Oct 22, 2012

சென்று தேய்ந்து இறுதல்-விக்ரமாதித்யன் நம்பி

சென்று தேய்ந்து இறுதல்


இது
என்ன இது
என்னது
இது
குகை மனிதனொப்ப
வேட்டையாடித் திரிவது vikraman1
ஆதிவாசிக்கும் நமக்கும்
என்ன பெரிய வித்யாசம்
இரை தேடித் தின்பது
தூங்குவது  
புணர்வது
கேளிக்கையும் கொண்டாட்டமுமாய்
காலம்கழிப்பது
பின்னே சலித்துக்கொள்வது
எவ்வளவு
இனிய உலகம் இது
கவிதை சங்கீதம்
நாட்டியம் பாட்டு
பறவைகள் வானம்
காற்று மழை
தொன்மக்கதைகள்
சிறப்பைச் சிந்திக்கொண்டிருக்கும் பெண்கள்
எதிலும்
முழுசாய் லயிக்க முடியாமல்
எப்பொழுதும்
இரைதேடிக் கொண்டும்
இருப்பு பற்றி யோசித்தபடியும்
என்ன இது இது என்னது
இந்தக் கவிதையை
இப்படி முடித்துவிடலாம்
அம்மாவைப் பார்க்கையில்தான்
அர்த்தமிருப்பதாகத் தோன்றுகிறது வாழ்க்கைக்கு
வழமையான முத்தாய்ப்பென்று
விமர்சிப்போர்க்கு இப்படி
இருநூற்றி நாற்பத்தேழு
எழுத்துகள்
கலைத்துப்போட்டால்
கண்டமேனிக்கும் சொற்கள்
விளையாட்டாய்
எனில்
வினையாயும்
வேறொரு முடிப்பு
தேவதைகளின் வசீகரம்
தெய்வத்தின் அனுக்கிரகம்
பிச்சிப்பூ வாசம்
பேரியற்கை ரகசியம்
பிசாசுகளின் பயங்கரம்
பாவத்தின் சம்பளம்
பேய்களின் உதரம்
பிணங்களின் நிணம்
தாயம் விழச்செய்யும்
மாயம் எங்கே பிடித்துக்கொண்டாய் செல்லமே
மொழியெனும் சிவ தனுசு
மொழியை
வெகு குறைவாகவே
பயன்படுத்துகிறேன் வீட்டில்
(அதாவது
சொற்களை
சொல்தானே
மொழியின் மூலம்)
ஒரு கவிஞன்
இப்படித்தான்
இருக்க வேண்டுமென்று தோன்றுகிறது
அம்மாவிடம்
அளந்து பேசுவதாகத்தான் சொல்ல வேண்டும்
(அம்மாவுக்குத்
தெரியும்)
மனைவியிடம் மட்டுமென்ன
எண்ணித்தான் பேசுவது என்றாகியிருக்கிறது
(அவளுக்குத்
தெரியாதா என்ன)
பிள்ளைகளிடமும்
பெரிதாகப் பேசுவதாகச் சொல்லமுடியாது
(சரியாகப்
புரிந்து கொண்டிருக்கிறார்கள்)
அவர்களும் என்னிடம்
அப்படியே இருப்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லை
வெளியில்
விருப்பமில்லாவிட்டாலும்
நிறையப் பேசும்படியாகிவிடுகிறது
(அவர்கள்
நிரம்பப் பேசிவிடுவார்களோ
என்று ஒரு பயமும்)
யாராவது
ஒரு இளங்கவிஞன்
கவிதை பற்றிக் கட்டுவிடுகிறான்
யாராவது
ஒரு இளம் நண்பன்
தன் வாழ்க்கைப்பிரச்னையை முன்வைத்து விடுகிறான்
யாராவது
ஒருவர்
ஜாதகத்தைக் கொண்டுவந்து நீட்டிவிடுகிறார்
தப்பிக்கவே முடியாது
பேசித்தான்
திருப்திப்படுத்த வேண்டியதிருக்கிறது
எனில்
எங்கேயுமே
மொழியைத் துஷ்பிரயோகம் செய்வதில்லை
(திராவிட இயக்கப் பாதிப்பிலிருந்து
விடுபட்டு வந்துவிட்டதில்
பெரிதும் சந்தோஷம்)
பேச்சோ எழுத்தோ
பிரயோகம் பண்ணப் பண்ண
அயர்வும் சலிப்பும் தாளமுடியவில்லை
எப்பொழுதாவதுதான்
அமைகிறது ஒரு நல்ல உரையாடல்
எப்பொழுதுதாவதுதான்
வாய்க்கிறது ஒரு நல்ல கவிதை
எப்பொழுதாவதுதான்
எடுக்கவேண்டும் போல
மொழியெனும் சிவதனுசை.
நடுவிலொரு தீவு
வேர்கள்
வளர்த்தும் விழுதுகள்
வெளிச்சம்
தின்ற இருட்டு
நாளையை
நம்பியே இன்று
இன்றென்பது
நேற்றின் எச்சம் போல
உடம்பிலிருந்து
மனசுக்கு
காமத்திலிருந்து
கவிதைக்கு
இங்கே இப்படி
அங்கே எப்படியோ
கடலலைகளுக்கு
ஓய்வுண்டா 
 
****


இவ்வளவுதான் முடிகிறது

நேற்று நண்பகலில்
கோயிலுக்குப் போய்விட்டு
வருகிற வழியில்
கீழே கிடந்த
ஸ்கூட்டர் சாவியை எடுத்து
பக்கத்திலிருந்த டீக்கடையில்
கொடுத்துவிட்டு வந்தேன்
(தேடிக்கொண்டு வந்தால்
கொடுத்துவிடச் சொல்லி)
போன மாசம்
கபால¦ஸ்வரர் கோயில் போயிருந்தபோது
ஸ்தல விருஷத்துக்கு அண்டையில் கிடந்த
முள்கொம்பை எடுத்து
ஒரு ஓரமாய்ப் போட்டுவிட்டு வந்தேன்
கொஞ்ச நாள்கள் முன்பு
தெரு நடுவே இறைந்துகிடந்த
கண்ணாடிச் சில்லுகளைப் பொறுக்கி
தூரப் போட்டுவிட்டு வந்தேன்
இரண்டு மூன்று மாசத்துக்கு முன்னால்
இளங்கவிஞன் ஒருவன் கவிதைகள் பற்றி
விலாவாரியாய்
கட்டுரையெழுதி அனுப்பி வைத்தேன்
இந்தக் கல்வியாண்டில்
தமிழக அரசுத் தயவில்
என் சின்ன மகனுக்கு
திரைப்படக் கல்லூரியில்
இடம் வாங்கிக் கொடுத்தேன்
வேலையில்லாமல்
திண்டாடித் திணறிப்போன பெரியவனை
இயக்குநர் நண்பர் ஒருவரிடம்
உதவியாளராகச் சொல்லிச் சேர்த்து விட்டிருக்கிறேன்
மனைவியிடம்
சண்டை போடாமலிருக்க தீர்மானித்திருக்கிறேன்
இனிமேல் கைநீட்டுவதில்லை
என்று சத்தியம் செய்து கொடுத்திருக்கிறேன்
அம்மாவிடம்
கோபப்படாது இருக்கிறேன்
நண்பர்களை
தொந்தரவுபடுத்தக்கூடாது என்றிருக்கிறேன்
எழுதுவது படிப்பதில்
மும்முரமாய் ஈடுபட்டிருக்கிறேன்
எவ்வளவு நினைத்தாலும்
இவ்வளவுதான் முடிகிறது
இந்த வாழ்க்கையில்.

****

அழைக்கிறவர்கள்

நேற்று
சுடலை கூப்பிட்டிருக்கிறான்
போய்
வந்திருக்கிறேன்
என்ன
நடந்ததோ தெரியாது
இன்று
தைரியமாய் இருக்கிறேன்
போன மாசம் போல
இசக்கி அழைத்திருந்தாள்
போக
முடியாமல் போயிற்று
வருத்தப்பட்டுக் கொண்டிருப்பாளோ
என்னவோ தெரியாது
பதினெட்டாம் படி கருப்பசாமி
எப்பொழுதும் வரச்சொல்லி
ஆளனுப்பிக் கொண்டேயிருக்கிறான்
அவன் முகத்தில் விழிக்கக் கூச்சமாயிருக்கிறது
ஆனால் ஒருநாள் நிச்சயம் போவேன்
அவனே எதிர்பாராதபடிக்கு
புட்டார்த்தி அம்மன்
அடிக்கடி கனவில் வந்து
எவ்வளவு காலம்
இப்படியே இருப்பாய்
என்று கேட்டுக் கொண்டிருக்கிறாள்
ஒருமுறை
வந்து போ என் சந்நிதிக்கு
என்று உத்தரவிட்டிருக்கிறாள்
இன்னும் போக முடியவில்லை
அந்த வழியே கடந்து சென்றாலும்
உஜ்யனி மாகாளி
ஒருநாள் வந்து
பார்த்துவிட்டுப் போ
என்று சொல்லிவிட்டிருக்கிறாள்
போக முடியாமல்
இருந்து கொண்டிருக்கிறது
போகவேண்டும் கட்டாயம்
சிவகாமித்தாயும் நடராஜனும் மட்டும்
அழைக்க
யோசித்துக் கொண்டிருக்கிறார்கள் போல

(நன்றி: வண்ணநிலவனுக்கு (தலைப்புக்காக)

****

flow1
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

3 கருத்துகள்:

சித்திரவீதிக்காரன் on October 22, 2012 at 7:22 AM said...

ஒவ்வொன்றும் முத்துக்கள்.
அழைக்கிறவர்கள் அருமை.
நிறைய கருத்தெழுத விரும்பினாலும்
இவ்வளவுதான் முடிகிறது.

சிவஹரி on October 24, 2012 at 6:55 PM said...

இனிய நற்வணக்கங்களுடன் சிவஹரி,

தங்களின் வலைப்பூவினை நான் இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்திடும் பாக்கியம் கிட்டியிருக்கின்றது என்பதை அக மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்றேன்.

மேலும் அறிய : http://blogintamil.blogspot.com/2012/10/blog-post_1097.html

திண்டுக்கல் தனபாலன் on October 24, 2012 at 7:57 PM said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_1097.html) சென்று பார்க்கவும்...

நன்றி...

Post a Comment

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்