Feb 27, 2012

பள்ளியில் ஒரு நாய்க்குட்டி – சுந்தர ராமசாமி

(சு.ரா. தனது நோட்டுப் புத்தகத்தில் 22.05.2003 தேதியிட்டு எழுதிவைத்திருந்த கதையின் கரட்டு வடிவம்.)

இருள் விலகுகிற நேரம் ஒரே மாதிரி இருப்பதில்லை. எத்தனையோ வருடங்களாக இந்தப் பள்ளிக்கு அதிகாலை நடக்கப் போய்க்கொண்டிருக்கிறேன். இருந்தும் தரை வெளுக்கும் நேரத்தை என்னால் மனதில் மட்டுப்படுத்திக்கொள்ள முடியவில்லை.

அன்று காலை சரியான நேரம் என்று கணக்கிட்டவாறு நான் வெளியே வந்தேன்.sura1 இருள் அடர்த்தியாக இருப்பதாகத் தோன்றியது. அங்கும் இங்குமாக மனித ஜீவன்களின் நிழல்களின் அசைவாகத் தெரிந்தன. இன்னும் புழுதி கிளப்பும் வாகனங்களின் பாய்ச்சல் ஆரம்பமாகவில்லை. இப்போது அவை முடுக்கப்பட்டுக்கொண்டிருக்கும். நான் மெதுவாக நடக்கத் தொடங்கினேன். இரு சக்கர வண்டிகளில் ட்யூஷன் படிக்கப் போகிற அன்றாடம் பார்க்கக் கிடைக்கிற முகங்கள் நினைவில் வந்தன. பிள்ளையார் கோவில் தாண்டிப் பள்ளியின் கீழ் வாசலுக்குப் போகும் வழியில் நான் அன்றாடம் பார்ப்பவர்கள் எல்லோரையும் பார்த்துவிட முடியும்.

பள்ளிக்கூடத்திற்குள் நடமாட்டம் நிமிஷத்திற்கு நிமிஷம் கூடிக்கொண்டிருந்தது. முகங்கள் தெரியுமளவுக்கு வெளிச்சம் பரவத் தொடங்கிவிட்டது. அரைகுறையாகத் தெரியத்தொடங்கிவிட்டால் முகபாவங்கள்கூடத் துல்லியமாகத் தெரியத் தொடங்குவது வினாடிகளுக்குள் நிகழ்ந்துவிடும் காரியம்போல் இருக்கும்.

நான் இரண்டாவது சுற்று வந்துகொண்டிருக்கும் போதுதான் அந்த நாய்க்குட்டியின் அசைவைக் கவனித்தேன். கண் திறந்ததும் தள்ளாடியபடி நடமாடத் தொடங்கும் பருவம். பிறந்த குழந்தையைக் குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டுப் போய்விடும் தாய்களைப் பற்றி நாளிதழ்களில் வரும் செய்திகள் நினைவுக்குவந்தன. நாய்கள் அப்படிச் செய்யுமா? குட்டி போட்டபின் ஏதேனும் பிரச்னையில் இறந்துபோயிருக்க முடியுமா? அதற்கான சாத்தியம் குறைவு என்றுதான் தோன்றியது. பள்ளிக்கூடக் கட்டடம் நாய்க்குட்டியை மறைக்கும் இடத்திற்கு இதற்குள் நான் வந்திருந்தேன். பின் திரும்பிப் பார்த்தேன் சிமிண்டு ஸ்லாப் போட்டு நிரந்தரமாக மூடிப்போட்டிருந்த கிணற்றுக்குப் பக்கத்தில் செடிபோல் இருந்து வெகு சமீபத்தில் மரம்போல் தோன்றத் தொடங்கியிருந்த வேப்பமரத்தடியில் கால் ஊன்றத் தெரியாமலும் பார்வையால் நிதானிக்கத் தெரியாமலும் தலை தாழ்ந்து கிடக்க நாய்க்குட்டி ஊர்ந்துகொண்டிருந்தது. நடமாடுகிறவர்களின் பாதைக்குள் வராமல் சற்றுத் தள்ளி அது அசைந்துகொண்டிருந்தது. இல்லையென்றால் நடப்பவர்களின் பூட்சுக் காலில் மிதிபட்டுக்கூட அது இறந்துபோய்விடலாம். நடக்கிறவர்களின் மனநிலைகளும் நடை பயில்கிறவர்களின் மனோபாவங்களும் வித்தியாசமானவை என்று எப்போதும் எனக்குத் தோன்றியிருக்கிறது. நடைபயிலுகிறவன் சாதாரண மனிதன் அல்ல என்ற தோற்றம் உருவாகியிருக்கிறது. அவன் விறைப்புடன் இருக்கிறான். அவன் குறிக்கோளைச் சென்றடைவதில் விறைப்புடனும் வேகத்துடனும் இருக்கிறான். அவனுக்கு சுயப் பிரக்ஞை குறைவு. வேகம் கொள்ளும் அவன் உடல் வேகம் கொள்ள ஏதுவாக அவனுடைய மனதை மந்தப்படுத்த வேண்டியிருக்கிறது. பொறிகளின் கூர்மைகளை மட்டுப்படுத்தி உடல் சார்ந்த எல்லாவற்றையும் ஒருசேரத் தேக்கி நடைபயிலும் சாகசத்திற்கு அவன் உரமாக மாற்றுகிறான். இந்த நிலையில் அந்த நாய்க்குட்டிக்கு அதிக ஆபத்திருக்கிறது. அவனுடைய ஒவ்வொரு அடியும் வேகம் கொண்டதாக இருக்கும். எளிய உயிரைக் கொன்றுகொண்டு அதைப் பற்றிய உணர்வே இல்லாமல்போகிறவர்கள் அவர்கள். ஆனால் அவர்களிடமிருந்து நாய்க்குட்டிக்கு ஒரு பாதுகாப்பும் உண்டு. நடப்பவனைப் போல் அவர்கள் தங்கள் சுதந்திரத்திற்கு ஏற்ப நடப்பவர்கள் அல்ல. அவர்களுக்கு மனதில் வரையறுத்துக்கொள்ளப் பாதையுண்டு. அந்தப் பாதையின் அகலத்தைக்கூட அவர்கள் பயன்படுத்திக்கொள்ள விரும்பாமல் தங்கள் காலடிச்சுவடுகள் பட வேண்டிய இடத்தை வரையறுத்து, வரையறுத்த பாதை வழியாக மீண்டும் மீண்டும் நடந்து அந்தப் பாதை உறுதிப்பட்டு இப்போது அப்பாதையை மீறுவது அவர்களுக்குக் குற்ற உணர்ச்சி தரும் காரியமாகவே தோன்றியது. அதனால் அவர்களுடைய பாதைகளில் அபோதத்தினால் நாய்க்குட்டி போகாத வரையிலும் அதற்கு அதிகமான பாதுகாப்புண்டு. இது ஒரு முக்கியமான விஷயம்தான்.

நான் நடந்து முடிந்ததும் நாய்க்குட்டி தண்ணீர்த் தொட்டியின் பக்கம் வந்திருந்தது. அது ஒரு பாதுகாப்பான இடம்தான். தண்ணீர்த் தொட்டியை ஒட்டி இரண்டு வேப்ப மரங்கள் இருந்தன. அவை அகல நிழல் பரப்புபவை. வெள்ளைப் பூக்களையும் மஞ்சள் பழங்களையும் உதிர்ப்பவை. தண்ணீர்த் தொட்டியில் உட்கார்ந்து பார்த்துக்கொண்டிருந்தால், எப்போது ஒரு பூ உதிரும் எப்போது ஒரு பழம் உதிரும் என்று கவனிக்கத் தொடங்கினால் நம் மனதிற்கு மிகுந்த பரபரப்பு ஏற்படும். ஏன் இந்தப் பரபரப்பு ஏற்படுகிறது என்பது வியப்பாக இருக்கும். அப்போது சட்டென்று ஒரு பூ உதிருகிறது. நம் மனக்கணக்கை உடைத்துக்கொண்டு ஒரு பழம் உதிருகிறது. அந்த இடம் பாதுகாப்பானதுதான். ஆனால் நாய்க்குட்டிக்குத் தாய்ப்பால் வேண்டும் அல்லது பாலாவது வேண்டும். இல்லாதவரையிலும் அது பசியில் துடித்து இறந்துபோகும். பசியினால், தாங்க முடியாத பசியினால் சிறுகச் சிறுக அதன் உயிர் விடைபெற்றுக் கொள்ளும் நிகழ்வுக்கு வெளி உலகில் ஏதேனும் மதிப்புண்டா? ஏதும் சலசலப்பை, அதிர்வை, துயரத்தின் ஒரு கணத்தை, செய்ய முடிகிற காரியங்களைக்கூடச் செய்ய முடியாமல் வாழ்ந்துவரும் அவலத்தை அதன் மரணம் ஒரு வினாடியேனும் ஸ்பரிசிக்குமா? அது உயிர்த் துடிப்புக்கொண்டிருக்கிறது. அதன் தாய் அல்லது தகப்பன் அல்லது இருவருமே லட்சணமானவர்களாக இருப்பதாலோ பார்க்க மிக அழகாக இருந்தது. அதன் உருவம், அந்த உருவம் சின்னஞ்சிறு தன்மை வெகுவாகக் கவருகிறது. அதன் தத்தளிப்பும் உலகமறியாத வெகுளித்தன்மையும் மடிந்து தொங்கும் காதுகளும் ஒளிபுகுந்து வெளிப்படும் கண்மணிகளும் நம்மைக் கவருகின்றன.

நான் தண்ணீர்த் தொட்டியில் சிறிது நேரம் உட்கார்ந்துகொண்டிருந்தேன். என் மீதிருக்கும் ஆங்கில, தமிழ் நாளிதழ்களின் பிரிக்கப்படாத இஸ்திரித் தேய்ப்புத் தரும் முறுமுறுப்பு என் நினைவில் படர்கிறது. அவற்றை அன்றாடம் எட்டரை மணிக்குள் படித்து முடித்திருக்க வேண்டும். அதன்பின், என்னைத் துரத்திப் பிடிக்கும் காலம் என்மீது மோதி என்னை வீழ்த்துவதற்கு இடம்தராது நான் பாய்ந்து பாய்ந்து செல்ல வேண்டும். இரவு அல்லது நடுநிசியில் உறக்கம் கண்ணைச் சுழற்ற, இதற்கு மேல் களைப்பைத் தாங்க இயலாது என்ற நிலையில் நான் என்னைக் காலத்திலிருந்து சுருட்டிக்கொள்ள வேண்டியிருக்கிறது. நாய்க் குட்டி அனாதை என்றாலும்கூட அது தட்டுத் தடுமாறுவதும் வெகுளி போல் பார்ப்பதும் எந்தப் பொருளும் இல்லாத அதன் அசைவும் எந்தக் காட்சியையேனும் அது புரிந்துகொள்ளும் என்றால் அந்த விநாடியேனும் அதன் கண்களில் விழும் நிழலைக்கூட அது இன்னும் கண்டடையவில்லை. அது சிறிய உருவம் கொண்டதென்றாலும் மொத்தமாக என் வாழ்க்கையின் போக்கையே குலைத்துவிடக்கூடியது. உண்மையில் அது பயங்கரமான உயிர்தான். எந்த அளவுக்கு அதன் நலனில் நான் பொறுப்பு எடுத்துக்கொள்கிறேனோ அந்த அளவு அது என் சீரான இயக்கத்தைக் குலைக்கக்கூடியது. அது மிக ஆபத்தான ஒரு ஜீவன் என்பதில் சந்தேகமில்லை.

என் மனைவியைப் பற்றி யோசித்தேன். நடைபயிலச் சென்றவர் ஒரு அழகான குட்டியிலும் குட்டியான ஒரு நாயை வலது கையில் ஏந்தி மார்போடு இணைத்துக் கொண்டு அதற்குப் பாதுகாப்பாகவும் பாதுகாப்பின் மீது நாம் கொள்ளும் சிரத்தை அதற்கு வலியாக, மூச்சுத்திணறலாக மாறாமலும் அதை எடுத்துச் செல்கிற போது நாயின் உயிர்ப்பு எடுத்துச் செல்கிறவர்மீது மெல்லிய இன்பத்தின் அலைகளை அவர் உடம்பில் பரவச்செய்துகொண்டிருக்கும். அனாதையான, பேராபத்தில் எந்தக் கணமும் சிக்கிக்கொள்ளக்கூடிய ஒரு ஜீவனை மரணத்தைப் பற்றி எதுவும் அறியாமல் மரணத்தால் ஒரே கணத்தில் நசுக்கப்படும் விபத்தின் விளிம்பில் ஊர்ந்துகொண்டிருப்பது அதற்குத் தெரியாது. இப்போது நாய்க்குட்டியை நான் கவனித்தபோது அதன் மந்தமான பார்வை பின்னகர்ந்து எதையோ தேடும் உணர்வு அதற்குத் தோன்றுவதுபோல் எனக்குப் பட்டது. அது ஒவ்வொரு வினாடியும் வளர்ந்துகொண்டிருக்கும். அது நின்று நிலைப்பதற்கான யோசனைகள் அதன் மூளையிலும் உடம்பிலும் படர்ந்துகொண்டிருக்கும். அதன் வளர்ச்சியை அதிகாலை வானத்திலிருந்து பூமியைப் பார்க்கத்தொடங்கும் சூரிய சக்தியுடன்தான் ஒப்பிட முடியும். இருளை விலக்க அச்சக்தி கொள்ளும் வினாடிக்கு வினாடி உணரவைக்கிற வளர்ச்சி வெயிலை ஊன்றிய பின் நமக்கு உறைப்பதில்லை.

என் மனைவியின் முகம் நினைவுக்குவந்தது. நான் என் நடையை முடித்துக்கொண்டு வீடு திரும்பும்போது அவள் வீட்டு வாசல்படிகளைக் கழுவிவிட்டுக்கொண்டிருப்பாள். இன்று அவள் முன்வாசலைச் சார்ந்த பரபரப்பு முடிந்து இதற்குள் அவள் சமையலறைக்குள் நுழைந்திருக்கக்கூடும். நாய்க்குட்டியை மார்பில் அணைத்துக்கொண்டு வருகிற கணவனைப் பார்த்ததுமே வியப்பும் சந்தோஷமும் கலகலப்பும் துள்ளலும் கொள்ளக்கூடியவர்கள் என்று எண்ணும் சாத்தியம் கொண்ட நண்பர்களின் முகங்களெல்லாம் என் நினைவில் வந்தன. ஒவ்வொருவருக்கும் வியப்பும் துள்ளலும் பரபரப்பும் கத்தலும் ஒவ்வொரு விதம்.

நாய்களைப் பற்றி எத்தனையோ தடவை நானும் என் மனைவியும் பேசிக்கொள்ள நேர்ந்திருக்கிறது. நாயைக் குழந்தைபோல் நேசிக்கிற, குழந்தையைவிட அதிகமாக நேசிக்கிற பெண்களைப் பற்றி அவள் அறியாதவளல்ல. குழந்தைகளுக்கு நாய்க்குட்டி போல் தங்களை மறக்கும் பரவசத்தைத் தரக்கூடிய ஜீவன் எதுவுமில்லை. இப்படிப் பார்க்கும் அது ஒரு விசேஷமான சிருஷ்டி. மனிதனுடன் அவை இணங்கியது மனிதன் பெற்றபேறு. இதெல்லாம் தெரிந்திருந்ததும் அவளுக்குச் சிறிது சங்கடத்தையே, வெளியே சொல்லி யாருடனும் பங்குகொள்ள முடியாத சிக்கலையே உருவாக்கியிருந்தது.

அதனால், நாய்கள் எனக்கும் பிடிக்கும் என்று அவ்வப்போது அவள் சொல்லிக்கொண்டு பிடிப்பதையும் பிடிக்காமல் இருப்பதையும் தனக்குத்தானே உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டியிருந்தது.

நாய் உடம்பில் மேலே வந்து ஏறுவது தனக்குப் பிடிக்கவில்லை என்றும் தன்னால் சகித்துக்கொள்ள முடியாத கஷ்டம் என்றும் சொன்னாள்.

நாய் நம்மிடம் கொண்டிருக்கும் உறவை வெளிப்படுத்தக்கூட நாம்தான் அதற்குக் கற்றுக்கொடுக்கிறோம். இன்னபடிதான் செய்வேன் என்று அது சொல்வதில்லை.

இந்த விஷயம் அவளுக்கும் தெரிந்தது. அவளுடைய சிநேகிதி கறாச்சிப் பசுவின் கற்றுக்குட்டிபோல் ஒரு நாயை வைத்துக்கொண்டிருந்தாள். ஒரு அடுக்குமாடிக் கட்டடத்தில் அந்தக் குடும்பம் குடியிருந்தது. அவளுடைய கணவருக்கும் அவளுக்கும் ஒரே பையன். முன்பின் தெரியாதவர்கள் விசாரித்தால் இரண்டு குழந்தைகள் என்பார்கள். அப்படிச் சொல்வதற்கான தகுதி அவர்களுக்கு இருந்தது. ஸ்கவுட்டை குழந்தை மாதிரிதான் பார்த்துக்கொண்டிருப்பார்கள். டாக்டர் ராமநாதன் வெளியே புறப்பட்டால் அது கார் சாவியை எடுத்துக்கொண்டுபோய்க் கொடுக்கும். செருப்பைத் தூக்கிக்கொண்டுபோய்க் கொடுக்கும். தன்னையும் அழைத்துப் போக வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கும். லிஃப்ட்டில் கூடவே இறங்கிப்போகும். ஆனால் அவர் டை கட்டிக்கொண்டு புறப்பட்டால் அது அவர் பக்கமே வராது. தொலைவில் படுத்து அவரையே பார்த்துக்கொண்டிருக்கும். அதற்கு அவர்கள் வீட்டில் சைவ உணவுதான்.

இவர்களுடன் கமலாவுக்குப் பழக்கம் ஏற்பட்டபின் நாய்களை மனதிற்குள் நேசிக்கும் குணம் அவளுக்கு வந்தது. எவ்வளவு அற்புதமான ஜீவன் என்று சொன்னாள். ஆனால் அவளால் தீர்த்துக்கொள்ள முடியாத பிரச்சினையும் இருந்தது. நாய்கள் தன்னை முகர்ந்து பார்ப்பது தன்னால் சகித்துக்கொள்ள முடிவதில்லை என்றாள்.

அருவருப்பாய் இருக்கிறதா என்று கேட்டேன். அதன் மூக்கில் இருக்கும் ஈரம் என்றாள். அந்த ஈரம்தான் அவளுக்குப் பிடிக்கவில்லை. ராமநாதனிடம் சொன்னேன். முகராமல் இருக்க நாய்க்குக் கற்றுத்தர முடியாது. அப்படியே கற்றுத்தந்தாலும் அது இறந்துபோய்விடும். தன்னைப் பாதுகாத்துக்கொள்ள அதற்குத் தெரியாமல் போய்விடும். அத்துடன் மூக்கில் துளிர்க்கும் ஈரத்தை வற்றவைக்க முடியாது. கூடவும் கூடாது என்றார்.

அப்பேர்ப்பட்ட கொடுமையையெல்லாம் நான் செய்யச் சொல்லவில்லை என்றாள் அவள்.

நாய்க்குட்டி கால்பந்தாட்ட மைதானத்தில் இறங்கியிருந்தது. மைதானத்தில் இறங்கக் கட்டப்பட்டிருந்த படிகளைப் பார்த்துவிட்டு அது நகர்ந்துவிட்டது. தனக்கு என்ன என்ன தெரியும், என்ன தெரியாது என்பதைப் பற்றிய உணர்வு அதற்கு இருக்கிறதுபோலிருக்கிறது. அது படியைத் தவிர்த்துவிட்டுத் தென்பக்கம் சென்றது. அது ஒரு சிறு சரிவு. மெல்ல வழியும் சரிவு. நாய்க் குட்டிக்கு அது சரிவு என்ற பிரக்ஞையில்லை. அது ஒரு நிமிஷம்கூட ஓய்வெடுத்துக்கொள்ளாது அசைந்துகொண்டே இருந்தது. அதன் குறிக்கோள் என்ன என்பதோ அதன் தேடல் எதற்கு என்பதோ இந்த முடுக்கங்கள் அதன் உடலின் எந்தப் பகுதியிலிருந்து அதிர்வுகளாக வெளிப்படுகின்றன என்பதையும் என்னால் நிதானிக்க முடியாமல் இருந்தது. உண்மையில் பெரும் ஆபத்தில் அது இருக்கிறது. எத்தனை விதமான சோதனைகள் என்பதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை. முன்கூட்டிப் பாதுகாப்புத் தேடிக்கொள்வதற்காக நாம் விபத்துகளைப் பலவிதத்தில் கற்பனைசெய்து பார்த்தாலும் நாம் கற்பனைசெய்து பார்க்காத ஒரு விபத்தில் சிக்கிக்கொண்டிருக்கிறோம். தன் இருப்பு நிராயுதபாணியான அபிமன்யுவின் நிலை என்பது அதற்குத் தெரியாது. ஒருவர் என் பக்கத்தில் வந்து நின்றார். என்னுடைய கவனத்தால் கவரப்பட்டவர் அவர். என் பார்வை வழியாக நாய்க்குட்டி நகரும் இடம் அவருக்குத் தெரிந்துவிட்டது. தாயில்லையோ என்று கேட்டார். மிகப் பிரதானமான கேள்விக்கு அவர் நேரடியாக வந்திருந்தார். இவர்கள்மீது வியப்பும் எரிச்சலும் எனக்கு இருந்தன. நான் அதிக அக்கறை தந்து பதில் சொல்ல வேண்டாமென்று யோசித்துக்கொண்டிருந்தபோது நாலாபக்கமும் தலை அதிகம் அசையாமல் சுற்றிப்பார்த்து எங்கும் விரிந்துகிடந்த செம்மண் பரப்பின் வெறுமையை நிதானித்துக்கொண்டு, கழுகு, கருடன் தூக்கிட்டுப் போயிரும் என்றார். உணர்ச்சியின் வாசனைகூட இல்லாமல் இதைச் சொன்னார்.

கீழிறங்கி வந்துகொண்டிருந்த சரிவு மேடுபள்ளமில்லாமல் கால்பந்தாட்ட மைதானத்தில் கரைந்துகொண்டிருந்தது. தெற்கே பார்த்துப் போய்க்கொண்டிருந்த நாய்க்குட்டி தன்னுணர்வு இல்லாமல் வலது புறம் திரும்பி மைதானத்திற்குள் இறங்கிச் சென்றது. இப்போது அதன் தள்ளாட்டம் குறைந்திருந்தது. இவ்வளவு தூரம் நடந்ததிலேயே பல விஷயங்களைக் கற்றுக்கொண்டு விட்டதா? அரை மணி நேரத்தில் தன் தத்தளிப்பையும் தள்ளாட்டத்தையும் அதனால் விரட்டியடிக்க முடிந்துவிட்டதா?

பள்ளியின் முன் ஒரு ஜீப் வந்தது. அதிலிருந்து போலீஸ் உயர் அதிகாரிகள் இறங்கினார்கள். நான் என் கடிகாரத்தைப் பார்த்தேன். ஏழு மணிக்கு ஐந்தாறு நிமிஷங்கள் இருந்தன. இரு சக்கர வாகனங்களில் வினாடிகள் இடைவிட்டுப் பெண் போலீஸாரும் ஆண் போலீஸ§ம் பள்ளிக் கட்டடத்திற்குள் நுழைந்துகொண்டிருந்தனர். இரண்டு சாரிகளிலும் மரங்கள் நின்றுகொண்டிருந்தன. ஒரு சாரியில் பெண் போலீஸார் தங்கள் வாகனங்களையும் எதிர்ச்சாரியில் ஆண் போலீஸார் தங்கள் வாகனங்களையும் நிறுத்திக்கொண்டிருந்தனர். ஏழு மணிக்குள் காவலாளிகள் தங்கள் வரிசையில் நின்று உத்தரவுக்காகக் காத்துக்கொண்டிருந்தார்கள். முதல் உத்தரவு வெளிப்படும் நிமிடத்திற்காகச் செவிகள் கூர்மைப்படுத்தப்பட்டுக்கொண்டிருப்பதுபோல் தோன்றியது.

நாய்க்குட்டி நேராக அந்த இடத்தைப் பார்க்கப் போயிற்று. இப்போது அதன் நகர்வில் அர்த்தமும் பொருளும் வெளிப்பட்டன. மனித வாடை அதைக் கவருகிறது என்று நினைத்துக்கொண்டேன். பூமியின் கெட்டித்தன்மையைச் சோதிப்பது போன்ற பூட்ஸ் கால்களின் முட்டல்களில் வெளிப்படும் சத்தங்களோ போலீஸ் அதிகாரியின் உரத்த குரல்களில் வெளிப்படும் கூப்பாடுகளோ அது பொருட்படுத்தியதாகவே தெரியவில்லை.

நடக்கவந்தவர்கள் எல்லோரும் பிரிந்துபோயிருந்தனர். பிந்தி நடக்க வந்தவர்கள் காவலாளிகளின் மேலேபடுகிற காற்று தம்மீது படிய வேண்டாம் என்பதுபோல் விலகி, பள்ளிக்கூடக் கட்டடத்தைச் சுற்றி வந்துகொண்டிருந்தார்கள். மிகப் பெரிய மைதானத்தின் மையத்தில் நீள் சதுரத்தில் போலீஸ் அணிவகுப்பு. அவர்களின் பின்பக்கத்தை நோக்கி விரைந்துகொண்டிருக்கும் நாய்க்குட்டி. தண்ணீர்த் தொட்டியில் அமர்ந்தபடியே நான் பார்த்துக்கொண்டிருந்தேன்.

நாய்க்குட்டி மிக மோசமான ஆபத்தை நோக்கி விரைவதுபோல் பட்டது. காவலாளிகள் பற்றி எனக்குக் கொஞ்சமும் நல்லெண்ணமில்லை. அவர்களைக் கடின சித்தம் கொண்டவர்கள் என்றும் சாதகமான சூழல் அமைந்தால் எந்தக் குற்றத்தையும் செய்வார்கள் என்பதும்தான் என் எண்ணமாக இருந்தது. சமூக அக்கறை கொண்ட என் நண்பர்களும் அப்படியேதான் கருதினார்கள். ஆனால் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் -அந்தச் சந்தர்ப்பம் எப்பேர்ப்பட்டதாக இருக்கும் என்பது பற்றி என்னால் யோசிக்க முடியவில்லையென்றாலும் -அவர்கள் கண்ணியமாகவும் கருணையுடனும் நடந்துகொள்வார்கள் என்பது என் மனதில் தோன்றிக்கொண்டி ருந்தது. இந்த எண்ணத்தை நான் என் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளவில்லை. நான் சொல்வது உண்மையாக இருக்கக்கூடுமென்று அவர்களுக்குத் தோன்றினாலும் என் கூற்றை மறுத்து என்மீது முத்திரை குத்துவதுபோல் ஏதாவது சொல்வார்கள் என்று நான் பயந்தேன். சுதந்திரத்தின் பரிபூர்ண வெளி என்று நாம் கற்பனை செய்துகொள்கிற இடங்களில்கூட மௌனமான ஒடுக்குமுறைகள் இருக்கின்றன.

காவலாளிகளுக்கும் குட்டிநாய்க்குமான சந்திப்பும் அதைத் தொடர்ந்த உறவும் காவலாளிகளைப் பற்றி நான் கருதும் ஆபூர்வ சந்தர்ப்பம் சார்ந்தே இருக்குமென்று எனக்குத் தோன்றியதால் எந்தப் பதற்றமும் இல்லாமல் இருந்தேன்.

காவலர்களின் கவனமும் கவனமின்மையும் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தின. உத்தரவு பிறப்பிப்பவர்களும் அதை நொடிக்குள் காதில் வாங்கித் தன் உடலில் அமைந்திருந்த ஏதோ ஒரு பொறியைத் தட்டி அணி வகுப்பு அசைவுகளையும் சீரான, ஒன்றில் மற்றொன்று கலந்துவிடுகிற, எல்லாம் ஒன்றாகிவிடுகிற பூட்சின் ஓசையையும் நொடிகளுக்குள் உருவாக்குவதில் அவர்கள் மிகவும் கவனமாக இருந்தார்கள். இரண்டு பூட்சுக் காலின் வரிசைக்குள் நாய்க்குட்டி நிதானமாகச் சென்றுகொண்டிருந்தது. இதை ஒரு கதை என்று கருதுகிறவர்கள் தங்களுடைய தர்க்க அறிவு சார்ந்து அது எப்படிச் சாத்தியம் என்று கேட்பார்கள். படைப்பின் நுட்பங்கள் தமக்கும் கைவசப்பட்டு நிற்கின்றன என்பதில் அவர்களுக்கு உற்சாகம் இருக்கும். ஆனால் இது கதை அல்ல. உண்மையில் நடந்த சம்பவம். பார்க்க நேர்ந்ததை அப்படியே எழுதுகிறேன். நாய்க்குட்டி பூட்சுகளின் வரிசையில் நகர்ந்து முன்பக்கப் போலீஸ் அதிகாரியைப் பார்த்துப் போய்க்கொண்டிருந்தது.

நான் வீட்டுக்குப் புறப்பட்ட பாவனை யாருக்காக மேற்கொள்கிறேன் என்பது தெரியாமல் படியிறங்கி வந்து கால்பந்தாட்ட மைதானத்தின் தெற்குச் சுவரையட்டி 'கோல்' கம்பங்களைத் தாண்டி அடுத்த மைதானத்திற்கு இறங்கும் படிக்கட்டில் மூன்று படிகள் இறங்கி, அகலப் படிகளின் ஓரம் சமச்சீராக இருந்த சிமிண்டுத் திண்ணையில் உட்கார்ந்தேன். அப்போது நாய்க்குட்டி படியோரம் வந்திருந்தது. அந்த நிமிஷம் வரையிலும் எந்தக் காவலரும் கவனித்திருக்கவில்லை. எவர் முகத்திலும் ஆச்சரியமோ புன்னகையோ தோன்றவில்லை. படியை ஒட்டி நாய்க்குட்டி இருந்தது. அதனால் முதல் படியை ஏற முடியாது. இன்னும் சிறு நேரத்தில் அது மிகவும் சோர்ந்துவிடும். அன்று காலை அதன் தாய் அதனுடன் இருந்ததா? பிரசவம் எங்கு நடந்தது, எத்தனைக் குட்டிகள்? இது மட்டும் எப்படித் தனிமைப்பட்டு ஒதுங்க முடியும். தாய் நாய் இனிமேல் வரவே வராதா? அப்படியானால் இதன் கதி என்ன? இப்போது நான் என்ன செய்ய வேண்டும். எல்லாப் பிரச்னைகளும் காலத்தின் நீட்சியில் முடிந்துபோகின்றன. ஒரு சிலவற்றுக்குத் தீர்வு, வேறு சிலவற்றிற்கு முடிவு. எது இந்தக் குட்டியின் மீது கவியப் போகிறது?

நாலைந்து பையன்கள் வெளிச் சுவரைத் தாண்டிப் பள்ளிக்குள் நுழைந்துகொண்டிருந்தார்கள். ஏழாவது வகுப்பு அல்லது எட்டாவது வகுப்புப் படிக்கும் பையன்கள். குளித்துவிட்டுத் தலையை எண்ணெய் போட்டுச் சீவி நெற்றியில் சந்தனப் பொட்டுடன் அம்சமாக வந்துகொண்டிருந்தார்கள். எல்லோருக்கும் ஒரே மாதிரி வெள்ளை அரைக்கைச் சட்டை. காக்கி அரை நிஜார். முதுகில் தொங்கும் பை.

நான்கு பேரும் நின்று நாயைப் பார்த்தார்கள். அவர்களிடம் மிகுந்த சந்தோஷம் வெளிப்பட்டது. சிரிப்பில் உதடுகள் பல் தெரிய விரிந்திருந்தன. மூன்று பையன்கள் தலையைத் திருப்பிப் பார்த்தபடியே நடந்து சென்றுவிட்டார்கள். ஒரே ஒரு பையன் மட்டும் நின்றுகொண்டிருந்தான். நாய்மீது தோழமை உணர்வு கொண்டவன் மட்டுமல்ல, நாய்களைத் தொட்டு எடுத்துக் குளிப்பாட்டி உணவு தந்தவனாகத்தான் அவன் இருக்க வேண்டும்.

நான் விசாரித்தபோது அவன் தன் பெயரைச் சொன்னான். வீடு கல்படித் தெருவில் என்றான். அதன் தாய் எங்கு என்றோ, உடன்பிறப்புகளிடமிருந்து தனியாக இது இங்கு வந்து மாட்டிக்கொண்டது எப்படியென்றோ அவன் யோசிப்பது மாதிரி தெரியவில்லை.

வீட்டுக்குப் போய் ஒரு பையை எடுத்துக்கிட்டுவாறேன் என்றான். புரியாத பாவனையில் நான் அவன் முகத்தைப் பார்த்தபோது, கொண்டுபோக என்றான். நான், எதுவும் சாப்பிட்டிருக்கும் என்று தோன்றவில்லை என்று சொன்னேன். ஒரு பாட்டிலில் பாலும் கொண்டு வருகிறேன் என்றான். போய்விட்டு வர வேண்டும் என்றேன்.

ஒரு நொடியில் என்று சொல்லிவிட்டுக் குத்துக்கால் போட்டு உட்கார்ந்துகொண்டான். அவனுக்கு நாயை லாவகமாகத் தூக்கத் தெரிந்தது. அவன் கைகளில் இருந்த இதம் நாய்க்குட்டிக்கு ஆறுதலைத் தருவதுபோல் தோன்றியது. நாய்க்குட்டி தன் சிறிய தலையை மேலே பார்க்க ஆகாசத்தையோ, அல்லது மரங்களின் கிளைகளையோ பார்ப்பதுபோல வைத்துக்கொண்டிருந்தது. முகம் அழகாக இருந்தது. கண்மணிகளில் ஒளிதோய்ந்த ஈரத்தின் பிரகாசம் தெரிந்தது. மாணவன் தனது வலது கையால் அதன் நெற்றியிலிருந்து வால் மட்டும் கீழ்நோக்கித் தடவித் தந்துகொண்டிருந்தான். யாருக்கும் தெரியாமல் கொண்டுபோக வேண்டும் என்றான். நாய்க்குட்டியை ஒரு ஓரத்தில் விட்டான்.

என்னைப் பார்த்தான். அவன் மனதில் ஓடும் கேள்வி எனக்குத் தெரிந்தது. நான் பதில் சொல்லவில்லை. என்னிடம் கேட்கத் தயங்கிய கேள்வியுடன் அவன் படியிறங்கி ஓடினான்.

நான் கைக்கடிகாரத்தைப் பார்த்தேன். அன்று காலை நான் முடிக்க வேண்டியிருந்த வேலைகளைப் பற்றி யோசித்தேன். தலைக்கு மேல் இருந்தன. சற்றுத் தள்ளிப்போட்டு வேலையைத் தொடங்கினால் எல்லாவற்றையும் எப்படி முடிக்கலாம் என்று யோசித்தேன்.

உங்களைத் தேடிட்டுத்தான் வந்தேன்; அம்மா அனுப்பினாங்க என்ற பேச்சுக் கேட்கவும் மரத்தடியைப் பார்த்தேன். தங்கம் நின்றுகொண்டிருந்தாள். சற்றுப் பிந்தி வருவேன் என்று சொல்லு என்றேன்.

உங்களுக்கு ஒரு போன் வந்திட்டிருக்காம். அவசரமாம் என்றாள்.

நான் படிக்கட்டிலிருந்து இறங்கித் தெருவுக்கு வந்தேன். வெயில் என் நெற்றியைத் தாக்கி என் கண்களைக் கூசவைத்தது.

மறுநாள் நான் நடக்கச் சென்றபோது பள்ளியின் வாசலில் சில அடிகள் தள்ளி அந்த நாய்க்குட்டி இறந்து கிடப்பதைப் பார்த்தேன். அன்று அந்தப் பையனைச் சந்திக்க வேண்டாம் என்று தோன்றியது.

*****

நன்றி: காலச்சுவடு இதழ் 105, செப்டம்பர் 2008

 பள்ளியில் ஒரு நாய்க்குட்டி – சிறுகதைத் தொகுப்பு

சுந்தர ராமசாமி, தனது நாட்குறிப்பேட்டில் தன் கைப்பட 14832294_palliyil-oru-copyஎழுதிவைத்திருந்த, முழுமைபெற்ற, பெறாத சிறுகதைகள் மற்றும் நெடுங்கதைகளின் கரட்டு வடிவங்களின் தொகுப்பு இந்நூல்.

50ஆண்டுகளுக்கு மேல் எழுதிவந்த சுந்தர ராமசாமியின் பன்முக எழுத்துப்  பயணத்தின்  முக்கியமான பண்புகள் அனைத்தும் அவரது இறுதி ஆண்டுகளில் எழுதப்பட்ட இந்தக் கதைகளிலும் வலுவாக வெளிப்படுகின்றன.

இந்தக் கதைகளையும் இவை எழுதப்பட்ட காலகட்டத்தில் பிரசுரமான கதைகளையும் பார்க்கும்போது அவர் தனது கடைசி ஐந்து ஆண்டுகளில் மிகவும் தீவிரமாகப் படைப்பாக்கத்தில் ஈடுபட்டிருக்கிறார் என்பது புலனாகிறது. முதுமையையும் நோய்களையும் அவதூறப் பிரச்சாரங்களையும் எதிர்த்து ஒரு படைப்பாளி மேற்கொண்ட போராட்டத்தின் இறுதித் தடயமே இந்தத் தொகுப்பு.

சிறுகதைத் தொகுப்பை வாங்க இங்கே செல்லவும்

Feb 26, 2012

கொழுத்தாடு பிடிப்பேன் – அ.முத்துலிங்கம்

ஓம் கணபதி துணை

The Immigration Officer 94/11/ 22

200, St Catherene Street

Ottawa, Ont

K2P2K9

( Please translet Sri Lankan Tamil Language )A.Muthulingam

[ இதை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பவர் வசனங்களின் ஓடரை மாற்றாமலும், எனது கருத்துக்கள் சரியாக வரும்படியும் தெட்டத்தெளிவாக எங்கள் கலாச்சார வித்தியாசங்களை விளங்கப்படுத்தியும் மொழிபெயர்க்கும்படி தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறேன்.]

கனம் ஐயா அவர்களுக்கு,

சண்முகலிங்கம் கணேசரட்னம் ஆகிய நான் 90 /03 / 18 அன்று மாலை ரொறொன்ரோ ஏர்போர்ட்டில் வந்து இறங்கினேன். எனக்கு சொல்லித் தந்தபடி அங்கே இருந்த உத்தியோகத்தரிடம் நான் தஞ்சம் கேட்டு விண்ணப்பம் செய்தேன். என்னுடைய மனைவியின் தங்கச்சி விஜயலட்சுமியும், அவளுடைய புருசன் பாலச்சந்திரனும் என்னை ஏர்போர்ட்டில் வந்து சந்தித்தார்கள். விஜயாவை இதுவே முதல் முறை நான் நேருக்கு நேர் சந்திப்பது. அவவுடைய முகவெட்டு கிட்டத்தட்ட என்னுடைய மனைவினுடையதைப்போலவே இருந்ததால் அவர்களை அடையாளம் காண்பதில் எனக்கு ஒருவித குழப்பமும் இல்லை.

என்னை அழைத்துக் கொண்டுபோய் தங்களுடன் இருக்க வைத்தனர். அந்த சிறிய வீட்டில் எனக்காக ஒரு முழு அறையை ஒதுக்கி தந்தார்கள். நான் என் வாழ்க்கையில் இதற்குமுன் இப்படி ஒரு தனி அறையை அனுபவித்தவன் அல்ல. ஆகவே எனக்கு என் சகலனில் மரியாதை அதிகமாகியது.

என் சகலனாகட்டும், விஜயாவாகட்டும் என்னை வடிவாகவே பார்த்தார்கள். இங்கே எனக்கு எல்லாமே புதுமையாக இருந்தது. தபால்காரன் தபால்களை வீட்டிலேயே கொண்டுவந்து கொடுத்தான். எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் பைப்பில் இடது பக்கம் சுடு நீரும், வலது பக்கம் குளிர் நீரும் வந்தது. பஸ்ஸிலே எப்படி றான்ஸ்பர் எடுப்பது, டெலிபோன் கார்ட்கள் எப்படி பாவிப்பது எல்லாம் எனக்கு சொல்லித் தந்தார்கள். நான் வந்த நாலாவது கிழமையே ஒரு ரெஸ்ரோறன்டில் எனக்கு கைக்காசுக்கு டிஸ் வாசிங் வேலையும் கிடைத்தது.

வாழ்க்கை இப்படியே இருக்கும் என்று ஆரம்பத்தில் மகிழ்ந்துபோனேன். விடியோ படங்கள் புதுசு புதுசாக வாடைக்கு எடுக்கலாம். ஊரிலே சாப்பிட முடியாத உணவு வகைகள் எல்லாம் இங்கே கிடைத்தன. என் சம்பளத்தில் மாசா மாசம் சீட்டுப் போடச் சொன்னார்கள். அவர்களுக்கு று–ம் வாடகை கட்டி, மாசச்சீட்டு 250 டொலர் போக மிச்சக் காசில் ஊருக்கும் அனுப்பினேன்.

என்னுடைய சகலனுக்கு இரண்டு வேலை. இரவு பதினொரு மணிக்குத்தான் வருவார். விஜயா கால்சட்டையும் கோட்டும் அணிந்து, கைப்பையை தூக்கிக்கொண்டு டேகேர் வேலைக்கு காலையிலேயே போய்விடுவா. அரை நாளுடன் அவவுடைய வேலை முடிந்துவிடும். என்னுடையது முதலாவது ஷிப்ட். மூன்று மணியுடன் வீட்டுக்கு வந்து கொஞ்சம் அயர்வேன். பிறகு ஏதாவது வீட்டு வேலைகள் செய்து கொடுப்பேன். அநேகமாக மார்க்கட்டுக்குபோய் சாமான் வாங்கி வருவது என் பொறுப்பில்தான் இருக்கும்.

இரவு சகலன் வந்ததும் சேர்ந்து இருந்து சாப்பிடுவோம். விஜயா அழகாகச் சமைப்பா. அவவுடைய றால் குழம்பின் ரேஸ்ட் மறக்க முடியாதது. நான் றால் சாப்பிட்டது கடைசியாக அன்றுதான். என்னைப் பொலீஸில் பிடித்த நாள். அதற்கு பிறகு இரண்டு வருடங்கள் இந்த மறியலில் நான் அனுபவிக்காத சித்திரவதை இல்லை.

இங்கு தரும் சாப்பாடு வித்தியாசமானது. ஐந்து நேரங்களுக்கு இரண்டு முட்டை வீதம் பத்து முட்டை, நாலு நேரம் மீன் துண்டு, மூன்று நேரம் ஒவ்வொரு கோழிக்கால், நாலு நேரம் சாலட் என்று சொல்லும் வேகவைக்காத கீரை வகை தருவார்கள். எனக்கு ஹை பிறசரும், சலரோக வியாதியும் உண்டு. நான் இப்போ நோயாலும் மன வேதனையாலும் மிகவும் கஸ்ரப்படுகிறேன்.

நான் கனடாவுக்கு உல்லாசப் பயணியாக வரவில்லை. என்னுடைய விண்ணப்பத்திலும், விசாரணைகளிலும், திருப்பி திருப்பி சொன்னதுபோல எஙகள் நாட்டில் நடக்கும் யுத்தத்திலிருந்து தப்புவதற்காக சொந்த மனைவியையும், தேவதைகள் போன்ற பிள்ளைகளையும் விட்டு தப்பி ஓடி வந்தவன். என்னுடைய குடும்பத்தை ஒரு வழியாக ஒப்பேற்றிவிடலாம் என்ற ஆசையிலே மூன்று மாத காலம் பிரயாணம் செய்தேன். நேராக பிளேனில் ஏறி நேராக நான் வந்து இங்கே இறங்கவில்லை. வள்ளத்திலும், ரயிலிலும், மேலே விழவிழ தள்ளி உட்கார்ந்து இரவு முழுக்க கண்விழித்த பலாப்பழ லொறியிலும், கொன்ரெய்னரிலும், பிளேனிலுமாக எண்பத்து ஒன்பது நாட்கள் பயணம் செய்து வந்தவன். கொலம்பஸ் அமெரிக்காவுக்கு வந்துசேர எடுத்தது 71 நாட்கள்தான். நான் என் கனவு மூட்டைகளை தவிர வேறு ஒரு மூட்டையும் கொண்டு வராதவன்.

என்ரை குஞ்சுகளை நான் ஊரிலே விட்டுவிட்டு வந்து இங்கே உத்தரிக்கிறேன். என்னை அவர்கள் மறந்துவிடுவார்கள். என் முகம் இன்னும் ஞாபகம் இருக்கோ தெரியாது. நான் ஊரை விடும்போது பெரியவனுக்கு 7 வயது, இரண்டாமவனுக்கு 5, பஞ்சலோகத்தில் செய்த என்ரை மகளுக்கு 4 வயது, கைக்குழந்தைக்கு 6 மாதம்தான்.

பெரியவன் வகுப்பில் வலு கெட்டிக்காரன். ஆமெணக்கெண்ணய் குடிக்க வைத்தால் நேரே ஓடலாம் என்ற அறிவுகூட இன்றி என்னையே சுத்தி சுத்தி ஓடுவான். சின்னவன் நான் கிணற்றில் தண்ணி அள்ளிக் குளிக்கும்போது எனக்கு கீழே நின்று அந்த தண்ணியிலேயே குளிப்பான். வெள்ளை லேஸ் வைத்து அலங்காரம் செய்த சட்டையை போட்டுக்கொண்டு என் சின்ன மகள் தத்தக்க புத்தக்க என்று ஓடி வருவாள். பாயிலே படுக்கும் என்னை தொட்டுக்கொண்டு படுப்பதற்கு சண்டை போடுவார்கள். இந்த தெய்வங்களை இனி எப்ப பார்க்கப் போறேனோ தெரியாது.

எங்கள் நாட்டில் தங்க நிறமான பூரண சந்திரன் வருவான். இங்கே நீல நிறத்தில் சந்திரன் தெரியும்போதே எனக்கு ஏதோ தீமை நடக்கப்போகுது என்று தெரிந்துவிட்டது. பக்கத்து அறையில் இருந்தவன் நேற்றிரவு என்ன காரணமோ திடாரென்று செத்துவிட்டான். அவனுக்கு நான் ஒரு முட்டை கடன் தர வேண்டும். அவனுடைய பெயர் தெரியாது. ஆனால் அவன் சாவதற்கு சம்மதிக்கவில்லை. திறந்த கண்களால் இன்னும் இந்த உலகத்தை பார்த்துக்கொண்டு இருந்தான்.

அவன் ஒரு பெயர் உச்சரிக்கமுடியாத ஆப்பிரிக்க நாட்டிலிருந்து வந்தவன். அங்கே சிவப்பு மாட்டுக்கு ஒரு சொல்லும், கறுப்பு மாட்டுக்கு இன்னொரு சொல்லும் இருக்கிறதாம். இடது கால் செருப்புக்கு ஒரு வார்த்தை என்றால், வலது கால் செருப்புக்கு இன்னொரு வார்த்தை என்று சொன்னான். ஒரு முட்டை கடன்தர வேணும் என்றால் ஒரு வார்த்தையும், இரண்டு முட்டை கொடுக்க வேணும் என்றால் அதற்கு இன்னொரு வார்த்தையும் அந்த நாட்டில் இருக்கலாம்.

இங்கே சில வசதிகள் உண்டு. இப்படி வசதிகளுக்கு முன்பே பழக்கபட்டிருக்காததால் நான் ஆரம்பத்தில் கஷ்ரப்பட்டுவிட்டேன். திறப்புகளைத் தொலைக்காமல் வைப்பதற்கு பழகியிருந்தேன். கனடாவில் எல்லாம் தானாகவே பூட்டிவிடும் கதவுகள். இவை ஆபத்தானவை. நிறைய ஞாபக சக்தியை அவை உபயோகித்துவிடும். இங்கே தலையில் தொப்பி அணிந்து, இடையில் குண்டாந்தடி செருகிய கார்டுமார் பெரும் சத்தம்போடும் இரும்புக் கதவுகளை எங்களுக்காக திறந்துவிடுவார்கள்; பின்பு பூட்டுவார்கள். நாங்கள் ஒன்றுமே செய்யத் தேவையில்லை. கதவுகள் தானாகவே பூட்டிக்கொள்ளுமோ என்று அஞ்சி நடுங்க வேண்டாம். கைகளை ஆட்டிக்கொண்டு உள்ளே போவதும் வருவதுமே எங்கள் வேலை.

என்னுடைய சகலன் வீட்டில் மிகவும் எச்சரிக்கையாகவே இருந்தேன். அங்கே தானாகவே பூட்டிக்கொள்ளும் கதவு. திறப்புகளை கையிலே காவியபடியே இருக்கவேணும். திறப்புகளை தூக்கிக்கொண்டு நாங்கள் எல்லோரும் எங்கள் எங்களுக்கு விதிக்கப்பட்ட நேரங்களில் வேலைகளுக்கு போவோம் வருவோம்.

ஐயா, என் வாழ்க்கையில் இதுவே சறுக்லான காலம். போகப்போக அவர்கள் பணம் பணம் என்று பறப்பது எனக்கு தெரிய வந்தது. குடும்பச் சூழ்நிலையும் நல்லாக இல்லை. என்னுடன் விஜயா பழகுவது கொஞ்சம் பயத்தை கொடுத்தது. எப்படியும் என்னுடைய தஞ்சக் கோரிக்கை கேஸ் முடிந்தவுடன் வேறு வீடு மாறவேண்டும் என்று முடிவு செய்தேன். இவ்வளவு உதவி செய்த சனங்களை பகைக்காமல் கழரவேண்டும் என்று மனசுக்குள் தீர்மானித்து சமயம் பார்த்திருந்தேன். ஆனால் அது கடவுளுக்கு எப்படியோ தெரிந்துவிட்டது.

எங்களுக்குள் பிரச்சினை பின்னேரங்களில் டிவி பார்ப்பதில்தான் தொடங்கியது. விஜயாவின் கதைகளும் போக்கும் ஒரு மாதிரியாக இருக்க ஆரம்பித்தன. என்னுடன் கதைக்கும்போது தேவைக்கு அதிகமான நளினம் காட்டினா. அவவுடைய விரல்களும் அதன் மிச்சப் பகுதியும் என் மனைவியை ஞாபகமூட்டின.

ஒரு நாள் நான் வேலையிலிருந்து அலுப்போடு வந்து நேரத்துக்கு படுத்துவிட்டேன். எனக்கு விஜயா சிவப்பு முட்டை பொரித்து சாப்பாடு போட்டா. புருசன் வந்தபோது அவருக்கு வெறும் மரக்கறி சாப்பாடுதான். நான் படுத்திருந்தபோது அவர்கள் சண்டை போட்டது எனக்கு கிளியராக கேட்டது.

இன்னும் ஒரு முக்கியமான விஷயம். இவர்களுக்கு ஒரே மகள். அவளுடைய பேர் பத்மலோசனி. முதலில் அவளை பத்மா என்று அழைத்து அது ஸ்ரைல் இல்லாதபடியால் லோசனி என்று மாற்றினார்கள். பிறகு அதுவும் சுருக்கப்பட்டு லோ என்றாகிவிட்டது. இது ஒரு மொத்தமான பிள்ளை. இவளை விஜயா அடிக்கடி கலைத்தபடியே இருப்பா. பெரியப்பாவை சும்மாவிடு அவர் களைப்பாக இருக்கிறார் என்றோ போய்ப்படி என்றோ கீழ் வீட்டிலே போய் புத்தகம் வாங்கி வா என்றோ விரட்டுவதுதான் வேலை.

இவள் சிறு பெண் என்றாலும் விவேகமானவள். படிப்பு கெட்டித்தனம் அல்ல, அவளுடைய மூளை கள்ளத்தனம் கொண்டது. நேராக ஒரு காரியத்தை செய்வாள் என்றில்லை. எப்பவும் விஷமமும், சூழ்ச்சியும், தந்திரமும்தான்.

அவளுடைய காதுகள் கூர்மையானவை. படிகளில் ஏறிவரும் சத்தத்தை வைத்தே வீட்டுக்கு யார் வருகிறார்கள் என்று ஊகித்து விடுவாள். இது அந்த அங்கிள் மேல் வீட்டுக்கு போறார். இது கீழ் வீட்டு அன்ரி வீடியோ எடுக்க வாறா என்று சரியாகச் சொல்வாள். வீட்டிலே தமிழ் வீடியோப் படங்களை பார்க்கும் நேரங்களில் ஆ, சரி இனி கட்டிப்பிடிச்சு பாடப் போகினம் என்று அவள் சொன்னால் அப்படியே நடக்கும்.

பின்னேரங்களில் ஹோலுக்குள் இருந்து ஹோம்வோர்க் செய்யுறன் எண்டு சொல்லி முழுசிமுழுசிப் பார்த்துவிட்டு பெரியவர்களுக்கான டிவி சானலை ஓன் செய்துவிடும். அதில் வரும் மோசமான காட்சிகளை மியூட் பட்டனை அமத்திவிட்டு சத்தம் கேட்காமல் பார்க்கும். இப்படி பழகிப் பழகி இந்த விஷயங்களில் இதுக்கு ஒரு நாட்டம் வந்துவிட்டது.

பெரியவர்களின் மூளையைக் காட்டிலும் இதுக்கு பத்து மடங்கு மூளை. ஒரு நாள் தாய் வீடியோக் கடைக்கு போறதாய் சொல்லிப்போட்டு இறங்கிப் போய்விட்டா. இந்தப் பிள்ளை டெலிபோனில் றீடயல் பட்டனை அமுக்கி நம்பரைப் பார்த்துவிட்டு இந்த அம்மா பொய் சொல்லி இருக்கிறா. இவ சீட்டு அன்ரியிட்டை சாறி பாக்க போனவ என்று சொல்லி பிடிச்சுக் குடுத்துப்போட்டுது. இதை வைச்சுக்கொண்டு ஒரு கள்ளமும் செய்ய ஏலாது.

தானாகவே பட்டுபட்டென்று பூட்டிக் கொள்ளும் கதவுகள் கொண்ட இந்த வீட்டில் பாத்ரூம் கதவு மட்டும் ஒழுங்காக வேலை செய்யாது. ஒருநாள் தெரியாமல் நான் கதவை திறந்தபோது விஜயா குளித்துக் கொண்டிருந்தா. நீண்டு தெரிந்த முலைகளில் தண்ணீர் வழிந்துகொண்டிருந்தது. எண்டாலும் நல்ல ஷேப்பாக உரித்த வெங்காயம்போல தகதகவென்று மின்னியது. நான் பதகளித்துப் போனேன். இவ ஒன்றுமே நடக்காதமாதிரி மெல்லிசாய் சிரித்தபடி நின்றா. பக்கத்தில் கொழுவி இருந்த டவலை இழுத்து மூடலாம் என்ற எண்ணம்கூட இல்லாமல். நான் சொறி என்றுவிட்டு திரும்பிவிட்டன்.

இதை இந்தக் குண்டுப் பிள்ளை பார்த்துவிட்டது. அம்மாவை பெரியப்பா நேக்கட்டாய் பார்த்திட்டார் என்று கத்தத் தொடங்கிவிட்டது. அவளுடைய வாயை அடக்க பெரிய லஞ்சம் தேவைப்பட்டிருக்கும். எப்படியோ அன்று சகலன் வேலையில் இருந்து திரும்பியபோது இந்தப் பிள்ளை வாயை திறக்கவில்லை

இது தெரியாமல் நான் செய்த தவறு. ஆனால் தெரிந்து ஒரு நாள் தவறு செய்ய நேர்ந்தது. அதற்கு பிறகு அப்படி செய்வதில்லை என்று கடுமையான தீர்மானமும் செய்தேன். அந்த தீர்மானத்தை எவ்வளவுக்கு வெற்றியாக செய்து முடித்தேன் என்று சொல்லமுடியாது. காரணம் அது நடந்து சில நாட்களுக்குள்ளேயே நான் பொலீஸில் மாட்டிவிட்டேன்.

விஜயா பின்னேரங்களில் காலுக்கு மேல் கால்போட்டு இருந்து ஓய்வெடுப்பா. இரண்டு பெசென்ற் பால் கலந்த கடும் சாயம் கொண்ட தேநீரை சிறு சிறு மிடறுகளாக உறிஞ்சிக் குடிப்பா. என் மனைவியும் அப்படியே. இது இன்பமான நேரம். சிரிக்கக்கூடிய சமயங்களை இவ வீணாக்குவதில்லை. சின்ன ஜோக்குக்கும் கிக்கிக் என்று குலுங்கி குலுங்கி சிரிப்பா.

இப்படி என் மனம் அடங்காத ஒரு நாளில் இவ உள்ளுக்கு போய் உடுப்பு மாத்தினா. கதவு நீக்கலாக இருந்தது அவவுக்கு தெரியும் என்றே நினைக்கிறேன். ஒடுக்கமான ஜீன்ஸ் கால் சட்டையை ஒரு காலுக்குள் விட்டா; பிறகு மற்றக் காலையும் விட்டா. அது வேகமாக வந்து அவவுடைய அகலமான உட்காரும் பகுதியில் தடைபட்டு நின்றது. இவ குண்டியை அற்புதமான ஒரு ஆட்டு ஆட்டி மேலே இழுத்துக்கொண்டா. அந்த தொடைகள் ஜீன்ஸை ஒரு சுருக்கமில்லாமல் நிறைத்தன. என் மனம் அன்று பட்ட பாட்டை சொல்ல முடியாது. ஒரு பெண்ணைத் தொட்டு எவ்வளவு காலமாகிவிட்டது. அப்பொழுது ஒரு பழக்கமான வாசனை அள்ளி வீசி என் தேகத்தை சுட்டது.

ஐயா, அந்த நேரம் பார்த்துத்தான் இது நடந்தது. இதைச் சொன்னால் உங்களுக்கு நம்புவது கஷ்டமாக இருக்கும். கடவுள் வந்து சொன்னால் ஒழிய யார் நம்புவார்கள். இந்த தொக்கைப் பிள்ளை என்னை ஓய்வெடுக்க விடாது. கதவைச் சாத்தி வைத்தாலும் உள்ளே திறந்துகொண்டு வந்துவிடும். வந்தால் பாஃனைப் போடும்; ரேடியோவை போடும். ஜன்னலை திறக்கும் பூட்டும். இருக்கிற சாமான்களை இடம் மாத்தி வைக்கும். ஆராயாமல் போகாது.

என்னுடைய கட்டில் கனடாவில் ஒரு கடையிலும் வாங்கமுடியாதது. ஒரு தச்சனைக் கொண்டு செய்வித்த ஒடுக்கமான கட்டில். இந்தப் பிள்ளை அதில் ஏறி துள்ளி விளையாடும். என்னுடைய நித்திரையை எத்தனை வழிவகைகள் இருக்கோ அத்தனை வழிவகைகளையும் பாவித்து குழப்பிவிடும்.

அன்றைக்கும் அப்படித்தான். ஒரு துணிப்பொம்மையின் காலைப் பிடித்து இழுத்தபடி வந்து ஏதெண்டாலும் விளையாடுவம் என்று கரைச்சல் படுத்தியது. குழப்படி செய்யாதே, போ. அம்மாவிட்டை சொல்லுவன் என்று வெருட்டினேன். அம்மா இல்லை, அவ கீழ்வீட்டு அன்ரியிடம் கதைக்க போட்டா என்றது. பிறகு கொழுத்தாடு பிடிப்பேன் விளையாட்டை ஆரம்பித்தது.( இது எங்கள் ஊர் விளையாட்டு. இதை மொழிபெயர்ப்பாளர் விளக்கவேண்டும்.)

நான் கொழுத்தாடு பிடிப்பேன் என்று சொன்னால் அது கொள்ளியாலே சுடுவேன் என்று கத்தியபடியே கட்டிலை சுற்றி சுற்றி வெருண்டபடி ஓடும். இப்படி மாறி மாறி விளையாடினோம். இந்த விளையாட்டு மும்முரத்தில் சாரம் நழுவியதை நான் கவனிக்கவில்லை.

முந்தி நான் சொல்லியிருக்கிறன் இந்தப் பிள்ளைக்கு காது சரியான கூர்மை என்று. அன்று எப்படி தவறவிட்டதோ எனக்குத் தெரியாது.

திடாரென்று கதவை உடைப்பதுபோல யாரோ திறந்தார்கள். பார்த்தால் என்னுடைய சகலன் குழம்பிய தலையோடும், பொத்தான் போடாத சேர்ட்டோடும் வேகமாக வந்தார். எனக்கு தெரிந்ததெல்லாம் அவருடைய மயிர் முளைத்த கறுப்பு கைகளும், கட்டையான விரல்களும்தான்.

அவருடைய குத்து என் கழுத்திலேதான் வந்து விழுந்தது. நான் அள்ளுப்பட்டுபோய் சுவரிலே தலையை இடித்துக்கொண்டு ரத்தம் ஒழுக கிடந்தேன். இந்தப் பிள்ளை குழறி அழத்தொடங்கிவிட்டது. நான் ஒண்டும் செய்யவில்லை. எல்லாம் பெரியப்பாதான் செய்தவர் என்று திருப்பி திருப்பி சொன்னது.

அவர் 911 க்கு எப்ப அடிச்சாரோ தெரியாது. நான் நிமிர பொலீஸ் நிக்குது. கட்டிலிலே பிள்ளையின் நிக்கர் கிடந்தது. அவங்கள் அதைத்தான் முதலில் தூக்கி பார்த்தார்கள்.

என்ரை மண்டையிலே காயம் எப்படி வந்ததென்று அவர்கள் விசாரிக்கவில்லை. ரத்தம் ஒழுகி சேர்ட் எல்லாம் நெஞ்சோடு ஒட்டி காய்ந்த பிறகுதான் கட்டுப்போட்டார்கள். என்னை திரும்பிப் பார்க்க ஒரு நாய்கூட இந்த நாட்டில் வரவில்லை. என்ரை மனைவிக்கு என்ன எழுதி மனதைக் கெடுத்தார்களோ நான் அறியேன். நகை சுற்றி வரும் மெல்லிய தாள் போல ஒன்றில் இரண்டு பக்கமும் இங்க் தெரிய அவள் எழுதும் கடிதம் பிறகு எனக்கு வரவே இல்லை.

இந்த நரகத்திலிருந்து எனக்கு விமோசனமே இல்லை. அந்தப் பிள்ளையின் விவேகத்தை கணக்கு வைக்க முடியாது. அதனுடைய உடலும் பெரியது; புத்தியும் பெரியது. அநியாயமாய் பிளான் பண்ணி என்னை மாட்டிவிட்டினம். என்னிடம் கையாடிய ஆறாயிரம் டொலர் சீட்டுக் காசை இனி நான் பார்க்க மாட்டேன். என்னை மறியலுக்கு அனுப்பி போட்டு வசதியாய் இருக்கினம். அங்கே நடந்த வண்டவாளங்களை நான் ஒருத்தருக்கும் மூச்சு விடவில்லை. விட்டால் ஒரு குடும்பமே நாசமாகிவிடும்.

என்ரை அறையில் இருக்கும் மற்றவன் ஒரு கேய் என்று சொல்லுகினம். மிகவும் துக்கமானவன். எந்த நேரம் பார்த்தாலும் எட்டாக மடித்து வைத்த ஒரு கடிதத்தை படித்தபடியே இருப்பான். அந்த கடிதம் மடிப்புகளில் கிழிந்து தொங்கியது. 27ம் செல் டானியலை வச்சிருக்கிறான் என்று பேசிக்கொண்டார்கள். இவனிடம் உள்ள ஒரே குறை நான் எப்ப எங்கடை செல்லில் மூத்திரம் பெய்ய வெளிக்கிட்டாலும் அதே நேரத்தில் இவனும் பக்கத்தில் நின்றுகொண்டு செய்வான். இவன் நித்திரை செய்து நான் பார்த்ததில்லை. வெகு நேரம் தூங்காமல் அடிக்கடி சிலுவைக்குறி இட்டபடி எனக்கு மேல் இருக்கும் அவனுடைய படுக்கையில் கால்களை தொங்கப்போட்டபடி இருப்பான். நடு இரவுகளில் நான் விழித்துப் பார்த்தால் நீண்ட ஸ்ரொக்கிங்ஸ்சை தோச்சு காயப் போட்டதுபோல அவன் கால்கள் கட்டிலின் மேல் தொங்கும்.

இரவு வந்தவுடன் நிழல்களும் வந்துவிடும். எங்களுடன் ஒரு கரப்பான் பூச்சியும் வசித்தது. அது இடது கைப்பழக்கம் கொண்டது. ஒரு நாள் இதைக் காணாவிட்டாலும் எங்கள் மனம் பதைபதைத்துவிடும். நாள் முழுக்க தேடுவோம். ஒல்லியான சுண்ணாம்புக் கலர் பேர்ச் மரம்தான் முதலில் இலைகளைக் கொட்டும். பிறகு மற்ற மரங்களும் இலைகளை உதிர்க்கும். சிறைக்கூடத்தின் முகப்புக் கோபுரத்தில் பறக்கும் கொடியின் நடுவில் உள்ள மேப்பிள் இலை மட்டும் எந்தக் காலமும் கொட்டுவதில்லை.

என்ரை தேவதைகளை என்னிடமிருந்து பிரித்துவிட்டார்கள். புத்த பிக்குகள் அணியும் அங்கிக் கலரில் கால்சட்டையையும் மேல் சட்டையையும் சேர்த்து தைத்த ஒரு நீளமான உடுப்பை 24 மணி நேரமும் அணிந்தபடி நான் அவர்களையே நினைத்துக்கொண்டிருக்கிறேன். 160 வருடங்களுக்கு முன்பு அடைத்து வைத்த முதல் ஐந்து கைதிகளின் பேர்களை இங்கே பொறித்து வைத்திருக்கிறார்கள். நான் படுக்கும் படுக்கையில் இதற்குமுன் ஆயிரம் பேர்களாவது படுத்து எழும்பியிருப்பார்கள். படுத்த சிலர் எழும்பாமல் கூட விட்டிருப்பார்கள். கொலக்ட் கோல்கள் வாய்க்காத, கடிதங்கள் கிடைக்காத, விசிட்டர்கள் ஒருவருமே அனுமதிக்கப்படாத அந்நிய நாட்டு கைதி ஒருவன் இங்கே இருந்தான். அவன் பெயர் இது என்று பின்னால் பொறித்து வைப்பார்களோ தெரியவில்லை.

ஜூலை 1, 1867 ல் சில மாகாணங்கள் ஐக்கியமாகி கனடா என்ற புதிய நாட்டை ஏற்படுத்தின. இது தற்பொழுது 10 மாகாணங்களையும், 2 பிரதேசங்களையும் கொண்டுள்ளது. கனடாவின் முதல் பிரதமர் சேர் ஜோன் ஏ. மக்டோனல்ட்.

கனடாவின் ராணியாகிய மேன்மை தங்கிய இரண்டாவது எலிஸபெத்துக்கும், அவரின் வாரிசுகளுக்கும், அவரின் பின் பதவிக்கு வருபவர்களுக்கும் நான் சட்டத்திற்கு அடக்கமானவனாகவும், விசுவாசமானவனாகவும், தேசபக்தி கொண்டவனாகவும் இருப்பேன் என்று சத்தியப் பிரமாணம் செய்கின்றேன்.

மேன்மை தங்கிய ஐயா, எப்போதாவது எனக்கு குடியுரிமை கிடைக்கும் என்ற எண்ணத்தில் இவற்றை நான் மனப்பாடம் செய்து வைத்திருக்கிறேன். என்ரை றிவியூ அப்பீலை தள்ளுபடிசெய்து என்னை திருப்பி அனுப்புமாறு கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன். நான் இங்கு கள்ளமாக வந்து சேர்ந்தமாதிரியே என்னை கொன்ரெய்னரில் போட்டு அனுப்பினாலும் சம்மதமே.

என்ரை மனைவிக்கு ஐந்தாவது குழந்தை பிறந்திருப்பதாக செய்தி கிடைத்திருக்கிறது. என்னுடைய உதவியில்லாமல் இது நடக்க வழியில்லை. இது சுத்தப் பொய்.

இங்கிருந்து 10000 மைல் தொலைவில் இலுப்பைப்பூ கொட்டுகிற, லாம்பெண்ணையை மிச்சம் பிடிப்பதற்காக திரியைக் குறைத்து வைத்து ஏழு மணிக்கே படுக்கப்போகும் சனங்கள் கொண்ட ஒரு சிறு கிராமம் இருக்கிறது. விரித்தவுடன் சுருண்டுவிடும் ஒரு பாயை விரித்து, ஒரு பக்கத்தில் இரண்டு பிள்ளைகள், மறு பக்கத்தில் இரண்டு பிள்ளைகள் என்று சரி சமமாக தன்னை பிரித்துக் கொடுத்து, ஹெலிகொப்ரர்கள் பறக்காத ஓர் இரவிலே, வெள்ளிகளுக்கு நடுவாகத் தோன்றும் ஒரு சிவப்புக் கிரகத்தை பார்த்தபடி படுத்திருக்கும் என் மனைவியைக் கொண்ட இந்த அற்புதமான நாட்டுக்கு நான் திரும்பி போகவேண்டும்.

அங்கே ரோட்டு போடுபவர்களுக்கு கல் சுமந்து கொடுத்து என்ரை வாழ்க்கையை ஓட்டிவிடுவேன். மீண்டும் உத்திரவாதம் தருகிறேன். இந்தக் கொழுத்த பிள்ளையின் வயது பத்து என்பது எனக்கு தெரியவே தெரியாது.

நிச்சயமாகச் சொல்கிறேன். நான் குடியுரிமை கிடைக்கும் ஆசையில் கஷ்ரப்பட்டு மனப்பாடம் செய்த எல்லாவற்றையும் விரைவில் மறந்துவிடுவேன் என்று உறுதி கூறுகிறேன். என்னை எப்படியும் திருப்பி அனுப்பிவிடுங்கள்.

இப்படிக்கு,

உங்கள் கீழ்ப்படிவான

சண்முகலிங்கம் கணேசரட்டினம்

சிறைக்கூடம் எண் 37

Kingston Penetentiary

555, King Street W

Po Box 22

Kingston, Ontario

K7L4V7

 

*****

நன்றி: திண்ணை

Feb 24, 2012

“நான் என்ன எழுதிக் கிழித்துவிட்டேன்?’’-வண்ணநிலவன்

வண்ணநிலவன், 1949 ஆம் ஆண்டு டிசம்பர் 15ஆம் தேதி பிறந்தார். தந்தை பெயர்: உலகநாதபிள்ளை; தாய்: ராமலட்சுமி அம்மாள். பெற்றோர் இவருக்கு வைத்த இயற்பெயர்: உ.ராமச்சந்திரன். சொந்த ஊர்: திருநெல்வேலி. பள்ளிப் பருவத்துக்குப் பிறகு பணி காரணமாக தாதன்குளம், திருநெல்வேலி, ஸ்ரீவைகுண்டம், பாளையங்கோட்டை, பாண்டிச்சேரி, சென்னை உட்பட பல ஊர்களில் வண்ணநிலவன் வசித்துள்ளார். 07 ஏப்ரல் 1977 அன்று வண்ணநிலவனுக்கு திருமணம் நடைபெற்றது. மனைவி பெயர்: சுப்புலட்சுமி. இவர்களுக்கு ஆனந்த் சங்கர் என்ற மகனும் சசி, உமா என்ற இரு மகள்களும் உள்ளனர். தற்போது சென்னை கோடம்பாக்கத்தில் வசித்து வருகிறார்.

‘துக்ளக்’ பத்திரிகையிலும் பின்னர் ‘சுபமங்களா’ பத்திரிகையிலும் ஆசிVANNANILAVAN-7ரியர் குழுவில் வேலை சிறிது காலம் வேலை பார்த்தார். தமிழில் குறிப்பிடத்தகுந்த திரைப்படமான ருத்ரையாவின் ‘அவள் அப்படித்தான்’ திரைபடத்தின் வசனகர்த்தாவாகவும் பணியாற்றியுள்ளார்.

1970ஆம் வண்ணநிலவன் எழுதத் தொடங்கினார். முதல் கதை: மண்ணின் மலர்கள்; முதல் நாவல்: நேசம் மறப்பதில்லை நெஞ்சம் (1975). அதன்பிறகு கடல்புரத்தில் (1977), கம்பாநதி (1979), ரெயினீஸ் அய்யர் தெரு (1981), காலம் (2006) ஆகிய நாவல்களும்; எஸ்தர் (1976), தர்மம் (1983), உள்ளும் புறமும் (1990), தாமிரபரணிக் கதைகள் (1992), தேடித் தேடி கதைகள் (1996), யுகதர்மம் (1996), வண்ணநிலவன் கதைகள் (2001) ஆகிய சிறுகதைத் தொகுப்புகளும் மெய்ப்பொருள் (1981), காலம் ஆகிய கவிதைத் தொகுப்புகளும் வெளியாகின. ‘கம்பாநதி’ நாவலின் இரண்டாம் பதிப்பு 1985ஆ ம் ஆண்டு வெளியான போது, இந்த இரண்டாம் பதிப்பில் வண்ணநிலவன் சில மாற்றங்கள் செய்துள்ளார். இவற்றில் ‘கடல்புரத்தில்’ நாவல் இலக்கிய சிந்தனை பரிசையும் ‘கம்பா நதி’ நாவல் தமிழக அரசின் பரிசையும் பெற்றுள்ளது. இவரது பல படைப்புகள் ஆங்கிலம், இந்தி, மலையாளம், ஜெர்மன் மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அபூர்வத் தகவல்களும் நேரடியான நடையும் நுண்ணிய மனச் சலனங்களின் பிரதிபலிப்பும் வண்ணநிலவன் படைப்புகளின் சிறப்பம்சம்.

2002 ஜூன் மாதம் முதல் வாரத்தில் சென்னையில் சைதாப்பேட்டையில் இருந்த வண்ணநிலவன் அடுக்குமாடி குடியிருப்பு இல்லத்தில் இந்த நேர்காணல் பதிவு செய்யப்பட்டது. ஜூன் 16 - 30, 2002 தேதி ஜங்ஷன் இதழில் பிரசுரமானது.

”திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர் போகும் வழியில், ரயில் பாதையில் வரும் தாதங்குளம் என்ற சின்னக் கிராமந்தான் எங்கள் பூர்வீகம். தாத்தா, அப்பாவுடன் ஐந்து வயது வரை அங்கு இருந்தேன். தாத்தா பெயர் முத்தையா பிள்ளை; அப்பா உலகநாத பிள்ளை. தாத்தாவுடையது மிகவும் சிரமப்பட்டக் குடும்பம். அவர், தம் பதினான்காவது வயதிலேயே பிழைப்புத்தேடி இலங்கைக்கு போனவர். அங்கு ஒரு ஹோட்டல் வைத்து நடத்தியிருக்கிறார். அந்த ஹோட்டல்தான் எங்கள் குடும்பத்தை மேலே கொண்டு வந்தது. தாத்தா முப்பது வருடம் அங்கே இருந்தார். எனவே, என் அப்பா இங்கே தனியாக வளர்ந்தார். தந்தையின் கவனிப்பு இல்லாத ஒரு பையன் எப்படி வளர்வானோ அப்படி வளர்ந்தவர் அவர். ஆச்சியை மிகச் சுலபமாக ஏமாற்றி சினிமா, டிராமா என்று அலைந்திருக்கிறார். அப்புறம் அப்பாவுக்கு திருநெல்வேலி கூட்டுறவுத் துறையில் வேலை கிடைத்தது. நாங்கள் நெல்லைக்கு இடம்பெயர்ந்தோம். அங்கே என் அம்மா வழி தாத்தாவும் ஆச்சியும் இருந்தார்கள். நான் பாளையங்கோட்டையில் படிக்கத் தொடங்கினேன்.

”முதல்நாள் பள்ளிக்கூடம் சென்றது எனக்கு இபபோதும் நன்றாக ஞாபகம் இருக்கிறது. அன்று சரஸ்வதி பூஜை. மாமா, அத்தை என்று உறவுக்காரர்கள் அனைவரும் வந்திருந்தார்கள். புதுச்சட்டை எடுத்திருந்தார்கள். வாத்தியார் வீட்டுக்கு வந்திருந்தார். என்னை அவர் மடியில் அமர வைத்து, முன்னால் தாம்பாளத்தில் இருந்த பச்சையரிசியில் அனா, ஆனா எழுதினார். ரொம்பப் பெரிய ஒரு குடும்ப நிகழ்ச்சியாக அது நடந்தது.!

”வயல், வீடு என்று செழிப்பாக இருந்தக் குடும்பம் எங்களுடையது. ஆனால், தாத்தா இலங்கையிலிருந்து இங்கு வந்தப் பிறகு எதுவுமே செய்யமுடியாமல் ஆகிவிட்டார். சொத்தை கொஞ்சம் கொஞ்சமாகச் சொத்தை இழக்கத் தொடங்கினோம். திடிரென்று ஒருநாள் பார்த்தால் மந்திரக்கோளை வைத்து துடைத்து எடுத்துவிட்ட மாதிரி எல்லாவற்றையும் இழந்து வெட்டவெளியில் நின்று கொண்டிருந்தோம்! நான் எஸ்.எஸ்.எல்.சி. படித்துக்கொண்டிருந்த போது தேர்வுக்குக் பீஸ் கட்டப் பணம் இல்லை. தூரத்துச் சொந்தக்காரர் ஒருவருக்குக் கடிதம் எழுதி பணம் அனுப்பச் சொல்லித்தான் பரிட்சை எழுதினேன். ஆனாலும், தொடர்ந்து படிக்க முடியாத நிலை.

அப்புறம் சைக்கிள் கடையில், ஜவுளி கடையில் வேலை பார்த்தேன். பாளையங்கோட்டை பெல்பின்ஸ் கம்பெனியில் குண்டூசி அடுக்கினேன். பெயிண்ட் அடிச்சேன். மதுரையில் ஹோட்டலில் நின்றேன். என்னென்ன வேலை கிடைக்கிறதோ அவை எல்லாவற்றையும் பார்த்தேன். அந்த வயதில் எனக்கு அந்த வேலைகள் பொறுக்கவில்லை. குறிப்பாக இரவு நேர ட்யூட்டிகளின் போது மிகவும் சிரமப்பட்டேன். ஆனாலும், செய்துதானே ஆகவேண்டும்? என்றால்தான் வீட்டில் சாப்பிட முடியும். திருநெல்வேலியை விட்டுப் புறப்படுவதற்கு முன் ஒரு கிறிஸ்தவ வக்கீல் நண்பர் வீட்டில் முப்பத்தைந்து ரூபாய் சம்பளத்துக்கு குமாஸ்தாவாக இருந்தேன். சம்பளம் மிகவும் குறைவு. ஒரு மனிதன் எத்தனை நாளைக்கு என்ன செய்துவிட முடியும்!’’

சென்னைக்கு எப்போது வந்தீர்கள்?

“திருநெல்வேலியில், குமார் என்று ஒரு நண்பர். அவர் வீட்டில்தான் நான் சாப்பிட்டுக்கொண்டு இருந்தேன். விரைவில் அவருக்குக் கல்யாணம் ஆனபோது இனியும் அங்கு இருக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. அப்போது நம்பிராஜன் (விக்கிரமாதித்தன்) சென்னையில் இருந்தார். அவருக்கு ஒரு கடிதம் எழுதினேன். ‘புறப்பட்டு வந்துவிடுங்கள், பார்த்துக்கொள்ளலாம்’ என்று சொன்னார். இங்கு கவிஞர் கந்தர்வனின் உதவியால் கண்ணதாசன் இதழில் சேர்ந்தேன். அப்புறம் ‘கணையாழி’. பிறகு, ‘கவிதாலயா’ அனந்து மூலமாக துக்ளக்கில் சேர்ந்தேன். என்னவென்று ஒரு காரணமும் இல்லாமல் நிறைய பைத்தியக்காரங்கள் செய்திருக்கிறேன். என்னவோ தோன்றும் செய்துவிடுவேன். சென்னைக்கு புறப்பட்டு வந்தது அப்படித்தான்.’’

திருமணம் எப்போது நடந்தது?

”1977இ-ல் திருமணம் நடந்தது. மாமா பெண்தான். எங்களுக்கு மூன்று குழந்தைகள். பையன் பி.இ.முடித்துவிட்டு இப்போது ஜெர்மனியில இருக்கிறான். இரண்டு பெண்களில் ஒருத்தி எம்.காம். முடித்துவிட்டு இங்கேயே வேலையாய் இருக்கிறாள். அடுத்தவள் பி.காம். முடித்துவிட்டு மேற்கொண்டு படிக்க இருக்கிறாள். குழந்தைகள் தொடர்பாக எனக்கு மிகவும் நிறைவாக இருக்கிறது. மிகவும் நல்லக் குழந்தைகள்.’’

உங்கள் குடும்ப உறுப்பினர்களில் உங்கள் மீதும் உங்கள் எழுத்துக்கள் மீதும் பாதிப்பைச் செலுத்தியவர் என்று யாரைச் சொல்லுவீர்கள்?

”ஆச்சியைத்தான் சொல்ல முடியும். அப்பாவைப் பெத்த ஆச்சி. அவள் என்னிடம் மிகவும் ப்ரியமாக இருந்தா. எல்லோரிடமும் பிரியமாக இருந்தாள் என்றாலும், ஏதோ ஒரு காரணத்தால் என் மீத அவளுக்கு தனிக் கவனம் இருந்தது. இப்போதும் எனக்கு எங்க ஆச்சியை விடவும் பிரமாதமாக வேறு யாராலும் சமைத்து விட முடியாது என்கிற அபிப்ராயம்தான் இருக்கிறது. அவளுடைய கைக்கு அப்படி ஒரு ருசி. அப்படியொரு விசேஷம். சொதி, மோர்க் குழம்பு எல்லாம் அவளுடைய கைப்பக்குவத்தில், அவற்றிற்குரிய ருசியிலிருந்து ஒருபடி மேலேயே இருக்கும் இந்த ருசியைக் கொண்டு வருவதற்காக அவள் அதிகம் சிரமம் எடுத்துக்கொள்வதும இல்லை. 1961 வரைக்கும் எங்க ஆச்சி உயிரோடு இருந்தாள். அவள் இறந்து இரண்டு வருடம் சென்று தாத்தா இறந்துபோனார்.’’

வௌயூர்களில் குடியேறிவிட்ட திருநெல்வேலிக்காரர்களுக்கு தாமிரபருணி ஆறு என்பது சிறுவயது நினைவோடு தங்கியிருக்கும் ஒரு பசுமையான அனுபவம். உங்களுக்கு எப்படி?

”நடக்கத் தொடங்கிய காலத்திலிருந்த தாமிரபரணியை நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். தாத்தாவையும் ஆச்சியையும் அடுத்து எனக்கு நதியைப் பிடிக்கும். அவர்களோடு சேர்ந்துதான் என் நினைவில் ஆறு இருக்கிறது. காலையில் நான்கு மணிக்கே எழுந்து தாத்தா குளிக்கப் போய்விடுவார். அந்த அதிகாலை இருட்டில், மழை பெய்துகொண்டிருந்தாலும கூடப் போய்விடுவார். திருநெல்வேலி வந்தபிறகு அம்மாவைப் பெற்ற தாத்தா அழைத்துக்கொண்டு போவார். அந்த அதிகாலையிலேயே மிகப்பெரிய ஒரு கூட்டம் குறுக்குத்துறையில் இருக்கும். அப்போது அங்கே பார்ப்பவர்களை அப்புறம் பகலில் வேறு எங்கேயும் பார்க்க முடியாது. திரும்ப மறுநாள் காலையுல் குளிக்கப் போகும் போதுதான் பார்க்க முடியும். இப்படி காலையில் ஆற்றில் குளிக்கிற ‘செட்’ ஒன்று உண்டு. அவர்களுக்கு ஆற்றோடு சேர்ந்து பரஸ்பரம் ஒரு ஸ்நேகம் இருந்தது. குறுக்குத்துறையில் அப்போது வெள்ளை மணல்வெளியாக இருந்த ஆற்றங்கரை இப்போது மணலைத் துடைத்து வாறி எடுத்துவிட்டதால் முட்செடிகள் வளர்ந்து காடாக ஆகிவிட்டது. சுற்றுப்புறச்சூழல் தொடர்பான எதாவது ஒரு அமைப்புக்கு இது பற்றி எழுதவேண்டும்.’’

சிறுவயதில் உங்களை இலக்கியத்தை நோக்கி நகர்த்திய விஷயங்கள் பற்றிப் பேசலாமே!

“அப்பா தீவிர கல்கி ரசிகர். வீட்டில் குடும்ப உறுப்பினர்களின் போட்டோக்களோடு சேர்ந்து தட்டியில் மிகப்பெரிய கல்கி படமும் மாட்டப்பட்டிருந்தது. ஆரம்பத்தில் கல்கியை நான், தூரத்து சொந்தக்கார தாத்தாக்களில ஒருவர் என்றுதான் நினைத்துக்கொண்டிருந்தேன். 1959இ-ல் எட்டாம் வகுப்பு படிக்கும் போது தீவிர ‘கல்கி’ வாசகனாக இருந்தேன். ஒருவகையில் தொடர்ந்து புத்தகங்களைத் தேடி படிப்பதற்க்கான தூண்டுதல் கல்கியிடம் இருந்துதான் கிடைத்தது. அப்புறம் வண்ணதாசன், நம்பிராஜன், கலாப்ரியா எனறு உருவான சமவயது நண்பர்கள் வட்டம். முத்துக்கிருஷ்ணன் என்று ஒரு நண்பர்; அற்புதமான மனிதர்; சி.பி.எம்.காரர். அவர் எனக்கு நிறைய புத்தகங்கள் படிக்கக் கொடுத்தார். இந்த படிக்கிற ஆர்வம் தான் பிறகு எழுதத் தூண்டியிருக்க வேண்டும்.

பள்ளிக்கூடத்தில் நான் திக்குவாய். அதனால் என்னை கேள்வியே கேட்கமாட்டார்கள். பையன்கள் என்னை தூரத்தில் ஒதுக்கி வைத்திருந்தார்கள். கடைசி பெஞ்ச் பையன்; குறைந்த மதிப்பெண் பெறும் மாணவனும் நான் தான். படிக்கவே மாட்டேன். எஸ்.எஸ்.எல்.சி. படிக்கும் போது, “நீ பாஸ் பணணுறது பெரிய ஆச்சர்யம்’’ என்று வாத்தியார் சொன்னார். இதனால், ஏற்பட்ட தாழ்வு மனப்பான்மை பின்னாளில நான் ஒரு எழுத்தாளனாக ஆனதற்குக் காரணமாக இருந்திருக்கலாம். மனோதத்துவ நிபுணர்களைக் கேட்டால் இன்னும் சரியாகச் சொல்லக்கூடும்.’’

வண்ணதாசன், விக்கிரமாதித்தன், கலாப்ரியா, நீங்கள் என்று ஒரு நண்பர்கள் வட்டமாக எப்போது, எப்படி உருவானீர்கள்?

”முத்துக்கிருஷ்ணன் தந்த புத்தகங்களில் ‘தாமரை’, ‘தீபம்’ எல்லாம் இருந்தது. தாமரையிலும் தீபத்திலும கல்யாணி (வண்ணதாசன்) கதைகள் வரும். நம் ஊரைப் பற்றி வருகிறதே என்று விரும்பிப் படித்தேன். சீனிவாசன் என்ற வக்கீலிடம் குமாஸ்தாவாக இருந்த போது டி.கே.சி.யின் பேரன் தீபம் நடராஜன் எங்கள் கட்சிக்காரராக இருந்தார். அவர் வருடா வருடம் டி.கே.சி.யின் பிறந்த நாளைக் கொண்டாடுவார். அப்படிப்பட்ட ஒரு பிறந்த நாளில் வல்லிக்கண்ணனைச் சந்தித்தேன். கடிதம் எழுதினேன். வாருங்கள் பார்க்கலாம் என்று பதில் எழுதினார். வாரத்திற்கு இரண்டு முறையாவது வல்லிக்கண்ணனைப் போய் பார்ப்பேன். பின்னாடி அவர்கள் வீட்டுப் பட்டாசலில உட்கார்ந்து தோசை சாப்பிடுகிற அளவுக்கு நெருக்கம் வளர்ந்தது. காலையில் கொக்கிரகுளம் ஆற்றில் குளித்துவிட்ட நேரே அவர் வீட்டுக்குப் போய்விடுவேன். சாயங்காலம் திரும்ப ஒருமுறை போவேன். இது தினமும் நடந்தது. அவரைப் பார்ப்பதில் எனக்கு ஒரு சந்தோஷம் இருந்தது. கலாப்ரியா, கல்யாணி வீட்டுக்கு இரண்டு வீடு தள்ளியிருந்தார். வல்லிக்கண்ணன் மூலமாக, அவரைத் சுற்றி உருவானதுதான் இந்த நண்பர்கள் வட்டம். வல்லிக்கண்ணன்தான் எனக்கு வண்ணநிலவன் என்று பெயர் வைத்தார்.’’

எழுத எங்கேயிருந்து விஷயங்களை எடுக்கிறீர்கள்?

”செய்தித்தாள்களில் படித்தவை, வெளியே பார்த்தவை போன்றவற்றிலிருந்துதான் நான் நிறைய எழுதியிருக்கிறேன். குடும்பத்தில் இருந்து எப்போதும் எதையும் எழுத்துக்கு களனாக தேர்வு செய்ததில்லை. ஒரு பொறி தான்; படித்த, கேள்விப்பட்ட, பார்த்த, பாதித்த எதாவது ஒன்று எழுதத் தூண்டும். முன்பெல்லாம் உட்கார்ந்து ஒரே மூச்சில் மூன்று மணி நேரத்தில் எழுதிவிடுவேன். இரவு அல்லது அதிகாலையில் எழுதுவேன். ஆரம்பத்தில் எழுதுவதில் ஒரு சந்தோஷம் இருந்தது. வீட்டில் யாராவது இருந்தாலும் இல்லாவிட்டாலும நான் பாட்டுக்கு உட்கார்ந்து எழுதிக்கொண்டிருப்பேன். திரும்பி எழுதுவது கிடையாது. சில கதைகளை மட்டும் காப்பி எடுத்திருக்கிறேன்.’’

குறிப்பாக உங்கள் கதைகளில் முக்கியமானது என்று கருதப்படும் ‘எஸ்தர்’ கதை எழுதிய அனுபவம் பற்றிச் சொல்லுங்கள்?

”பாண்டிச்சேரியில் ‘புதுவைக்குரல்’ என்றப் பத்திரிகையில் வேலை பார்த்து கொண்டிருந்த சமயம். பிரபஞ்சன் மூலமாக இந்த வேலை கிடைத்தது. இரண்டு நாள் லீவு எடுத்துக்கொண்டு திருநெல்வேலி போயிருந்தேன் தண்ணீர் கஷ்டம் உச்சத்தில் இருந்த நேரம் அது. திரும்பி வரும் வழியில் தஞ்சாவூர் பக்கம் வண்டி, மாடுகள் என்று கூட்டம் கூட்டமாக ஊர்களை காலி செய்து போய்க்கொண்டிருந்தார்கள். ராமநாதபுரத்திலிருந்து இடம்பெயர்ந்து வருகிறார்கள். இது என்னை மிகவும் பாதித்தது. பாண்டிச்சேர் வந்தவுடன் ஒரே இருப்பில் ‘மிருகம்’, ‘எஸ்தர்’ இரண்டுக் கதைகளையும் எழுதிவிட்டேன்.’’

கடல்புரத்தில் எழுதிய அனுபவம்?

”குலசோகரப்பட்டினத்தில் நாகூர்மீரான் என்று ஒரு சாயபு நண்பர் இருந்தார். உடன்குடியில் சைக்கிள் கடை வைத்திருந்தார். திருநெல்வேலியில் வேலையில்லாமல் சிரமப்பட்டுக் கொண்டிருந்தபோது, “நீ வேண்டுமானால் என்னோடு கூட வந்து இரேன்’’ என்று சொன்னார். வேறு என்ன செய்வது என்று தெரியாததால் போனேன். மூன்று வேளையும அவர் எனக்குச் சாப்பாடு போட்டார். சாயங்காலம் இரண்டு பேரும் சினிமா பார்க்கப் போவோம். பகல் முழுவதும் அவருடன் சைக்கிள் கடையில்தான் உட்கார்ந்திருப்பேன். அங்கே மீனவர்கள் வருவார்கள். அப்போது அவர்களுடன் தொடர்பு ஏற்பட்டது. 1969-இல் லாஞ்ச் என்னும் மீன் பிடிக்கும் இயந்திரம் படகு வந்த நேரம் அது. பெரிய கலவரங்களுக்கு அது காரணமாகிவிட்டது. திருச்செந்தூரில் லாஞ்ச் வைத்திருந்த மீனவர்களுக்கும் கட்டுமரக்காரர்களுக்கும் இடையே நடைபெற்ற கலவரங்களால் ஒருவர் கொலை செய்யப்பட்டார். அது என் மனதுக்கு மிகவும் சங்கடத்தைத் தந்தது. ஏதோ ஒரு மூலையில் வந்து மாட்டிக்கொண்டு விட்டோம் என்று தோன்றியது. எனவே திரும்ப வந்துவிட்டேன். அப்புறம் மலையாளத்தில் வந்த ‘செம்மீன்’ படத்தையும் சத்யன் நடித்த ‘கரைகாணாக் கடல்’ படத்தையும் பார்த்தபோது, குலசேகரப்பட்டின நாட்கள் மனதுள் மேலெழுந்து வந்தன. ஒரு குடும்பம் தன் சொந்த மண்ணில் வாழ முடியாமல் வேர்களைப் பிடிங்கிக்கொண்டு வேறொரு ஊருக்கு செல்வதுதான் ‘கரைகாணா கடலின்’ கதை. இது தான் கடல்புரத்தில் நாவலின் நதீமுலம்.’’

பரிசோதனை ரீதியில் எழுதப்பட்ட உங்களது ரெய்னீஷ் ஐயர் தெரு பற்றி?

”எட்டு, ஒன்பது, பத்தாம் வகுப்புகள் படிக்கும் போது பாளையங்கோட்டையில் எனக்கு கிறிஸ்தவ நண்பர்கள் நிறைய இருந்தார்கள். அந்தக் கிறிஸ்தவ வாழ்க்கை மனதில் படிந்து போயிருந்தது. ‘ரெய்னீஷ் ஐயர் தெரு’ என்று திருநெல்வேலியில் ஒரு தெரு இருந்தது. புதிதாக எதாவது செய்யவேண்டும் என்கிற உத்வேகத்துடன் இருந்தபோது ரெய்னீஷ் ஐயர் தெருவையும் கிறிஸ்த வாழ்க்கைப் பின்புலத்தையும் வைத்து முயற்சித்தேன். அது அப்பட்டமான கிறிஸ்தவ வாழ்வு பற்றிய ஒரு நாவலல்ல. ஏதோ எனக்குத் தெரிந்தவரையில் எழுதியிருக்கிறேன். ரெய்னீஸ் ஐயர் தெருவுக்கு அப்புறமும் புதுமைப்பித்தனைப் போல் என் கதைகளிலும் நாவல்களிலும் நிறைய பரிசோதனை முயற்சிகளை செய்திருக்கிறேன். இந்த என் பரிசோதனை முயற்சிகள் ஒருவேளை வாசகர்களை எட்டாமல் போயிருக்கலாம்.’’

நீங்கள் கிறித்தவராக மதம் மாறி ஞானஸ்தானம் எடுத்துக்கொண்டதுக்கும் ரெய்னீஷ் ஐயர் தெருவுக்கும் தொடர்பு உண்டா? உங்கள் எழுத்திலும் பைபிளின் தாக்கம் அதிகமாக இருக்கிறது?

”1960 முதல் 73 வரை பாளையங்கோட்டையில பல கிறித்தவக் குடும்பஙக்களுக்கு மத்தியில் வாழ்ந்தேன். அப்போது பார்த்த சர்ச், பைபிள் என்று கிறிஸ்தவர்களின் பழக்கவழக்கங்கள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அந்த வேகத்தில் கிறித்தவராக மாற முடிவு செய்தேன். சாமுவேல் ஜெயச்சந்திரன் என்று பெயர்மாற்றி ஞானஸ்தானம் எடுத்துக்கொண்டேன். ஆனால், அதற்கு அடுத்தக்கட்டமான திடப்படுத்துதலை செய்யப்போகவில்லை. அதற்குள் அதிலிருந்து மனம் விலகிவிட்டது. அங்கே இருந்த வரைக்கும் அவர்களோடு இருந்தேன். எனவே, இதைச் செய்தேன். அப்புறம் வந்துவிட்டேன். எனவே, தொடரவில்லை. ஆனால், அப்போதும் அவ்வளவு தீவிரமாக அதனை நான் எடுத்துக்கொள்ளவில்லை. ஜெபம் செய்வது கிடையாது. ஆனால், சர்ச்சுக்கு போவேன். இப்போது நினைத்துப் பார்க்கும்போது பைத்தியக்காரத்தனமாகப் படுகிறது. அப்போதே வீட்டில் சொன்னார்கள்; ‘பைத்தியக்காரத்தனம் பண்ணிவிட்டாயேடா’ என்று சத்தம் போட்டார்கள். என்னவென்று ஒரு காரணமும் இல்லாமல் இதுபோல் நிறைய பைத்தியக்காரத்தனங்கள் செய்திருக்கிறேன். என்னமோ தோன்றும் செய்து விடுவேன். மெட்ராஸுக்கு புறப்பட்டு வந்ததும் அப்படி ஒரு பைத்தியக்காரத்தனம் தான்.’’

முன்பு ஒரு சமயம் மெட்ராஸில் இருப்பது லாட்ஜில் இருப்பது போலிருக்கிறது. எப்போது திருநெல்வேலி போவோம் என்றிருக்கிறது என்று சொல்லியிருந்தீர்கள். இத்தனை வருட இடைவெளிக்குப் பிறகு இப்போதும் அதே கருத்தில்தான் இருக்கிறீர்களா?

”இப்போது திருநெல்வேலிக்கும் போகமுடியாது! அதுதான் விஷயம். திருநெல்வேலி இன்னொரு சென்னையாக மாறிவிட்டது. எந்தக் காரணமும் இல்லாமல் எவ்வளவோ விஷயங்கள் செய்து கொண்டிருக்கிறோம். அதுபோல்தான இங்கே மெட்ராஸில் இருந்து கொண்டிருக்கிறேன். இந்த வாழ்க்கைக்கு லாயக்கில்லாத ஆள் நான். எனக்கு முடியவில்லை. இப்போதும் தேவையில்லாமல்தான் இங்கு இருந்து கொண்டிருக்கிறேன். எங்கே போவது என்றும் தெரியவில்லை. எங்காவது சாப்பாடு கிடைக்கும் இடமாக ரிஷிகேஷ் போல் போய்விடலாம் என்றிருக்கிறேன். ஆனால், குழந்தைகள் இருக்கிறார்கள். எனவே, அது அவ்வளவு சுலபமாக முடியாது. குழந்தைகள் கல்யாணமாகி செட்டிலாகிவிட்டார்கள் என்றால் புறப்பட்டு விடலாம். ஆனால், எங்காவது போகலாம் என்றால் அதற்கான பணமும் என்னிடம் கிடையாது. அதற்கும் குழந்தைகளை சார்ந்துதானே இருக்க வேண்டியதிருக்கிறது!’’

சென்னை தொடர்பாக பாஸிட்டிவான எண்ணங்களே உங்கள் மனதில் இல்லையா?

”அப்படிச் சொல்லிவிட முடியாது. என் வாழ்வின் பெரும்பகுதி இங்குதான் கழிந்திருக்கிறது. இங்கு வந்தபிறகு தான் என்னுள் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. நிறைய விஷயங்களை இந்த நகரம் தான் எனக்குக் கற்றுத் தந்தது. நான் ஒரு தேர்ந்த பத்திரிகையாளன் இல்லை. ஆனால், சென்னை என்னைப் பத்திரிகையாளனாகவும் அடைகாத்துக் கொண்டது. ஆனாலும், இங்கே இருக்க முடியவில்லை.’’

பத்திரிகையாளர் வண்ணநிலவன் பற்றிச் சொல்லுங்கள்.

”கண்ணதாசன், கணையாழி, புதுவைக் குரல், துக்ளக், சுபமங்களா, அன்னைநாடு போன்ற பத்திரிகைகளில் இருந்தேன். பதிமூன்று வருடங்கள் துக்ளக்கில் இருந்தேன். என்னைச் சரியாகப் புரிந்துகொண்டு இவனை நல்ல வழியில் திருப்பி விடவேண்டும் என்று சோ மிகவும் முயற்சித்தார். இவன் தப்பாகப் போய்விடுவான் என்று அவருக்குப் பட்டிருக்கவேண்டும். துக்ளக்கிலதான் ஒரு பத்திரிகையாளன் பணி என்ன என்பதை தெரிந்துகொண்டேன். எனது கவனம் இலக்கியத்தை தாண்டி அரசியல், சட்டம், சமூகம், சினிமா, நாட்டு நிர்வாகம் போன்ற பல துறைகளுக்கு விரிந்தது. ஆனாலும், என்னால் அங்கு இருக்கமுடியாமல் ஆகிவிட்டது. எழுதவேண்டும் என்று அவசியமில்லை; உங்களால் என்ன முடிகிறதோ அதைச் செய்துகொண்டு இருங்கள் என்று கூட சோ சொல்லிப் பார்த்தார். எனக்கு ஒரு விதமான மனச்சோர்வு வந்துவிட்டது. இலங்கையுடனும் விடுதலைப்புலிகளுடனும் தேவையில்லாமல என்னையும் சேர்த்து யோசித்துதில், மனம் பயம்கொள்ளத் தொடங்கிவிட்டது. போலீஸ் வந்து விடும், ஆட்கள் கொலை செய்ய வருகிறார்கள் என்றெல்லாம் தோன்றியது. இன்றைக்கு வரைக்கும் அப்படி பயந்தது போல் எதுவும் நடக்கவில்லை. ஆனாலும், எனக்குப் பிரச்சினை என்று தோன்றிவிட்டதால் துக்ளக்கிலிருந்து வந்துவிட்டேன். உங்களுடன் உட்பட யாருடனாவது பழகிக்கொண்டிருக்கும் போதே இவர் பிரச்சினைக்குறிய ஆள் என்று தோன்றினால் உடனே விலகிவிடுவேன். கல்யாணியுடன் மட்டும் ஒரு பிரச்சினையும் இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது.’’

சுபமங்களாவில் வேலை பார்த்த அனுபவங்கள்?

”வாழ்க்கையை ஓட்ட வேண்டுமே. அதனால் போனேன். அதற்கு முன்னால் மாலன் இந்தியா டுடேயில் இருந்தபோது என்னைக் கூப்பிட்டார். நான் சிரமப்படுகிறேன் என்று தெரிந்து எனக்கு எதாவது செய்யவேண்டும் என்று அவர் நினைத்தார். ஆனால், அவ்வளவு பெரிய பத்திரிகைக்கு நாம் தகுதியானவன்தானா என்று எனக்கு பயம் வந்துவிட்டது. அதுபோன்ற ஒரு பத்திரிகையில் நாம் என்ன செய்ய முடியும்? எனவே, பிரபுசாவ்லாவைச் சந்திப்பதற்கு மாலன் ஏற்பாடு செய்திருந்த அன்று நான் போகவில்லை. என்னைத் தெரியும் என்பதால் மாலனும் அதனைப் பெரியதாக எடுத்துக்கொள்ளவில்லை. “பரவாயில்லை ராமச்சந்திரன்’’ என்று சொன்னார்.

”ஆனால், இப்படிப் பயந்துகொண்டு எத்தனை நாளைக்கு இருந்துவிடமுடியும். குடும்பம் இருக்கிறது, குழந்தைகள் இருக்கிறார்கள். எனவே, கோமல் சுவாமிநாதனிடம் போய் வேலை கேட்டேன். சுபமங்களா ஒரு மாதப் பத்திரிகை; இரண்டு ஆட்களுக்கு மேல் அங்கு வேலையே கிடையாது. ஆனால், நான் சிரமப்படுகிறேன் என்பதால் அவர் சேர்த்துக்கொண்டார். எல்லா இடங்களிலும் போல் அங்கும் ஒரு பிடிப்பு இல்லாமல்தான் இருந்தேன். அங்கு வாத்தியார் ராமன் என்னிடம் மிகவும் பிரியமாக இருந்தார். மற்றவர்கள் எல்லோரும்கூட நான் எழுத்தாளர் என்று என்மேல் மிகவும் மரியாதையாக இருந்தார்கள். சிறுகதைகள், கவிதைகள் படித்து தேர்வு செய்ய வேண்டும். ஆபிஸ் போவேன். மதியம் 3.30க்கு கிளம்பிவிடுவேன். வேலைகள் இருக்காது என்பதால் கோமலே, “கிளம்பிவிடுங்கள் ராமச்சந்திரன்’’ என்று சொல்லிவிடுவார்.’’

இடையில் ருத்ரய்யாவின் ‘அவள் அப்படித்தான்’ படத்திற்கு வசனம் எழுதினீர்கள். ஏன் சினிமாவில் தொடரவில்லை?

”ருத்ரய்யா எனக்கு நண்பர். மிகவும் சிரமப்பட்ட காலங்களில் அவர் அறையில் தங்கியிருந்தேன். அவர் ‘அவள் அப்படித்தான்’ படத்தை எடுத்தபோது கூடவே இருந்ததால், “நீயும் சிலக் காட்சிகளை எழுதித் தாயேன்’’ என்று கேட்டார். அதனால் செய்தேன். பிளாஷ் பேக், ஸ்ரீப்ரியா வரும் காட்சிகளுக்கு மட்டும் வசனம் எழுதினேன். மற்றபடி சினிமாவுக்குப் போகும் திட்டம் எப்போதுமே எனக்கு இல்லை. பத்திரிகைக்கே லாயக்கில்லாத ஆள் நான் என்னும்போது எப்படி சினிமாவில் இருக்க முடியும்? சினிமா டிஸ்கஷன் போல் போரான விஷயம் வேறு எதுவுமே கிடையாது!’’

இப்போதெல்லாம், கடைசி பத்து வருடங்களாக நீங்கள் எழுதுவது மிகவும் குறைந்துவிட்டது, ஏன்?

”முழுநேர எழுத்தாளன் என்று சொல்லிக் கொள்வதற்குப் பொருத்தமானவன் இல்லை நான். சாதாரண ஆளா இருந்திருக்க வேண்டியவன். தற்செயலாக இதில் வந்து மாட்டிக்கொண்டு விட்டேன். 1000 ரூபாய் சம்பளத்திற்கு சிறு வயதில் திருநெல்வேலியில் ஒரு வேலை கிடைத்திருந்தால் இந்தப் பக்கமே திரும்பிப் படுத்திருக்க மாட்டேன். எதனாலோ வேறு வழியில்லாமல் தொடங்கிவிட்டேன். அப்புறம் தொடங்கிவிட்டதாலேயே இவ்வளவு தூரம் நகர்ந்து வந்துவிட்டேன். எழுத்து எனக்கு எப்போதும் தாகம் இல்லை. ஏதோ தோணிச்சி எழுதினேன். ஆரம்பத்தில், எழுதத் தொடங்கிய காலத்தில், ஒரு சந்தோஷம் இருந்தது. ஒரு உத்வேகம் இருந்தது. ஆனால், தொடங்கிய ஐந்தாவது, ஆறாவது வருடத்திலேயே அது வடிந்துவிட்டது.

”சில வருடங்களுக்கு முன்பு ஒரு கதையில் ஒரு ஜாதியின் பெயரைக் குறிப்பிட்டிருந்தேன். அந்த ஜாதிச் சங்கக்காரர்கள் வீடுதேடி வந்துவிட்டார்கள். ஒரு குறிப்பிட்ட ஜாதியை அவமானப்படுத்தும் நோக்கம் எனக்கு மட்டுமல்ல எந்த எழுத்தாளருக்குமே இருக்க சாத்தியமில்லை என்று அவர்களிடம் சொன்னேன். அவர்கள் திருப்தியடைந்து போய்விட்டார்கள். என்னைப் போன்ற யதார்த்தக் கதைகள் எழுதும் எழுத்தாளர்களுக்கு இது ஒரு பிரச்சினை. ஜாதிப் பெயரைக்கூட குறிப்பிடாமல் எப்படி ஒரு கதையை எழுத முடியும். எழுத தயக்கமாக இருப்பதுக்கு இது ஒரு காரணமாக இருக்கலாம். ஆயினும், சமீபத்தில் சிஃபி இணைய தளத்துக்காக ‘காலம்' என்றொரு நாவல் எழுதினேன். ஒரு குமாஸ்தாவின் பார்வையில் கோர்ட் அனுபவங்களைச் சொல்கிற கதை அது. அது கூட அங்கு பணியாற்றும் என் நண்பர் வெங்கடேஷின் வற்புறுத்தலால் வந்தது தான்.’’

ஒரு வேளை வாசகர்களும் விருதுகளும் அங்கீகாரமும் பெருமளவில் கிடைத்திருந்தால் இப்படி எழுத்தில் இருந்து ஒதுங்கிப் போகிற மனநிலை உங்களுக்கு ஏற்பட்டிருக்காதோ?

”விருதுகளைப் பொறுத்தவரைக்கும் எனக்கு எப்போதும் அதன் மீது மரியாதை ஏற்பட்டதே இல்லை. விருதுகள் இங்கே பெரிய ஒரு கூத்தாகத்தான் இருக்கிறது. வருடம்தோறும் யாருக்காவது கொடுத்தாகவேண்டும என்று ஒரு சடங்குபோல் செய்துகொண்டிருக்கிறார்கள். தீபாவளி, பொங்கல் இனாம் மாதிரி மிகவும் சீப்பாகப் போய்விட்டது. கிடைத்திருக்க வேண்டிய நிறைய பேருக்குக் கிடைக்கவில்லை; வாங்கியிருக்வேக் கூடாத நிறையபேர் வாங்கிவிட்டார்கள். என்றால் இது பைத்தியக்காரத்தனம் இல்லாமல் வேறு என்ன? மிக உயர்ந்த படைப்பாளிக்கு மட்டும்தான் பரிசு கொடுப்போம் என்று இருந்தால் அந்தப் பரிசுக்கு ஒரு அர்த்தம் இருக்கும்.

1000 ரூபாயில் இருந்து லட்சம் ரூபாய்கள் வரை இங்கே பல விருதுகள் உள்ளன. இதில் பல விருதுகள் எனக்கு அளிக்கப்பட்டிருக்கின்றன. வேண்டாம் என்று நிராகரித்துவிட்டேன். வாங்கிய சிலவும், நண்பர்களால் என் மேல் திணிக்கப்பட்டவைகள். ஆரம்பத்தில் பணத்தேவை இருந்தபோது அதற்காகச் சில விருதுகளை வாங்கியிருக்கிறேன். இப்போது பையன் சம்பாதிக்க ஆரம்பித்து விட்டான். பிறகு எதற்கு எனக்கு விருது? ‘அப்பா தயவுசெய்து ஆளைவிடுங்கள்’ என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

”அங்கீகாரத்தைப் பொறுத்தவரைக்கும் ஆரம்பத்திலேயே அது எனக்குக் கிடைத்திருக்க வேண்டியதைவிட அதிகமாகக் கொடுக்கப்பட்டுவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். நான் மிகவும் குறைவாக எழுதியிருந்த போதே சுந்தர ராமசாமி அளவுக்கு, அசோகமித்திரன் அளவுக்கு என் பெயரும் பேசப்பட்டுவிட்டது. அங்கீகாரமும் விருதுகளும் பாரம்தான்; தேவையில்லாமல் அதைத் தூக்கிக்கொண்டு அலையவேண்டும். பிறகு வாசகர்கள்; தமிழில் இல்லாமல் வேறு ஏதாவது ஒரு மொழியில் எழுதியிருந்தாலும் இதைவிட அதிகமாக கிடைத்திருப்பார்கள் என்று எனக்கு தோன்றவில்லை. பிரெஞ்சு போன்ற மொழியிலும் தீவிர இலக்கியத்துக்கு வாசகர்கள் குறைவுதான். அப்புறம் இப்படி குறைவாக இருப்பதுதான் நல்லதும்கூட என்று தோன்றுகிறது. இதை தெரிந்துகொண்டுதானே எழுதத் தொடங்கியது? எனவே, இதில் ஏமாற்றமடைய என்ன இருக்கிறது? அப்புறம் இது எல்லாம் எனக்கு வேண்டும் என்று சொல்வதற்கு நான் என்ன பெரியதாக எழுதிக் கிழித்துவிட்டேன்?’’

தமிழில் முக்கியமான பத்து எழுத்தாளர்களை வரிசைப்படுத்தச் சொன்னால் அனேகமாக அனைவரின் பட்டியலிலும் நீங்கள் இருக்கிறீர்கள். பலருடைய லிஸ்ட்டிலும் வரக்கூடியதாக உங்கள் எழுத்துக்கள் இருக்கின்றன. அப்புறமும் உங்கள் எழுத்தின் மீது உங்களுக்கு நம்பிக்கை ஏற்படவில்லையா?

”மற்றவர்கள் சொல்லுகிறார்கள்; உண்மைதான். ஆனால், இன்றைக்கு வரைக்கும் எனக்கு எழுத்து பெரிய விஷயமாகவேப் படவில்லை. முப்பது வருடத்தை வீணாக்கிவிட்டேன் என்றுதான் தோன்றுகிறது. வேறு ஏதாவது ஒரு தொழில் செய்திருக்கலாம். இளையபாரதி என் கதைகளை தொகுத்துப் போட்டிருக்கிறார். அதையொட்டி எல்லாவற்றையும் திரும்பப் படித்தேன். படிக்கும் போது கூச்சமாக இருக்கிறது. பைத்தியக்காரத்தனமாகப் படுகிறது. எஸ்தரையும் கம்பாநதியையும் கடல்புரத்திலையும் ரெயீனீஷ் ஐயர் தெருவையும் எல்லோரும் கொண்டாடுகிறார்கள் வீடு தேடி வந்து பேசுகிறார்கள், உங்களைப் போல். ஆனால், இவை எல்லாம் எனக்கு சர்வ சாதாரணமானவையாகத்தான் படுகிறது. உங்கள் மனம் நோகக்கூடாது என்பதற்காக நீங்கள் பாராட்டும் போது பொறுத்துக் கொள்கிறேன். ஒருவேளை தமிழுக்கு இது போதுமோ என்னவோ? டால்ஸ்டாயுடன் ஒப்பிடும் போது இங்கு அனேகமாக எதுவுமே நடக்கவில்லை என்றுப் படுகிறது. இங்கு எல்லாமே சோகக் கதைகள்தான். விதம்விதமாக வீழ்ச்சிதான் எழுதப்பட்டிருக்கிறது. ஆனால், இது இல்லை எழுத்து. மிகச் சிறந்த படைப்பை உருவாக்க இயலாது என்ற நிலையில் எழுதாமலிருப்பதுதான், எழுத்துத் துறையை விட்டு விலகிவிடுவதுதான் சிறந்தது.’’

இப்படி எதிலும் சீக்கிரமே அலுப்பு அடைந்துவிடும் நபராக நீங்கள் இருப்பதுக்கு என்ன காரணமென்று நினைக்கிறீர்கள்?

”சின்ன வயதிலிருந்தே என்னிடம் உள்ள விஷயம் இது. ஏன் என்றே புரியவில்லை. அப்போதே எல்லோரும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது நான் மட்டும் தனியாக உட்கார்ந்திருப்பேன். யாருடனும் பேசமாட்டேன். அப்பா, அம்மாவிடம் கூட பேசமாட்டேன். பேச முடியாதது ஒரு காரணமாக இருக்கலாம். டாக்டர்களைத்தான் கேட்கவேண்டும். எங்கேயும் போவதில்லை. அந்த காலகட்டத்தில் அப்பா குடித்துவிட்டு வீட்டுக்கு வருவார். அதையொட்டி வீட்டில் பிரச்சினைகள் தொடங்கும். இதில் பாதிக்கப்பட்டு இரண்டு முறை தற்கொலைக்கு முயன்றிருக்கிறேன். எட்டு வயதில் பூச்சி மருந்து சாப்பிட்டேன். ஒருமுறை நண்பன் காப்பாற்றிவிட்டான். மறுமுறை வெறும் பேதியோடு முடிந்துவிட்டது.’’

சுபமங்களா பேட்டியிலேயே அரசியல் நாவல் ஒன்று எழுதும் திட்டம் வைத்திருப்பதாக சொன்னீர்கள். இதுவரைக்கும் எழுதவில்லை. இனி மேலாவது எழுதுவீர்களா?

”மூன்று நாவல் மனதில் இருக்கிறது. இனிமேல் சிறுகதை எழுத முடியாது. எழுதத் திட்டமிட்டாலே மனதில் பெரிது பெரிதாகத்தான் தோன்றுகிறது. ஆனால், இப்போது எழுத்துக்கே எதிரான மனநிலையோடு இருக்கிறேன். என்றால் எப்படி எழுதமுடியும்! மனிதனுக்கு எதாவது ஒன்றில் பிடிப்பு வேண்டும். எனக்கு அது இல்லாமல் போய்விட்டது. காய்கறி வாங்க வேண்டுமானால் கூட மெக்கானிக்கலாகப் போய்விட்டு வருவேன். வீட்டில் எல்லோருடனும் பேசுகிறேன்; கேட்டால் பதில் சொல்கிறேன்; அவ்வளவுதான். மற்றபடி யாருடனும் பற்று இல்லாமல்தான் இருக்கிறது. இந்த மாதிரி ஒரு நிலை ஏற்பட்டிருக்கக்கூடாது.’’

எழுதவில்லையென்றால், மேற்கொண்டு என்ன செய்ய திட்டமிட்டிருக்கிறீர்கள்?

“உயிர் இருக்கும் வரைக்கும் எதாவது செய்தாகவேண்டும் என்பது நியதி. எழுதுவதிலும் ஆர்வம் இல்லை. பெட்டிக்கடை போல் எதாவது வைத்துக்கொண்டு உட்காரலாம். ஆனால், நிச்சயம் வீட்டில் அனுமதிக்கமாட்டார்கள். நம்மால் அது முடியவும் செய்யாது. பொருட்களுக்குக் காசை எண்ணி வாங்கத் தெரியாது. எங்காவது போய்விட்டாலும் நிம்மதி கிடைத்துவிடுமா? தெரியவில்லை. வேறு வழியும் இல்லை. பகல் முழுவதும் சும்மாவே இப்படி இங்கே உட்காந்திருக்கிறேன்.’’

போர் அடிக்கவில்லை?

”இல்லை. இப்போதும் படிப்பதில் இருக்கும் ஆர்வம் மட்டும் வற்றிவிடவில்லை. தினசரி பேப்பர் படிப்பதில் ஆர்வம் இருக்கிறது. சராசரியாக தினசரி நான்கு மணிநேரம ஹிந்து படிக்கிறேன். ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது. யூமா.வாசுகியின் ‘ரத்த உறவு’ நாவல் பிடித்திருந்தது. டிவி பார்ப்பேன். பழைய படங்கள், பாடல்கள் போட்டால் விரும்பி பார்ப்பேன். பொதிகை டிவியில் ‘சிட்டிசன் கேன்’ போட்டார்கள். கிளாஸிக்குகள் என்றால் கிளாஸிக்குகள்தான். இப்போது பார்க்கும் போதும் அவ்வளவு அருமையாக இருக்கிறது. பொதுவாக புத்தகங்களில் தெரிந்துக்கொள்ள ஒன்றுமே இல்லை. கூட்டங்களிலும் ஒன்றும் இல்லை. ஞானி, வெங்கட்சாமிநாதன், சுந்தர ராமசாமி... எல்லோரும் என்ன பேசுவார்கள் என்று தெரியும். அப்புறம் அதில் கேட்பதற்கு என்ன இருக்கிறது? பிலிம் சொஸைட்டி படங்களும் முன்பு போல் இல்லை. கடைசியாக பிரெஞ்சு படங்களைப் பார்த்தேன். ஆங்கேயும் வழக்கமான படங்கள்தான். பத்திரிகைகளிலும் இதுதான் நிலை.

”எல்லாவற்றையும் விட்டுவிடலாம் என்றிருக்கிறது. இந்தப் பேட்டியைக்கூட வேண்டாம் என்றுதான் தோன்றுகிறது. இப்போதும் இதோடு இதனை விட்டுவிட்டீர்கள என்றால் சந்தோஷப்படுவேன். எல்லாவற்றையும் விட்டுவிட நினைப்பவனுக்கு பேட்டி எதற்கு? ஆனால், 30 வருடத்துக்கு முன்பு தெரிந்தோ தெரியாமலோ தொடங்கிவிட்ட பயணத்தின் ஒரு பகுதிதான் இதுவும் என்பதால் உங்களுடன் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கிறேன். தொடர் ஓட்டத்தில், தொடங்கிய பிறகு உங்களுக்கு விருப்பம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் சில விஷயங்களை செய்துதான் ஆகவேண்டும். எனவேதான், இந்தப் பேட்டிக்கே ஒப்புக்கொண்டேன்.’’

சந்திப்பு: தளவாய் சுந்தரம்         படங்கள்: புதூர் சரவணன்

நன்றி: தளவாய் சுந்தரம்  தளம்

Feb 22, 2012

வாசகரும் எழுத்தாளரும் – க.நா.சுப்ரமணியம்

இது ஜனநாயக யுகம் – அதனால் வாசகனுக்கு ஒரு முக்கியத்துவம் ஏற்பட்டிருக்கிறது என்று பலரும் நினைக்கிறார்கள்.அது உண்மையில் அப்படியில்லை. உலகில் முதல் எழுத்தாளன் தோன்றிய முதலே வாசகர்களின் முக்கியத்துவமும்தொடங்கிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் இன்று பழைய காலத்திய முக்கிய இலக்கியாசிரியர்கள்என்று கருதப்படுபவர்களில் பெரும்பாலோர் வாசகர்களை மறந்து விட்டு, தன் பாட்டில், எழுதியவர்கள்தான். kanasu3 வாலிவதத்தைப் பற்றியோ, விபீஷண சரணாகதி பற்றியோ இன்று வரை ஏற்பட்டுள்ள வாசக விவாதங்களை வால்மீகிஎன்கிற கவிமட்டும் கேட்டு அவற்றைக் கொண்டு தன் காரியத்தை அமைக்க முயன்றிருப்பாரேயானால், அவர்காவியம் முற்றுப்பெறாமலேதான் இருந்திருக்கும் என்று சொல்லலாம். ஆனால் வால்மீகி மகரிஷி என்று சொல்லித்தப்பித்துக்கொள்ள முடியாது. இன்று எழுதுகிற ஒவ்வொருவருமே மகரிஷிதான்; சந்தேகமில்லை.

இலக்கியாசிரியன் தன் வாசகனை எந்த அளவுக்கு நினைவில் கொண்டு தன் படைப்புக்களைச் செய்கிறான் என்பதுவிவாதத்துக்குரிய விஷயமாகும். நினைப்பதேயில்லை என்பதிலிருந்து, ‘ஏதோ கொஞ்சம் லேசாக நினைவிருக்கும்’என்பதுவரை சொல்லலாம். ஆனால் இலக்கியச் சரித்திரத்தில் காணக்கிடக்கிற ஒரு உண்மை தப்ப முடியாததாகஇருக்கிறது – எந்தக் காலத்தில் வாசகன் முக்கியத்துவம் உச்ச கட்டத்தை எட்டுகிறதோ அந்தக்காலத்தில் இலக்கியசிருஷ்டி ஓரளவுக்குத் தரம் குறைந்ததாக இருப்பது தெரிகிறது. உதாரணமாக சமஸ்கிருத இலக்கியத்தில் 9,10நூற்றாண்டுகளில் கவிக்குத் தருகிற அளவுக்கு வாசகனுக்கும் முக்கியத்துவம் தந்து, அந்த வாசகன் கவியேபோல, சிலசமயங்களில் கவியையும் விட முக்கியமானவன் என்று அவனுக்கு ஸஹ்ருதயன் என்று பெயர் தந்து பாராட்டினார்கள்.இதற்கு ஓரிரண்டு நூற்றாண்டு கவிதையே க்ஷ£ணமடைந்து தரங்குறைந்து தேய்ந்து ஒடுங்கிவிட்டது என்பது சரித்திரஉண்மை.

வாசகனே இல்லாவிட்டால் இலக்கியம் எதற்கு, ஏது என்று சொல்பவர்கள் இருக்கலாம். வாசகன் இல்லாத நிலையோ,முக்கியத்துவம் பெறாத நிலையோயல்ல விஷயம். சர்வ ஆதிக்கமும் வாசகனுடையதாக இருப்பதற்கும், சர்வஆதிக்கமும் எழுதுபவன் கையிலேயே என்று இருப்பதற்கு இடை நிலையில் ஒரு இடம் இருக்கவேண்டியதுதான்லக்ஷிய நிலை என்று சொல்ல வேண்டும். வா¡சகனை மனதில்கொண்டு, வாசகனை நாடி எழுதுகிறஇலக்கியாசிரியர்களை விட, வாசகனை மனதில் கொள்ளாத, எவனுக்கெந்தக் கலை இருக்கிறதோ படிக்கட்டும், சர்வஜனரஞ்சகமானது என்று ஒரு தரம் இலக்கியத்திலேயே கிடையாது என்று நினைக்கிறவனே நல்ல இலக்கியாசிரியனாகஇருக்கவேனும் – இருந்து வந்திருக்கிறான் என்று சொல்ல வேண்டும்.

“பொதுவாக இதெல்லாம் சரி. உன் கதைகளையோ உன் நாவல்களையோ, உன் கவிதைகளையோ, உன் விமர்சனக்கட்டுரைகளையோ பற்றி உனக்குள்ள (அது ஒன்றைரையே அரைக்காலோ, அல்லது இருநூறோ) வாசகன் என்னநினைக்கிறான், அவன் நினைப்பது பற்றி நீ என்ன நினைக்கிறாய்?” என்று கேள்வி கேட்கப்பட்டால், என்னால் நிதானித்துஒரு பதில்தான் சொல்ல முடியும். “அது அப்படியொன்றும் விவரிக்ககூடிய உறவு அல்ல. வாசகனுக்கும்எழுத்தாளருக்கும் உள்ள உறவு வார்த்தைகளுக்கு அகப்படாது,” என்று சொல்லத் தோன்றுகிறது. இருந்தும்அதையும்தான் சற்றுச் சொல்லிப் பார்க்கலாமே என்று நினைத்துக் குறிப்புக்காட்டுகிற மாதிரிதான் வாசகர்கள் சிலருடன்கடித மூலமாகவோ நேரடியாகவோ நான் நடத்திய சம்பாஷணைகள் என்னை என்ன நினைக்கத் தூண்டுகின்றனஎன்பதைச் சொல்லுகிறேன்.

மதுரையிலிருந்து ஒரு வாசகர் மணி மணியான எழுத்துக்களில் சுதேசமித்திரன் வாரப்பதிப்பில் என் ஒவ்வொருகதையும் வெளிவந்தவுடன் பாராட்டி “ஆஹா அற்புதம்! பிரமாதம்” என்றெல்லாம், ஒரு தபால் கார்டில் அடங்கக்கூடியஅளவில் எழுதுவார். இந்தக் கடிதங்களுக்கெல்லாம் முக்கியத்துவம் தரப் போதுமான அறிவு எனக்கில்லை. என்மனைவி அவற்றைத் தொகுத்துப் பத்திரப்படுத்தி வைப்பாள். இன்னமும் வைத்திருக்கிறாள் என்று எண்ணுகிறேன்.இந்த அன்பரின் பெயரை வெளியிட எனக்கிஷ்டமில்லை. ஏனென்றால் இன்று அவர் தன்னைப் பிரபலமானஎழுத்தாளராகக் கருதிக்கொண்டிருக்கிறார். ஒரு விசேஷம் என்னவென்றால், அவர் பிரபலமாகத் தொடங்கியதேதியிலிருந்து எனக்குக் கடிதம் எழுதுவதை நிறுத்திவிட்டார். இந்த ஒருவர் தன்னுடைய ஸஹ்ருதயா என்று நான்இவர் எழுதிய கடிதங்களை வைத்து ஏற்றுக் கொண்டால் நான் எழுதுவதன் தொடக்கம், நான் எழுதுகிற பாணி,இலக்கியம்பற்றி என் கொள்கைகள் எல்லாவற்றையுமே மாற்றியமைத்துக்கொள்ள வேண்டிவரும். அதற்கு நான்தயாரில்லை. அதற்காக இந்த வாசகர் தான் நம்பாததைச் சொன்னதாகவும் நான் கருதவில்லை. ஏதோ சொன்னார் –கார்டு எழுத வசதியிருந்தது அவ்வளவுதான். அவருடைய கையெழுத்தைப் பார்த்து நான் பொறாமைப்பட்டதுண்டுஎன்றும் சொல்ல விரும்புகிறேன்.

இன்னொருவரிடமிருந்தும் எனக்கு அந்த நாட்களில் அடிக்கடி கடிதம் வரும். நாவல், கதை, எது எழுதினாலும்அதைப்பற்றித் தீர்க்கமாக விவாதித்து இது சரியென்று எனக்குத் தோன்றுகிறது – இது சரியல்ல என்று எண்ணுகிறேன்என்று எழுதுவார். அவர் கடிதங்களுக்கு நான் பதில் எழுதியதில்லை – ஆனால் அவர் அதற்காக எழுதுவதைநிறுத்திவிடவில்லை; எழுதிக்கொண்டே இருந்தார். ஆனால் பின்னர் சற்றுக் காலதாமதமாக அவரே ஏதோ நாவல்,கதை ஒன்று எழுத ஆரம்பித்த பிறகு, அவர் சரியல்ல என்று எனக்குச் சொன்ன பாணியைப் பின்பற்றி எழுதுகிறார்என்று கண்டு, அவரைச் சந்தித்தபோது அது பற்றிக் கேட்டேன். “உண்மை” என்று ஒப்புக்கொண்டார். ஆனால் ஏன் அப்படிஎன்று சொல்ல அவருக்குத் தெரியவில்லை.

என் வாசகர்கள் பற்றி இது போதும் என்று எண்ணுகிறேன். ஆனால் பொதுவாக விமர்சனக்கட்டுரைகள்எழுதும்போதுதான் மனதில் வைத்துக்கொண்டுதான் எழுதுகிறேன். “நீங்கள் அழிக்கும் விமரிசனம் ஏன் எழுதுகிறீர்கள்?ஆக்க விமர்சனம் செய்யக்கூடாதா?” என்றுதான் விமர்சனம் எழுத ஆரம்பித்த காலத்தில் பல வாசகர்கள் என்னைக்கேட்டதுண்டு. அதற்கு ஒரே பதில்தான் உண்டு. “அழிக்கப்பட வேண்டியது அதிகமாக இருக்கும்வரை அழிக்கும்விமரிசனம் செய்தேதான் தீரவேண்டும். ஆனால் ஆக்க விமரிசனம் இல்லாமல் அழித்தல் விமரிசனம் என்று ஒன்றுகிடையாது. இலக்கிய விமர்சனத்தில் ஒரு நோக்கில் அழிப்பதும் ஆக்குவதும் ஒன்றே” என்றுதான் பதில் தரவேண்டும்.

மற்றபடி கவிதை, சிறுகதை, நாவல் என்று எழுதுகிறபோது நான் எழுதியதை எந்தச் சுண்டைக்காய் வாசகன்ஏற்றுக்கொள்ளுவான் என்பது பற்றி எனக்கு நினைப்பு இருப்பதில்லை. தான் இன்று கவிதை என்று எழுதுவதை,கம்பனும் இளங்கோவும் டாண்டேயும் ஷேக்ஸ்பியரும் இன்று இருந்தால் ஏற்றுக் கொள்வார்களா என்பதுதான் என்நினைப்பு. நிகழ்கால வாசகன் அறிவால், ஆற்றலால், அரசியலால் அவர்களை விடச் சிறந்தவனாக இருக்கலாம் –ஆனால் இலக்கியத் தரத்தால் எந்த வாசகனும் எந்தக் காலத்திலும் எட்டாத ஒரு தரத்தையே பழங்கால, நிகழ்கால,வருங்கால எழுத்தாளர்கள் எல்லாம் எட்ட முயலுகின்றனர். அந்தத் தரம் ஒரு சரடு – அதைக் கண்டுகொள்ளத்தான் நம்பொது ஸீரியஸ் எழுத்தாளனும், தரமுள்ள இலக்கியாசிரியனும் முயலுகிறான். அந்தத் தரத்தை வாசகர்கள் தேடிக்கண்டுகொள்ள வேண்டும்.

இன்றைய வாசகர்கள் தேடத் தயாராக இல்லை. ஆனால் அவர்கள் தேடுவது அவர்களுக்குக் கிடைக்கும்.

ஞானரதம் – மே 1970.

*****

நன்றி: தமிழ் தொகுப்புகள்

Feb 20, 2012

நான் ஜன்னலருகே உட்கார்ந்திருக்கிறேன்-ஜெயகாந்தன்

ஆமாம்; நான் ஜன்னலண்டைதான் உக்காந்துண்டிருக்கேன்… அதுக்கென்னவாம்? உட்காரப்படாதோ?… அப்படித்தான் உட்காருவேன். இன்னிக்கி நேத்திக்கா நான் இப்படி உக்காந்துண்டிருக்கேன்… அடீ அம்மா! எவ்வளவோ காலமா உக்காந்துண்டுதான் இருக்கேன். இனிமேலும் உக்காந்துண்டுதான் இருப்பேன். என்ன தப்பு? இல்லே, யாருக்கு என்ன நஷ்டம்? பெரீசா எப்போ பார்த்தாலும் இதையே ஒரு வழக்காப் பேசிண்டு இருக்கேளே… ‘ஜன்னலண்டையே உக்காந்துண்டிருக்கா… உக்காந்துண்டிருக்கா’ன்னு. ஜன்னலண்டை உட்காரப்படாதோ? ஜன்னலண்டையே போகப் படாதோjayakanthan_185_1_050408 ? அப்படீன்னா வீட்டுக்கு ஜன்னல்னு ஒண்ணு எதுக்காக வெக்கணும்கறேன்! ஒண்ணா? இந்த வீட்டுக்கு ரெண்டு ஜன்னல் இருக்கு; பார்த்துக்கோங்கோ. தெருவிலே நின்னு பார்த்தா இந்த வீடு ரொம்ப லட்சணமா இருக்கோ இல்லியோ? அந்த லட்சணமே இந்த ஜன்னல் ரெண்டினாலேதான். ஜன்னல் இல்லேன்னா பார்க்கச் சகிக்குமோ? இந்த வீடு ரொம்பப் பழசுதான். பழசுன்னாலும் பழசு, அறதெப் பழசு… பழசானால் என்ன? அழகாகத்தானே இருக்கு! தாத்தாவோட தாத்தாவெல்லாம் இங்கேதான் பொறந்தாளாம். இப்போ இந்த வீட்டுக்கு ரெண்டு பக்கத்திலேயும் பெரிசு பெரிசா மாடி வீடு வந்துட்டுது. ரெண்டு பெரியவா கையைப் பிடிச்சுண்டு ஒரு சின்னக் கொழந்தை நிக்கற மாதிரி இந்த வீடுதான் குள்ளமா நடுவிலே நின்னுண்டு இருக்கு… சின்ன வீடு, ஓட்டு வீடு; வீட்டுக்கு முன்னே ரெண்டு பக்கமும் திண்ணை; நடுவிலே வாசற்படி; ரெண்டு திண்ணைக்கு நேராவும் ரெண்டு ஜன்னல்; இந்த வீடு ரெண்டு கண்ணையும் தெறந்துண்டு தெருவைப் பார்க்கற மாதிரி இருக்கும். இந்த ரெண்டு ஜன்னலும் இந்த வீட்டுக்கு ரெண்டு கண் மாதிரி. ஜன்னல் வீட்டுக்குக் கண்தானே? யார் சொன்னா அப்படி?… யாரும் சொல்லலே. எனக்கே அப்படித் தோன்றது… நான்தான் சொல்றேன்.

வீட்டுக்கு ஜன்னல் எதுக்கு வெச்சாளாம்? காத்து வரதுக்கு; வீடு தெருவைப் பாக்கறதுக்கு; வீட்டில இருக்கிறவா மூச்சு விடறதுக்கு. வீட்டிலெ இருக்கிறவா தெருவிலே நடக்கிறதையெல்லாம் பாக்கறதுக்கு…

ஏன் பார்க்கணும்னா கேக்கறேள்? நன்னா கேட்டேள்! ஏன் பார்க்கப்படாதுன்னு நான் கேக்கறேன். அதுக்குப் பதில் சொல்லுங்கோ. ஏன் மூச்சு விடணும்? ஏன் காத்து வரணும்னு கூடக் கேப்பேளா? இதெல்லாம் என்ன கேள்வி? ஜன்னலே இல்லாமெக் கட்டினா அதுக்கு வீடுன்னா பேரு? அது சமாதிடீ அம்மா, சமாதி!

காலமெல்லாம் இது ஒரு பேச்சா? ‘ஜன்னலண்டே உக்காந்துண்டிருக்கா… ஜன்னலண்டே உக்காந்துண்டிருக்கா’ன்னு கரிக்கறேளே…

எனக்கு ஜன்னலண்டேதான் சித்தே மூச்சு விட முடியறது. இந்த வீட்டிலே வேறே எங்கே போனாலும் மூச்சு முட்டறது; புழுங்கறது; உடம்பு தகிக்கிறது. இந்த வீட்டிலேயே… ஏன்? இந்த லோகத்திலேயே இதைவிட சொகமான இடம் கிடையாது. அடீ அம்மா! இங்கேதான் என்னமா ஜிலுஜிலுன்னு காத்து வரது! நான் உக்காந்துண்டிருக்கேனே, இந்த ஜன்னல் கட்டைதான் என்னமா வழவழன்னு இருக்கு! சேப்புக் கலர் சிமிட்டி பூசி இருக்கா… என்னதான் வெய்யல் நாளா இருந்தாலும் இது மட்டும் தொட்டா ஜில்லுனு இருக்கும்! ஜன்னலுக்கு நேரா தெரியறதே ஒரு அரச மரம்… எப்பப் பார்த்தாலும் அது ‘சலசல’ன்னு என்னமோ பேசிண்டே இருக்கு. இந்த ஜன்னல் கட்டையிலே ஏறி ‘ஜம்’னு உக்காந்துண்டு இந்த அரச மரத்தைப் பார்த்துண்டே இருந்தா நேரம் போறதே, காலம் போறதே தெரியறதில்லே – அப்படித்தான் நான் உக்காந்துண்டிருக்கேன்! இன்னிக்கி நேத்திக்கா உக்காந்திண்டிருக்கேன்? இதிலே உக்காந்துண்டா எனக்கு அது ஒரு பாந்தமாத்தான் இருக்கு. ஜன்னலுக்கு ரெண்டு பக்கமும் இருக்கற சுவத்திலே ஒரு பக்கம் முதுகைச் சாச்சுண்டு இன்னொரு பக்கம் ரெண்டு பாதத்தையும் பதிய வச்சு உதைச்சுண்டா ‘விண்’ணுனு எனக்கு ரொம்பக் கச்சிதமா இருக்கு. இதெ எனக்காகவே கட்டி வெச்சிருக்கா. இது என்னோட ஜன்னல். நான் இந்த ஜன்னலோட நான்! எனக்காக இதைக் கட்டி வச்சு, இதுக்காக என்னைக் கட்டி வச்சுட்டா. யாரும் வெக்கல்லே; நானே வச்சுண்டேன்! எப்படிச் சொன்னாத்தான் என்னவாம், இப்போ?

இந்த மாதிரி ஒரு பக்கம் சாஞ்சுண்டு இன்னொரு பக்கம் காலை உதைச்சுண்டு உக்காரணும்னு எவ்வளவு காலம் பிரயாசைப் பட்டிருக்கேன் தெரியுமா, நான்? அப்போவெல்லாம் எனக்குக் காலே எட்டாது. கால் எட்டினா முதுகைச் சாச்சிக்க முடியாது! அப்பல்லாம் ஜன்னல் கட்டையிலே ஏறி நின்னுண்டா எனக்கு உசரம் சரியா இருக்கும்!

எப்படி நிக்கணும் தெரியுமா? ரெண்டு கம்பிக்கு நடுவே ஒரு காலை வச்சுக்கணும். வலது காலை வச்சுண்டா வலது கையாலே கம்பியை இழுத்துப் பிடிச்சுண்டுடணும்… அப்புறம் இந்தப் பக்கமா இடது கையையும் இடது காலையும் நீளமா வீசி வீசி அரை வட்டமா சுத்திச் சுத்தி ஆடணும்… ரயில் போறதாம்!… வேக வேகமா போறதாம்; தந்திக் கம்பியெல்லாம் ஓடறதாம்! அப்பறம் கும்மாணம் வரதாம்… தஞ்சாவூர்லே நிக்கறதாம்; மறுபடியும் போறதாம்; திரும்பி இங்கேயே வந்துடறதாம்…

அடீ அம்மா! இந்த ஜன்னல் கட்டையிலே உக்காந்துண்டே நான் எத்தனை பிரயாணம் பண்ணி இருக்கேன்!…

காலையும் கையையும் வீசி வீசிச் செஞ்ச பிரயாணம்; கண்ணையும் மனசையும் வெரட்டி வெரட்டிச் செஞ்ச பிரயாணம்; ஆடாமல் அசங்காமல் செஞ்ச பிரயாணம்; அழுதுண்டு செஞ்ச பிரயாணம்; சிரிச்சுண்டு செஞ்ச பிரயாணம்; ஆனந்தமான பிரயாணம்; பிரயாணத்தின் அலுப்பே இல்லாமல் செஞ்ச பிரயாணம்…

ஜன்னலுக்குப் பொருத்தமாகப் பொருந்தி உக்காந்துண்டு நான் எவ்வளவு பிரயாணம் போயிருக்கேன்! பிரயாணம் போனவாளையும் பார்த்திருக்கேன். எவ்வளவோ பேர் போறா… சும்மா போறவா, சொமந்துண்டு போறவா, தனியாப் போறவா, கூட்டமாப் போறவா, ஜோடியாய் போறவா…

இந்த ஜன்னல் வழியாக மொதல்லே யார் பார்த்திருப்பா? மொதல்லே என்னத்தைப் பார்த்திருப்பா?… யாரோ பார்த்திருப்பா… எதையோ பார்த்திருப்பா… நான் மொதல்லே என்ன பார்த்தேன்? எனக்கு ஞாபகமிருக்கிற மொதல் நெனைவே இந்த ஜன்னல் வழியாப் பார்த்ததுதான்… என்னைப் பெத்தவளை நான் பார்த்த ஞாபகமே இலை… உயிரோடு பார்த்த ஞாபகமில்லை. எனக்கு ஞாபகமிருக்கிற மொதல் விஷயமே அதுதான்.

அம்மாவைத் தூக்கிண்டு போனாளே அதுதான்!… யார் யாரோ அழுதுண்டு வாசல் வரைக்கும் ஓடி வந்தாளே… அவா அழ அழ அவசர அவசரமா அம்மாவைத் தூக்கிண்டு நாலு பேர் ஓடினாளே… நான் இந்த ஜன்னல் மேலே நின்னுண்டு, ஜன்னல் வழியாப் பார்த்துண்டிருந்தேனே!…

அதுக்கப்பறம் அந்த மாதிரி எத்தனையோ பார்த்திருக்கேன். சந்தடியில்லாமத் தூக்கிண்டு திடுதிடுன்னு ஓடுவா… சில பேர் தாரை, தப்பட்டை, சங்கு எல்லாம் வச்சுத் தெருவையே அமக்களப்படுத்திண்டு போவா. சில சமயத்திலே அவா போனப்புறம் கூடத் தெருவெல்லாம் ரொம்ப நாழி ஊதுவத்தி மணக்கும்…

அதே மாதிரி, கல்யாண ஊர்கோலமும் பார்த்திருக்கேன்! அது ரொம்ப நன்னா இருக்கும். அதென்னமோ யாருக்குக் கல்யாணம் நடந்தாலும் நமக்குச் சந்தோஷமா இருக்கு. ஊர்கோலம் ஜன்னல் கிட்டே வர்றதுக்கு முன்னே ரொம்ப நாழிக்கி முன்னயே – திடும் திடும்னு மேளம் கொட்டற சத்தம் தூரத்திலே கேக்க ஆரம்பிச்சுடும். அதுவும் கல்யாண மேளச் சத்தம்னா அது மட்டும் தனியாத் தெரியறது. அது வந்து போறவரைக்கும் நான் ஜன்னலை விட்டு நகரவே மாட்டேன்…

அந்த ஜன்னல் வழியாத் தெரியற தெரு, அதோ… அந்த அரச மரத்தடி பிள்ளையார் தெரியறதே அங்கே ஆரம்பிச்சு இந்தப் பக்கம் சிவானந்தம் வீடு வரைக்கும் தான் தெரியும். அதுவும் இந்தக் கோடிக்கும் அந்தக் கோடிக்கும் தலையை நன்னா சாச்சுச் சாச்சுப் பார்த்தால்தான் இந்த அளவுக்குத் தெரியும். கல்யாண ஊர்கோலம் வரச்சே, அந்த லைட்டுத் தூக்கிண்டு வர ஒருத்தன் மொதல்லே அரச மரத்தடிக்கு வருவான். சில பேர் லைட்டை அங்கேயே எறக்கியும் வச்சுடுவான். ஆயிரந்தான் எலக்டிரிக் லைட் இருக்கட்டுமே, கல்யாணம்னா இந்த லைட்தான் வேண்டியிருக்கு. ‘ஓ’ன்னு பாயிலர் எரியறமாதிரி… நாதசுர சப்தம் பக்கத்திலே கேக்கும். அதென்னமோ கல்யாண நாதசுரத்தைக் கேட்டா மட்டும் வயத்துக்குள்ளே என்னமோ குளு குளுங்கும். அப்புறம் நெறைய பெட்ரோமாக்ஸ் லைட்… வரிசையா வந்துடும்… உடம்பெல்லாம் வேர்த்து நனைய நனைய அந்தத் தவுல்காரனும் நாதசுரக்காரனும் போட்டி போட்டுண்டு வாசிப்பா. எனக்கு ஒத்து ஊதறவனைப் பார்த்தாச் சிரிப்பு சிரிப்பா வரும். பல் வலிக்காரன் மாதிரி அவன் வாயிலே துணியை வச்சுண்டு நிப்பான். அதுக்கப்புறம் கல்யாண ஊர்கோலத்துக்காகவே சேஞ்சு வச்ச மாதிரி ஒரு கார்… அந்தக் காருக்கும் அன்னிக்கிக் கல்யாணம்! மாலையெல்லாம் போட்டிருக்கும். அந்தக் காரிலே யார் இருந்தாலும் இல்லாட்டாலும் வாண்டுப் படைகள் மட்டும் நிச்சயமா இருக்கும். சில சமயங்களிலே மாப்பிள்ளை மட்டும் தனியா, கொழந்தைகள் உண்டு; அதாவது பொண் இல்லாமல் வருவார். சில சமயத்திலே பெண்ணும் மாப்பிள்ளையும் ஜோடியா வருவா. பொண்ணு தலையைக் குனிஞ்சிண்டிருக்கும். ஆனா மனசுக்குள்ளே ஒரே சந்தோஷம்னு மொகத்திலேயே தெரியும்! எல்லாப் பொண்களும் தலையைக் குனிஞ்சிண்டுதான் இருக்கும். ஆனா என்னோட படிச்சாளே சுமதி அவளுக்கு என்ன தைரியம்! ஊர்வலம் ஜன்னலண்டை வரும்போது என்னைப் பார்த்து சிரிச்சுண்டே கையை ஆட்டினாளே! எனக்கு வெக்கமாப் போயிடுத்து… எல்லாரும் திரும்பி என்னை வேற பார்க்கறா. அப்போதான் நானும் பார்த்தேன். எல்லார் ஆத்து ஜன்னல்லேருந்தும் எல்லாருந்தான் பார்க்கறா. ஆமா; என்னை மட்டும் பெரீசா சொல்றாளே… கல்யாண ஊர்கோலம் வந்தா அவாளுந்தானே வேடிக்கை பார்க்கறா… அவாளுக்கு கல்யாண ஊர்கோலம் மட்டும்தான் வேடிக்கை; எனக்கு எல்லாமே வேடிக்கை. நான் பார்க்கத்தான் பார்ப்பேன். காலத்துக்கும் இது ஒரு வழக்கா; இது ஒரு பேச்சா?

இந்த வீட்டிலேயே எத்தனையோ கல்யாணம் நடந்திருக்கு. எவ்வளவோ ஊர்கோலம் பொறப்பட்டிருக்கு. நான் அதையெல்லாம் கூட இந்த ஜன்னல் வழியாத்தானே பார்த்திருக்கேன். எனக்குத் தெரிஞ்ச இந்த ஆத்திலே நடந்த மொதல் கல்யாணம் அப்பாவோட கல்யாணம். ஆனா அதுக்கு ஏனோ ஊர்கோலம் இல்லை. சித்தி அப்போ ரொம்ப அழகாயிருந்தா… அப்போல்லாம் எனக்கு அவளைக் கண்டா பயமே இல்லை. மொத மொதல்லே இந்த வாசல்லே ஜட்கா வண்டி வந்து நின்னு, அதிலேருந்து சித்தி எறங்கினாளே, அப்போ நான் இந்த ஜன்னல் மேலே ஏறி நின்னுண்டுதான் பார்த்தேன். சித்தி ரொம்ப நன்னாயிருந்தா… அப்பறந்தான் போகப் போக… பாவம், சித்தி! என்னமோ மாதிரி ஆயிட்டா. அவ அடிக்கடி அவ அம்மா ஆத்துக்குப் போயிடுவா. அவ ஊரு வைத்தீஸ்வரன் கோயில். சில சமயம் அப்பாவும் கூடப் போவார். ஆனா, அநேகமா சித்தி மட்டும் தனியாத்தான் போவா; தனியாத்தான் வருவா… தனியாவா? பிரசவத்துக்காகப் போய்ட்டு வரச்சே பொறந்த கொழந்தையையும் தூக்கிண்டு, துணைக்குப் பாட்டியையும் அழைச்சுண்டுதான் வருவா. பாபு பொறந்தப்பவும், நாணு பொறந்தப்பவும் அந்தப் பாட்டி வந்தா… அப்புறம் வரல்லை. ஒரு தடவை அவ செத்துப் போயிட்டான்னு அடிச்சுப் பொரண்டு அழுதுண்டு சித்திதான் போய்ட்டு வந்தா. அப்புறமெல்லாம் சித்தி மட்டும் தனியாப் போய்க் கொழந்தையைப் பெத்துண்டு வந்துடுவா. அப்பா, நான், மத்த கொழந்தைகள் எல்லாரும் இங்கேயேதான் இருப்போம். அப்பாதான் சமைப்பா… நான் கொழந்தைகளை யெல்லாம் ஜன்னல்லே உக்காத்தி வச்சுண்டு வெளையாடிண்டிருப்பேன். கொழந்தைகளுக்கெல்லாம் சாதம் ஊட்டுவேன். அப்பா எனக்குச் சாதம் போடுவா. கொஞ்ச நாளைக்கி அப்புறம் நானே சமைக்க ஆரம்பிச்சேன். நான் சமைச்சு, கொழந்தைகளுக்குப் போட்டு, அப்பாவுக்கும் போட்டு, எல்லாத்தையும் அழைச்சிண்டு ஸ்கூலுக்குப் போய்டுவேன். சித்திக்கு ஒண்ணுமே பண்ண முடியாது. வைத்தீஸ்வரன் கோயிலுக்குப் போவா. வந்து கூடத்திலே தூளியைக் கட்டிண்டு படுத்துண்டுடுவா; கொஞ்சம் எழுந்து கூடமாட ஒத்தாசை சேஞ்சுண்டு வளைய வருவா. மறுபடியும் தலையைச் சுத்தறது, வாந்தி வரதுன்னு படுத்துண்டுடுவா. அதுக்கப்பறம்… வைத்தீஸ்வரன் கோயில்… ஜட்கா வண்டி… கூடத்தில் தூளியைக் கட்டிண்டு படுத்துண்டுடுவா.

நான் எட்டாங் கிளாஸ் படிச்சிண்டிருந்தப்போ என்னை ஸ்கூலை விட்டு நிறுத்திட்டா. சித்திதான் வேண்டாம்னுட்டா. அப்புறம் நாள் பூரா அடுக்களை வேலைதான். புகை, கரி, புழுக்கம்… அடி அம்மா! மொகத்தைத் துடைச்சுண்டு ஓடி வந்து சித்தெ இந்த ஜன்னலண்டை நின்னா, எவ்வளவு சொகமா இருக்கும்! ஸ்! அப்பாடீ…

அப்படி நிக்கறச்சேதான் ஒரு தடவை என்னோட படிச்சாளே சுமதி, அவ கல்யாண ஊர்கோலம் வந்தது. அவளுக்கு என்ன தைரியம்! ஜன்னலண்டை வரச்சே என்னைப் பார்த்துச் சிரிச்சுண்டே கையை ஆட்டினாளே! எனக்கு வெக்கமா போய்டுத்து. நெஜமாகவே எனக்கு வெக்கமா இருந்தது, அவமானமா இருந்தது. நான் எட்டாவதோட நின்னுட்டேன்; அவ அதுக்குமேலே படிச்சா, பத்தாவது பாஸ் பண்ணினா, பாட்டு கத்துண்டா, வீணை கத்துண்டா, கல்யாணமும் பண்ணிண்டா; ஊர்கோலம் வரா; இப்ப என்னைப் பார்த்துக் கையை ஆட்டறா. எனக்கு வெக்கமா இருக்காதா? அவமானமா இருக்காதா? ம்… நான் என்ன பண்ணப் போறேன்?

பாத்திரம் தேய்க்க வேண்டியது; தெனம் ஒரு மூட்டை துணி தோய்க்க வேண்டியது. அடுப்படியிலே உக்காந்து நானும் வெந்துண்டே எதையாவது வேக வைக்க வேண்டியது. வைத்தீஸ்வரன் கோயிலுக்குப் போய்ட்டுச் சித்தி கொண்டு வந்து தந்திருக்காளே அரை டஜன் தம்பிகள் – அதையெல்லாம் வளர்க்க வேண்டியது. இதுக்கு இடையிலே ஏதாவது கொஞ்சம் அவகாசம் கெடச்சா ஜன்னலண்டை வந்து சித்தெ மூச்சுவிட வேண்டியது. வேற நான் என்ன செய்யப் போறேன்?

சுமதி கையை ஆட்டினாளே! அன்னிக்கிச் சித்தி வைத்தீஸ்வரன் கோயிலுக்குப் போயிருந்தா. அப்பாவும் நானும் மாத்திரம் தனியாயிருந்தோம். பசங்களைக் கூடக் காணோம்.

‘என்னம்மா கண்ணெல்லாம் செவந்திருக்கு’ன்னு அப்பா கேட்டார். வழக்கமா நான் அழும்போது யாராவது பார்த்துட்டா, ‘அம்மாவை நெனச்சிண்டேன்’னு பொய் சொல்லுவேன். ஏன்னா எனக்குப் பேரே தாயில்லாப் பொண்ணுதானே! அதிலே எனக்கு ஒரு செளகரியம். ஆனா, அன்னிக்கி நான் அப்படிச் சொல்லலை. நம்ப அப்பாதானேன்னு கொஞ்சம் தைரியமா மனசை விட்டுக் கேட்டேன்: “அப்பா அப்பா… எனக்கு எப்போப்பா கல்யாணம் பண்ணப் போறேள்?”னு கேட்டேன். என்ன தப்பு அதிலே?…

எனக்கு இன்னிக்கும் இது ஒரு தப்புன்னு தோணவேயில்லை. ஆனா, நான் கேட்டேனோ இல்லியோ உடனே அப்பா மொகம் மாறிடுத்து. என்னத்தையோ அசிங்கத்தை பார்க்கறமாதிரி மொகத்தை சுளிச்சுண்டு என்னெ மொறைச்சுப் பார்த்தார். நான் பயந்து நடுங்கிட்டேன். அதுக்கப்புறம் நான் அப்பா மொகத்தைப் பார்த்ததே இல்லை; செத்துப் போனப்புறம் கூடப் பார்க்கலை.

நான் கேட்டேனே அதுக்குப் பதில் சொன்னாரோ மனுஷர்? கோவம் வந்துட்டாப் போறுமா? கோவம் இவருக்கு மட்டுந்தான் வருமோ? எனக்கு வராதோ? கேட்டதுக்குப் பதில் சொல்ல வக்கில்லே. பெரிசாப் பேசினா எல்லாரும். நான் அப்பிடிக் கேட்டிருக்கப் படாதாம், நான் மானங்கெட்டவளாம், எனக்குக் கல்யாணப் பித்தாம், ஆம்பளைப் பயித்தியமாம். என்னென்னமோ அசிங்கம் அசிங்கமாப் பேசினா. எல்லாரும் கூடிக் கூடிப் பேசினா. எல்லாத்துக்கும் இந்த அப்பாதான் காரணம். சித்தி வந்ததும் வராததுமா அவகிட்டெப் போய் இதெச் சொல்லி வச்சிருக்கார். எனக்கு வேணும். நன்னா வேணும். ‘நம்ப அப்பாவாச்சே’ன்னு சொந்தமா நான் கேட்டேன் பாருங்கோ; அதுக்கு இதுவும் வேணும். இந்த மனுஷன் எனக்கா அப்பா? சித்திக்கின்னா ஆம்படையான்! அதுக்கப்புறம் இவர் கிட்டே எனக்கென்ன பேச்சு? இவர் மொகத்தை என்ன பார்க்க வேண்டியிருக்கு? செத்தப்புறமும் நான் பார்க்கல்லே. இப்ப நெனச்சுப் பார்த்தாக்கூட அவர் மொகம் ஞாபகம் வரமாட்டேங்கறதே!…

அப்படி என் மனசை வெறுக்கப் பண்ணிப்பிட்டா… ம்!… என்னைக் கொஞ்சமாவா படுத்தி வச்சிருக்கா… அடீ அம்மா! பொண்ணாப் பொறந்ததுக்கு எனக்கு ஒரு ஜன்மத்துக்கு இது போறுமே, போறுமே…

நான் ஜன்னலண்டை நின்னுண்டு யாரையோ பாக்கறேனாம். குளத்தங்கரை அரச மரத்தடி மேடையிலே யாரோ வந்து வந்து உக்காந்துக்கறானாம். அவனைப் பார்க்கறதுக்குத் தான் நான் போயிப் போயி நிக்கறேனாம். அங்கே யாரும் இல்லே. அரச மரத்தடியிலே தும்பிக்கையும் தொந்தியுமா ஒரு பிள்ளையார் தான் உக்காந்திருக்கார். பிள்ளையாரைப் பார்த்துண்டுதான் நானும் உக்கார்ந்துண்டிருக்கேன், பிள்ளையார் மாதிரி. அவர் தெய்வப் பிள்ளையார். நான் மனுஷப் பிள்ளையார். அவர் ஆம்பிள்ளைப் பிள்ளையார். நான் பொம்பிளைப் பிள்ளையார்.

அப்புறம் அங்கே சில சமயத்துலே நாய்கள் மேஞ்சுண்டு நிக்கும். சண்டை போட்டுண்டு நிக்கும். வெரட்டிண்டு திரியும். சரசமாடிண்டு வெளையாடும். குரைக்கும். அழும். மனுஷா மாதிரி படுத்துண்டு தூங்கும். முன்னே ஒரு நாய் அந்த அரசமரத்தடி மேடையிலே, அதோ ஒரு மூலை மாதிரி இருக்கே – அங்கே குட்டி போட்டு வச்சிருந்தது.

இதையெல்லாம் பாத்துண்டு நான் உக்கார்ந்திருக்கேன். நேக்கு இதெல்லாம் பிடிக்கறது. பார்க்கறேன். யாருக்கு என்னவாம்?

நான் ஜன்னலண்டை உக்காந்திருக்கறச்சே எனக்குத் தெரியாம பூனை மாதிரி அடி மேல் அடி வச்சு வந்து என் முதுகு மேலெ எக்கிண்டு பார்ப்பா சித்தி. தெருவிலே யாராவது போனா அவனுக்காகத்தான் நான் அங்கே வந்து நிக்கறேன்னு நெனைச்சுக்குவா. அரசமரத்தடியிலே எவனாவது ஒரு சோம்பேறி உக்காந்து பீடி குடிச்சிண்டிருப்பான். அவனைப் பார்த்துத்தான் நான் மயங்கிப் போறேன்னு இவ நெனச்சுக்குவா. யாராவது இருந்தா, அவனைப் பார்க்கறேனாம். யாருமே இல்லைன்னா யாருக்காகவோ காத்துண்டு இருக்கேனாம்! அப்படியெல்லாம் பேசிக்குவா. எனக்கென்ன போச்சு? யார் வேணும்னாலும் எதை வேணும்னாலும் நெனச்சுண்டு போகட்டுமே! அவா அவா புத்தி; அவா அவா நெனப்பு; அவா அவா குணம்…

யாரோ என்னைப் பார்க்கறாளாம். பாக்கட்டுமே! பார்த்தா என்னவாம்? ஜன்னலும் பாக்கறதுக்குத்தான் இருக்கு. ஜன்னல்ங்கறது உள்ளே இருக்கிறவா வெளியே பார்க்கறதுக்குத்தான். வெளியே இருக்கிறவா உள்ளே பார்த்தா, அதுக்கு நான் என்ன செய்யறது? நெனைக்கறது சரியாயிருந்தா பாக்கறதிலே ஒண்ணும் தப்பேயில்லை.

போகப் போக எனக்கு மனசிலே பட்டது. யாரையோ நான் தேடிண்டுதான் இருக்கேனா? யார் அது? தேடினால் தப்பா? நான் தேடவே இல்லையே. சும்மா ஒரு பேச்சுக்குக் கேக்கறேன்… தேடினாக்க தப்பா? நான் யாரைத் தேடறேன்? நான் யாரைத் தேடறேனோ அவனே வந்துட்டா, ஜன்னல் வழியாவா நான் அவனோடு ஓடிப் போக முடியும்? இவாள்ளாம் நெனைக்கறாளேன்னு நானும் வெளையாட்டா ஒரு நாளைக்கித் தேடிப் பார்த்தேன். எனக்கு ஒருத்தருமே தென்படலே. பாவம்! ஒவ்வொருத்தரும் அவாவா பாட்டுக்கு என்னவோ போறா, வரா; நிக்கறா; பேசறா; என்னை ஒருத்தரும் பார்க்கலை. இவாதான் தெருவிலே போறவன் வரவன் எல்லாரையும் என்னோட முடிச்சுப் போட்டுக்கறா. சீ! எவ்வளவு அசிங்கமா நெனைக்கறா! இந்தச் சித்தி ஒரு நாள் என்னை என்னமோ அசிங்கமா கேட்டா… நேக்குக் கோபம் வந்துட்டுது.

“உனக்குப் புத்தி அப்படித்தான்… வருஷத்துக்கு ஒரு தடவை ஓடறியே வைத்தீஸ்வரன் கோயிலுக்கு”ன்னு என்னமோ நன்னாக் கேட்டுட்டேன்… பின்னே என்ன? இவமட்டும் என்னெக் கேக்கலாமோ?

நான்தான் நெஜத்தைச் சொல்றேனே, எனக்கு மத்த இடத்திலெல்லாம் மூச்சு முட்டறது. இங்கே வந்து நின்னாதான் சித்தெ மூச்சுவிட முடியறதுன்னு. நான்தான் வெளியிலேயே போக முடியாது. வெளியே போறவாளையாவது பாக்கப்படாதா?

ஐயோ! அதெ நெனைக்கவே எனக்குப் பயமாயிருக்கு! ஒரு நாள், என் கழுத்தைப் புடிச்சு அமுக்கின மாதிரி, ஒரு பானையிலே போட்டு என்னைத் திணிச்சு அடச்ச மாதிரி, என்னைப் படுக்க வச்சு என்மேல ஒரு பாறாங்கல்லை வச்சு அழுத்தின மாதிரி… இந்த ஜன்னலை மூடிட்டா!… நேக்குக் கண்ணே குருடாயிடுத்து. அதெவிட அவா என்னெக் கொன்னுருக்கலாம். அலறி, மோதி, அடிச்சுண்டு அழுதிருக்கேன் பாருங்கோ… இன்னும் கொஞ்ச நாழி ஜன்னலைத் தெறக்காம இருந்திருந்தா நான் நெஞ்சு வெடிச்சுச் செத்துப் போயிருப்பேன். அப்…பா, தெறந்துட்டா, அன்னிக்கி இந்த ஜன்னல் கட்டையிலே ஏறி உக்காந்தவதான்! நான் ஏன் எறங்கறேன்? நான் அந்தப் பக்கம் போனா இந்தப் பக்கம் மூடிடுவாளே!…

ஜன்னலைத் தெறந்து விட்டுட்டா… அத்தோட போச்சா? திண்ணை நெறய ஒரே வாண்டுப் படைகள்! எனக்கு ஒண்ணும் புரியலை. என்னை எதுக்கு எல்லாரும் இப்பிடி வேடிக்கை பார்க்கறா? நானும் பொறுத்துப் பொறுத்துப் பாத்து என்னால தாங்க முடியாம ஒரு நாள் வெரட்டினேன். அடிக்கலே; வையலே… ‘என்ன ஏன்டா இப்பிடி எல்லாருமாப் படுத்தறேள்’னு அழுதேன். அதெப் பாத்து எல்லாரும் ‘ஓ’ன்னு சிரிக்கறா…

அப்பா வந்தார். நான் அவர் மொகத்தைப் பார்க்கலே; ஆனா எங்கேயோ பாத்துண்டு ‘அப்பா’ன்னு அழுதேன். அவரும் எங்கேயோ பாத்துண்டு பக்கத்திலே வந்து நிக்கறார்னு புரிஞ்சுது. “அப்பா! நான் தெரியாமக் கேட்டுட்டேன். நேக்கு கல்யாணமே வேண்டாம். இந்த ஜன்னலண்டையே நான் உக்காந்திண்டிருக்கேன். அது போறும்”னு சொன்னேன். “ஜன்னலை மட்டும் மூட வேண்டாம்னு சொல்லுங்கோ”ன்னு கெஞ்சினேன்.

“இனிமே நான் கல்யாணம் வேணும்னு கேக்கவே மாட்டேன்… ஏதோ எல்லார் மாதிரியும் இருக்கணும்கிற ஆசையிலே, எனக்குத்தான் அம்மா கெடையாதே, அப்பாகிட்டே கேட்டா தப்பில்லைன்னு கேட்டுட்டேன்… அதுக்காக என்னை இப்பிடிப் படுத்தி வெக்கறேளே… ஜன்னலை மூட வேண்டாம்னு சொல்லுங்கோ”ன்னு அழுதேன்.

“உனக்கு ஜன்னல்தானே வேணும்? ஜன்னலையே கட்டிண்டு அழு”ன்னு அப்பா சொன்னப்போ எனக்கு எவ்வளவு ஆறுதலா இருந்தது!

அப்புறம் ஒரு நாள்… “வாடீ என்னோட வைத்தீஸ்வரன் கோயிலுக்கு போயிட்டு வரலாம்”னு வாசல்லே வண்டியைக் கொண்டு வந்து வச்சுண்டு அப்பாவும் சித்தியும் என்னெ வேண்டி வேண்டி, உருகி உருகி அழைச்சா… நானா போவேன்? முடியாதுன்னுட்டேன். ஜன்னல் கம்பியை இறுக்கமாகப் புடிச்சுண்டு வரவே மாட்டேன்னுட்டேன்.

“நேக்கு வைத்தீஸ்வரன் கோவிலும் வேண்டாம்! இன்னொண்ணும் வேண்டாம். எனக்கு என்னோட ஜன்னல் போறும். இங்கேருந்தே நான் எல்லாத்தையும் பாத்துக்குவேன். என்னெ சித்தெ நிம்மதியா மூச்சுவிட விட்டுவிட்டு நீங்கள்ளாம் எங்கே வேணும்னாலும் போங்கோ”ன்னு இருந்துட்டேன்.

எனக்கு இந்த ஜன்னலே போறும்!

அப்புறம் திடீர்னு ஒரு நாள் என்னெச் சுத்தி ஒரே ஜன்னல்… பெரிய பெரிய ஜன்னல்…. சுவரே இல்லாம ஜன்னல்… ஐயையோ இது கூண்டுன்னா? தெய்வமே! நேக்கு கூண்டு வாண்டாமே! நான் என்ன புலியா? சிங்கமா? என்னெ எதுக்குக் கூண்டுலே போட்டேள்? எப்படிப் போட்டேள்? ஏன் போட்டேள்? எப்பப் போட்டு அடைச்சேள்?… நான் என்னடீ பண்ண?… அடீ அம்மா!…

வெறும் ஜன்னல் மட்டுந்தான் இருந்தது; அரச மரத்தைக் காணோம்; அதுக்குப் பின்னாலே இருக்கிற குளத்தைக் காணோம். சிவானந்தம் வீட்டைக் காணோம். கல்யாணமும் இல்லே, சாவும் இல்லே… வெறும் ஜன்னல். அதுவும் நம்பாத்து ஜன்னல் மாதிரி அழகா, சின்னதா இல்லே. ஜன்னல் கட்டை இல்லே… ஒரு பக்கம் சாஞ்சுண்டு இன்னொரு பக்கம் காலை உதைச்சுண்டு ம்ஹீம்… ஒண்ணும் முடியாது.

அப்பிடி ஒரு இடமா? அப்பிடிக்கூட ஒரு இடம் இருக்குமா? கூண்டு மாதிரி, குகை மாதிரி, ஜெயில் மாதிரி. ஒரு வேளை அது பொய்யோ, கனவு கண்டிருப்பேனோ?… நேக்கு ஒண்ணும் தெளிவா சொல்லத் தெரியலை… விடுங்கோ… இப்பத்தான் ஜன்னலண்டையே, மறுபடியும் இங்கேயே வந்துட்டேனே!…

ஒரு சமயம் உள்ளே ஜன்னல் வழியா ஒரு யானை வந்துட்டுது! ஸ்வாமி ஊர்வலம் போறச்சே அந்த யானையை நான் பார்த்திருக்கேன்… அதே யானை! அடீ அம்மா! எவ்வளவு பெரியா யானை! எவ்வளவு நைஸா மொதல்லே தும்பிக்கையை நீட்டி ஏந்தி என்னெக் கூப்படற மாதிரி வந்து நின்னுது. அசைஞ்சி அசைஞ்சி ரெண்டு கம்பிக்கும் நடுவிலே தும்பிக்கையை விட்டு என் கன்னத்துலே ‘சில்’னுனு தொட்டப்போ நன்னாவும் இருந்தது; பயமாகவும் இருந்தது.

ஜன்னல் கட்டையிலே உக்கார்ந்திருந்த நான் எறங்கி வந்து அறை நடுவிலே நின்னுண்டேன். அந்த யானை நீளமா தும்பிக்கை முழுசையும் அறைக்குள்ளே நீட்டிண்டு என்னெப் பிடிக்கறதுக்கு துழாவறது… அப்புறம்…

அடீ அம்மா! இந்த அதிசயத்தைப் பாருங்கோளேன்… பார்க்கறவரைக்கும்தான் அதிசயம்.. இப்ப ரொம்ப சர்வ சாதாரனமா இருக்கு… அந்த யானையோட உடம்பு அப்பிடியே கொஞ்சம் கொஞ்சமா தட்டையாகி ஒரு கறுப்புத் துணி மாதிரி – யானை உருவத்துக்கு ஒரு படுதாவிலே கத்தரிச்சுப் பெரிசா தொங்க விட்டா எப்படி இருக்கும் – அந்த மாதிரி ஆடி ஆடி ஜன்னல் கம்பிக்கு நடுவே நொழஞ்சு முழுக்க உள்ளே வந்துட்டுதே! நடு அறையிலே கூரையிலே முதுகு இடிக்கிற மாதிரி மறுபடியும் முன்னே மாதிரியே யானையா நிக்கறதே… தும்பிக்கையாலே ‘ஜில்’லுனு என்னெத் தொடறதே!

அடீ அம்மா! என்ன சொகமா இருக்கு!… எவ்வளவு சந்தோஷமா இருக்கு!.. பயமாவே இல்லே. கொஞ்சம் கூடப் பயமே இல்லே.

திடீர்னு சித்தி வந்துட்டாள்னா என்ன பண்றதுன்னு நெனச்சவுடனே தான் பயம் வந்துட்டுது.

“போ… போ”ன்னு நான் யானையை வெரட்டறேன். அது என் கழுத்தைத் தும்பிக்கையாலே வளைச்சுப் பிடிச்சுண்டு என்னையும் “வா வா”ன்னு இழுக்கறது.

ஐயையோ! எவனோடயோ ஓடிட்டாள்னு பழி வருமேன்னு நெனக்கறச்சே வயத்துலே ‘பகீர்’ங்கறது!…

“சனியனே! ஏன் வந்தே?… என்னெ எங்கே இழுக்கறே?”ன்னு அந்த யானையோட நெத்தியிலே ரெண்டு கையாலேயும் குத்தறேன்… யானை என்னைத் தும்பிக்கையாலே வளைச்சுத் தூக்கிண்டு கொஞ்சம் கொஞ்சமா வந்த மாதிரியே பின்னம் பக்கத்திலே துணி மாதிரி அலை அலையா மெதந்துண்டு ஜன்னல் கம்பிக்குள்ளே நுழைஞ்சு போயிண்டே இருக்கு. நான் ஜன்னலண்டை வந்ததும் ஜன்னல் பக்கத்துலே நன்னா முதுகைச் சாச்சுண்டு, ரெண்டு பாதத்தையும் எதிர் சுவத்திலே உதைச்சுண்டு குறுக்கா நாதாங்கி போட்டா மாதிரி உக்காந்துண்டேண். யானை நொழைஞ்ச மாதிரி நான் நொழைய முடியுமா?…

பாவம்! அந்த யானை வெளியிலே நின்னுண்டு பரிதாபமாப் பார்த்தது. என்ன பண்றது? நானும்தான் அப்பிடிப் பார்த்துண்டிருக்கேன்… எவ்வளவோ பேர் அப்பிடித்தான் பார்க்கிறா. அதுக்கு நான்தான் என்ன பண்றது? அவாதான் என்ன பண்றது? பார்த்துண்டே இருக்க வேண்டியதுதான்…

அப்பிடியே என்னெப் பார்த்துண்டே அந்த யானை பின்னம் பக்கமாவே நடந்து போயி, அரச மரத்தடியிலே பிள்ளையாரா மாறிடுத்து…

அதிசயமாயிருக்கு இல்லே! எனக்கு இது சர்வ சாதாரணமா இருக்கு. ஏன்னா, இந்த மாதிரி அடிக்கடி நடக்கிறது. ஆனை மட்டும் தான் வரும். நான் போறதில்லே – முடியுமா என்ன?

இப்பல்லாம் எனக்கு ஜன்னலண்டையே சாப்பாடு வந்துடறது. எங்க பாபுவோட ஆம்படையாள் இருக்காளே குஞ்சு, தங்கம்னா தங்கம். எனக்கு அப்பிடி சிசுருஷை செய்யறா போங்கோ! நன்னா இருக்கணும்.

நாணுவும், அவன் பொண்டாட்டியும் நெய்வேலியிலே இருக்கா… பாபு எங்கே இருக்கானோ அங்கேதான் நானும் இருப்பேன். அவனும் என்னெ விடமாட்டான்.

இப்ப சித்தி இல்லை. அவ செத்துப் போயி ரொம்ப நாளாச்சு!

புதுசு புதுசாப் பொறக்கறாளே அந்த மாதிரி மனுஷா பழசு பழசா செத்தும் போறா.

நான் மாத்திரம் எப்பவும் ஜன்னலண்டையே உக்காந்திருப்பேன். உக்காந்துண்டே இருப்பேன். இந்த வீடெல்லாம் இடிஞ்சு போனாலும் இந்த ஜன்னல் மாத்திரம் இருக்கும். நான் இதிலே சாஞ்சுண்டு காலை உதைச்சுண்டு பார்த்துண்டே இருப்பேன். லோகத்தை ஜன்னலாலே பார்த்தா பிரயாணம் போற மாதிரி நன்னா இருக்கு.

இந்தப் பிரயாணம் நன்னா இருக்கு. இந்த வீடு ஒரு ரயில் மாதிரி ஓடிண்டே இருக்கு. ரயில் பெட்டி மாதிரி இந்த அறை ஜன்னல்லே உக்காந்துண்டு பார்த்துண்டே நான் பிரயாணம் போறேன்… எல்லாம் ஓடறது. மனுஷா, மரம், வீடு, பிள்ளையார், தெரு, நாய், சொந்தக்கார மனுஷா, அந்நிய மனுஷா, செத்தவா, பொறந்தவா எல்லாரும் ஓடறா.

ரயில்லே போகச்சே நாம ஓடிண்டிருக்கோம். ஆனாக்க தந்திக் கம்பியும் மரமும் ஓடற மாதிரி இருக்கோன்னோ? அதே மாதிரிதான் இங்கே நான் உக்காந்திண்டிருந்தாலும் ஜன்னலுக்கு வெளியே எல்லாரும் ஓடறதனாலே நானே ஓடிண்டிருக்கிற மாதிரி இருக்கு, யாராவது ஒருத்தர் ஓடினா சரிதான். நாமே ஓடினாத் தானா?

இப்ப யாரும் என்னைப் பாத்து சிரிக்கிறதில்லை; என்னெ வேடிக்கை பாக்கறதில்லை. ஆனாலும் எனக்குச் சில சமயத்திலே அவா சிரிக்கிற மாதிரி இருக்கு. என்னைப் பத்தி அவா ‘ஜன்னலண்டை உக்காந்திருக்கா, உக்காந்திருக்கா’ன்னு சொல்லிண்டிருக்கிற மாதிரி இருக்கு. யாரு சொன்னா எனக்கு என்ன? எங்க குஞ்சு அப்பிடியெல்லாம் சொல்லவே மாட்டாள். அவ தங்கம்னா தங்கம்தான் குஞ்சு – அதான் பாபுவோட ஆம்படையாள். கொழந்தைகளைக் கொண்டு வந்து எங்கிட்டேதான் விட்டுட்டு அடுக்களைக் காரியங்களைப் பார்ப்பா.

இப்பல்லாம் நான் ஒரு வேலையும் செய்யறதில்லே. என்னெ வேலை செய்ய விடவே மாட்டா குஞ்சு.

நான் கொழந்தைகளை வெச்சிண்டு ஜன்னல் வழியா வேடிக்கை காட்டிண்டு இருக்கேன் – இல்லே, வேடிக்கை பாத்துண்டிருக்கேன்…

ஜன்னலுக்கு அன்னண்டை தெரியறதெல்லாமே வேடிக்கையாத்தான் இருக்கு!

“பாட்டி! ஜன்னலண்டை உக்காந்துண்டு என்ன பார்க்கறே?”

அடீ அம்மா! இதென்ன வேடிக்கை? பாட்டியாமே நான்? “யார் அது யாருடி நீ?”

“நான்தான் சரோவோட பொண்ணு – ஊர்லேருந்து நேத்து வந்தேனே”ன்னு என்ன வக்கணையாய்ப் பேசறது பாருங்கோ.

சரோவுக்குப் பொண்ணா? இவ்வளவு பெரியவளா? சரோ வந்து… பாபுவோட பொண்ணு… அப்போ நீ குஞ்சுவோட பேத்தியா?…

அடீ அம்மா! ஜன்னலுக்கு இந்தப் பக்கம் இவ்வளவு வேடிக்கையா நடந்திருக்கு? நான் கவனிக்கவே இல்லியே…

குஞ்சு! அடீ அம்மா! இங்கே வாயேன்! இந்த வேடிக்கையை சித்தெ வந்து பாரேன்… நான் பாட்டியாமே பாட்டீ…. உன் பேத்தி சொல்றாடி… குஞ்சு… குஞ்சு…!

(எழுதப்பட்ட காலம்: 1968)

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்