் பீறிட்டது. மேஜைமேல் வைத்த துணிப் பொட்டலத்தை அவன் முகத்தை நோக்கி வீசிக் கொண்டே “என்னடா லௌடே கா பால் சிரிக்கிறே?” என்று பாய்ந்தார். துணிப் பொட்டலம் சுகுமாரனின் பிடரியில் பட்டு சிதறியது. அவன் நடுங்கிக் குனிந்தபோது அவன் காதில் பாதியும் கன்னத்தில் பாதியும் சேர்த்து ஒரு அறை விழுந்தது. “மாதர் சோத்! வேலையெ பாப்பானா சிரிச்சிட்டிருக்கான்... லௌடே கா பால்” தொடர்ந்து திட்டியபடி திரு ராவ், பாண்டுரங்க ராவ் பக்கம் திரும்பினார். அவர் திரும்புவதற்காகவே காத்திருந்தவன் போல சட்டென்றுத் தலையைக் கவிழ்த்து வேலையில் ஆழ்கிற பாவனை செய்தான் இவன். இப்படிச் செய்ததும் திரு ராவுக்கு இன்னும் ஆத்திரம் வந்தது.
“ஏய் காய் கொஸ்டியே, புத்தி நஹி பெஹ்ன் சோத்” (ஏய் என்ன பேச்சு இது! புத்தி இல்லையா பெஹ்ன் சோத்) என்று உரத்த குரலில் சத்தம் போட்டார் திரு ராவ். பாண்டுரங்கராவ் ஏதோ சமாதானம் சொல்ல வாயெடுத்தான். உடனே திரு ராவ் அவனை மறித்து, “அமி விட்சார்த்தோ (த்) கசாலா? கசாலா ரே மா....தர் சோத்?” (நான் கேட்கிறேன் எதற்கு? எதற்கடா மாதர்சோத்?) என்று முன்பை விட வேகமாகக் கத்தினார். பின் ஓரிரு வார்த்தைகளைத் தாழ்ந்த குரலில் முனகிவிட்டு மீண்டும் குரலை உயர்த்தி “புட்டா மாதர் சோத்!... புட்டா மாதர் சோத்!” (கிழட்டு மாதர் சோத்! கிழட்டு மாதர் சோத்) என்று தீர்மானமான குரலில் கூறிவிட்டு வேகமாகத் தன் நாற்காலியை அடைந்து அமர்ந்தார்.
பாண்டுரங்க ராவ் குறுகி, மடியிலிருந்த கோட்டின் கைக்குப் பட்டன் வைக்க ஆரம்பித்தான். பாண்டுரங்கராவுக்கு அறுபது வயதிருக்கும், வழுக்கைத் தலை. சென்ற மாதம் தான் பருவமடைந்த அவன் பேத்தி இறந்துபோயிருந்தாள்.
திரு ராவ் கோபம் தணியாமல் பெரிதாய் மூச்சு விட்டுக் கொண்டிருந்தார்.
கௌரி, அருகே பெட்டிக்கடை வைத்திருந்த சூப்பியிடமிருந்து அந்த வாரத்து ‘ராணி’யை இரவல் வாங்கிக்கொண்டு அப்போது தான் உள்ளே நுழைந்தாள். தன் மகளைப் பார்த்ததும் திரு ராவின் கோபம் சட்டென்று அவள் பக்கம் திரும்பியது. கடுமையான மராத்தியில் அவளை அழைத்தார். திரு ராவ் வந்துவிட்டதை அப்போதுதான் உணர்ந்த கௌரி ஒரு கணம் தயங்கி நின்றாள். பின், மெல்ல, பயந்துகொண்டே அவரருகில் சென்றாள். காட்டமான ஐந்து மராத்திக் கேள்விகளுக்கு அச்சம் கலந்த நான்கு பதில்களே வந்தன. பின் திடீரென்று ஐந்தாம் கேள்விக்குப் பதிலாக கௌரியின் கன்னத்தில் ஓர் அறை விழுந்தது. அவள் அழுதுகொண்டே விலகினாள். திரு ராவ் அவளைப் பிடிக்க முயன்றார். கௌரியின் பின்னல் திரு ராவின் கையில் சிக்கி நழுவியது. கௌரி உள்ளே ஓடினாள். திரு ராவும் அவளைத் துரத்திக்கொண்டு உள்ளே சென்றார். தொடர்ந்து கௌரியின் கதறலுடன் அவள் பிடரியிலும் முதுகிலும் விழுந்த நாலைந்து அடிகளின் சத்தம் கேட்டது.
ஒன்றுமே நடக்காதது போல் உள்ளே வந்தான் கோபிநாத்ராவ். தன் மேஜையின் மையத்திலிருந்த கத்தரிக் கோலை ஓசைபட நகர்த்தி வைத்துவிட்டு, அடுத்து வெட்ட வேண்டிய துணியை விரித்துக்கொண்டான்.
சிறிது நேரம் கழித்து ஃபோன் கிணுகிணுத்தது.
ஃபோன் செய்தவரோடு நெடுநேரம் ஒருமையில் சிரித்துப் பேசிவிட்டு வெளியே வந்தபோது திரு ராவின் கோபம் கணிசமாய் மறைந்துவிட்டிருந்தது.
இயங்கிக் கொண்டிருந்த தையல் இயந்திரங்களைத் தாண்டி அங்கொரு நிசப்தம் நிலவியது.
நான் தயங்கித் தயங்கி திரு ராவிடம் டீ குடிக்க வெளியே செல்ல அனுமதி கேட்பதற்கு மணி ஏழாகிவிட்டது. இரவுக் காட்சிக்காக நின்ற கும்பலை விலக்கித் தெருவுக்குள் இறங்கியதும் திடீரென்று ஒரு விடுதலையுணர்வு ஏற்பட்டது.
சிறிது தூரம் சென்றதும் இஸ்திரி போடுகிற நடராஜன் தலைப்பாகையோடு எதிர்ப்பட்டான். நடராஜன் படுசோம்பேறி. மனைவி, பகலெல்லாம் தோள்கள் வலிக்கத் துவைத்து சம்பாதிக்கிற பணத்தை மாலையில் இவன் குடித்துத் தீர்த்துவிடுவான். என்னைப்பார்த்ததும் சிரித்துக்கொண்டே அருகே வந்து, “ராவ் இருக்கானா?”என்று கேட்டான். திரு ராவ் எதிரில் இல்லாத சமயங்களில் அவரை ஒருமையில் அழைப்பது தான் வழக்கம். பதிலாக, நான் தலையை ஆட்டியதும் உற்சாகத்துடன் “வரட்டுமா” என்று வேகத்தைக் கூட்டி நடந்து சென்றான்.
நம்பியார் கடை ரேடியோ விவசாயிகளுக்கான நிகழ்ச்சியைப் பரப்பிக் கொண்டிருந்தது. சுவையில்லாத ஆனால் சூடான டீ தொண்டைக்குள் இறங்கியதும் சிறிது தெம்பாக இருந்தது. கடைக்குள் நிறைய பேர்களிருந்தனர். சிக்கனம் பார்க்கிற பதினெட்டு வயதுட்குட்பட்ட கடைப்பையன்களும், ஐம்பதைத் தாண்டிய கஞ்சத்தனம் பிடித்த ஜவுளிக் கடை குமாஸ்தாக்களுமே அதிகம் இருந்தனர். காரணம், மற்ற இடங்களில் பதினைந்து காசுக்கு விற்கும் டீ நம்பியார் கடையில் பன்னிரெண்டு காசு!
டீக் கடையிலிருந்து வெளியே வந்து ‘டவுன் ஹால்’ பக்கமாக நடக்க ஆரம்பித்தேன். டவுன் ஹால் அருகே ஒரு பெரிய கூட்டம் கூடியிருப்பது தெரிந்தது. கூட்டத்தின் நடுவிலிருந்து அடர்த்தியான கரிய புகை மேலே எழும்பிக்கொண்டிருந்தது. நான் வேகமாக நடக்க ஆரம்பித்தேன். கூட்டத்தை நெருங்க நெருங்க ரப்பர் எரியும் துவர்ப்பான நெடி அடிப்பதை உணர்ந்தேன். வழக்கம்போல், நரிக்குறவர்கள் டயர் துண்டுகளை எரித்துச் சோறு சமைத்துக் கொண்டிருந்தார்கள்.
அரை வட்டமாகச் சுற்றி நின்ற கூட்டத்தின் நடுவே இரண்டு போலிஸ்காரர்கள் குறவர்களை அசிங்கமான வார்த்தைகளால் திட்டிக் கொண்டே பிரம்பால் அடித்துக்கொண்டிருந்தார்கள். குறவர்கள் அடிக்குப் பயந்து பதறிப் பதறி இங்குமங்கும் ஓடிக் கொண்டிருந்தார்கள்.
சாக்கடை விளிம்பிலிருந்து சற்று விலகி, காய்ந்த மலங்களினூடே மூன்று கற்களாலான அடுப்புகளின் மேல் சிறிய சிறிய சட்டிகளில் சோறு வெந்துகொண்டிருந்தது. இதுவரை எப்படியோ அவற்றைக் கவனிக்கத் தவறிய போலிஸ்காரன் ஒருவன் அதைக் கவனித்துவிட்டான். மறுகணம் சட்டிகளை எட்டி உதைத்தான் அவன். ஒரு குரூரமான உற்சாகத்துடன் அவன் அதைச் செய்தான். சட்டிகள் உருண்டு சாக்கடைகளில் விழுந்தன. உடைந்த ஒரு சட்டியின் பகுதி மட்டும், சோறு வழிய சாக்கடை விளிம்பிலேயே நின்றுவிட்டது. அதைக் கண்ட மற்றவன் அதையும் எட்டி உதைத்துச் சாக்கடையில் தள்ளினான். கூட்டம் நிதானமாக வேடிக்கை பார்த்தது.
குறவர்களைக் குறித்த சில அடிகள் தப்பி அவர்களின் சிறிய குழந்தைகளின் மீதும் விழுந்துகொண்டிருந்தன. கதறிக்கொண்டிருந்த குழந்தைகளுடன் குறத்திப் பெண்களும் ஓலமிட்டு அழுதுகொண்டிருந்தார்கள்.
ஓரிரு நிமிடங்களுக்குப் பின் சட்டிகளை எட்டி உதைத்தவன் எதையோ சாதித்து விட்ட களைப்பில் திரும்பினான். கூட்டத்தைப் பார்த்ததும் அவனுக்கு மீண்டும் கோபம் வர ஆரம்பித்தது. அவன் திட்ட ஆரம்பிப்பதற்கு முன் நான் விலகி நடந்தேன்.
கடைக்குத் திரும்பியபோது திரு ராவ் உற்சாகமாக ஒரு வாடிக்கையாளரிடம் சிரித்துப்பேசிக்கொண்டிருந்தார். தவிர, இன்னும் பல வாடிக்கையாளர்கள் வந்து போனதற்கான தடயங்கள் காணப்பட்டன. பத்மநாத் ராவ் ஒரு சட்டை காலரின் உட்பக்க தையலை முடித்து விட்டு அதை வெளிப்பக்கம் உதறலுடன் திருப்பி நிமிர்ந்தான். என்னைப்பார்த்ததும் பற்களைக் காட்டிச் சிரித்தான். கூலிக்கான பணம் வசூலியாகியிருக்க வேண்டும்.
எனக்கும் சற்று நிம்மதியாக இருந்தது.

மணி ஒன்பதரை.
தரையில் அமர்ந்து வேலை செய்வதற்காக காலையில் விரித்த ‘காடா’ துணியை பாண்டுரங்க ராவ் உதறி மடிக்க ஆரம்பித்தான். நான் என் மேஜைக்குச் சென்றமர்ந்து ஒவ்வொருவார் கணக்கையும் சரிபார்த்து வைத்துக் கொண்டேன். பின் சொல்ல ஆரம்பித்தேன். வழக்கம் போல கூலி பட்டுவாடா நடைபெற்றது.
திரு ராவ் ஒவ்வொரு முறையும் பாக்கெட்டிலிருந்துப் பணத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துக் கொடுக்க ஆரம்பித்தார். தன் பாக்கெட்டில் எத்தனை ரூபாய் இருக்கிறது என்று யாருக்கும் தெரிந்துவிடக் கூடாது என்பதில் மிக நாட்டம். அனாவசியமாக இக்கூலிப்பட்டாளத்தின் முன்னே பணத்தைப் பிரஸ்தாபித்து அதன் விளைவாக இவர்கள் முன்பணம் கேட்கத்தூண்டப்பட்டு, கேட்டுப் பின் ஏமாந்து, (தன்னை) சபித்துச் சோர்ந்து திரும்புகிற அவஸ்தையில் ஆழ்வதைத் திரு ராவ் என்றுமே விரும்புவதில்லை.
ஒரு சில நிமிடங்களில் எல்லோரும் கூலியைப் பெற்று கிளம்பினார்கள். அதிர்ஷ்டவசமாக பத்மநாத் ராவ் மட்டும் இருபது ரூபாய் முன்பணத்தை எப்படியோ பெற்றுக் கொண்டான்.
நானும் திரு ராவும் தனிமையில் விடப்பட்டோம்.
ஒரு சில கணங்களின் யோசனைக்குப் பின் திரு ராவ் என்னைப் பார்த்து “நீ திங்கட்கிழமை வாங்கிக் கொள்கிறாயா?” என்று இந்தியில் கேட்டார். அம்மாவின் சிவந்த மூக்கு ஞாபகம் வர எனக்கு வயிற்றைக் கலக்கியது. நான் தாழ்ந்த குரலில் ”நாளை ரேஷன் வாங்க வேண்டும்” என்றேன். மீண்டும் யோசனையில் ஆழ்ந்தார் திரு ராவ். சிறிது நேரத்துக்குப் பின் தன் பாக்கெட்டிலிருந்த மொத்தப் பணத்தை வெளியே எடுத்தபடியே கறாரும் அலட்சியமும் கலந்த குரலில் “வீட்டில் ஏதாவது பணம் தேவையா என்று கேட்கிறேன். தேவையில்லை என்றால் உனக்குத் தருகிறேன். அல்லது நீ திங்கட்கிழமைதான் வாங்கிக் கொள்ள வேண்டும்” என்று கூறி லக்ஷ்மிபாய்க்குக் குரல் கொடுத்தார்.
லக்ஷ்மிபாய்க்கு நூறு ரூபாய் தேவைப்பட்டது. திரு ராவ் பணத்தை எண்ணிப்பார்த்தபோது அதில் எழுபத்தைந்துரூபாய்தான் இருந்தது. அறுபது ரூபாயை லக்ஷ்மிபாயிடம் கொடுத்து பின் மராத்தியில் ஏதோ கூறினார். “பதினைந்து ரூபாய் தான் இருக்கிறது. நாளை எனக்கு செலவுக்கு வேண்டும். நீ திங்கட்கிழமை வாங்கிக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை” என்று கூறிவிட்டு நாற்காலியில் சென்று அமர்ந்தார். நான் நிராசையுடன், கடைசியாக மூட வேண்டிய கதவை மூட முனைந்தேன்.
என்னையே வெறித்துக்கொண்டிருந்த திரு ராவுக்குத் திடீரென்று ஒரு யோசனை தோன்றியது. “நாளைக் காலை ஏன் நீ காலேஜுக்குச் சென்று கோட்டுகளை டெலிவரி செய்து விட்டு வரக்கூடாது? பணம் வந்தால் நீயும் எடுத்துக் கொள்ளலாம். எனக்கும் உபயோகமாக இருக்கும்”. இதைக் கூறியவுடன் என் மனத்திற்குள் நம்பிக்கை, பொறியாய்த் துவங்கித் தீயாய் வியாபித்தது. நான் ஆர்வத்துடன் பலமாகத் தலை ஆட்டி அதை ஏற்றுக் கொண்டேன். “நேரமாகிவிட்டது. கோட்டுகளை நாளைக் காலை வந்து ‘பாக்’ செய்துகொள்ளலாம்” என்று திரு ராவ் கூறிக்கொண்டிருக்கும்போது “என்னா.....ராவ்” என்று உற்சாகத்துடன் கூவிக்கொண்டே உள்ளே நுழைந்தார் எதிர்க் கொட்டகை மானேஜர் ராமநாதன். ராமநாதன் வந்தால் அன்று விசேஷம் தான்.
விரல்களிலிருந்த மோதிரம் மின்ன வெள்ளை வேட்டியும் சட்டையும் உடுத்தியிருந்த கொட்டகை மானேஜர் ராமநாதன் சொகுசு மாப்பிள்ளை! கொட்டகை, நகைக்கடை வைத்திருக்கும் அவர் மாமனாருக்குச் சொந்தமானது. தன் சொத்தை முழுவதும் கிண்டியில் ஓடிய நத்தைகளாய்ப்பார்த்து பந்தயம் கட்டித் தீர்த்துவிட்டு, இருபது வருஷமாய் இந்தப் புளியங்கொம்பைக் கெட்டியாய்ப் பிடித்துக் கொண்டிருக்கிறார் ராமநாதன். அவர் மனைவிக்கு உடம்பெல்லாம் வெண்குஷ்டம்.
திரு ராவும் ராமநாதனும் நெடுநாள் ஸ்நேகம். ஒரே தம்ளரில் பட்டை அடிப்பார்கள். ஒரே பொம்பளையுடன் படுத்துக் கொள்வார்கள். கொட்டகையில் புதிய திரைப்படங்கள் வெளியாகும் சந்தர்ப்பங்களில், திரு ராவ் கடையில் தொழில் மந்தமாக இருந்தால் முதல் வாரம் முழுதும் காட்சிக்கு 25 டிக்கெட்டுகளைத் தந்துவிடுவார் ராமநாதன். நானும் நடராஜனும்தான் கூட்டத்தோடு கூட்டமாய் நின்று, ஒன்று தொண்ணூறை ஒன்பது ரூபாய்க்கு விற்றுவிட்டு வருவோம். நடராஜன் எம்டன்! அடிக்கிற சுங்கிடியைத் தவிர திரு ராவிடம் டிக்கெட் ஒன்றுக்கு எட்டணா வாங்கிவிடுவான்.
விடைபெற்றுக்கொள்ள திரு ராவின் முன் சென்று நின்ற போது ராமநாதன் என்னைப் பார்த்து லேசாக முறுவலித்தார்.
“போகிற வழியில் அப்படியே கொஞ்சம் நடராஜனை வரச் சொல்லிவிட்டுப் போ” என்று கூறிய திரு ராவ் “மாணவர்கள் சினிமா பார்க்க, அங்கே இங்கே கிளம்பிவிடுவார்கள். காலை ஆறு மணிக்கே புறப்பட்டால்தான் அவர்களைப் பிடிக்க முடியும்” என்று எச்சரித்தார். நான் தலையாட்டிவிட்டு வெளியே வந்தேன்.
நடராஜனின் வீடு டோபி-கானாவில் இருந்தது. சிறிய வீட்டிற்குள் நுழைந்தபோது சிம்னி விளக்கின் ஒளியில் பெரிய நிழலோடு கிடந்தான் அவன். என்னைப் பார்த்ததும் எழுந்து வரவேற்றான். நல்ல வேளை! சுவாதீனமாகவே இருந்தான். நான் விஷயத்தைக் கூறிவிட்டுத் திரும்பி நடந்தேன்.
தியாகராஜ புதுவீதியை அடைந்ததும் “பாவா கெண்ட என்த்த” என்ற தெலுங்குக் குரல் வரவேற்றது. யாருக்காகவோ தெருவில் காத்திருந்த பெண்தான் யாரிடமோ கேட்டாள். மணி பத்தரை ஆகிவிட்டிருந்தது.
கதவு வெறுமனே சாத்திக் கிடந்தது. அம்மா ‘அகண்ட் ஆனந்த்’ (மத சம்பந்தமான குஜராத்திப் பத்திரிக்கை) படித்தபடியே கண்ணாடியுடன் உறங்கிப் போயிருந்தாள். நான் குனிந்து கண்ணாடியைக் கழற்றி ஓரமாக வைத்தேன். அம்மா குழந்தையைப் போல் படுத்துக் கிடந்தாள். கண்கள் குழிவிழுந்து, கன்னங்கள் ஒட்டிப் போய், சதை தளர்ந்து சிதைவுற்றுப் போயிருந்தது முகம். நெற்றியில் மெலிதான ரேகைகளாய்ச் சுருக்கங்கள் விழுந்துகொண்டிருந்தன. இளம் வயதில் அடர்த்தியாய் சுருள்சுருளாய்த் ததும்பி வழிந்த கேசம், இப்போது களைத்துப் படிந்துவிட்டிருந்தது. காதோரங்களில் நரை கண்டுவிட்டது. வயதாகிவிட்டது. ஆமாம். அம்மாவுக்கு வயதாகிவிட்டது. எத்தனை நாட்கள்; எத்தனை வருடங்கள். வருடங்களை அவள் தின்றுவிட்டிருந்தாள்; வருடங்கள் அவளைத் தின்றுவிட்டன.
முகம் கழுவிவிட்டு வந்தபோது அம்மா எழுந்து உட்கார்ந்து கொண்டிருந்தாள்.
வாரக்கூலி கிடைக்கவில்லை என்று அறிந்தபோது ஆவேசமாய், திரு ராவின் குடும்பத்திற்கே சாபம் கொடுத்தாள் அம்மா. பின் குழம்பிப் போய் மௌனமானாள்.
அம்மாவின் சீற்றம் இப்படி ஒரே வரியில் வெளிப்பட்டு அடங்கிவிட்டது எனக்கு நிம்மதியாயிருந்தது. ஓரிரு கணங்கள் நிசப்தத்தில் கழிந்தன. ஒருவேளை விஷயம் இன்னும் உறைக்கத் துவங்கவில்லையோ என்று நான் நினைத்துக் கொண்டிருக்கும்போதே “ராஸ்கல், நாளை உன் அப்பாவுக்கு திவசத்தை வைத்துக் கொண்டு வெறும் கையோடு வந்திருக்கிறாயே! வெட்கமாக இல்லையா நாயே” என்று நான் கூறிய செய்தியை நம்ப மாட்டாவளாய் பரபரப்போடு எழுந்து கையை ஓங்கிக் கொண்டே என்னை நோக்கி திடீரென்று ஓடி வந்தாள் அம்மா. பிறகு, ஓங்கிய கையை மடக்க மறந்து தமிழும் குஜராத்தியும் கலந்த மணிப்பிரவாளத்தில் திட்ட ஆரம்பித்தாள். ஒவ்வொரு வாக்கியத்திற்குமிடையே ஓரிரு கணங்கள் இடைவெளி விட்டு விட்டுக் குரலை உயர்த்தி உயர்த்தித் திட்டினாள்.
வசவுகளை மட்டுமே மனத்தில் கொண்டு ஆத்திரத்தில் ஆரம்பித்துவிட்ட அநேக வாக்கியங்களை முடிக்க முடியாமல் திணறிய போதெல்லாம் என்னையும் சபித்தாள். நான் பொறுமையோடு கேட்டுக் கொண்டிருந்தேன்.
அம்மாவின் வசைப்பாட்டில் உள்ளடக்கமாய்த் திரு ராவ் இருந்தாலும் உருவாக நாளை வர இருந்த பிராமணரே திகழ்ந்தார். பிராமணர் தமிழர்தான். குஜராத்தி பிராமணர்களை அழைப்பது கைக்கு மீறிய காரியம். சோறு போட்டு ரூ 5.25 தட்சிணை தவிர ஒரு மேல் துண்டாவது தர வேண்டும். சலவன் வீதியில் வியர்வை வழியும் கறுத்த வெற்றுடம்புடன் திண்ணையில் அமர்ந்து மலிவான பேச்சுப்பேசி மகிழும் தரித்திரம் பிடித்த தமிழ் பிராமணனே போதும் என்று முடிவுசெய்து பல வருடங்கள் ஆகிவிட்டது இந்த வீட்டில். வாக்குக் கொடுக்கப்பட்ட அந்த பிராமணர் நாளை வந்து எப்படி இந்த நிலைமையை எதிர்கொள்வார் என்று கற்பனை செய்த போது வேடிக்கையாகவும் வருத்தமாகவும் இருந்தது.
ஒரு சில நிமிடங்களுக்குப் பின் கடை சைக்கிளை ஓசைப்படாமல் சாத்தி வைத்துவிட்டுத் திடீரென்று உள்ளே நுழைந்தான் தம்பி. அவன் வந்ததும் ஒரு கணம் மௌனமாய் இருந்துவிட்டு, அவனுக்கும் விஷயம் தெரியட்டும் என்று, கோபத்துடன் “நாளைக்கு நீங்களும் மண்ணைத் தின்னுங்கள்! வருகிறவனுக்கும் மண்ணைப் போடுங்கள்” என்றாள்.
தம்பியின் முகத்தில் திடீரென்று படர்ந்த திகைப்பையும் உற்சாகமின்மையையும் பார்த்த அம்மா தனது ஆற்றாமை குறைந்தவளாய் சீரான மூச்சு விட்டுக் கொண்டு, அர்த்த புஷ்டியான மௌனம் அனுஷ்டித்துக் காத்திருந்தாள்.
விஷயத்தை ஓரளவு புரிந்துகொண்ட தம்பி அதை ஊர்ஜிதப்படுத்திக்கொள்ள என்னைக் கலவரத்துடன் பார்த்தான். பின் தயங்கி “உன் முதலாளி பணம் தரவில்லையா?” என்று கேட்டான். நான் தலையை ஆட்டிப் பதிலைச் சொன்னதும் அவன் முகம் வாட ஆரம்பித்தது. அம்மா தன் கோபத்தைப் பகிர்ந்துகொள்ளவும் நியாயப்படுத்தவும் இன்னுமொரு ஆள் கிடைத்தான் என்று சில கணங்களாகத் தேக்கி வைத்த குரோதத்துடன் மீண்டும் வெளிப்பட்டாள். “அவன் எப்படி வாங்கிக்கொண்டு வருவான்? அந்த பாழாய்ப்போன ராவுக்குப் பாடை கட்டிய பிறகுதான் வாங்கிக்கொண்டு வருவான். சூதாடி நாய்! குடிகார நாய்!” அம்மா பேசிக்கொண்டே இருந்தாள்.
அவனையே உற்றுக்கவனித்துக் கொண்டிருந்த தம்பி திடீரென்று, “லெக்சர் போதும், நிறுத்து இனி” என்று உறக்கக் கத்தி அவளை அடக்க முயன்றான். அம்மா அடங்கவில்லை. மாறாக, “நான் பேசுவதை லெக்சர் என்றா சொல்கிறாய் நாயே” என்று அவன் பக்கம் பாய்ந்தாள். தம்பி சும்மா இருக்கப் பழகி இருந்தான்.
ஒருவாறாக அம்மாவின் ஓலம் அடங்கி கீழ்ஸ்தாயியில் அவள் பொரும ஆரம்பித்த பிறகுதான் வெகுநேரமாய் ஒரே இடத்தில் நின்றுவிட்டிருந்ததை நான் உணர்ந்தேன்.
லுங்கியை உடுத்திக்கொண்டு சமையற்கட்டின் விளக்கைப் போட்டான் தம்பி.
அப்போது ஏறக்குறைய தனக்குத்தானே பேசிக்கொண்டிருந்த அம்மா பேச்சோடு பேச்சாகக் குரலை உயர்த்தி, “இந்த லட்சணத்தில் உன் அக்கா மூங்கில் குருத்தையும் வாங்கிக்கொண்டு வந்து போட்டு விட்டாள், நாளை குழம்பு வைக்க!” என்ற செய்தியையும் சொல்லி வைத்தாள்.
சட்டென்று எங்கள் இருவரின் பார்வையும் சுவரில் மாட்டியிருந்த பைக்குள் ஒளிந்துகொண்டிருந்த மூங்கில் குருத்துகளின் மேல் விழுந்தது. நான் உடனே போய் அதை எடுத்துப் பார்த்தேன். நன்றாகத்தான் இருந்தன. பசுமையாய்!.
மூங்கில் குருத்துகள் அப்பாவின் நண்பர் நாயகத்தின் எஸ்டேட்டில் நிறைய விளைந்தன. கத்தரிக்காயின் மழமழப்போடு, வாழைக்காயின் மதர்ப்போடு, தாவரங்களின் முரட்டு மனம் கமழ, ஊறிய குழம்பு பீறிட்டு, அவை மொளுக் மொளுக் என்று தொண்டைக்குள் இறங்கும் போகமே அலாதி தான். பருப்புச் செலவு இல்லாமல் குழம்பு வைத்துவிடலாம் என்பதோடு சாப்பிடும்போது ஏதோ ஒரு வித்தியாசமான உணவைச் சாப்பிடுகிறோம் என்கிற பெருமிதம் உபரி. மூங்கி குருத்துக் குழம்பு எல்லோருக்கும் பிடித்த ஒன்று. குறிப்பாக அப்பாவுக்கும் அம்மாவுக்கும். எதேச்சையாக அப்பா இறந்த தினத்தன்றும் அம்மா மூங்கில் குருத்தையே சமைத்திருந்தாள். அப்பாவின் திவசத்தன்று தவிர மற்ற நாட்களில் அம்மா அதைச் சாப்பிட மாட்டாள்.
அம்மா சுவரையே வெறித்துக் கொண்டிருந்தால். அவளது மூக்கிலும் காதுகளிலும் லேசாகச் செம்மை படர்ந்திருந்தது. அவள் மூச்சிலும் ஒரு தீவிரம் தலைப்பட்டது. இன்னும் ஓரிரு கணங்களில் அவள் அழக்கூடும். அம்மா செருமி, திடீரென்று அதிகம் சப்திக்காத, வதைக்கும் விசும்பல்களுடன் அழுதாள்.
மூங்கில் குருத்தை இந்த வருஷமும் அம்மா சாப்பிட மாட்டாள் என்று நினைத்தபோது ரொம்பவும் அபத்தமாகப் பட்டது.
சிறிதுநேரம் அழுதபின்பு சேலையால் முகத்தைத் துடைத்துக் கொண்டு தீர்மானமாக எழுந்தாள். முகத்தில் படிந்த கலவரத்தை விழுங்கித் தின்றுவிட்டு, கண்களில் ஒரு விவேகமிக்க சோகத்தைத் தேக்கிக்கொண்டிருந்தாள் அவள்.
நான் பையை மாட்டிவிட்டுச் சமையல் கட்டிற்குள் நுழைந்தேன். அம்மா அந்த வாரத்தின் கடைசிச் சோற்றைப் பரிமாறினாள்.
இரவு வெகுநேரம் கழித்துத் தம்பி இருட்டிலிருந்து ஏதோ பேசினான். அம்மா தூக்கமும் களைப்பும் பாரித்த குரலில், “வீட்டுக்காரியிடம் இரண்டு ரூபாய் கைமாத்து வாங்கித் தருகிறேன். காலையில் பிராமணன் வந்ததும் ‘கிருஷ்ணா மந்தி’ரில் அளவுச் சாப்பாடும் ஒரு ஸ்வீட்டும் வாங்கிக் கொடுத்துவிட்டு வந்துவிடு, அடுத்த வருஷம் வீட்டிலேயே சாப்பிட வைக்கலாம்” என்று கூறிவிட்டுத் திரும்பிப் படுத்துக்கொண்டாள்.
தெருவில் இருளையும் அமைதியையும் நேர்க் கோட்டில் கிழிக்கிற மாதிரி நீளமாய் ‘விசில்’ ஊதிச் சென்றான் பாராக்காரன்.
மறுநாள் காலை வீட்டைவிட்டுக் கிளம்பிய போதே ஆறேகால் ஆகிவிட்டது. வீட்டுக்காரச் செட்டிச்சி மஹா கறார்க்காரி! வாங்கப் போகும் இரண்டு ரூபாயை மதியம் வந்ததும் கொடுத்துவிட வேண்டும் என்ற ஷரத்து விதித்து அனுப்பினாள் அம்மா.
நவாப் ஹகீம் ரோடு வழக்கத்தை விட ரொம்பவும் அமைதியாய் இருந்தது. ‘முபாரக் டீ ஸ்டாலி’ன் முன்பெஞ்சில் அமர்ந்து ‘டீ’யைச் சப்தத்துடன் உறிஞ்சிக் குடித்துக் கொண்டிருந்த தாடிக்கார சாயபுகள், டீக்கடை ரேடியோவின் சன்னமான நாதஸ்வர முனகல், பின்னால் குறுகி நீள்கிற தெரு, மூடிய கடைகள், அப்பால் கிழக்கில் உதித்த சூரியனின் சாயலில் நீலம் மின்ன ஆரம்பித்திருந்த வானம். வெண்மையான மேகங்கள். ஒலியெழுப்பி மறையும் காகங்கள், குருவிகள். எல்லாம் ரம்மியமாகத்தான் இருந்தன. இரைச்சல் மிக்க கசப்பான யதார்த்தங்களிலிருந்து இன்று தெருவுக்கே விடுமுறை.
டீக்கடையைப் பார்த்ததும் டீ குடிக்கவேண்டும் போல தோன்றியது. பாக்கெட்டிலிருந்த பதினைந்து பைசாவுக்கு ஏற்கனவே திட்டமிட்டபடி இரண்டு சிகரெட்டா அல்லது சிங்கிள் டீயா என்ற சின்ன மனப் போராட்டத்தில் ஈடுபட்டு, கடைசியில், ஜெயித்த சிகரெட்டைப் பற்றவைத்துக் கொண்டு நகர்ந்தேன்.
‘ஐந்துமுக்கு’ சந்திப்பை அடைந்தபோது ஓரிரு கசாப்புக் கடைகள் திறந்திருந்தன. உயிரும் தோலும் உரிக்கப்பட்ட ஆடுகள் மாமிசப் பிண்டங்களாகக் கால்களுடன் வெளியே தொங்கிக் கொண்டிருந்தன. உள்ளே சிறிய சிவப்பு விளக்கு பதிக்கப் பெற்ற கடவுள் படத்தின் கீழ் ஊதுபத்திகள் எரிந்துகொண்டிருந்தன. குருதியின் பச்சை நெடி அந்த இடமெங்கும் படர்ந்திருந்தது.
கொட்டகை வாசலில் தரை, பெஞ்சு டிக்கட்களுக்காக இப்போதே மனிதர்கள் குழுமிவிட்டார்கள். அநேகமாக எல்லோரும், கண் விழித்துக் களைத்துப் போய் அரைத்தூக்கத்தில் இருந்தார்கள். இரண்டு வரிசைகளாகத் தவளைகள் போல் நெருக்கமாக அணிவகுத்து அமர்ந்திருந்தார்கள்.
தெருஇவிலிருந்து பார்த்தபோது கடையின் ஒரு கதவு திறந்திருப்பது தெரிந்தது. லக்‌ஷ்மிபாய் விழித்திருக்க வேண்டும். நான் அவசர அவசரமாக மாடிப்படிகளில் ஏறினேன். இரண்டாவது படியில் வலது காலை வைத்ததும் பாதத்தில் ஏதோ குறுகுறுத்துக் குழைவது போல் தோன்றியது. மலம்! நான் உணர்ந்து குனிவதற்குள் விரலிடுக்களிலிருந்து பிதுங்கி காலெங்கும் அசிங்கமாகிவிட்டது. ஒரு கணம் தயங்கி, பின் மேலே ஏறினேன். மற்ற படிகளும் அசிங்கமாவதைத் தவிர்க்க முன்பாதத்தைத் தரையில் படாமல் உயர்த்திக் குதியை மட்டும் பதித்துப் பதித்து நடந்து கதவை அடைந்தேன். உள்ளே “லட்டு” வெற்றுடம்போடு திரிந்து கொண்டிருந்தாள். மலம் கழித்ததற்கான அடையாளங்கள் அவள் புட்டத்தில் இருக்கின்றனவா என்று தேடினேன். நிறைய இருந்தன.
லக்‌ஷ்மிபாய் உள்ளே உட்கார்ந்து அடுப்பு ஊதிக்கொண்டிருந்தாள். மலம் அப்பிய என் காலைப் பார்த்துக்கொண்டே அவளை அழைத்தேன். அவள் காதில் அது விழவில்லை. நான் மீண்டும் அழைத்தேன். அதுவும் அவள் காதில் விழவில்லை. நான்காவது முறை அவளைக் கூவி அழைத்தபோது தான் அவள் ஒருபக்கச் செவிடு என்பது எனக்கே ஞாபகம் வந்தது. உடனே எனக்கு திரு ராவின் கழுத்தை நெரித்துவிட வேண்டும்போல் தோன்றியது.
எதற்காகவோ கதவுப் பக்கம் திரும்பிய லக்‌ஷ்மிபாய் என்னைப் பார்த்ததும் தலையை ஆட்டி பற்கள் தெரிய சிரித்தாள். பின் மீண்டும் அடுப்பு ஊத திரும்பிக்கொண்டாள். ‘லட்டு’ என்னையும் தன் தாயாரையும் மாறிமாறிப் பார்த்து வியந்து சிரித்துக்கொண்டு நின்றாள். நான் காலைப் பார்த்துக்கொண்டு நின்றேன்.
ஓரிரு நிமிடங்கள் கழித்து ஒருவாறாக விறகு எடுக்க வெளியே வந்தபோது லக்‌ஷ்மிபாய் கால் கழுவ தண்ணீர் கொடுத்தாள். ‘லட்டு’வை ஒரு கிள்ளும் கிள்ளி வைத்தாள் கோபத்துடன்.
திரு ராவ் ‘கட்டிங் டேபி’ளின் மேல் உறங்கிப் போய்விட்டிருந்தார். அருகே பட்டை அடித்ததின் ருசுக்களாக சோடா பாட்டில்கள் இருந்தன.
நான் வேகமாகக் கோட்டுகளை மடித்துக் காகித உறைகளில் போட்டுக்கொண்டேன். மொத்தம் ஒன்பது தேறின. எல்லாம் கம்பெனிக் கோட்டுகள். அதிகம் இல்லாவிட்டாலும் நல்ல கணம். லக்‌ஷ்மிபாயிடம் ஒரு ரூபாயை பஸ்ஸூக்காக வாங்கிக் கொண்டு புறப்பட்டேன். நான் வாசற்படிகளைக் கடந்ததும் அவள் கழுவ ஆரம்பித்தாள்.
வழக்கமாக இந்தக் கோட்டுகளுக்கான முழுப் பணத்தைக் கல்லூரி நிர்வாகமே வசூலித்துவிடும். ஆனால் இந்தத் தொகைக்கு ஏற்றார்போல் தையல் தரமும் சுமாராகவே இருக்கும். கோட்டுகளின் உள்ளே இடப்படும் உள்துணி மலிவானதாய் இருக்கும். இதை விரும்பாத மாணவர்கள் தனியே பத்து ரூபாய் கொடுத்து உயர்ந்த ரக உள்-துணையைப் போட்டுக்கொள்ளலாம். இந்தக் கோட்டுகள் அனைத்தும் ‘சாட்டினை’ உள்-துணியாகக் கொண்டவை. மொத்தம் தொண்ணூறு ரூபாய் வசூலாகும். நான் எனது பதினைந்து ரூபாயை அசைபோட்டுக்கொண்டு நடந்தேன்.
கல்லூரி, நகரத்திலிருந்து சுமார் நான்கு மைல்கள் தள்ளியிருந்தது. ஊரின் மையத்தைக் கடந்ததும் சாலையோரங்களில் பசுமை காண ஆரம்பித்தது. பசுக்கள் பின் தொடர வெற்றுடம்போடு நடந்த பால்காரர்கள், சிறுவர்கள், வயலில் வேலை செய்த பெண்கள்... எல்லாம் ரொம்பவும் இயல்பாக இயங்குவது போல் இருந்தது. பஸ்ஸில் டிரைவரும் கண்டக்டரும் கூட பரபரப்பற்று நிதானமாகவே காணப்பட்டார்கள். முழுதாய் விடிந்துவிட்டால் எல்லோரும் மாறிவிடுவார்கள்!
அந்தப் பொறியியல் கல்லூரியின் மாணவர் விடுதி. பின் கட்டில் இருந்தது. கல்லூரியின் முன்புறக் கட்டடத்தை ஒட்டி நீண்ட பாதை தெருவிலிருந்து சுமார் இரண்டு பர்லாங்கு இருக்கும். பஸ்ஸை விட்டு இறங்கியதும் நான் பாக்கெட்டிலிருந்த மற்ற சிகரெட்டைப் பற்ற வைத்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தேன். கல்லூரி அரவமற்று அமைதியாய்க் கிடந்தது.
பாதித்தூரம் சென்றபின் காக்கிச் சட்டையணிந்த தோட்டக்காரன் பதறியபடி “சிகரெட்டைக் கீழே போடுய்யா” என்று கோபமாக என்னை நோக்கி சிறிய அடிகள் எடுத்து ஓடிவந்தான். நான் பயந்து போய் சிகரெட்டைக் கீழே போட்டு அணைத்தேன். நான் கடந்து செல்லும் வரை இடையில் கைகளை வைத்து என்னையே வெறித்துக்கொண்டு அசையாமல் நின்றான் அவன். சிறிது தூரம் சென்று திரும்பிப் பார்த்தபோது அவன் மீண்டும் குனிந்து வேலை செய்து கொண்டிருந்தான்.
விடுதி, ஒரு பெரிய மைதானத்தைச் சுற்றி, நான்கு பிரம்மாண்டமான கட்டடங்களாக நின்றது. ஒவ்வொரு கட்டடத்திலும் நூற்றியெண்பது விசாலமான அறைகள் இருந்தன. மைதானத்தின் மையத்தில் நாலைந்து மாணவர்கள் கிரிக்கெட் பயிற்சி செய்துகொண்டிருந்தார்கள். அமைதியாக இருந்ததால் அவர்கள் கீழ்ஸ்தாயியில் பேசுவதைக் கூட கேட்க முடிந்தது. வேறு சில மாணவர்கள் மைதானத்தைச் சுற்றி ஓடிக்கொண்டிருந்தார்கள். எல்லோரும் மெதுவாகவே ஓடிக்கொண்டிருந்தார்கள். ஒரு மாணவன் மட்டும் ஆழ்ந்த சுயபிரக்ஞையோடு, கோபித்துக்கொண்டு ஓடிப்போன நாயகியைத் துரத்தி ஓடும் தமிழ்ப் படக் கதாநாயகனைப் போல் கால்களை உதறி உதறி ஓடிக்கொண்டிருந்தான்.
‘ஏ’ ப்ளாக்கில் சீதாராமனும் ஹரிஹர கிருஷ்ணனும் இருந்தார்கள். சீதாராமன் அறை பூட்டி இருந்தது. இரண்டாவது மாடியிலிருந்த 132இல் இருந்த ஹரிஹர கிருஷ்ணனுக்குப் பதிலாக, கண்ணாடியுடன் பனியன் வேட்டி அணிந்துகொண்டு ஒரு மாணவன் மும்முரமாகப் படித்துக்கொண்டிருந்தான். ஹரிஹர கிருஷ்ணன் ஊருக்குப் போயிருந்தான்.
‘சி’யில் யாருமில்லை. ‘டி’யில் மூன்று பேர். ‘பி’யில் கிருஷ்ணகிரி என்ற ஒருவன், மற்றவர்கள் இந்தக் கட்டடங்களுக்குப் பின்னாலிருந்த ‘பழைய விடுதி’யில் இருந்தார்கள். ‘டி’ பிளாக் சலனமற்று இருந்தது. இரண்டு மாடிகளை ஏறி இறங்கியதுதான் மிச்சம். எல்லோரும் டவுனுக்குப் போய்விட்டிருந்தார்கள். படிகளில் இறங்கும்போது இரண்டு மாணவர்கள் கையில் ‘குமுதம்’ சகிதமாக எதிர்ப்பட்டார்கள். என் கையிலிருந்த பாக்கெட்டுகளைப் பார்த்து ஒருவன், “என்னப்பா டிரை கிளீனர்ஸா” என்று அசிரத்தையாய்க் கேட்டான். நான் பதில் சொன்னதும், மற்றவன் சம்பந்தமில்லாமல் விசில் அடிக்க, இருவரும் என்னைக் கடந்து சென்றார்கள்.
கிருஷ்ணகிரியின் அறையில் நாலைந்து மாணவர்கள் லுங்கி அணிந்து கட்டிலில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். நான் கதவை இருமுறை தட்டி உள்ளே நுழைந்ததும் பேசுவதை நிறுத்திக்கொண்டார்கள். நான் சுபாவமாகத் தோன்றிய ஒரு மாணவனின் முகத்தைப் பார்த்து விஷயத்தைக் கூறினேன். அவன் நான் சொல்லி முடித்ததும் ஒரு கணம் யோசித்தான். பின், “அவன் தூங்கறாம்பா” என்று தயங்கினான். நான் அப்போது தான் கவனித்தேன். கட்டிலின் சுவரோரப் பகுதியில் நீள மூட்டையாய் உறங்கிக்கொண்டிருந்தான் கிருஷ்ணகிரி. ஒரு மாணவன் கிருஷ்ணகிரியை எழுப்ப யோசனை கூறினான். மற்றவன் அதை மறுத்தான். நான் அமைதியாக யோசித்துக்கொண்டு நின்றேன். அதற்குள் ஒருவன் கிருஷ்ணகிரியை இடைக்குக் கீழே பக்கவாட்டில் அடித்து எழுப்பினான். கிருஷ்ணகிரி முனகிக்கொண்டு திரும்பிப் படுக்க ஆரம்பித்தான். எழுப்பிக்கொண்டிருந்தவனோடு மற்ற இரண்டு பேர்களும் சேர்ந்து உற்சாகத்துடன் கிருஷ்ணகிரியின் துயில் கலைப்பதில் முனைந்தார்கள்.
இவர்கள் அவனது போர்வையை இழுத்தவுடன் கிருஷ்ணகிரி பதறிக்கொண்டு எழுந்தான். நழுவியிருந்த லுங்கியைக் கட்டிக்கொண்டே மற்றவர்களைத் திட்ட வாயெடுத்தவன் என்னைப் பார்த்ததும் மௌனமாகித் திகைத்தான். கிருஷ்ணகிரி ரொம்பவும் மெலிந்து காணப்பட்டான். முதல் சவரம்கூடப் பண்ணாத முகத்துடன், ஒரு குழந்தையைப் போல இருந்தான். துறுதுறுவென்று நேசிக்கும் சிறிய கண்கள். நான் ‘குட்மார்னிங் சார்’ என்று பேச்சைத் துவங்கினேன். நிதானமாக எல்லாவற்றையும் கேட்டுவிட்டுத் தன்னிடம் பணம் இல்லை என்றும் புதன்கிழமை தானே வந்து பெற்றுக்கொள்வதாகவும் கூறினான்.
பழைய விடுதியின் முற்றத்திலேயே பல் துலக்கிக்கொண்டிருந்தார்கள், குருமூர்த்தியும் கருணாகரனும். நான் தனித்தனியாய் அவர்களை அணுகிக் கேட்டபோது, இரண்டு வித்தியாசமான பற்பசைகளின் மணங்கள் கமழ கிருஷ்ணகிரி சொன்ன பதிலையே அவர்களும் சொன்னார்கள். கடைசியாய், நான் ரமேஷ்பாபுவின் அறைக்கு நடந்தேன்.
ரமேஷ்பாபு என்ற பெயர் அவன் வட இந்தியனாக இருக்கக் கூடும் என்பதாகப் பட்டது. அப்படியிருந்தால் அவனிடம் இந்தியிலேயே பேசலாம் என்று தீர்மானித்தேன். என் கொச்சையான இந்தியைத் தவிர்த்து எவ்வாறு செறிவாகப் பேசலாம் என்ற என் வார்த்தை வாக்கியங்களை மனதிற்குள் அமைத்துக்கொண்டே சென்றேன். அறைக்கதவு பாதி மூடியிருந்தது. நான் தட்டித் திறந்தேன்.
யாரையோ ஆவலுடன் எதிர்பார்த்தது போல் தோன்றிய ரமேஷ்பாபு, தாடியும் கண்ணாடியும் அணிந்து என் கற்பனை வரம்பிற்குள் அடங்காத அளவு அகலமாகவும் உயரமாகவும் இருந்தான். அவனைப் பார்த்ததும் ஒரு கணம் பயமாகக் கூட இருந்தது. என்னைக் கண்டதும் ‘விருட்’டென்று எழுந்துகொண்டான். பின் பரபரப்புடன் என்னை நோக்கி வந்தான். ஒரு கணம் அப்படியே நின்றவன் நெற்றியின் நரம்புகள் புடைக்கக் கண்களாலேயே அலட்சியமாக என்னை விசாரித்தான். நான் தடுமாறித் தடுமாறி உடைந்த ஆங்கிலத்தில் அவனிடம் விஷயத்தைக் கூறி முடித்தேன். அடுத்த கணம் அவனை ரௌத்ரம் கொண்டாண்டது. “நான் உன்னைக் கொண்டுவரச் சொன்னேனா?” என்று கோபத்துடன் துண்டாகக் கேட்டான். நான் மீண்டும் தயங்கி “இல்லை” என்றேன். “பின் போ! வந்து வாங்கிக்கொள்ள எனக்குத் தெரியும்” என்று கூறிவிட்டுக் கதவைப் படாரென்று சாத்திக் கொண்டான்.
நான் அசடு வழிய கோட்டுகளைச் சுமந்து வெளியே வந்தேன்.
விடுதியின் பிரதான வாசலைக் கடக்கும்போது சுமார் இருபது இருபத்தைந்து ஆட்டுக்குட்டிகள் அன்றைய மதியப் புலால் உணவுக்காக உள்ளே இழுத்துசெல்லப்பட்டுக்கொண்டிருந்தன. சில சின்னக் குட்டிகள் உற்சாகத்துடன் கத்தியும் துள்ளியும் ஓடின.
கடையில், திரு ராவ் இல்லை என்பதை உணர்ந்தேன். கோட்டுகளைத் திரும்பவும் மாட்டி வைத்துவிட்டு லக்‌ஷ்மிபாயிடம் உரத்த குரலில் சொல்லிக்கொண்டு கிளம்பினேன்.
வழக்கம்போல் கொட்டகைவாசலில் கூட்டம். குறவர்கள் மறுபடியும் பாதையோரத்தில் கிளைத்துவிட்டிருந்தார்கள். வெள்ளைப் பூண்டையும், பின்னூசிகளையும் வினோதக் கலவையாக வைத்து விற்றுக்கொண்டிருந்த ஒரு குறத்தி குழந்தைக்குப் பால் கொடுத்துக்கொண்டிருந்தாள். ஒரு குறவன் தலையைக் குனிந்து காது குடைவதில் முனைந்திருந்தான். அவர்களருகே நேற்று சிதறிய சோற்றுப்பருக்கைகள் மண்ணில் தோய்ந்து இறைந்துகிடந்தன. நல்ல வெயில். நல்ல பசி. நான் நடையைத் தளர்த்திக் கொண்டு நடக்கத் துவங்கினேன்.
வீட்டுக்குள் தம்பி ‘மதர்-இந்தியா’வின் பழைய இதழ் ஒன்றிலிருந்து கேள்வி-பதில் பகுதியைப் படித்துக்கொண்டிருந்தான். அம்மா ஒரு மூலையில் சுருண்டு கிடந்தாள். உடையை மாற்றிக்கொண்டு நானும் ஒரு பாயை விரித்துக்கொண்டேன். யாருமே பேசவில்லை.
மறுநாள் கடைக்குச் செல்ல ஆயத்தமாகிக்கொண்டிருந்த போது அம்மா என்னையே வெறித்துக்கொண்டிருந்தாள். சுத்தமாகக் குளித்துவிட்டுப் பளிச்சென்று காணப்பட்டாலும் அவள் முகம் பட்டினியால் வாடித்தான் போயிருந்தது. நான் தலைவாரிக் கொண்டிருந்தேன். தலைவார நேரம் பிடித்தது. அம்மா கவனித்துக் கொண்டிருந்ததால் ஒரு வேளை நானே வேண்டுமென்று அதிக நேரம் எடுத்துக்கொண்டேனோ!
நான் வாசற்கதவை அடைந்ததும் தன்னருகே இதற்காகவே வைத்திருந்த பையை, “இதைக் குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டுப் போ” என்று வன்மத்துடன் என்னை நோக்கி வீசி எறிந்தாள் அம்மா. பை என் காலில் பட்டுத் தெறித்தது. அதிலிருந்த மூங்கில் குருத்துகள் தரையெங்கும் சிதறின. அவை வாடிப்போயிருந்தன.
நான் அம்மாவுக்கு முதுகைக்காட்டியவாறே ஒரு கணம் நின்றேன். திரும்பி அவளை நேருக்கு நேர் பார்க்கும் திராணி இல்லை. மனம் குழம்பி, நிறையக் கோபம் எங்கிருந்துமில்லாமல் வந்தது. “நீயே போய்ப் போட்டுக்கொள்” என்று கூறிவிட்டு நடந்தேன். எல்லாம் அர்த்தமற்றதாக இருந்தது.
தெருவில் இறங்கியதும் திடீரென்று எதிர்வீட்டின் சிறிய சந்திலிருந்து அம்மணமாய் ஒரு எட்டு வயதுப் பையன் குறி குலுங்க ஓடி வந்து பாதையோரம் அமர்ந்துகொண்டான்.
வெயில் அறைந்து தாக்கியது.
******
1980  - 1/4  
Kadavu-fullநன்றி: கடவு தொகுப்பு –க்ரியா வெளியீடு, 
பிரதி உதவி: அஜய்  தட்டச்சு உதவி:  சுபைர்

Nov 7, 2011

உன் நினைவுகள் - ஆத்மாநாம்

காட்சி

முதலில் athmanam
நீதான் என்னைக்
கண்டுகொண்டாய்
எனக்குத் தெரியாது
மனிதர்களைப் பார்த்தவண்ணம்
முன்னே வந்துகொண்டிருந்தேன் 
உயிருடைய ஒரு முகத்துடன்
பளிச்சிட்டுத் திரும்பினாய்
பின்னர் நடந்தவைக்கெல்லாம்
நான் பொறுப்பல்ல
எந்த ஒருகணம் என்பார்வை உன்மேல் இல்லையோ
அந்த ஒரு கணம் முழுமையாக என்னைப் பார்ப்பாய்
அதையும் நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன்
மாமன் ஒருவன் உன்னை இடம்பெயர்க்க
காட்சிகள் மாற மாற
நானும் நீயும் ஒரு நாடகத்தை முடிக்கிறோம்.


உன் நினைவுகள்

எனினும் நான்
உற்றுப் பார்த்தேன்
கூர் வைரக் கற்கள்
சிதறும் ஒளிக் கற்றைகளை
வீசும் விளக்கை

அப்பொழுதேனும்
துடிக்கும் மனத்தின்
பிணைப்பினின்று மீள

முடியாது
இவ்விதம்தொடர்ந்திருக்க முடியாது என்று
நிற்கும் தரையின்
பரிமாணங்களைச் செதுக்கிய
ஓவியத்திற்குச் செல்வேன்
பழகிவிட்ட ஓவியமும்
கைவிடும்

உதிர முடியாத
காகிதப் பூக்கள்
வண்ணம் இழக்கும்

மெல்லிய ஒலியுடன்
நாடி நரம்புகளைத்
தொற்றிக் கொண்டு
சிறிது நேரம்
மூச்சளிக்கும் இசை

எழுத்துக் கூட்டங்களுக்கும்
தொடர்வேன்
ஏதேனும் ஒரு மூலையில்
உன் நினைவுகள்

என் அறையில்
நான் முடங்கிக் கிடக்கையில்
எப்பொழுதேனும்
அந்த உயிரிழந்த பஸ்ஸரை
அழுத்திச் சென்றுவிட்டாயோ
என்று மன மதிரும்

பின்னர்
உயிர்த்திருக்கும்
புட்களுடன்
தேடிக்கொண்டிருப்பேன்
அலையும் நினைவுகளில்

நன்றி: ஆத்மாநாம் படைப்புகள் (காலச்சுவடு பதிப்பகம் 2002)
உயிர்மை

Nov 6, 2011

வீடியோ மாரியம்மன்-இமையம்

"எதுக்குடா பயலெ அடுப்புக்கட்டிகிட்ட வந்து ஏறிகிட்டு நிக்குறவன்?"

"பாயி கொடு."

"பாயி இல்லெ."

"ஊருல இருக்கிற எல்லாப் பசங்களும் எடுத்துகிட்டுப் போறாங்க இல்லெ."

"போனாப் போறாங்க" என்று சொன்ன கம்சலை அடுப்பில் வெந்துகொண்டிருந்த சோற்றைக் கிண்டிவிட ஆரம்பித்தாள். முருகன் லேசாகச் சிணுங்கி அழ ஆரம்பித்தான்.

சோற்றை இறக்கி வடித்த கம்சலை, குழம்புச் சட்டியைத் தூக்கி அடுப்பில் வைத்தாள். "பாய் தா" imayam என்று சொல்லி முருகன் அடம்பிடிக்க ஆரம்பித்தான். அவனுடைய தொல்லையைத் தாங்க முடியாமல் "இதென்ன வம்பு சனியனா இருக்கு" என்று சொல்லிக் கொண்டே போய்க் குதிருக்குப் பக்கத்தில் எதையோ தேடினாள். பாயைத்தான் தேடுகிறாள் என்று நினைத்த முருகன் அழுவதை நிறுத்திவிட்டு, "மூட்டெ மேலெ இருக்கு பாரு" என்று சொன்னான். அதைத் காதில் வாங்கிக்கொள்ளாமல் சாக்கு ஒன்றை எடுத்துக் கொடுத்தாள் கம்சலை. சாக்கை வாங்கி வேகத்தோடு விட்டெறிந்த முருகன் தரையில் விழுந்து புரண்டு அழ ஆரம்பித்தான். சாக்கை எடுத்து அவனுடைய கையில் திணித்துவிட முயன்றாள் கம்சலை. "பாயி கொடு. இல்லாட்டி துப்புட்டி கொடு" என்று சொன்னதையே சொல்லிக்கொண்டிருந்தான். அவனோடு மல்லுக்கட்ட முடியாமல் "சாமி பாக்கப் போன சொந்தக்காரங்க எல்லாம் சோத்துக்கு வர நேரமாயிடிச்சி. இன்னம் சோறாக்கி முடியல. இந்த நேரத்திலெ ஒங்கூட என்னால வம்பாட முடியாது. சாக்கெ எடுத்துகிட்டு கிருவமா போயிச் சேரு. கத்திகிட்டே இருந்தா பூசதான் கெடைக்கும்" என்று சொல்லிச் சாக்கை முருகனுக்குப் பக்கத்தில் போட்டுவிட்டு அடுப்புக்கு முன் போய் உட்கார்ந்தாள். சாக்கைத் தூக்கிக் கம்சலையிடம் போட்ட முருகன் "பாயி கொடு" என்று திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தான்.

"ஒதெதான் கெடைக்கும். போன வருசம் கூத்துப் பாக்கப் போனப்ப சாக்குதானெ எடுத்துகிட்டுப் போன?"

"இந்த வருசம் கூத்தில்லெ. வீடியோ படம்."

"வீடியோ படமோ ரேடியோ படமோ. எதா இருந்தாலும் சாக்குதான். ஊட்டுல ஒரு பாயிதான் இருக்கு. அதெ ஒங்கிட்ட கொடுத்துட்டு, சொந்தக்காரங்க கூத்துப் பாக்கப் போவயிலெ நான் எதெக் கொடுக்கிறது? பாயிகூட இல்லாத ஊடுன்னு கேப்பளமா நம்பள பேச மாட்டாங்க?" என்று சொன்ன கம்சலை, அடுப்பில் இரண்டு விறகை எடுத்துச் செருகினாள். "தண்ணீ எடுக்கப் போன குட்டிய இன்னம் காணுமே. கெணறு வெட்டித் தண்ணீ எடுக்குறாளா?" என்று சொன்னவள் முருகன் பக்கம் திரும்பி, "அக்காளப் பாத்தியாடா?" என்று கேட்டாள். "மசுரப் பாத்தன்" என்று சொல்லிவிட்டு அவன் மீண்டும் அழ ஆரம்பித்தான். அழுதுகொண்டே, மூட்டைமீது இருக்கும் பாயை அவனுக்குத் தெரியாமல் எடுத்துக்கொண்டு ஓடி விடலாமா என்று யோசிக்க ஆரம்பித்தான்.

"தண்ணிக்கிப் போன குட்டிய இன்னம் காணுமே. வீடியோ படம் காட்டுற எடத்துக்குப் போயிருப்பாளா? ஊருல இருக்கிற குட்டிவுள கெடுக்கிறதுக்குத்தான் ஊர்க்கார பயலுவோ அதெயும் இதெயும் கொண்டாந்து காட்டுறானுவோ" என்று சொன்ன கம்சலை, வாசலில் வந்து நின்று பார்த்தாள். ராணி வருகிற மாதிரி தெரியவில்லை. முனகிக்கொண்டே வீட்டுக்குள் போனாள். கரண்டியை எடுத்துக் குழம்பைக் கிண்டிவிட ஆரம்பித்தாள்.

தண்ணீர்க் குடத்துடன் வீட்டுக்குள் வந்தாள் ராணி. அவளிடம் "கெணறு வெட்டித் தண்ணி எடுத்தியாடி?" என்று கேட்டாள் கம்சலை. ஏதோ சொல்ல வந்த ராணியைப் பேசவிடாமல், "ஒம் போக்கு சரியில்லெ. அவ்வளவுதான் நான் சொல்லுவேன். ஒரு புள்ளெ பெக்குறமுட்டுதான் கண்ணே பொண்ணேம்பானுவோ" என்று ராணியைத் திட்டிக்கொண்டே அடுப்பில் விறகைச் செருகினாள் கம்சலை. அந்த நேரத்தில் பாயை எடுத்துக்கொண்டு நழுவப்பார்த்த முருகனை இழுத்து முதுகில் இரண்டு அடி கொடுத்து, பாயைப் பிடுங்கிப் பரண்மீது வைத்தாள். அதை பார்த்த முருகனுக்கு அடக்க முடியாத அளவுக்கு ஆத்திரம் உண்டாயிற்று.

தண்ணீர் எடுத்துக்கொண்டு வரும்போது பாவாடை தாவணி நனைந்துவிட்டதால் வேறு பாவாடை தாவணி மாற்றிக்கொண்டு வந்த ராணியைப் பார்த்து முறைத்தாள் கம்சலை. அதைப் பொருட்படுத்தாமல் தலை சீவ ஆரம்பித்தாள் ராணி.

கிருஷ்ணன் வீட்டுக்குள் வந்ததும் அழுதுகொண்டிருந்த முருகன் விருட்டென்று எழுந்து உட்கார்ந்தான். சத்தம் காட்டாமல் பவுடர், சீப்பு, கண்ணாடியுடன் வாசலுக்குப் போனாள் ராணி. வந்த வேகத்திலேயே துண்டை விரித்துப் போட்டுப் படுத்தான் கிருஷ்ணன். "நல்ல நாளும் பெருநாளுமா என்னா மொடக்கிக்கிட்டெ? எயிந்திரு, பாயப் போடுறன்" என்று சொல்லிப் பரண்மீது வைத்திருந்த பாயை எடுத்து விரித்துப்போட்டாள் கம்சலை. பாயில் நகர்ந்து படுத்துக்கொண்டான் கிருஷ்ணன். இனி பாய் தனக்குக் கிடைக்காதோ என்று சந்தேகப்பட்டதும் விசும்ப ஆரம்பித்தான் முருகன் அவனைத் திரும்பிப் பார்த்த கிருஷ்ணன், "இந்த பய எதுக்குடி அயிவுறான்?" என்று கேட்டான்.

"திங்கிற திமுறு வாட்டம்தான். வேறென்னா?"

"சும்மா இருடி மயிரான் மவள" என்று சொல்லிக் கம்சலையை முறைத்த கிருஷ்ணன், "யாண்டா அயிவுற?" என்று முருகனிடம் கேட்டான். அவன் வாயைத் திறக்கவில்லை.

"மயிரான் மவ இல்லன்னா தெரியும், ஐயாவோட வண்டவாளம் தண்டவாளத்துல போறது. செம்பிறி ஆடு மேய்க்கிறவனுக்கு எம் பொண்ணெ கொடுக்காதன்னு ஆதிகாலத்திலியே எங்கம்மா எங்கப்பன்காரன்கிட்டெ சொல்லிச்சி. அந்தக் குருட்டுப் பய அதெக் காதுல போட்டுக்கல" என்று சொல்லிக் கொண்டே குழம்பை இறக்கிவைத்தாள் கம்சலை.

"ஆமாம் ஒப்பன் ஏத்திவுட்டெ சீருலதான் என் வண்டி ஓடுது."

"நாலு புள்ளெ பெத்து, அதுல ரெண்ட கட்டிக் கொடுத்து, பேரன் பேத்தின்னு எடுத்தப் பிறவும் எங்கப்பன் வண்டி வண்டியா ஏத்திவுடுவான் இரு."

"செத்தப் பேசாம இருடி வெங்கப்பய மவள."

"என்னாத்தெ பேசாம இருக்கிறது? ஊருல தேரும் திருநாளுமா இருக்கிறப்ப எம் மக்கள காணுமேன்னு எம் மனசு பதறாது?" என்று சொல்லும்போதே கம்சலையின் கண்களிலிருந்து பொலபொலவென்று கண்ணீர் கொட்டியது. மூக்கை உறிஞ்சிக்கொண்டு, "அண்ணன் தம்பிக்குப் பொண்ணு கொடுத்தது மகா பிசகாப் போச்சு. நான் அன்னிக்கே சொன்னேன். நீ கேக்கல. இன்னிக்கி எம்புள்ளிவோ தவிச்சி நிக்குதுவோ. பங்காளி ஊட்டுக் கருமகாரியத்துக்குத் துணி எடுத்து வைக்கலன்னு பொறந்த ஊட்டுக்குப் போவாதன்னு சொல்ற பயலுவோ நல்ல சாதிக்குப் பொறந்தவனுங்களா?" என்று இரண்டு மருமகன்களையும் குறை சொல்லிப் பேச ஆரம்பித்தாள் கம்சலை.

கிருஷ்ணன் ஏன்தான் வந்தானோ என்றிருந்தது முருகனுக்கு. என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துப்போனான். எதற்காக வளவளவென்று கிருஷ்ணனிடம் பேச்சுக்கொடுத்துக்கொண்டே இருக்கிறாள் என்று கம்சலைமீது அவனுக்குக் கோபம் உண்டாயிற்று. அவனுடைய கோபத்தை அதிகரிப்பது மாதிரிதான் கம்சலையும் பேசிக்கொண்டிருந்தாள்.

"எட்டு நா ஒருக்க, பத்து நா ஒருக்க எம்மாம் காத்து மயலா இருந்தாலும் ரெண்டு பேரும் ஓடியாந்து மொவத்தக் காட்டிப்புட்டு போவாளுவோ. நாலு மாசமா இந்த இலாக்காவுல அடிவைக்காம பண்ணிப்புட்டானுங்களே கொலகாரனுங்க."

"நானும் வெக்கத்த வுட்டு போயி சொல்லிட்டுத்தான் வந்தன்."

"அவனுவோ அம்மாக்காரி போடுற சுந்துதான் இதெல்லாம்" என்று சொன்ன கம்சலை "ரெண்டு குச்சி எடுத்தாடி" என்று கத்தினாள். ராணி கொஞ்சம் குச்சிகளை அள்ளிக்கொண்டுவந்து போட்டாள். ராணியை ஏற இறங்கப் பார்த்தாள். ராணி ஒரு வார்த்தையும் பேசாமல் வாசலுக்குப் போனாள்.

"தெரண்டு மூணு வருசமா குந்தியிருக்கிற இந்தக் குட்டியப் புடிச்சி ஒருத்தன் கையில கொடுக்க வாணாமா?" என்று சொன்ன கம்சலை "யே ராணி" என்று இரண்டு மூன்று முறை கூப்பிட்டாள். பதிலில்லாததால் "அதுக்குள்ளார எங்கப் போனா நாதேறி" என்று சொன்னவள், பரங்கிக்காயை எடுத்துக் கீண ஆரம்பித்தாள். முருகனிடம், "தம்பி, அத்தவோ எங்க இருந்தாலும் கையோட கூப்புட்டா, சாப்புடுறதுக்கு" என்று சொன்னாள். அவன் நகராததால் திட்ட ஆரம்பித்தாள். கிருஷ்ணன் "போயிட்டு வாடா" என்று சொன்னதும் முருகன் வாயைத் திறக்காமல் எழுந்தான்.

நேரே கோவிலுக்குத்தான் போனான் முருகன். தன்னுடைய அத்தைகளைத் தேடிக்கொண்டு கோவிலைச் சுற்றி இரண்டு முறை வந்தான். ஊர்வலத்திற்குச் சாமியை அலங்கரித்துக்கொண்டிருந்த கூட்டத்திலும் தேடிப் பார்த்துவிட்டான். கோவிலில் இல்லை என்றால் தன்னுடைய சித்தப்பா வீட்டில்தான் இருப்பார்கள் என்று நினைத்த முருகன் அங்கு போவதா வேண்டாமா என்று யோசித்தான். இவனுடைய அம்மாவுக்கும் சித்தப்பா பெண்டாட்டிக்கும் பேச்சுவார்த்தை இல்லை. அப்படி இருக்கும்போது அங்கு எப்படிப் போவது என்று தயங்கினான். போகாமலே போனதாகச் சொல்லிவிடலாமா என்று யோசித்தான். கிருஷ்ணனுக்குத் தெரிந்தால் அவ்வளவுதான் என்று எண்ணிய முருகன் தயக்கத்துடன் நடக்க ஆரம்பித்தான்.

"அப்பா உங்கள சாப்பிடக் கூட்டியாரச் சொன்னாரு" என்று முருகன் சொன்னதுமே அவனுடைய பெரிய அத்தை, "எம் மவனுக்குப் பொண்ணு கொடுக்காத உங்கம்மாக்காரி எதுக்குச் சாப்புடக் கூப்புடுறா? நாங்க சோத்தயே கண்டதில்லியா?" என்று பேச ஆரம்பித்தாள். முருகன் எதுவும் பேசாமல் தலையைக் கவிழ்த்து நின்றுகொண்டிருந்தான். சிறிது நேரம் கழித்து அவனுடைய சின்ன அத்தை, "நீ போடா. நாங்க அப்புறமா வர்றம்" என்று சொல்லிவிட்டுத் தன்னுடைய அக்காவிடம், "சின்னப் புள்ளெக்கிட்டெ போயி எதுக்குக் கத்துறவ?" என்று கேட்டு முறைத்தாள். சின்ன அத்தை சொன்னதே போதும் என்று முருகன் விருட்டென்று வெளியே வந்தான். பெரிய அத்தையின் மீது அவனுக்குக் கோபம் உண்டாயிற்று. அவளை அழைத்துக்கொண்டுவரச் சொன்ன கம்சலையின் மீதும் எரிச்சல் வந்தது. கோபத்தில் வேகமாக நடந்தான். சின்னசாமியின் வீட்டின் முன் பெரிய கூட்டமாக இருப்பது தெரிந்ததும் கூட்டத்தை நோக்கி ஓட ஆரம்பித்தான்.

"ஐய, இப்பத்தான் இது காட்டுறாரு. குடிச்சமா, பேசாமப் போயிப் படுத்தமான்னு இல்லாம. பவுச கெட்டவ பெத்ததுதானெ, பின்னெ எப்பிடி இருக்கும்?" என்று சொல்லி, குடித்துவிட்டு ஆடிக்கொண்டிருந்த சின்னசாமியை வீட்டுக்கு இழுத்துக்கொண்டிருந்தாள் ராசாத்தி. கூட்டம் கூடி வேடிக்கை பார்ப்பதை, ராசத்தி மோசமாகப் பேசுவதை எல்லாம் பொருட்படுத்தாமல், தெருவில் நின்றுகொண்டிருந்த பாவாயிடம், "நீ என்னிக்கி சாவுவ. சொல்லு. நீ சாவுற அன்னிக்கி மோளம் வைக்கணும், தாளம் வைக்கணும், வெடி, ஆட்டம் பாட்டம் எல்லாம் வைக்கணும். சொல்லு. நீ என்னிக்கிச் சாவுவ?" என்று திரும்பத் திரும்பக் கேட்டதையே கேட்டுக்கொண்டிருந்தான். சின்னசாமி சொல்வதைக் கேட்டு பாவாயி சிரித்தாள்.

"த பவுசு கெட்டத. தெருவுல நின்னு இது காட்டுறியா? ஆட்டம் காட்டாம வந்து ஊட்டுல மொடக்கு" என்று சொல்லி ராசாத்தி சின்னசாமியை இழுத்துக்கொண்டிருந்தாள். அவளிடம் "யாண்டி எம்புள்ளெய இயிக்குறவ? நல்ல நாளும் பெருநாளுமா தமாசா இருந்துட்டுப் போறான். தெனமா குடிக்கிறான்?" என்று கேட்டாள் பாவாயி.

"ஒன்னெ மாரிதான் ஒம் புள்ளெயும் இருக்கும், வெக்கம் கெட்டுப்போயி" என்று சொல்லித் தன் மாமியாரை முறைத்த ராசாத்தி "நீ எப்ப சாவுவ சொல்லு" என்று கேட்டுக்கொண்டிருந்த சின்னசாமியை வீட்டுக்கு நெட்டித்தள்ளிக்கொண்டுபோனாள். சின்னசாமி போனதும் கூட்டம் கலைய ஆரம்பித்தது. முருகனும் ஏன் இவ்வளவு நேரம் என்று கேட்டுக் கிருஷ்ணன் திட்டினாலும் திட்டுவான் என்று எண்ணி வேகமாக நடக்க ஆரம்பித்தான்.

முருகன் வீட்டுக்குள் நுழைந்ததுமே "ரெண்டு பேரும் ஒத்துச் சேந்தாப்ல வரலன்னுட்டாளுவளா?" என்று வேகத்துடன் கேட்டாள் கம்சலை. "அப்புறம் வர்றன்னாங்க" என்று சொன்ன முருகன் கிருஷ்ணனைக் காணாததால் பாயைச் சுருட்ட ஆரம்பித்தான். "யாண்டா பாய எடுக்குற? வீம்புக்காரிவோகிட்டெ என்னெப் பேச்சு வாங்கவைக்காதடா" என்று சொல்லிக்கொண்டே வந்து முருகனின் கையிலிருந்த பாயைப் பிடுங்கிப் பரண்மீது வைத்தாள். பிறகு வீட்டைக் கூட்ட ஆரம்பித்தாள். முருகன் கத்தி அழ ஆரம்பித்தான். கம்சலை முருகனின் அழுகையைச் சட்டை செய்யாமல் "இந்தக் குட்டி எங்க போயிருப்பா?" என்று சொல்லி ராணியைத் திட்ட ஆரம்பித்தாள். "இந்த பூபாலன் பயலயும் காணுமே. எவகூட சுத்துறானோ" என்று முணுமுணுத்தாள்.

வாசல் பக்கமிருந்து "ஸ்-ஸ்-ஸ்-ஸ்" என்ற சத்தம் விட்டுவிட்டுக் கேட்டது. முருகன் அழுவதை நிறுத்திவிட்டுத் தலையைத் தூக்கிப் பார்த்தான். வாசல் படல் ஓரமாக யாரோ நிற்பது மாதிரி தெரிந்ததும் எழுந்து வெளியே வந்தான். பாண்டியன் நின்று கொண்டிருந்தான். ரகசியம்போல "யாண்டா அயிதுகிட்டு இருந்த?" என்று கேட்டான் பாண்டியன். "எங்கம்மா சாக்குத்தான் தர்றெங்குது." என்று சொல்லும்போதே முருகனுக்குக் கண்கள் கலங்கின. அதே நேரத்தில் பாண்டியன் வெறுங்கையாக இருப்பது சற்று ஆறுதலாக இருந்தது. "வீடியோக்காரன அயிச்சியார ஆளுவோ ஐயனாரு கோவிலுக்குப் போறாங்கடா" என்று பாண்டியன் சொன்னதும் முருகனுக்கு வீடியோக்காரனை அழைத்துக்கொண்டு வரப்போகிற ஆட்களோடு தானும் போகலாமா என்று யோசித்தான் மறு நொடியே வீட்டுக்குள் ஓடிப்போய் "அம்மா பாயி" என்று கம்சலையிடம் கேட்டான். "வௌக்கமாறு பிஞ்சிப்போவும்" என்று சொன்னவள் சாக்கைத் தூக்கிக் கொடுத்தாள். அவளை முறைத்துப் பார்த்த முருகன் வேறு வழியில்லாமல் சாக்கை எடுத்துக்கொண்டு வெளியே வந்தான்.

முருகனும் பாண்டியனும் கோவிலுக்கு வந்தபோது வீடியோக்காரனை அழைத்துக்கொண்டு வருவதற்கு ஆட்கள் போய்விட்டிருந்தது தெரிந்தது. இருவருக்கும் ஏமாற்றமாகிவிட்டது. ஏக்கத்தை மறைக்க முடியாமல் "ஐயனாரு கோவுலுக்குப் போவலாமாடா?" என்று முருகன் கேட்டான். "அம்மாம் தூரம் எப்பிடி இருட்டுலப் போவ முடியும்?" என்று பாண்டியன் சொன்னதும் முருகனின் முகம் வாடிப்போயிற்று. கோவிலுக்கு முன் விளையாடிக்கொண்டிருந்த பையன்களோடு சேர்ந்து விளையாடலாம் என்று பாண்டியன் சொன்னதற்கு அரைகுறை மனத்துடன் சரி என்று தலையை ஆட்டிய முருகன் கோவிலை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

விளையாடிக்கொண்டிருந்த பையன்கள் விளையாடுவதை விட்டுவிட்டு முருகன் எதற்காகச் சாக்குக் கொண்டுவந்திருக்கிறான் என்று கேட்டனர். "வீடியோப் படம் பாக்க யாராச்சும் சாக்கு எடுத்துகிட்டு வருவாங்களா?" என்று இளக்காரமான தொனியில் குமார் கேட்டான். "நான் எதெ எடுத்தாந்தா ஒனக்கென்னடா?" என்று கேட்டு முருகன் குமாரை முறைத்தான். தொடர்ந்து, சாக்கு வைத்திருப்பதற்காக முருகனைப் பையன்கள் கிண்டலாகப் பேச ஆரம்பித்ததும் அந்த இடத்தில் நிற்கவே அவனுக்குப் பிடிக்கவில்லை. எரிச்சலாக இருந்தது. சட்டென்று அந்த இடத்தை விட்டு நடக்க ஆரம்பித்தான். கம்சலைமீது அவனுக்குக் கோபம் வந்தது. வீடியோக்காரனை அழைத்துவரப்போன கூட்டத்தோடு போக முடியாததற்கு, பையன்கள் கிண்டல் கேலி செய்ததற்கு எல்லாவற்றுக்கும் அவள்தான் காரணம். கோபத்தில் சாக்கை விட்டெறிந்துவிடலாமா என்று யோசித்தான். கையில் வைத்திருந்த சாக்கைப் பார்த்தான். அருவருக்கத்தக்க பொருள் ஒன்று தன் கையில் ஒட்டிக்கொண்டு இருப்பதுபோல வெட்கப்பட்டான்.

தெருவில் நின்றுகொண்டிருந்த முருகனையும் பாண்டியனையும் பார்த்த பூபாலன், "இருட்டுல எதுக்குடா நிக்குற? ஊட்டுக்குப் போ" என்று சொல்லிவிட்டுக் கோவில் பக்கமாக நடக்க ஆரம்பித்தான். அவன் வான்மதி வீட்டுக்கு முன் சிறிது நேரம் நின்று விட்டுப் போனதைப் பார்த்த பாண்டியன், "ஒங்கண்ணன் வான்மதிய லவ் பண்ணுதுடா" என்று ரகசியம் மாதிரி சொன்னான். "தெரியும்" என்று அலட்சியமாக சொன்னான் முருகன்.

"சாமி வடக்கால தெரு மொனைக்கு வந்துட்டமாரி தெரியுதுடா" என்று பாண்டியன் சொன்னதும் "வா போவலாம்" என்று சொன்ன முருகன், வடக்குத் தெருவை நோக்கி நடக்க ஆரம்பித்தான். அவனோடு பாண்டியனும் ஓடினான். அவனுக்குத் தன்னை முருகன் சாக்கில் உட்கார விடுவானோ மாட்டானோ என்ற கவலை ஓயாமல் அரித்துக்கொண்டிருந்தது.

சாமி மிரமனையில் கூட்டம் திமுதிமுவென்று போய்க்கொண்டிருந்தது. கூட்டத்தோடு முருகனும் பாண்டியனும் சேர்ந்து நடக்க ஆரம்பித்தனர். "ஒஞ் சாக்குல ஒக்கார இடம் தர்றியாடா" என்று கெஞ்சுவது போலப் பாண்டியன் கேட்டான். "சரி" என்றான் முருகன். மறு நொடியே தோள்மீது கையைப் போட்டுக்கொண்டு நடந்தான் பாண்டியன்.

சாமி மிரமனை வடக்குத் தெரு முடிந்து அதற்கு அடுத்த தெருவில் திரும்பும்போது கூட்டத்திலிருந்த யாரோ ஒருத்தன் "வீடியோக்காரன் வந்துட்டான்" என்று சொன்னான். அவன் சொன்ன சிறிது நேரத்தில் மைனர் பையன்கள் மூன்று நான்கு பேர் கூட்டத்திலிருந்து விலகிக் கோவிலை நோக்கி நடந்தனர். அதைப் பார்த்த முருகன், "வாடா, நாம்பளும் போவலாம்" என்று கூப்பிட்டான். அதற்கு, "பொய்டா, சாமியத் தூக்க சொல்வாங்கன்னு அவங்க போறாங்க, சாமி மிரமன முடிஞ்சாத்தான் படம் போடுவான்" என்று பாண்டியன் சொன்னான். அதைக் கேட்ட முருகனுக்குச் சப்பென்றாகிவிட்டது. உற்சாகமின்றிச் சாமி மிரமனையோடு போய்க்கொண்டிருந்தான். அந்தத் தெருவில் பாதி தூரம்தான் சாமி வந்திருக்கும், அடுத்து நான்கு ஐந்து மைனர் பையன்கள் கூட்டத்திலிருந்து நழுவிக் கோவில் பக்கம் நடந்தார்கள். வீடியோக்காரன் வந்திருப்பானோ என்று முருகன் சந்தேகப்பட ஆரம்பித்தான்.

"யோ ஐய்யர, சீக்கிரம் வேலய முடிச்சி அனுப்பிக்கிட்டே இரு" என்று சாமியைத் தூக்கிக்கொண்டிருந்த மைனர் பையன்கள் தேங்காய் உடைத்து, தீபாராதனை காட்டிக்கொண்டிருந்த பண்டாரத்திடம் சத்தம்போட ஆரம்பித்தனர். சாமி தெற்குத் தெருவிற்கு வந்தபோது மைனர் பையன்கள் மட்டுமல்ல; சின்னச் சின்னப் பையன்களின் கூட்டமும் குறைய ஆரம்பித்ததும் முருகனின் சந்தேகம் வலுக்க ஆரம்பித்தது. கோவிலுக்குப் போகலாமா என்று யோசித்தான். கோவிலில் கூட்டம் அதிகமாக இருந்தால் இவன் சாக்கு வைத்திருப்பது யாருக்கும் தெரியாது. குறைவாக இருந்தால் சட்டென்று தெரிந்துவிடும். பையன்கள் கேலி செய்வார்களே என்ற கவலையில் அவன் சாமி மிரமனையில் போய்க்கொண்டிருந்தான்.

சாமி கிழக்குத் தெருவுக்கு வந்தபோது, சாமி மிரமனையில் கூட்டமே இல்லை. தண்ணீர் குடிக்க, ஒண்ணுக்கு இருக்க என்று கூட்டத்திலிருந்து ஒவ்வொரு ஆளாக நழுவிக்கொண்டிருந்தனர். மிரமனையில் அதிகமாகச் சிறுவர்களும் கிழவர்களும்தான் இருந்தனர். சாமிக்குச் சிறப்புக் கொடுப்பதற்காக ஒவ்வொரு வீட்டின் முன் இருந்தவர்களும்கூடக் கிழவன் கிழவிகளாகவே இருந்தனர். சாமியைத் தூக்கிக்கொண்டிருந்தவர்கள் அவர்களையும் சரியாகச் சாமி கும்பிடவிடாமல் "சீக்கிரம் சீக்கிரம்" என்று விரட்டினார்கள். சீக்கிரமாகத் தேங்காயை உடைக்கச் சொல்லிப் பண்டாரத்தை ஓயாமல் நச்சரித்தனர்.

சாமி கிழக்குத் தெருவின் கடைசிக்கு வந்தபோது, சாமியைத் தூக்கிக்கொண்டிருந்தவர்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தனித்தனியாக இருக்கும் வீடுகளுக்கெல்லாம் சாமி வராது என்று சொல்லித் தெரு முனைக்கே சிறப்பை எடுத்துக்கொண்டு வந்துவிடுங்கள் என்று கூறியதுதான் தாமதம், தனித்தனியாக இருந்த வீட்டுக்காரர்கள் எல்லாம் ஒன்று கூடி "நாங்க வரி கொடுக்கலியா? எங்க ஊட்டுக்கும் சாமி வந்துதான் ஆவணும்" என்று சொல்லிச் சத்தம்போட்டனர். வாக்குவாதம் ஆரம்பித்தது. சாமியைத் தூக்கிக் கொண்டிருந்தவர்கள், "அப்படின்னா நீங்களே தூக்கிக்கிட்டுப் போங்க" என்று வீம்பு பிடித்தனர். கொஞ்சம் கொஞ்சமாகப் பேச்சு தடிக்க ஆரம்பித்தது. சத்தம் அதிகமாக அதிகமாகக் கூட்டம் சேர ஆரம்பித்தது. கூட்டம் சேரச் சேர வாக்குவாதம் பெரிதாக வளர ஆரம்பித்தது.

"என் ஊட்டு வாசக் கடெக்கி வராத சாமி என்னா மசுரு சாமிடா. இந்த எடத்தெவிட்டு சாமி எப்பிடி நவுறுதுன்னு பார்க்கலாம்" என்று ஏழு எட்டுப் பேர் சாமிக்கு முன் நின்று சத்தம்போட்டுக் கத்த ஆரம்பித்ததும் சாமியைத் தூக்கிக்கொண்டிருந்தவர்கள் கோபத்தில், "தூக்குனா தூக்குங்க, தூக்காட்டிப் போங்க. எங்களுக்கு மட்டும்தான் வேத்திருக்கா" என்று சொன்ன வேகத்திலேயே சட்டென்று சாமியைக் கீழே இறக்கிவைத்துவிட்டார்கள். முன்பு தனித்தனி வீடுகளுக்கும் சாமி வந்தாக வேண்டும் என்று தகராறு செய்தவர்கள் இப்போது நடுத்தெருவில் எப்படிச் சாமியை இறக்கிவைக்கலாம் என்று கேட்டுச் சண்டைபோட ஆரம்பித்தனர்.

"ஒங்க வளவு ஆளுவோ என்னா பண்றீங்கின்னு நானும் பாக்குறன்" என்று கதிரேசனைப் பார்த்துக் கத்தினான் பெருமாள். "பாக்க முடியாதா? வா, நீயா நானான்னு ஒத்தக்கி ஒத்தெ ஒரு கை பாத்துடலாம்" என்று சொன்ன கதிரேசன் பெருமாளை ஒரு நெட்டு நெட்டினான். பதிலுக்குப் பெருமாளும் நெட்டினான். ஏழு எட்டுப் பேர் கூடிதான் அவர்கள் இருவரையும் பிரித்துவிட்டனர். ஆனாலும் அவர்கள் இருவரும் ஆத்திரத்தை அடக்க முடியாமல் கோபத்தில் கத்த ஆரம்பித்தனர். அந்த நேரத்தில் ஓடிவந்த பெருமாளின் பொண்டாட்டி குமாரி, "நம்பளுக்கு எதுக்கு ஊர் வம்பு?" என்று அவனை இழுத்தாள். குமாரியை "வுடுறி" என்று நெட்டித் தள்ளினான் பெருமாள். குமாரி நிலை தடுமாறிக் கீழே விழுந்ததில் அவளுக்கு வலது கை முட்டியிலிருந்து ரத்தம் வர ஆரம்பித்தது. ரத்தத்தைப் பார்த்துப் பதறிப்போன குமாரி, வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு, "ஒவ்வொரு வருச திருநாவுலயும் இதே கங்காச்சிதான். வண்ணாத்திச் சாண்டெ குடிச்ச பயலுவுளுக்கு ஒரு கிளாசி சாராயம் உள்ளெ போனா போதும், தலகீயா குதிப்பானுவோ" என்று சொல்லிக் கத்திக்கொண்டே போய்த் தன் புருசனை வீட்டுக்கு இழுக்க ஆரம்பித்தாள். பெருமாள் மீண்டும் அவளை நெட்டித் தள்ளிவிட்டுக் கதிரேசனிடம் ஓடினான்.

எங்கிருந்தோ ஓடிவந்த கதிரேசனின் அம்மா காத்தாயி, "யாண்டா தம்பி ஒனக்கு இந்த வேலெ, நீ எதுக்கு சாமி தூக்கப் போன? எவனாச்சும் சாமியத்தான் தூக்குறான். சாணியத்தான் தூக்குறான். ஒனக்கென்ன? ஊட்டுக்குப் போ. கண்ட பயகிட்டெ அடி தடிக்குப் போயிக்கிட்டு" என்று சொல்லி அவனை இழுக்க ஆரம்பித்தாள். காத்தாயி சொன்னது எதுவும் கதிரேசனின் காதில் விழவில்லை. அவன் பெருமாளிடம் கத்திக்கொண்டிருந்தான். முருகனும் பாண்டியனும் கதிரேசனின் வாயையும் முகத்தையும் மாறி மாறிப் பார்த்துகொண்டிருந்தனர்.

சண்டை வலுத்துக்கொண்டேயிருந்தது. என்ன நடக்கப்போகிறதோ என்று முருகனும் பாண்டியனும் கவலைப்பட ஆரம்பித்தனர். கூட்டம் சேர்ந்து கொண்டேயிருந்தது. சண்டை நடந்துகொண்டிருந்த இடத்திற்குப் பாண்டியனின் அம்மா வந்தாள். கூட்டத்தில் அவன் நின்றுகொண்டிருந்ததைப் பார்த்தும் பதறிப்போய், "யாண்டா கூட்டத்திலெ நிக்குற? போடா ஊட்டுக்கு, சண்ட நடக்கயில் ஏதாச்சும் ஆயிப்பூடும்" என்று சொல்லித் தலையில் கொட்டினாள். அந்த இடத்தில் நின்றால் இன்னும் அடிப்பாள் என்று நினைத்த பாண்டியன் நழுவினான். அவனோடு முருகனும் சேர்ந்து நடக்க ஆரம்பித்தான்.

முருகனும் பாண்டியனும் கோவிலுக்குச் சற்றுத் தள்ளி வந்துகொண்டிருந்தபோது எதிரில் வந்த கிழவன், "டே பசங்களா இன்னிக்கி என்னா படம்ண்டா காட்டப்போறாங்க?" என்று கேட்டான். பையன்கள் இருவரும் உற்சாகமாகி ஓரே நேரத்தில், "எங்க ஊரு மாட்டுக்காரன்" என்று சொன்னார்கள். "மாட்டுகாரனப் பத்தி தெரியாதின்னா மாட்டுக்காரன் படம் காட்டப்போறானுவோ" என்று ஏளனமாகச் சொல்லிக் கொண்ட நடந்த கிழவன்மீது பையன்களுக்குக் கோபம் வந்தாலும் "படம் நல்லா இருக்கும்" என்று சொன்னார்கள். "ஒங்க அக்கா இதுலதான் நல்லாயிருக்கும்" என்று கிழவன் சொல்லிக்கொண்டே நடக்க ஆரம்பித்தான். முருகன் கிழவனைக் கெட்ட வார்த்தை சொல்லித் திட்டினான்.

சாமி இறக்கிவைக்கப்பட்டிருந்த இடத்தை நோக்கிச் சிறு கூட்டம் ஓடியது. சாமி இருக்கும் இடத்திற்குப் போகலாம் என்று முருகன் சொன்னதும் "எங்கம்மா இருக்கும்ண்டா" என்று பாண்டியன் சொன்னான். வேறு வழியில்லாமல் அவனோடு முருகன் கோவிலை நோக்கி நடந்தான்.

கோவிலின் முன் சிறு கூட்டம்தான் இருந்தது. வீடியோ படம் காட்டுகிறவன் கணேசன் வீட்டில் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறான் என்ற செய்தி தெரிந்ததும் முருகனும் பாண்டியனும் உற்சாகமாகிக் கணேசன் வீட்டுக்கு ஓட ஆரம்பித்தனர். கணேசன் வீட்டுக்கு ஏழு எட்டு வீடுகளுக்கு முன் தமிழ்ச்செல்வன் அவனுடைய அம்மாவிடம் அடி வாங்கிக்கொண்டிருப்பதைப் பார்த்ததும் பையன்கள் இருவரும் அப்படியே நின்றுவிட்டனர். "கம்மனாட்டிக்கிப் பொறந்த கம்மனாட்டி. பாடம் படிக்கறப்பல ஒனக்கு எத்தன வாட்டிடா சொல்லி அனுப்புனன். காசி பத்தரம், காசி பத்தரம்ன்னு ஆயிரம் வாட்டி சொல்"? தேங்கா கற்பூரம் வாங்கியாரக் கொடுத்த அஞ்சி ரூவாயயும் தொலைச்சிப்புட்டு வந்திருக்கியே. அஞ்சி ரூபாயிக்கி நான் எங்க போவன்?" என்று சொல்லி ஆராயி தமிழ்ச்செல்வனின் முகத்திலேயே அடித்தாள். அடியைத் தாங்க முடியாமல் தமிழ்ச் செல்வன் வீறிட்டு அலறிக்கொண்டிருந்தான். பக்கத்தில் நின்றுகொண்டிருந்த கிழவி ஒருத்தி, "அறியாப்புள்ளெய யாண்டி கடெக்கி அனுப்புன?" என்று கேட்டுச் சத்தம் போட்டு ஆராயியின் பிடியிலிருந்து பையனைப் பிரித்துவிட்டாள்.

"இப்பத்தான் மாருல இருந்து எறக்கிவுட்டன். நாலாவது படிக்கிற பயலுக்கு வெகரம் வேணாம்? பணத்தை எங்கடா போட்ட பயலெ, வாடா தேடிப் பாக்கலாம்" என்று சொல்லித் தமிழ்ச்செல்வனை இழுத்துக்கொண்டு ஆராயி நடந்தாள்.

தமிழ்ச்செல்வன் முருகன், பாண்டியனோடுதான் படித்துக்கொண்டிருந்தான். அவன் அடிவாங்கி அழுதுகொண்டே போனதைப் பார்த்ததும் முருகனுக்கும் பாண்டியனுக்கும் அவன்மீது இரக்கம் உண்டாயிற்று. பணத்தை எங்கே போட்டிருப்பான்? அவனோடு சேர்ந்து போய்த் தேடிப் பார்க்கலாமா என்று யோசித்தார்கள். வீடியோக்காரனைப் பற்றிய நினைவு வந்ததும் வேகமாகக் கணேசன் வீட்டுக்கு நடந்தார்கள்.

கணேசன் வீட்டுக்கு முன் கூட்டமாகக் கொஞ்சம் பேர் நின்றுகொண்டிருந்தனர். வீட்டுக்குள் நுழைந்து எப்படியாவது வீடியோக்காரனைப் பார்த்துவிட வேண்டும் என்று முருகனும் பாண்டியனும் முட்டி மோதிப்பார்த்தனர். வாசல்படியைத் தாண்டி ஒரு அங்குலம்கூட நகர முடியவில்லை. வீடு முழுக்க ஆட்களாகவே இருந்தார்கள். வீட்டுக்குள் நுழைவதற்கு முருகனும் பாண்டியனும் படாதபாடு பட்டும் காரியம் நடந்தபாடில்லை.

சாப்பிட்டுவிட்டு வீடியோக்காரன் வெளியே வந்தான். மறு நொடியே கூட்டம் அவனைச் சூழ்ந்துகொண்டது. ஒரு மந்திரியை அழைத்துக்கொண்டு வருவது மாதிரி அவனைக் கோவிலுக்கு அழைத்து வந்தனர். வீடியோக்காரனுக்குப் பக்கத்தில் போகவும் அவனைத் தொட்டுப் பார்க்கவும் முருகனும் பாண்டியனும் படாத பாடுபட்டனர். ஒன்றும் பலிக்கவில்லை. இவர்களைப் போல ஐந்தாறு பையன்கள் வீடியோக்காரனுக்குப் பக்கத்தில் போவதற்காகக் கூட்டத்தைச் சுற்றிச்சுற்றி வந்து கொண்டிருந்தனர்.

வீடியோக்காரன் கோவிலுக்கு வந்துவிட்டான் என்ற செய்தி பரவிய சற்றைக்கெல்லாம் கோவில் முன் நல்ல கூட்டம் சேரத் தொடங்கியது. வீடியோக்காரன் கூட்டத்தைச் சற்றும் மதிக்கவில்லை. வீட்டு மனைப் பட்டா வழங்க, தண்ணீர்க் குழாய் போட இடத்தைத் தேர்வு செய்கிறவன் மாதிரி, தொலைக்காட்சிப் பெட்டியை வைப்பதற்குத் தோதான இடத்தைத் தேர்வு செய்வதில் மும்முரமாக இருந்தான். அவனுடைய கவனமெல்லாம் மொத்தக் கூட்டத்திற்கும் படம் தெரிய வேண்டும் என்பதில்தான் இருந்தது. பல பேர் பல இடங்களைக் காட்டினார்கள். எந்த இடமும் அவனுக்குப் பிடிக்கவில்லை. இந்த இடம், இந்த இடம் என்று திரும்பத் திரும்பச் சொன்னவர்களை வீடியோக்காரன் முறைத்தான். அதற்காக அவன்மீது ஒரு ஆள்கூடக் கோபப்படவில்லை. அவனுடைய கை, கண் அசைவுக்காக மொத்தக் கூட்டமும் காத்திருந்தது. கொஞ்ச நேரத்திலேயே மந்திரவாதி மாதிரி வீடியோக்காரன் மொத்தக் கூட்டத்தையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டிருந்தான். அவன் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. ஆனாலும் மொத்தக் கூட்டமும் அவனுடய கட்டுப்பாட்டுக்குள் வந்து விழுந்துவிட்டிருந்தது. கணேசனோடுதான் அவன் அதிகமாகப் பேசினான். சிரித்தான். அதனால் கூட்டத்தில் இருந்தவர்களில் சிலருக்குக் கணேசன்மீது எரிச்சல் ஏற்பட்டது. சிலர் "அவன் மட்டும்தான் வீடியோவுக்குப் பணம் தரப்போறானா?" என்று வெளிப்படையாகவே வயிற்றெரிச்சலைக் காட்டினார்கள். முருகன், பாண்டியனுக்கும்கூடக் கணேசன்மீது கோபம் உண்டாயிற்று.

"சிகரெட் இருக்கா?" என்று வீடியோக்காரன் கேட்டதுதான் தாமதம். பட்டென்று இருபது ரூபாய் நோட்டை எடுத்து, நிறைய பையன்கள் அந்த இடத்தில் இருந்தாலும், முருகனிடம் கொடுத்து சிகரெட் வாங்கி வரச் சொன்னான் கணேசன். முருகனின் முகம் மலர்ந்தது. மிக முக்கியமான காரியத்தைச் செய்வதற்கு ஓடுவது மாதிரி அவன் செட்டியார் கடைக்கு ஓடினான். அவனோடு பாண்டியனும் ஓடினான்.

வீடியோக்காரன் பல இடங்களில் நின்றுநின்று பார்த்தான். ஒரு இடமும் அவனுக்குப் பிடித்ததாகத் தெரியவில்லை. கடைசியில், ஊர்வலம் முடிந்து வந்து சாமியை இறக்கிவைக்கிற இடத்தைத் தேர்ந்தெடுத்தான். உடனே கூட்டத்தில் சலசலப்பு உண்டாயிற்று, உடனே "இந்த எடத்திலெ டி.வி.யை வச்சாதான் எல்லாருக்கும் நல்லாத் தெரியும். ஒரு நாளக்கி மட்டும் சாமிய கோவுலுக்குப் பின்னால வையிங்க. சாமி கோவிச்சிக்கவா போவுது?" என்று வீடியோக்காரன் சொன்னதும், "சாமி முக்கியமா படம் முக்கியமா?" என்று முன்பு கேட்டவர்கள்கூட அடங்கிப்போய்விட்டார்கள்.

"எந்த ஊட்டுல இருந்து கரண்டு எடுக்கிறது?" என்று பொதுவாகத்தான் வீடியோக்காரன் கேட்டான். ஒரே நேரத்தில் மூன்று நான்கு பேர் "எங்க ஊட்டுல இருந்து எடுத்துக்கலாம்" என்று சொன்னார்கள். "எல்லா ஊட்டுலிருந்தும் எடுக்க முடியாது. கோவிலுக்குப் பக்கத்திலெ எந்த ஊடு இருக்கோ அங்கிருந்துதான் எடுக்க முடியும்" என்று சொன்ன வீடியோக்காரன், கோவிலுக்குப் பக்கத்தில் மின்சார வசதியுள்ள வீடுகளுக்குப் போய்ப் பார்த்தான். பிறகு தன்னிடமிருந்த ஓயரின் நீளத்தை அளந்துபார்த்தான். மின்சார வசதி உள்ள வீட்டுக்கும் கோவிலுக்கும் இடையிலுள்ள தூரத்தை அளந்துபார்த்தவன் உதடுகளைப் பிதுக்கினான். சலிப்புடன், "பத்து மீட்டர் ஒயர் வேணுமே" என்று சொன்னான். கணேசன் ஒரு பையனிடம், "எங்க இருந்தாலும் ஓயரோட வா" என்று சொல்லித் துரத்திவிட்டான்.

ஒயருக்காகப் போனவன் கொஞ்ச நேரம் கழித்து வெறும் இரண்டு மீட்டர் ஒயரோடு வந்தான். கணேசன் அவனைத் திட்டினான். முருகனும் பாண்டியனும் பத்து மீட்டர் ஒயர் இல்லாத ஊர் ஒரு ஊரா என்று அலுத்துக்கொண்டனர். அவர்களைப் போலவே நிறைய பேர் "இந்த மாரி மட்டமான ஊரப் பார்த்தில்லெ" எனச் சொல்லிச் சலித்துக்கொண்டனர்.

வீடியோக்காரன் கோவிலுக்குப் பக்கத்திலிருந்த மின்சாரக் கம்பத்தைப் பார்த்தான். "கம்பத்திலேருந்து நேர்த் துருவா கொக்கிபோட்டு கரண்டு எடுக்கலாமா?" என்று கேட்டான். "ஒருத்தரும் ஒண்ணும் சொல்லமாட்டாங்க. பொதுக் காரியத்துக்குத்தான எடுக்கிறம்" என்று ஏழு எட்டுப் பேர் ஒரே நேரத்தில் சொன்னார்கள். வீடியோக்காரன் மின்சாரம் எடுப்பதற்கான வேலைகளைச் செய்ய ஆரம்பித்தான். அவன் போகிற இடத்திற்கெல்லாம் கூட்டமும் நகர்ந்து போய்க் கொண்டேயிருந்தது.

கிழக்குத் தெருவின் கடைசியிலிருந்து 'கோ கொல்லே' என்று பெரிய அளவில் சத்தம் கேட்க ஆரம்பித்ததும், வீடியோக்காரனைச் சுற்றியிருந்தவர்களில் கொஞ்சம் பேர் சத்தம் வந்த இடத்தை நோக்கி ஓட ஆரம்பித்தனர். கணேசனும் அவனோடு சேர்ந்து இரண்டு மூன்று பையன்களும் ஓட ஆரம்பித்ததால் முருகனும் பாண்டியனும் அவர்களுக்குப் பின்னால் ஓடினர்.

சாமியை இறக்கிவைத்திருந்த இடத்தில் ஊரே திரண்டுவிட்டிருந்தது. கூட்டத்தைவிடச் சத்தம் பெரிதாக இருந்தது. கூட்டத்தில் யார் என்ன பேசுகிறார்கள் என்பது புரியாத அளவுக்கு இரைச்சலும் கூச்சலுமாக இருந்தது. எந்த நேரத்திலும் வெட்டுக்குத்து விழலாம் என்ற சூழ்நிலை அந்த இடத்தில் இருந்தது. ஆண்கள் மட்டுமில்லாமல் பெண்களும் சண்டையிட்டுக்கொண்டிருந்தனர். விசயம் என்ன என்று புரியாமலேயே கணேசனும் அவனோடு சேர்ந்த பையன்களும் சத்தத்தைக் குறைக்க முயன்றனர். கத்தி கூச்சல் போட்டுக்கொண்டிருந்தவர்களை சமாதானப்படுத்த முயன்றனர். கூட்டத்தைக் கலைந்துபோகச் சொல்லிக் கெஞ்சினர். எதுவும் முடியாததால் சாமியைத் தூக்க முயன்றனர். அப்போது கதிரேசனோடு சேர்ந்த ஆட்களும் பெருமாளோடு சேர்ந்த ஆட்களும் வந்து மறித்துக்கொண்டு தகராறுசெய்ய ஆரம்பித்தனர்.

"சாமி மிரமனை முடியட்டும், எதா இருந்தாலும் அப்பறம் பேசிக்கலாம்" என்றான் கணேசன்.

"தனித்தனி ஊட்டுக்கெல்லாம் ஏன் சாமி வராது? அதுக்குப் பதிலு சொல்லு மொதல்ல" என்றான் பெருமாள்.

"இப்பத் தூக்கிக்கிட்டு வர்றம்" என்று சொன்னான் கணேசன்.

"மொதல்ல ஏன் வல்லெ?" என்று கத்தினான் பெருமாள்.

"சாமிய மறிச்சதுக்குக் காரணம் சொல்லாம சாமிய தூக்கவுட மாட்டன்" என்று சொல்லிக் கதிரேசனும் கத்த ஆரம்பித்தான்.

கதிரேசனையும் பெருமாளையும் சமாளிக்க முடியாமல் திணறிப்போனான் கணேசன். அவனுக்குப் பயத்தில் வெடவெடவென்று நடுங்க ஆரம்பித்து. சாமி மிரமனை முடிந்து கோவிலுக்கு வந்ததால்தான் படம் காட்ட முடியும். நடக்கிற சண்டையைப் பார்த்தால் சாமி கோவிலுக்கு வர வாய்ப்பில்லை. படம் காட்டவில்லை என்றால் வீடியோக்காரனுக்கு யார் பணம் தருவது என்ற கவலை வந்ததும் கணேசனுக்கு அதிகமாக உடம்பு நடுங்கிற்று. பெரிய தவறு செய்துவிட்டோ மோ என்று கவலைப்பட்டவன் கூட்டத்தைப் பார்த்தான். கூட்டம் கட்டுக்கு அடங்காமல் இருந்தது. கூட்டம் அடித்துப் புரண்ட பிறகுதான் ஓயும் என்ற எண்ணம் உணடாயிற்று. சட்டென்று தனக்கு இசைந்த ஏழு எட்டுப் பையன்களை இழுத்துக்கொண்டு ஊர்ப் பஞ்சாயத்தார்களைத் தேடிக்கொண்டு ஓட ஆரம்பித்தான். அந்தக் கூட்டத்தோடு முருகனும் பாண்டியனும் ஓடினார்கள். வீடியோக்காரனுக்கு சிகரெட் வாங்கிவரச் சொன்னதிலிருந்து முருகனும் பாண்டியனும் கணேசனுடைய கையாட்களாக மாறிவிட்டிருந்தனர்.

ஊரில் திருவிழா நடத்துவது குறித்து நடந்த பஞ்சாயத்தில், எந்த ஊர் நாடக செட்டுக்குப் பாக்கு வைப்பது என்ற பேச்சு வந்தபோது "கூத்து வாணாம், இந்த வருசம் வீடியோப் படம் காட்டலாம்" என்று கணேசன்தான் சொன்னான். அவனோடு சேர்ந்த மைனர் பையன்களும் தெருக்கூத்து வேண்டாம் என்று சொல்லித் தகராறு செய்தனர். அதனால் பஞ்சாயத்தார்களின் பேச்சு எடுபடாமல் போயிற்று. இப்போது போய்ச் சொன்னால் என்ன சொல்வார்களோ என்ற கவலையுடன் சாராயக் கடைக்கு நடந்துகொண்டிருந்தான் கணேசன்.

எந்த ஊரில் திருவிழா நடந்தாலும் அந்த ஊரில் மணி சாராயக் கடையைப் போட்டுவிடுவான். ஊர்ப் பொதுவில் பேசி சாமி செலவுக்கு என்று ஆயிரம் இரண்டாயிரம் கொடுத்துவிடுவான். ஊர்ப் பொதுவில் சாராயம் விற்க விட்டிருப்பதால் திருவிழா முடியும்வரை ஒரு நாளைக்கு இவ்வளவு என்று மாமூல் வாங்கிக்கொண்டு காவல் துறையினர் அவனை ஒன்றும் செய்யமாட்டார்கள். ஊருக்கு, காவல் நிலையத்துக்குப் பணம் தருவதோடு, ஊர்ப் பஞ்சாயத்தார்களுக்கும் ரகசியமாக இவ்வளவு என்று பணம் கொடுத்துவிட்டுத் தினமும் சாராயமும் கொடுப்பான். பொழுது இறங்கிய பிறகு ஊர்ப் பெரிய மனிதர்கள் சாராயக் கடையில்தான் இருப்பார்கள் என்று நினைத்துக் கணேசன் வந்தது சரியாக இருந்தது.

அந்த இடத்திலிருந்து ஏழு எட்டுப் பஞ்சாயத்தார்களிடம் கணேசன் விசயத்தைச் சொன்ன மறு நொடியே, "கொல வியிந்துபோச்சா?" என்று கத்திக்கொண்டே ஓடினார்கள். இரண்டு பேர் மட்டும் கணேசனைப் பிடித்துக்கொண்டு "பஞ்சாயத்தில இது ஒங்க காலமில்லென்னு நீ சொல்"? இப்ப எதுக்கு வந்த?" என்று கேட்டுச் சத்தம் போட ஆரம்பித்தனர்.

"சாமி தெருவுல நிக்குது, பெரிய சண்ட நடந்துக்கிட்ருக்கு."

"சாமி எங்க கெடந்தா என்ன? பெரியவங்க சின்னவங்கின்னு இல்லியா?"

"சாமி தெருவுல கெடக்குதுங்கிறான். எந்த நேரத்திலே என்னா பேசுற" என்று மூக்கன் பெரியசாமியை முறைத்தான். பெரியசாமி லேசாக அடங்கியது தெரிந்ததும் கணேசனும் அவனுடைய கூட்டாளிகளும் மூக்கனையும் பெரியசாமியையும் கெஞ்ச ஆரம்பித்தனர். மூக்கனின் காதில் கணேசன் ரகசியமாக ஏதோ சொன்னான். பலமாகத் தலையை ஆட்டிய மூக்கன், "பாட்டுலுதான் வேணும்" என்று சொன்னவன், "நீ போயி கந்தசாமி வாத்தியக் கொண்டா. நாங்க முன்னால போறம்" என்று சொல்லவிட்டு மூக்கன் பெரிய சாமியை இழுத்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தான்.

கணேசனுக்குப் பாதி உயிர் வந்தது மாதிரி இருந்தது. கந்தசாமி ஆசிரியரை எங்கே போய்த் தேடுவது என்று குழம்பிக்கொண்டு நின்றபோது, ஆசிரியரே சாராயக் கடைக்கு வருவது தெரிந்ததும் அவரை நோக்கிக் கணேசனும் அவனுடைய கூட்டாளிகளும் ஓடினார்கள். விசயத்தைக் கேட்டதுமே ஆசிரியர் பதறிப்போனார். "எதுவா இருந்தாலும் காலயிலெ பேசிக்கலாமின்னு பேசி முடிங்க. நான் ஒங்கள வந்து தனியா பாக்குறன்" என்று கணேசனோடு சேர்ந்துகொண்டு மற்ற பையன்களும் சொன்னார்கள். சரி என்பதுபோல் தலையை ஆட்டிவிட்டு ஆசிரியர் சாமி இருக்கும் இடத்திற்கு ஓட ஆரம்பித்தார். அவரோடு கணேசனும் அவனுடைய கூட்டாளிகளும் ஓடினார்கள். என்ன நடக்குமோ என்ற கவலையில் அவர்களோடு சேர்ந்துகொண்டு முருகனும் பாண்டியனும் ஓடினார்கள்.

"வெளியூர்க்காரங்க வந்திருக்கிற நேரத்தில சாமியத் தெருவுல போட்டுவச்சி வேடிக்கை காட்டுனா நம்பள எவன் மதிப்பான்" என்று சொல்லிப் பஞ்சாயத்தார்கள் சண்டையைக் கட்டுப்படுத்த முயன்றனர். கூட்டம் இரண்டு பிரிவாகப் பிரிந்து கத்திக்கொண்டிருந்தது. கந்தசாமி ஆசிரியரும் தன்னால் முடிந்தவரை சண்டையை நிறுத்த முயன்றார். சண்டையை மறிக்கப்போன பெண்ணுக்கு மண்டை உடைந்துவிட்டது என்று சொல்லித் தூக்கிக்கொண்டு மூன்று நான்கு பேர் ஓடினார்கள். திருவிழாவுக்கு வந்திருந்த வெளியூர்க்காரர்கள் பலபேர் வந்து சமாதானம் செய்த பிறகுதான் இரைச்சல் லேசாக மட்டுப்பட ஆரம்பித்தது. கொஞ்சம் கொஞ்சமாகப் பஞ்சாயத்துக்காரர்களின் பேச்சு எடுபட ஆரம்பித்தது. முருகனும் பாண்டியனும் பஞ்சாயத்தார்களின் முகத் தோற்றத்தையும் வாய் அசைவுகளையும் கண்கொட்டாமல் பார்த்தவாறு இருந்தனர்.

"சாமி நெலக்கி வந்த பெறவுதான் வீடியோப் படம் போட முடியும்" எனறு கூட்டத்தில் யாரோ ஒரு ஆள் சொன்னான். அவன் சொன்னதைக் கொஞ்சம் பேர் பிடித்துக்கொண்டு, சண்டைபோட்டுக்கொண்டிருந்த இரண்டு பிரிவு ஆட்களையும் ஏளனமாகப் பேச ஆரம்பித்தனர். இப்போது அந்த அடத்தில் மூன்று பிரிவாகிவிட்டது. ஒவ்வொரு பிரிவு ஆட்களும் மற்ற பிரிவினரைத் திட்டிக்கொண்டிருந்தனர். நேரமாக நேரமாக மூன்றாவது பிரிவுக்குப் பலம் சேர்ந்துகொண்டிருந்தது. அதனால் சண்டைபோட்டுக்கொண்டிருந்த இரண்டு பிரிவினரும் வேகத்தைக் குறைத்துக்கொள்ள ஆரம்பித்திருந்தனர். வேகம் குறைந்தாலும் வீம்பை விடவில்லை. "பஞ்சாயத்தக் கூட்டி இதுக்கு முடிவு பண்ணாம வுட முடியாது" என்று இரண்டு பிரிவும் கொஞ்சம் இறங்கிவந்ததால், அந்த இடத்திலேயே பஞ்சாயத்து ஆரம்பித்தது. பெருமாளும் கதிரேசனும் நடந்த விசயத்தைச் சொல்ல ஆரம்பித்தனர்.

"மத்த பஞ்சாயத்து மாரி இதெ விடிய விடியப் பேச முடியாது" என்று மூக்கன் சொன்னான்.

"வராத வெள்ளம் வந்தாலும் சாமிய நடுத்தெருவுல எறக்கி வச்சது மகா குத்தம். சாமி குத்தமாயிட்டா ஊருக்குல்ல கெடும வரும். அதனால் சாமிய எறக்கி வச்ச குத்ததுக்காகக் குத்தப் பணம் கட்டணும்" என்று கந்தசாமி ஆசிரியர் சொன்னார். மறு நொடியே எகிறிக் குதித்த கதிரேசன், "குத்தப் பணம் கட்டுனா மட்டும் சாமியோட கோவம் தீந்துடுமா? தனித்தனி ஊட்டுக்கு வல்லன்னு ஏன் மறிச்சாங்க? ஒரு ஆள்கூட நடக்க முடியாத சந்துக்கெல்லாம் சாமி எப்பிடிப் போவும்?" என்று சொல்லிக் கத்தினான். அவன் சொல்வதில் நியாயம் இருந்தாலும் கூட்டத்தில் வாயைத் திறந்து ஒரு ஆள்கூடப் பேசவில்லை. "சத்தம் போடாதீங்க" என்று கூட்டத்தைப் பார்த்துப் பஞ்சாயத்தார்கள் கத்த மட்டுமே செய்தனர்.

"ஒரு ரூவாவா இருந்தாலும் குத்தப் பணம் கட்டித்தான் ஆவணும்" என்றான் பெரிசாமி.

"அப்படின்னா மறிச்சவன் மொதல்ல கட்டட்டும். அப்புறமா நான் கட்டுறன்" என்று வீம்பாகச் சொன்னான் கதிரேசன்.

"என்னா மசுருக்கு நாங்க கட்டணும்? சாமியத் தூக்கிக்கிட்டு வந்திருந்தா நாங்க ஏன் மறிக்கப்போறம்?" என்று காட்டுக் கத்தலாகக் கத்தினான் பெருமாள். அவனோடு சேர்ந்துகொண்டு மூன்று நான்கு பேரும் கத்தினார்கள்.

"நீங்க கட்ட முடியாதின்னா நாங்களும் கட்ட முடியாது. யாரு என்னாப் பண்றாங்கின்னு பார்த்துப்புடலாம்" என்றான் கதிரேசன்.

"மறிச்சதும் தப்பு; எறக்கி வச்சதும் தப்பு" என்றார் கந்தசாமி ஆசிரியர்.

"ரெண்டும் எப்பிடி தப்பாவும்?" பெருமாள் கேட்டான். வாக்குவாதம் முட்டிற்று. பஞ்சாயத்தார்கள் செய்வதறியாது திகைத்தனர். அந்த நேரத்தில் அங்கு வந்த வீடியோக்காரன் கணேசனைத் தனியாகக் கூப்பிட்டு, "நேரமாவுது தெரியலியா? மூணு படத்தெ எப்பிடி ஓட்டுறது? நேரமானா நான் பொறுப்பில்ல" என்று சொன்னான். அவன் சொன்னதைக் கணேசன் பஞ்சாயத்தார்களிடம் சொன்னான். "படம் என்னப்பா பெரிய படம்? ஊரே ரெண்டுபட்டுக் கெடக்குது. இந்த நேரத்திலெ படம் கிடம்ன்னுகிட்டு" என்று பஞ்சாயத்தார்கள் கணேசனை முறைத்தனர். அவனுடைய முகம் வாடிப்போனதைப் பார்த்த முருகனுக்கு வருத்தமாக இருந்தது. பஞ்சாயத்துக்காரர்கள் பஞ்சாயத்தை எப்போதுதான் முடிப்பார்களோ என்று எரிச்சல்பட்டான்.

வீடியோக்காரன் கணேசனிடம் சொன்ன விசயத்தைப் பலரிடமும் சொல்ல ஆரம்பித்தான். அவன் சலித்துக்கொண்டதைப் பார்த்த பல பேர் "இந்த ஊரு பஞ்சாயத்தே வயவய கொயகொயதான். கோயி கூப்பிட்டாத்தான் வாயவே தொறப்பானுவோ" என்று பஞ்சாயத்தார்களைத் திட்டினர். நேரமாக நேரமாக, பஞ்சாயத்தை முடிக்கச் சொல்லி முனகுபவர்களின் எண்ணிக்கை பெருக ஆரம்பித்தது. வீடியோக்காரனைச் சுற்றிக் கூட்டம் சேர ஆரம்பித்திருந்தது. அந்தக் கூட்டத்தில் முருகனும் பாண்டியனும் நின்றுகொண்டிருந்தனர்.

வீடியோ படம் போடுவதற்கு நேரமாகிறது என்று சொல்லிக் கூட்டத்தில் சலசலப்பு உண்டாயிற்று. அதனால் எரிச்சலடைந்த பஞ்சாயத்தார்கள் எகிறிக் குதிக்க ஆரம்பித்தனர். பெருமாளையும் கதிரேசனையும் அவர்களோட ஈடு சேர்ந்தவர்களையும் கண்டிக்கிற விதமாகப் பேச ஆரம்பித்தனர். கூட்டத்திலிருந்தவர்களும் பஞ்சாயத்தார்கள் சொல்வதுதான் சரி என்று பேச ஆரம்பித்தனர். அதனால் "மொதல்லியே ஏன் சாமி வல்லெ" என்று கேட்டுக்கொண்டிருந்தவர்கள் இப்போது கொஞ்சம் இறங்கி வந்து, "சாமி இன்னிக்கும் வரணும். அதோட தெனுமும் வரணும். முடியாதின்னா காலயிலெ பஞ்சாயத்த கூட்டி முடுவு சொல்லணும். இல்லன்னா போலீஸ் ஸ்டேசனில் பிராது மனுதான் எங்க ஆளுவோ கொடுப்போம்" என்று சாமியை மறித்தவர்கள் சொன்னார்கள். அவர்கள் சொன்னதேபோதும் என்று கணேசன் பஞ்சாயத்தை முடிக்கச் சொன்னான். "சாமியெ நடுத்தெருவுல போட்டு வச்சியிருக்கிறது தெய்வக் குத்தமாயிடும். அதனால இப்ப சாமியத் தூக்குவம். காலயிலெ பஞ்சாயத்தக் கூட்டி முடிவு பண்ணிக்கலாம்" என்று சொல்லிக் கந்தசாமி ஆசிரியர் பெருமாளோடு சேர்ந்தவர்களையும் கதிரேசனோடு சேர்ந்தவர்களையும் சமாதானம் செய்ய ஆரம்பித்தார். அந்த நேரத்தில் இதுதான் சமயம் என்று கணேசனும் அவனோடு சேர்ந்து மைனர் பையன்களும் பட்டென்று சாமியைத் தூக்கினார்கள். அதற்காகவே காத்திருந்தவர்கள் மாதிரி முருகனும் பாண்டியனும் "அரோகரா" என்று சொல்லி உற்சாகமாகக் கத்தினார்கள்.

கணேசன் சாமியைத் தூக்கிக்கொண்டு மூன்று வீடுவரைதான் வந்தான். அதற்குள் வீடியோக்காரன் அவனைத் தேடிக்கொண்டு வந்துவிடவே வேறு ஒரு பையனிடம் சாமியைத் தோள் மாற்றிவிட்டு, வீடியோக்காரனுடன் போனான். வீடியோக்காரனைக் கண்டதும் சாமி மிரமனையில் வந்துகொண்டிருந்த சிறு பையன்கள் வீடியோக்காரனுடன் ஓடினார்கள். பையன்களின் கூட்டத்தில் முதலில் முருகனும் பாண்டியனும்தான் இருந்தனர்.

"கரண்ட் நிக்காம இருக்கணும். கரண்ட் போயிடுச் சின்னா நான் பொறுப்பில்லெ" என்று வீடியோக்காரன் சொன்னதும் கணேசனுக்குக் கல்லைத் தூக்கித் தலையில் போட்டதுபோல இருந்தது. மின்சாரம் நின்று படம் போடமுடியாமல் போய்விட்டால் ஊர்க்காரர்கள் அடித்தே கொன்றுவிடுவார்களே என்று அரண்டுபோய் எதிர் ரசிகர் மன்றத்துக்காரர்கள் ஏதாவது செய்வார்களோ என்று சந்தேகப்பட்டான். மின்சாரம் நிற்காமல் பார்த்துக்கொள்வது உன்னுடைய பொறுப்பு என்று முருகேசன் என்பவனை அனுப்பிய பிறகுதான் ஓரளவு அவனால் மூச்சுவிட முடிந்தது. முருகனும் பாண்டியனும் மின்சாரம் நின்றுவிட்டால் படம் பார்க்க முடியாதே என்று கவலைப்பட ஆரம்பித்தனர்.

கோவிலுக்கு முன் வந்த கந்தசாமி ஆசிரியர் கணேசனைத் தனியாக அழைத்துக்கொண்டுபோய் "பாட்டுலு என்னாச்சு?" என்று கேட்டார். "நீங்க ஊட்டுக்குப் போங்க. பின்னாலியே பாட்டுலோட வரன்" என்று கணேசன் சொன்னான். அவன் சொன்னதை அவர் காதில் போட்டுக்கொள்ளவில்லை. நச்சரிக்க ஆரம்பித்தார். ஏற்கெனவே நல்ல போதையில்தான் அவர் இருந்தார். போதையில் இருந்ததால் சொன்னதையே சொல்லிக்கொண்டிருந்தார். கணேசன் தன் சட்டைப் பையைப் பார்த்தான். வெறும் ஐந்து ரூபாய்தான் இருந்தது. அவனோடு இருந்த மற்ற பையன்களிடம் கேட்டுப் பார்த்தான். எல்லாரும் வெறும் ஆட்களாகவே இருந்தனர். பணம் கிடைக்காததால் மீண்டும் ஆசிரியரைச் சரிகட்ட முயன்றான். அவர் ஓயாமல் "நேரமாவுது" என்பதையே திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தார். அந்த நேரத்தில் பஞ்சாயத்துக்காரர்கள் மூக்கனும் பெரியசாமியும் வந்து சேர்ந்தனர். வந்த வேகத்திலேயே 'கோட்டரு என்னாச்சு?' என்று கேட்டனர். பதில் சொல்ல முடியாமல் தவித்த கணேசனின் பார்வையில் முருகன் பட்டதும் "இருங்க வரன்" என்று சொல்லிவிட்டு முருகனை அழைத்துக் கொண்டு போய் "ராணி ஊட்டுல இருந்தா நான் வரச் சொன்னேன்னு சொல்லுடா" என்று சொன்னான். "எங்க?" என்று முருகன் கேட்டான். "கோவுலுக்கு" என்று சொல்லி விட்டு மீண்டும் கந்தசாமி ஆசிரியரிடம் போனான் கணேசன்.

முருகனுக்கு சந்தோசத்தில் தலைகால் புரியவில்லை. தன் அக்காவைக் கணேசன் அழைத்துவரச் சொன்னதே அவனுக்குப் பெருமை தருவதாக இருந்தது. பூரிப்பில் சிட்டாகப் பறந்து ஓடினான் வீட்டுக்கு. வாசலில் உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்த ராணியைப் பார்த்ததும் அவனுடைய சந்தோசம் கூடிற்று. ஓடி வந்த வேகத்திலேயே ராணியிடம் விசயத்தைச் சொன்னான். மறு நொடியே "சீக்கிரம் வா" என்று சொல்லி அவளுடைய கையைப் பிடித்து இழுக்க ஆரம்பித்தான். அதுவரை சாதாரணமாக இருந்த ராணி திருடி மாதிரி சுற்றுமுற்றும் பார்த்தாள். வீட்டுப் பக்கம் பார்த்தாள், ரகசியமான குரலில் "எங்கடா?" என்று கேட்டாள். "கோவுலுக்குத்தான் வா" என்று அலுத்துக்கொண்டான் முருகன். அவனுடைய அவசரத்தைப் புரிந்துகொள்ளாதவள் மாதிரி, "போடா வரன்" என்று சொன்னாள். முருகனுக்குக் கோபமும் எரிச்சலும் உண்டாயிற்று. "இப்பியே வா" என்று சொல்லிக் கட்டாயப்படுத்த ஆரம்பித்தான். "நீ முன்னால போ. நான் பின்னால வரன்" என்று குசுகுசுத்தவள் சாப்பிட்டதும் சாப்பிடாததுமாக தட்டை எடுத்துக்கொண்டு வீட்டுக்குள் போனாள். ராணியினுடைய செய்கை முருகனுக்கு எரிச்சலை உண்டாக்கிற்று. ஆத்திரத்தில் தரையில் எட்டி உதைத்தான். அந்த நேரத்தில் வீட்டுக்குள்ளிருந்து வெளியே வந்த கம்சலை, "சோறுகூடத் திங்காம எங்கடா பயல சுத்திட்டு வர? போயி சோத்தத் தின்னு" என்று சொன்னதைக் காதில் வாங்கிக்கொள்ளாமல் வேகமாகக் கோவிலுக்கு நடந்தான்.

"விடியுறதுக்குள்ளார மூணு படத்தெயும் எப்பிடியாச்சும் ஓட்டிப்புடு" என்று வீடியோக்காரனிடம் கணேசன் சொல்லிக்கொண்டிருந்தான். கோவிலுக்கு வந்த முருகன், விசயத்தை எப்படிக் கணேசனிடம் சொல்வது என்று தயங்கினான். ராணியின் மீது வெறுப்பு உண்டாயிற்று. ஏதேச்சையாகத் திரும்பிய கணேசன் முருகனிடம் வந்து, "என்னடா ஆச்சி?" என்று குசுகுசுவென்று கேட்டான். "வரன்னுச்சு" என்று மொட்டையாகச் சொன்னான். "இருங்க வரன்" என்று சொல்லிவிட்டுக் கணேசன் கோவிலுக்குப் பின்புறமாக வேகமாகப் போனான்.

ராணிக்குக் காலை ஊன்றி நடக்க முடியவில்லை. ஊரே கூடியிருக்கும் நேரத்தில் அதுவும் கோவிலுக்கு வரச்சொல்லி இருக்கிறானே என்று கணேசன்மீது எரிச்சல்பட்டாலும் வேறு வழியில்லாமல் என்ன பிரச்சினையோ என்ற எண்ணத்தில் கோவிலுக்குப் பின்புறம் வந்து நின்றாள். ஒரே இடத்தில் நின்று கொண்டிருந்தால் பார்ப்பவர்கள் ஏதாவது நினைத்துக் கொள்வார்கள் என்று நினைத்தவள் யாரையோ தேடிக்கொண்டு வந்ததுபோலச் சாலாக்குக் காட்டினாள். கோவிலுக்கு முன் பக்கம் நான்கு ஐந்து ஆட்களோடு கணேசன் பேசிக்கொண்டிருப்பது தெரிந்தது. அவனுடைய கண்ணில் படும்படியாக இரண்டு முறை கோவிலுக்கு முன்பக்கமாகப் போய்விட்டு வந்தாள். வரும்போது கணேசன் வருகிறானா என்று பார்த்தாள். அவன் வருவது தெரிந்ததும் ஒரே இடத்தில் நிற்காமல் மெதுவாக நடக்க ஆரம்பித்தாள். பின்னாலேயே வந்த கணேசன் சன்னமான குரலில் "பணம் ஏதாச்சும் வச்சியிருக்கியா?" என்று கேட்டான்.

"எனக்கு எப்பிடிப் வரும் பணம்?"

"எப்பிடியாச்சும் நூறு ரூவா கொண்டா. காலயில தந்துடலாம். பெரிய சிக்கல்ல மாட்டிக்கிட்டன்."

"ராத்திரியில போயி யாருகிட்டெ கேக்க முடியும்?"

"என்ன செய்வியோ தெரியாது, பணம் வந்தாவணும். இல்லன்னா என் தலை தப்பாது. எதயாவது அடவு வை. உன்னத்தான் நம்பி இருக்கன். யாருகிட்டெயாவது கொடுத்துவுடு" என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே "டே கணேசா" என்று கூப்பிட்டவாறு மூக்கன் வந்துக்கொண்டிருப்பது தெரிந்ததும் சட்டென்று திரும்பி நடக்க ஆரம்பித்தான் கணேசன். திரும்பிக் கூடப் பார்க்காமல் நேரே வேகமாக நடக்க ஆரம்பித்தாள் ராணி.

பாண்டியனைத் தேட ஆரம்பித்தான் முருகன். எங்கு தேடியும் அவனைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அந்த நேரத்தில் செல்வம் வந்து விளையாடக் கூப்பிட்டான். எடுத்த எடுப்பிலேயே வரவில்லை என்று முருகன் சொன்னான். அதற்குக் காரணம் செல்வம் பாய் வைத்திருந்ததுதான். எவ்வளவு கெஞ்சியும் அவனோடு சேராமல் பாண்டியனை மீண்டும் தேட ஆரம்பித்தான். அவன் கிடைக்காத வெறுப்பில் கோபத்துடன் வந்து கோவில் திண்ணையில் உட்கார்ந்தான் முருகன்.

"என்னா படம் காட்டப்போறானுவளாம்?"

"அந்தக் கருமத்தை யாரு கண்டா?"

"இந்த வருச திருநாவுல ஒரு நாளு கூத்துக்கூட இல்லியா?"

"இல்லியாட்டம் இருக்கு."

"கயிதூரு செடலு செட்டப் போட்டிருக்கலாம். அவளோட ஆட்டம் பகரா இருந்திருக்கும்."

"கோவேறி கொண்டாப்ல இப்ப எல்லா ஊருலயும் வீடியோ படம்தான் காட்டுறானுவோ."

"தடி ஊன ஆரம்பிச்சதிலிருந்து ஊரு நாட்டுல என்னா நடக்குதின்னு தெரிய மாட்டங்குது."

"தெரிஞ்சு என்னா பண்ணப்போற? பீ பேளவே சூத்தால நவுந்து போற காலத்திலெ."

"இப்ப ஏன் சொல்ல மாட்ட? எங்காலத்தில் எங்க வகயிறாவுக்கு நாந்தான் கொத்துக்காரன். திருநா போட்டா, காப்பு கட்டுறதிலிருந்து கூத்தாடிக்குப் பாக்குவைக்கிறது, சாமி செலவு வாங்குறது வரைக்கும் நாந்தான் தலகர்த்தனா இருந்து செய்வன். நம்ப வட்டாரத்துக்கே மொதல்ல செடலு செட்டெ கொண்டாந்து நம்ம ஊருல ஆட வச்சதே நாந்தான். அவ பாடுனா எப்பிடி இருக்கும் தெரியுமா? அடடா, எப்பேர்ப்பட்ட ஆட்டக்காரி. அவளோட ஆட்டத்தப் பாக்க ரெண்டு கண்ணு பத்தாது. மொகவாட்டமான பொம்பள, அவளப் பாத்தா பசி எடுக்காது. அவ வந்து நம்ப ஊருல ஆடி ரெண்டு மூணு வருசம் இருக்காது?"

"போன வருசம்கூட அவதான் வந்து ஆடுனா. ஒனக்குத்தான் கண்ணு தெரியாதே. நீ எதுக்கு வந்து குந்தியிருக்கிற? படம் பாக்கவா?"

"கண்ணு இல்லன்னா மத்தது இல்லியா?"

முருகனுக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்த இரண்டு கிழவர்கள் எதையெதையோ பேசிக்கொண்டிருந்தனர். அவர்கள் பேசியதில் பாதிகூட அவனுக்குப் புரியவில்லை. அவனுடைய கவனம் எல்லாம் பாண்டியன் தென்படுகிறானா என்பதில்தான் இருந்தது. சாமி மிரமனை முடிந்து கோவிலுக்கு அருகில் வருவது தெரிந்ததும் பட்டென்று இறங்கி ஓடினான்.

காலம்காலமாகச் சாமியை இறக்கிவைக்கிற இடத்தில் இப்போது தொலைக்காட்சிப் பெட்டியை வைத்துவிட்டதால், சாமியைத் தூக்கிக்கொண்டு போய்க் கோவிலுக்குப் பின்புறம் வைத்தார்கள். சாமி நிலைக்கு வந்துவிட்டது தெரிந்ததும் தொலைக்காட்சிப் பெட்டிக்கு அருகில் இடம் பிடிக்க நிறைய சனங்களும் பிள்ளைகளும் ஓடினார்கள். அந்தக் கூட்டத்தில் முதல் ஆளாக ஓடியவன் முருகன்தான்.

சாமி நிலைக்கு வந்த சற்றைக்கெல்லாம் வீடியோக்காரன் படத்தைப் போட்டுவிட்டான். தொலைக்காட்சிப் பெட்டியில் படம் தெரிய ஆரம்பித்ததும் கூட்டத்தில் பலத்த கைதட்டல் எழுந்தது. பிள்ளைகள்தான் அதிகமாகக் கை தட்டினார்கள். முருகன் உற்சாகம் பொங்கக் கை தட்டியதோடு சீழ்க்கையும் அடித்தான். சிறிது நேரம் வரைதான் அவனால் உற்சாகமாகப் படத்தைப் பார்க்க முடிந்தது. திடீரென்று உயரமான ஆள் ஒருவன் வந்து அவனுக்கு முன்னால் உட்கார்ந்துகொண்டதால் படம் சுத்தமாகத் தெரியவில்லை. எக்கி எக்கிப் பார்த்தான். ஆட்கள் நெருங்கிக் கொண்டு உட்கார்ந்திருந்தால் நகர்ந்து உட்காரவும் முடியவில்லை. இதற்கே தொலைக்காட்சிப் பெட்டிக்குச் சற்றுத் தள்ளிதான் உட்கார்ந்திருந்தான். நேரமாக நேரமாகக் கூட்டம் கூடிக்கொண்டிருந்தது. புதிதாக வந்தவர்கள் தொலைக்காட்சிப் பெட்டிக்குப் பக்கத்தில் உட்கார முயன்றதால் உட்கார்ந்திருந்தவர்கள் கொஞ்சம் கொஞ்சமாகப் பின்னுக்கு நகர வேண்டியிருந்தது. முருகன் ரொம்பவும் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டான். அவனுடைய சாக்கில் யார் யாரோ உட்கார்ந்திருந்தார்கள். எல்லாவற்றையும்விடப் படம் சுத்தமாகத் தெரியவில்லை என்பதைத்தான் அவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அழுகை பொங்கிக்கொண்டு வந்தது.

"யாண்டா அயிதுகிட்டு இருக்கிற?" என்று கேட்டுக்கொண்டே வந்து, மற்றவர்களை லேசாக நகர்ந்து உட்காரச் சொல்லிவிட்டு முருகனுக்குப் பக்கத்தில் உட்கார்ந்தாள் ராணி. படம் தெரியவில்லை என்றான். அவனைத் தூக்கி மடியில் உட்காரவைத்துக் கொண்டாள். படம் கொஞ்சம் தெரிந்தது. திடீரென்று சாக்கு ஞாபகம் வந்தது "சாக்கு புடுங்கு" என்றான். சாக்கில் உட்கார்ந்திருந்தவர்களை நகரச் சொல்லிவிட்டுச் சாக்கை எடுப்பதற்குள் ராணிக்குப் போதும் போதும் என்றாகிவிட்டது. தொலைக்காட்சிப் பெட்டிக்குப் பக்கத்தில் பாண்டியன் உட்கார்ந்திருந்ததைப் பார்த்ததும் "முன்னாடி போவணும்" என்று சொன்னான். "முன்னால போவ முடியாது. எடம் எங்க இருக்கு ஒக்கார? மீறிப்போனா சனங்கதான் வுடுவாங்களா? மின்னால போயிட்டா ஒண்ணுக்கு வந்தா போவ முடியாது" என்று சொன்ன ராணியின் பேச்சு முருகனுக்கு ருசிக்கவில்லை.

ராணியின் மடியில் உட்கார்ந்து பார்க்கும்போது படம் ஓரளவு தெரிந்தது. கொஞ்சம் நேரம்தான் படம் பார்த்திருப்பான் முருகன். திடீரென்று அவன்மீது சிறு கல் ஒன்று வந்து விழுந்தது. சிறிது நேரம் கழித்து மீண்டும் கல் வந்து விழுந்தது. படம் பார்க்கிற உற்சாகத்தில் ஏழு எட்டுக் கற்கள் வந்து விழுந்தவரை கவனமில்லாது இருந்த முருகன் சற்றுப் பெரிய கல் விழுந்தபோதுதான் பார்த்தான். மீண்டும் அவனுடைய கவனம் படம் பார்ப்பதில் குவிந்தது. மீண்டும் மீண்டும் கற்கள் வந்து விழவே சந்தேகப்பட்ட முருகன் ராணியைப் பார்த்தான். பிறகு சுற்றுமுற்றும் பார்த்தான். எல்லாரும் தொலைக்காட்சி பெட்டியையே பைத்தியம் மாதிரி பார்த்துக்கொண்டிருந்தது தெரிந்தது. மீண்டும் படம் பார்க்க ஆரம்பித்தான். திரும்பவும் கல் வந்து விழுந்தது. எரிச்சலைடைந்த முருகன் "எந்த ஒக்கால ஒழியோ எம்மேல கல்லைப் போடுறான்" என்று சொல்லித் திட்டினான். அவனோடு படிக்கிற பையன்கள்தான் யாரோ வேண்டும் என்றே அவன்மீது கல்லை விட்டெறிந்ததாக நினைத்தான். கல் விழும் போது ராணி ஏன் நமுட்டுச் சிரிப்புச் சிரித்தாள் என்பதுதான் அவனுக்குப் புரியவில்லை.

முருகன் ஒரு பத்து நிமிடம்தான் நிம்மதியாகப் படம் பார்த்திருப்பான். மீண்டும் பாக்குத் தடிமன் உள்ள கற்கள் வந்து விழ ஆரம்பித்ததும் திரும்பிப் பார்த்தான். உட்கார்ந்திருந்த ஆட்களுக்குப் பின்னால் நிறைய மைனர் பையன்கள் நின்றுகொண்டிருப்பது தெரிந்தது. அந்தக் கூட்டத்தில் கணேசனும் நின்று கொண்டிருந்தான். அவன் கல்லைப் போட்டிருப்பானோ என்று முதலில் சந்தேகப்பட்டான். அவன் அவ்வாறு செய்யக்கூடிய ஆளில்லை என்று தன்னையே சமாதானம் செய்துகொண்டான். நின்றுகொண்டிருந்தவர்களில் யாரோ ஒரு ஆள்தான் கல்லைப் போட்டான் என்பது முருகனுக்குத் தெளிவாகத் தெரிந்தது.

நன்றாகப் படம் பார்த்துக்கொண்டிருந்த ராணி திடீரென்று, "ஐயோ என் தோட்டக் காணுமே" என்று சொல்லி, தோடுகளைத் தேட ஆரம்பித்தாள். "ரெண்டு தோட்டயுமா காணும்?" அதிசயமாக இருக்கே" என்று சொல்லி ராணிக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்த ஏழு எட்டுப் பேர் தரையில் தோடுகள் கிடக்கின்றனவா என்று பார்த்தார்கள். தோடுகள் காணாமல்போன செய்தி கூட்டத்தில் பரவ ஆரம்பித்தது.

"இன்னிக்கித்தான் ஆசயா எடுத்துக் காதுல போட்டன். அதுக்குள்ளார காணாம போயிடிச்சே எங்கம்மாக்காரிக்கி நான் என்னா சொல்லுவன்" என்று சொல்லி அழுது புலம்ப ஆரம்பித்தாள் ராணி. பக்கத்தில் உட்கார்ந்திருந்த ஆண்களும் பெண்களும் "ஒரே நேரத்திலெ எப்படி ரெண்டு தோடும் கயிண்டு விழுந்துடும்" என்று கேட்டனர். ராணி காது கேட்காதவள் மாதிரி மண்ணைக் கிண்டித் தோடுகள் கிடக்கிறதா என்று பார்ப்பதில்தான் மும்முரமாக இருந்தாள். படம் பார்க்கத் தொந்தரவு செய்யாதே என்று ஒன்றிரண்டு பேர் முறைத்தனர். ராணிக்குத் தோடுகளைத் தேடவும் முடியவில்லை. படம் பார்க்கவும் முடியவில்லை. சிறிது நேரத்தில் மீண்டும் கல் வந்து முருகன்மீது விழுந்தது. நின்றுகொண்டு படம் பார்த்தவர்களின் பக்கம் அவன் திரும்பிப் பார்த்தான். பல பேருக்குக் கேட்கிற மாதிரி, "இங்கியே இருடா தம்பி, ஊட்டுல போயித் தேடிப் பார்த்துட்டு வரன்" என்று சொல்லிவிட்டு ராணி எழுந்து கூட்டத்தை விட்டு வெளியே போனாள்.

ராணி போன பிறகு முருகன்மீது ஒரு கல்கூட வந்து விழவில்லை. நின்றுகொண்டு படம் பார்த்த கூட்டத்தில் கணேசனையும் காணவில்லை.

n n n

கூட்டத்தை விட்டு வெளியே வந்த ராணி ஆட்கள் யாரும் வருகிறார்களா என்று பார்த்துக்கொண்டே நடந்தாள். பின்னாலேயே வந்த கணேசன், "சீக்கிரம் வா" என்று சொல்லிவிட்டு வேகமாக முன்னால் போனான். ராணி தயங்கித் தயங்கி நடந்து கொண்டிருந்தாள்.

தெருவைத் தாண்டிப் பீக்கருவை அடர்ந்திருந்த இடத்தை நோக்கி நடந்துகொண்டிருந்த ராணிக்குப் பயத்தில் உயிரே போய்விடும் போலிருந்தது. ஒவ்வொரு அடியையும் நெருஞ்சி முள்ளின் மீது வைப்பது மாதிரி வைத்து நடந்தாள். கணேசன் வரச் சொன்னதற்குத் தலையை ஆட்டியது தவறு என்று இப்போது நினைத்தாள். திரும்பி வீடியோ படம் காட்டுகிற இடத்திற்குப் போய்விடலாமா என்று யோசித்தாள். ஆனாலும் அவளுடைய கால்கள் கணேசன் சொன்ன இடத்தை நோக்கி நடந்தவாறு இருந்தன.

தன்னைப் பின்தொடர்ந்து யாராவது வருகிறார்களா என்று பார்த்தாள் ராணி. சந்தேகத்தைப் போக்குவதற்காகச் சிறுநீர் கழிப்பது மாதிரி உட்கார்ந்து எல்லாப் பக்கமும் பார்த்தாள். ஆள் அரவம் இருப்பது மாதிரி தெரியவில்லை. எழுந்து மீண்டும் நடக்க ஆரம்பித்தாள். கணேசனையும் தன்னையும் ஒன்றாக யாராவது பார்த்துவிட்டால் என்ன செய்வது என்று நினைக்கும்போதே அவளுக்கு உடம்பு நடுங்க ஆரம்பித்தது.

கணேசன் இருந்த இடத்திற்கு ராணி வந்து சேர்ந்த கொஞ்ச நேரம்வரை இருவருமே ஒரு வார்த்தைகூடப் பேசிக்கொள்ளவில்லை. இருவருக்குமே உடம்பு லேசாக நடுங்கிக்கொண்டிருந்தது. வாய் உலர்ந்துபோய்விட்டிருந்தது. புதிதாகப் பார்த்துக்கொள்வதுபோல ஒன்றும் பேசிக்கொள்ளாமல் நின்றுகொண்டிருந்தபோது, பாம்பு மாதிரி புதருக்குள்ளிருந்து வெளியே வந்த பூபாலனும் வான்மதியும் ராணியையும் கணேசனையும் பார்த்து ஒரு நிமிடம் திகைத்துப்போய் நின்றுவிட்டனர். மறு நொடியில் வான்மதி ஒரே ஓட்டமாக ஓடிவிட்டாள். சிறிது நேரம் பேசாமல் நின்ற இடத்திலேயே நின்றிருந்த பூபாலன் ராணியிடம் வந்து, "ஊட்டுக்கு வா ஒன்னெ பேசிக்கிறன்" என்று சொல்லிவிட்டு வேகமாகப் போனான். ஒன்றும் பேசாமல் மரம் மாதிரி நின்றுகொண்டிருந்த கணேசன் விருட்டென்று வேறு ஒரு வழியாக ஊர்ப்பக்கம் ஓட ஆரம்பித்தான். மூச்சுவாங்க ஓடிவந்தவன் தெருவுக்குள் வந்ததும் மெல்ல நடக்க ஆரம்பித்தான். பட்டென்று தெரு விளக்குகள் அணைந்ததும் அவனுக்கு உயிரே நின்றுவிட்டதுபோல இருந்தது. கொலை விழுந்துவிட்ட மாதிரி ராணி, பூபாலன், வான்மதி எல்லாரையும் மறந்துவிட்டுக் கோவிலை நோக்கி ஓட ஆரம்பித்தான்.

"அவ்வளவுதான். இனிமே ஒண்ணுமில்லெ" என்று முணுமுணுத்த ராணி மனத்தைக் கல்லாக்கிக்கொண்டு கிழக்கில் நடக்க ஆரம்பித்தாள்.

******

நன்றி: காலச்சுவடு – இதழ் 87, மார்ச் 2007

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்