Jul 4, 2013

அனந்தசயனம் காலனி -தோப்பில் முஹம்மது மீரான்

இரைந்து வரும் பாயும் பஸ்ஸில் ஓரமாக உட்கார்ந்திருந்த போது துரிதமாக ஓடுவது ரோட்டோரத்து மக்களா பேருந்தா என்ற சந்தேகம் மனசில் கடித்துத் தொங்கிக் கொண்டிருந்தது. என்னைத் தாண்டி ஓடிக்கொண்டிருக்கும் மனிதர்களையும் மரங்களையும் மிருகங்களையும் முழித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். நெல் கதிர்மணிகளைச் சூடி நிற்கும் வயல்களும் குலை தள்ளி நிற்கும் வாழைத் தோட்டங்களும் ஒரு சக்கரத்தில் சுழன்று கொண்டிருந்தன. ரோட்டோரத்துthoppil மரங்களின் தலையிறீருந்து உதிர்ந்த காற்றில் கரத்தில் ஒரு செய்தித்தாள் துண்டு தத்தியது. அப்போதுதான் நான் தேடிச்செல்லும் பேராசிரியர் சீனிவாசன். அவருடைய முகவரி எழுதி தந்திருந்த காகிதத் துண்டு நினைவுப் பிசகின் கூளத்தில் வீழ்ந்து விட்டதை உணர்ந்து திடுக்கிட்டேன். ‘பிளஸ் டூ’ தேறிய மகனை நினைத்தபோது. முனை கூர்மையான ஒரு குற்ற உணர்வு மனத்தைக் கீச்சியது.

புரொபசர் சீனிவாசனின் வீடு ஏதுன்னு கேட்டா “பச்சக் குழந்தை கூட சொல்-த் தருவாங்க சார்” – பேராசிரிய நண்பர் அன்று பேச்சுவாக்கில் சொன்ன இந்தத் திடீர் நினைவின் துளிர்ப்பு.

ஓர் ஆலமர நிழல் அப்போது விரித்தது. புகழ் பெற்ற பேராசிரியர் ஆனதால் கதவு எண்ணும். தெருப் பெயரும் தேவை இல்லை என்ற ஆறுதல் மனசைக் குளிர வைத்தது. பச்சைக் குழந்தைகள் கூட
தெரிந்து கொண்டிருக்கக் கூடிய ஒரு பேராசிரியரின் நண்பன் நாம் என்ற அபிமான உணர்வு என்னை மயிர்சிறீர்ப்பால் போர்த்தியது.

கம்ப்யூட்டர் சயன்ஸ் என்பது இப்போது கவர்ச்சிகரமான பாடம். ப்ளஸ் டூ தேறிய என் மகனையும் அதன் கவர்ச்சி பீடித்து விட்டது என்பதை அவனுடைய அடம்பிடிப்பதிலிருந்து ஊகித்துக்
கொண்டேன். கம்ப்யூட்டர் துறை உள்ள கல்லூரியையும் அதன் துறைத் தலைவர் பேராசிரியர் சீனிவாசன் என்னுடைய ஒரு பழைய நண்பர் என்பதையும். அவன் எப்படி புலனாய்வு செய்து
தெரிந்துகொண்டான் என்று எனக்கு இப்பவும் ஒரு புதிர்.

பல மைல்கற்கள் தொலைவில் என்னோடு வசிக்கின்ற என் மகன்கூட பேராசிரியர் சீனிவாசனின் வீடு “அனந்தசயனம் காலனியில்” என்பதைத் தெரிந்துகொண்ட நிலையில், கல்விமான்களும் உயர் அரசு அதிகாரிகளும் டாக்டர்களும் இன்ஜினீயர்களும் போன்ற மேல் மக்கள் தங்கிவரும் அந்தக் காலனியில்ó உள்ள தாய் தந்தையர்களுக்கும் அவர்களது பிள்ளைகளுக்கும் கண்டிப்பாகப் பேராசிரியரைத் தெரியாமலிருக்க முடியாது. இவர்களில் பெரும்பான்மையினர் தங்கள் பிள்ளைகளின் அட்மிஷனுக்காகப் பேராசிரியரை ஆண்டோடாண்டு அணுகியிருக்க வேண்டும்; அல்லது அணுக வேண்டிவரும் என்ற தொலைநோக்கில் முன் பரிச்சயம் ஏற்படுத்திக் கொள்வதற்காக வழியில் பார்க்கும் போதெல்லாம் அவருக்கு ஆங்கில பாணியில் வணக்கமாவது
சொல்லாமலிருக்க மாட்டார்கள்.

பிரபலமான பேராசிரியர் நண்பரின் வீட்டை முகவரி இல்லாமலேயே கண்டுபிடிக்க வீண் அலைச்சல் வேண்டி வராது என்ற மனநிறைவில் பஸ்ஸின் இருக்கையில் குறுக்கைச் சாய்த்தேன்.
விழிப்பிற்கும் மயக்கத்திற்கும் இடையிலான ஊடு வழியில். ஒற்றைக் காறீல் பிடிவாதமாக நிற்கும் மகனின் முகம் தெரிந்தது. அவனுடைய தயனீயமான முகம். ஆசை ஒளிரும் கண்கள்! வீட்டை விட்டு இறங்óகுகையில் அவன் உதட்டிலிருந்து விழுந்த எச்சரிக்கை – “நாளை செலக்ஷன்” அதன் ஓசை என்னை அவ்வப்போது நடுங்கி விழிக்க வைத்தது. முந்தைய இரவு விழித்திருந்த களைப்பை. இந்த நெடுந்தூரப் பயணத்தில் சற்று உறங்கித் தீர்க்கவிடாமல் இடைஞ்சல் பண்ணிக்கொண்டிருந்தது அது.

பஸ் இறங்கிய இடத்தில். உச்சி வெயிலில் தார் உருகும் ரோட்டில் இறங்கி நின்றபோது பிந்தி விட்டோமோ என்று அச்சம் மனத்தை உறுத்தியது. அவர் யார் யாருக்கெல்லாம் வாக்களித்து
இடத்தை நிரப்பியிருப்பாரோ?

பல முடிச்சுகளுக்குள்ளே மனம் சிக்கிக் குழம்பிக் கொண்டிருக்கும் போது குடை பிடித்துக் கொண்டு அங்கு வந்த ஒருவரிடம் கேட்டேன்.

“ஐயா. அனந்தசயனம் காலனிக்குப் போவும் பஸ் எது?”

“ஓடிப்போவும். அந்த டிரைவர் ஏறி இருக்கிற 39பி தான். அத உட்டா இனி ரண்டு மணிக்கூர் களிஞ்சுதான் பஸ்.” உருண்டு கொண்டிருந்த பஸ்ஸில் ஒரு மாணவனுடைய சுறுசுறுப்போடு
தொங்கி ஏறிவிட்டேன். பள்ளங்களில் விழுந்து எழும்பிய பஸ். நகரத்தின் நெஞ்சிலிருந்து. கால் முட்டிலிருந்து விரல் முனையிலிருந்து என்னைப் பெயர்த்துக் கொண்டு போனது. ஏதோ ஜின்னு-ஆவி. என் கண்களைக் கட்டி ஏழாம் கடலுக்கு அக்கரை கொண்டு செல்வது போன்ற பிரமை. மனித நடமாட்டம் இல்லாத ஒரு சாலை ஓரத்தில் என் கண்களிறீருந்து கட்டை அது அவிழ்த்து விட்டது.

டவுன் பஸ்ஸிலிருந்து இறங்கிய இடத்தில் எதிர் திசையில் அனந்தசயனம் காலனி என்ற பெயர்ப் பலகை அதை ஒட்டி ஒரு டீக்கடை. டீக்கடையைத் தாங்கியிருந்த நான்கு தூண்களில் ஒன்று பஸ் நிறுத்தப் பலகை மாட்டப்பட்டிருந்த தூண். அந்தத் தடயம் டீக்கடைக்கும் அனந்தசயனம் காலனிக்கும் இடையிலான நெருக்கத்தைச் சுட்டியது. காலனி மக்களை. குறிப்பாக. பிரபலமான
பேராசிரியர் சீனிவாசனை டீக்கடை உரிமையாளர் தெரியாம-ருக்க முடியாது.

“அண்ணே. புரொபசர் சீனிவாசன் ஊடு எந்தப் பக்கம்?”

“புரொபசர் சீனிவாசன்?” கடை உரிமையாளர் சற்று ஆலோசனை செய்துவிட்டு. பேராசிரியரின் உருவ அமைப்பைச் சொற்களால் வரைந்தார். மீசை வச்ச ஆள்.

“ஆமா”

“கண்ணிலே கண்ணாடி. கொஞ்சம் கஷண்டி தலை. கறுப்பு. உயரமான ஆள்.”

“ஆமாண்ணே. அவரேதான்.” இறங்கிய இடத்திலேயே வீட்டைக் கண்டுபிடித்து விட்ட மகிழ்ச்சி நெஞ்சிற்குள் மத்தாப்பூக் கொளுத்தியது.

“ஆள பாத்திருக்கேன். ஊடு காலனியிலேதான். ஆனா எங்கே தங்கியிருக்காருன்னு தெரியாது.”

சோர்வு மனத்தைக் கசக்கியது.

காலனிக்கு உள்ளே நுழைந்தபோது. கண்கள் ஒத்திய ஒரு விளம்பரப் பலகை என்னை அச்சுறுத்தியது – தெருக்களை அசுத்தம் செய்யாதீர்கள். மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும். அந்த
அச்சுறுத்தலுக்கு எனக்குள்ளே ஒரு பரிகாரமிருந்தது. இன்னும் சில வினாடிகளில் பேராசிரியர் சீனிவாசனின் வீட்டுக்குச் செல்லவிருப்பதால். வசதியாக அங்கேயே சிறுநீர் கழிக்கலாமே.

அங்கு நின்றிருந்த போது பார்வை பரவிச் சுழன்றது. பின்னல் நிறைந்த தெருக்கள். மாடி கட்டிடங்கள். தெருக்கள் துவங்குமிடத்தில் மஞ்சள்நிற சிமெண்டுப் பலகையில். கறுப்பு எழுத்துக்களுக்கு நேராக எண்கள்-ஏ 1-100. பி – 20-60. இப்படி எந்தத் தெருவில் முதலில் நுழைவது என்ற குழப்பம்.

ஐயப்பாடுகள் மனத்தைக் கிளறின. வெறிச்சோடி கிடக்கும் தெருக்கள்; மயான அமைதி. யாரிடம் போய் விசாரிப்பது?

விடுமுறை நாட்களில் என் மகனும் அவனுடைய நண்பர்களும் எங்கள் தெரு மணலில் கிரிக்கெட் மட்டையால் அடித்துத் தூள் கிளப்பிக் கூப்பாடு போடுவதை நினைத்தேன்

ஏனையோர்களையும் கண்டிப்பதுண்டு. “ஏண்டா தெருவிலே கிடந்து கத்தூதியோ“ ஊட்டுக்குள்ளே போய் படிங்களே…” இதை அவர்கள் காதில் வாங்கி கொள்வதே இல்லை. எரிச்சலாகவே இருக்கும்.
அவர்கள் மீது.

அப்போது. அனந்தசயனம் காலனியில் ஏதேனும் தெருவில் பிள்ளைகள் கிரிக்கெட் விளையாடுகிறார்களா என்று கூர்ந்து நோக்க தோன்றியது. ஆள் அசைவுகள் அற்றுக் காணப்பட்ட தெருக்களைக் கண்டபோது. அங்குள்ள கட்டிடங்களில் மனித வாசம் இல்லையோ என்று தோன்றியது.

அகர வரிசையில் முதலில் ஏ-யை நோக்கி கால்கள் நகர்ந்தன. வீட்டு வாசல்களில் கண்ணை ஓட்டி நடந்தேன். பெயர்ப் பலகைகள் உள்ள வீடுகள். இல்லாத வீடுகள். எந்தத் தலையும் வெளியே
தெரியவில்லை. நடந்துகொண்டே இருக்கும்போது அந்தத் தெரு; அதன் மத்தியில் இரண்டு கிளைகள் விட்டிருந்தன- பி. சி. சற்று தயக்கத்திற்கு பின். பி- க்குள்ளே

“யம்மா…” ஓடி வாசல் பக்கம் சென்றேன். தலை வாசலில் உள்பக்கம் பெரியதொரு பூட்டு தொங்கி கொண்டிருந்தது.

“புரொபசர் சீனிவாசனின் வீடு…? ”

“தெரியாது.” அவள் வெடுக்கென்று உள்ளே ஏறிச்சென்று கதவைச் சாத்திவிட்டாள்.

“போறா அவ”. பி-வழியாகவே நடந்தேன் இரண்டு கால் எட்டிப்போட்டதும். பி-யிலிருந்து மீண்டும் இரு கிளைகள் – சி.டி.

ஒரே குழப்பம். எங்கு நுழைவது? சி -க்குள்ளே நுழைந்தேன்.

தெருவின் இருமருங்கிலும் கண்ட பெயர்ப் பலகைகள் அனைத்தையும் வாசித்துக்கொண்டே நடந்தேன். மூடப்பட்ட வாசல்களில் நாய்களின் படங்கள்.

மேலும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாத நிலை. காலனிக்கு உள்ளே நுழையும்போது கண்ட எச்சரிக்கைப் பலகை கண்ணை உறுத்தியது. பேராசிரியரின் வீட்டைக் கண்டுபிடிக்கும் வரை சிரமங்களை அடக்கிக்கொள்ளாமல் வேறு மார்க்கமில்லை என்ற முடிவுக்கு வந்தேன். கால்கள் முன் நோக்கி நகர்ந்தன. சற்றுத் தொலைவில் ஒருவர் இரும்பு வாசலைத் திறந்து ஹீரோ ஹோண்டாவை வெளியே உருட்டி இறக்கினார். அதைக் கண்டதும். மூச்சு வந்தது. அவரை
வெளியே விட்டு ஓர் அழகி வாசலை உள்ளே பூட்டால் பூட்டினாள்.

காலை பின்பக்கமாக எடுத்துப்போட்டு வண்டியில் உட்கார்ந்து அவர் வண்டியை ஸ்டார்ட் செய்யும் வினாடிகளுக்குள் ஓடி அவர் பக்கம் சென்றேன்.

“ஸார். புரொபசர் சீனிவாசன் வீடு?”

“தெரியாது.” என் முகத்தைக்கூட பார்க்கவில்லை.

சொன்னதைக் கேட்டாரோ? தெரியவில்லை. கரிப்புகையை என் மூக்கிற்குள் திணித்துக் கொண்டு பாய்ந்துவிட்டார். அந்தக் கரிப்புகையை சுவாசிக்க வேண்டியதாயிற்று. சுவாச நாளத்தில் மண்டிய அந்தப் புகையைச் சீந்தி சீந்தி வெளியேற்றிக் கொண்டு நடந்தேன். தெரு ஓரத்தில் மரம் முளைக்காத ஓர் இடத்தில் வைத்து என் தலை இரண்டாகப் பிளந்தது. டி.சி. இந்தப் பிளவு. என் பொறுமையின் தெளிநீரில் கல்லைப் போட்டு குளம் கலக்கியது.

டியுடைய நெஞ்செலும்பில் காலோங்கி மிதித்து நடக்கும் போது ஏதோ ஒன்றின் நெஞ்சை மிதிப்பதாகத் தோன்றியது. எனக்கு முன்னால் மல்லாந்து கிடப்பது எது? புரியவில்லை. எல்லா
நரம்புகளி–ருந்தும் ஊறி இறங்கிய சினம் திரண்ட காலால் ஓங்கி. ஓங்கி. மிதித்துக்கொண்டு அதன்மீது நடந்து கொண்டிருந்தேன். ஒரு பாலைவனப் பயணியின் களைப்பு கால்களில் உண்டானது. மூச்சிரைப்பும்.

இரு மாடிக் கட்டிடத்தின் நிழல் விழுந்த தெரு ஓரத்தில் அதன் சுவரில் சாய்ந்துநின்று காலாற்றினேன். கண்ணெதிரில் தெரிந்த வீட்டு எண்ணை வாசித்தேன். டி-89 காம்பவுண்டிற்குள் நின்றிருந்த வேப்ப மரம் தரையில் பரப்பிய குளிர்ச்சியில் பிரம்பு நாற்காலியில் அமர்ந்து ஒருவர் ஆங்கிலப் பத்திரிகையின் சிறப்பு மலர் வாசித்துக் கொண்டிருப்பது தெரிந்தது. அவர் மடி மீது
உட்கார்ந்துகொண்டிருந்த ஒரு ஜடை நாய்க்கு தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தார். காம்பவுண்டுச் சுவரில் உள்ள இரும்பு வாசலில் உட்பக்கம் பெரிய பூட்டு ஒன்று தொங்கிக் கொண்டிருந்தது.

இவரையே கேட்டுப் பார்ப்போம். மெல்ல வாசலை அடைந்தேன். அவிழ்த்து விட்டுருந்த மூன்று நாய்கள் உள்ளே பல திசைகளிறீருந்து குதித்து வந்தன. அவர் மடியில் உட்கார்ந்து கொண்டிருந்த நாயும் கால்களை தூக்கி வாசல் கம்பியில் வைத்துக் கொண்டு செவி வெடித்துப் பிளக்கும்படி குரைத்தன. என்னை கடித்துக் குதறுவதற்கு தடையாக இருந்தது. என் அளவு உயரமான இரும்பு கிரில் கேட்.

“சார்”. என் குரலைக் கேட்டு வெடுக்கென்று முகத்தை வாசலுக்கு நேராக அவர் திருப்பினார்.

“புரொபசர் சீனிவாசன் வீடு …?”

“தெரியாது”. முகத்தை மறுபடியும் சிறப்பு மலரின் வண்ணப்பக்கங்களுக்குள் புதைத்தார். வாசித்துவிட்ட வரி விட்டுப்போன எரிச்சலோடு என்னவோ. தலையைச் சொறிந்தார். அல்லது வேற்று முகம் கண்ணில் பட்டுவிட்ட வெறுப்போ? தெரியவில்லை. வாசலைத் திறந்து நாய்களை ஏவிவிட்டு என்னைக் கடிக்க வைக்கவில்லை. அவர் செய்த அந்த ஒரு நன்மைக்காக அவருக்கு நன்றி சொல்லத் தவறிவிட்டேன். விட்டில் காலில் கட்டிவிடப்பட்ட நேரத்தின் பின்னால் நான் நடந்துகொண்டிருந்தது.

டி-வழியாக. திக்குத் தெரியாமலும் முகங்கள் தெரியாமலும். தெரிந்த ஒரே முகம். ஆசைஒளிரும் என் மகனுடைய விடலை முகம்.

டி – யின் விலாவிலிருந்து இரு எலும்புகள் சுழன்று மீண்டும் தெருக்களாகப் பரிணமித்த திகைப்பில். அந்தச் சந்திப்பில் நின்று விட்டேன்; பி.ஏ .நாசம்! இந்த அனந்தசயனம் காலனிக்கு முடிவே இல்லையா? தெருக்கள் பின்னி கிடக்கும் இந்த காலனி. போய் போய் அலறும் கடல் திரைகள் நுரைகள் கக்கும் விளிம்பைத் தொட்டுவிடுமோ?

பச்சைக் குழந்தை கூட சொல்லித் தருவாங்கொ!! கண்ணில் எந்தக் குழந்தையும் வராத ஏக்கங்களைக் கொப்பளித்துக் கொண்டிருந்தது மனம்.

டி-யிலிருந்து பி-யை நோக்கி திரும்பும்போது தொண்டையில் தங்கியிருந்த கடைசித் துளி ஈரமும் வறண்டுவிட்டது. இப்போதைய தேவை பேராசிரியரின் வீடு அல்ல; வறண்டு சுருங்கும் தொண்டையை நனைத்து. குரலை உருவி எடுக்க ஒரு கோப்பை தண்ணீர். சட்டை வியர்வையில் பொதுமியிருந்தது. உச்சியிலிருந்த வடிந்த நீர். முகத்தில் சால்கள் கீறின. வேட்டி முந்தானையைத் தூக்கி முகத்தைத் துடைத்துக் கொண்டேன்.

நின்றிருந்த இடத்தில் காலில் குளிர்ச்சி அனுபவப்பட்டது. எதிர் வீட்டின் வெளி மடையிலிருந்து தண்ணீர் வடிந்து தெருவுக்கு வந்து கொண்டிருந்தது. அந்த வீட்டின் சுவரில் ஒட்டியிருந்த பெயர்ப்
பலகையைக் கண்கள் தடவின. எஸ்.கே. சங்கர் ஐ.ஏ.எஸ் (ரிடையர்டு) அரசை மக்களோடும். மக்களை அரசோடும் தொடர்புபடுத்தித் தேய்ந்துபோன கண்ணி. அந்த ஈரம் அந்த நெஞ்சிலுமிருக்குமென்ற நம்பிக்கை அந்த வாசல் அருகில் என்னை இழுத்தது. முற்றத்துத் தண்ணீர்க் குழாயில் பழுதடைந்த நல்லியி-ருந்து தண்ணீர் பீச்சி அடித்துக் கொண்டிருந்தது.

“சார்…”

சாய்வு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டிருந்த அவருடைய தலை வழுக்கையைச் சுற்றி நாலைந்து வெள்ளைப் பூனைகளின் பாதுகாப்பு .

“யாரது. என்ன வேணும்” ஓர் உயர் அதிகாரியின் கவுரவப் பார்வை. கேள்வியில் கடுமை. அந்தக் கூரிய பார்வையின் முனையில் நான் ஒரு திருடனாக விழுந்து தொங்கி நின்றேன்.

“குடிக்கக் கொஞ்சம் தண்ணி..”

“வேற எங்கயாவது கேட்டுப்பாரும்”

“சரி சார் புரொபசர்…”

தொண்டைச் சுளுக்கிலிருந்து உருவிய என் குரல் காதில் விழாமலிருக்க. நாற்காலியிலிருந்து எழும்பி அவர் உள்ளே போய் விட்டார். நான் திரும்பி நடந்து கொண்டிருந்தது பேய்வீடுகளை இருமருங்கிலும் தாங்கி நிóற்கும் ஒரு பாழ் பூமியில் நடக்கையில் வானத்தைப் பார்த்தேன். நேரம் தெரிந்து கொள்ள. சூரியனை வானத்தில் காணவில்லை. அது என் கண்களுக்குள்ளிருந்து எரிந்தது.
அனல் துப்பிய என் கண்ணெதிரில் அப்போது அங்கு வந்து கொண்டிருந்த கிழவரின் தோளில் இருந்தது ஒரு செவ்வாழைக் குலை. கிழவரின் கால் முட்டளவு புழுதி அப்பியிருந்தது.

செவ்வாழைக் குலை என் வயிற்றிற்குள் ஒரு பு-யைக் கட்ட விழ்த்து விட்டது.

“பாட்டா” என் பார்வை செவ்வாழைக் குலையைத் நக்கி எச்சில் வடித்தது.

“அம்மா” ஓர் ஆறுதலுடன் கிழவர் குலையைத் தோளிலிருந்து இறக்கி வைத்தார்.

“விய்க்கவா?”

“இல்லை.” கிழவரின் முகம் வாடி சோர்ந்து காணப்பட்டது. அவர் இரங்கிக் கேட்டார். புள்ளேய். கலக்டராபீசிலே வேலை பாக்குத பார்வதிக்க ஊடு எங்கே? சொல்லிதா மக்களெ. விடிஞ்சதிலிருந்து நாயா அலையுதேன். கம்ப்யூட்டர் சயன்ஸ் வகுப்பில் சேருவதற்காக விடியும் வரை விழித்திருந்து பாடம் படித்துத் தேறிய என் மகனுடைய முகம் என் மனசில் ஒரு உணர்ச்சிக் கொத்தளிப்பை உண்டு பண்ணியது.

மகனுக்காகப் பேராசிரியர் வீட்டை மேலும் அலைந்து கண்டுபிடிப்பதா அல்லது கிழவர் தேடி வந்த வீட்டைக் கண்டுபிடிக்க அவருக்கு ஒத்தாசை செய்வதா??

“ஏன் பேசல்லெ?”

“தெரியாது”.

ஆரட்ட கேட்டாலுமு தெரியாது தெரியாது. அவொ என் மாவொ புள்ளெ பேத்தி மேல் விலாசம் எழுதி தான்னு கேட்டபோ. வேண்டாம் பாட்டா. கேட்டா பச்சக்குழந்தைகூட சொல்லி தருமென்னு சொன்னா.

“என் தலை எழுத்தும் இதேதான்.”

“இங்க எங்கயாவது கொஞ்சம் தண்ணி குடிக்க கெடக்குமா பாட்டா?”

“இந்தப் பாலை வனத்திலே நீரூற்று ஏது பாட்டா”

“மவொ புள்ளெ பேத்தி குழந்தெ உண்டாயிருக்காணு அவளெ பாக்க இந்த குலையும் சொமந்துட்டே வந்த இந்த அவஸ்தெ”.

“பாட்டா”

“ஒனக்கு பைக்குதா?”

“என் பார்வையின் வாசகத்தைப் பார்வை மங்கிய கண்கள் வாசித்தன.”

“பசிக்குது”

“இன்னா இணிஞ்சு தின்னு”

“பேத்திக்கு….”

“அவொ கிடப்பா அங்கெ என்னெ நாயா அலைய வச்சுபோட்டா இல்லையா? “

மீதி பழத்தைத் தூக்கி தோளில் வைத்துக்கொண்டு கிழவர் நடந்தார். நான் அவரைப் பின் தொடர்ந்தேன். பின் தொடர்ந்து கொண்டிருந்த என் தலை குனிந்தது. ஒரு துக்கத்தின் நிழல் என்னை பின் தொடர்வது போல ஏதோ இறந்து கிடக்கும் துக்க மவுனம். அனந்தசயனம் காலனியைச் சூழ்ந்து கொண்டிருந்தது. என் மகனுக்கு என்ன பதில் சொல்வது!

“ஏய் பழக்காரா. பழம் என்ன விலை?”

குரல் கேட்டதும் கிழவர் நின்று விட்டார் நானும் கூட. கிழவர் அவள் நின்று கொண்டிருந்த மாடியைப் பார்த்தார்.

“பழமா? அம்பது பைசா?”

“பத்து பழம் குடும்.”

“அவள் இறங்கி வந்தாள். அவளது தோரணையை ஏற இறங்கப் பார்த்தார். கிழவர்.

“எவ்வளவு பணம் வச்சிருக்கா?”

“அஞ்சு ரூபா.”

“அஞ்சு ரூபாய்க்கு ஒரு பழம்தான் தருவேன். மனுசன் மாருக்குத்தான் அம்பது பைசாவுக்குக் குடுப்பேன். அம்பது பைசாயும் கொண்டு பழம் நொட்டவந்தியாக்கும். நாங்கொ ஏதாவது தெரியாத இடம் கேட்டா சொல்லுக்க உனக்கு நாக்கு எளவாது. அஞ்சு ரூபா பழத்தை அம்பது பைசாவுக்கு நொட்டிட்டு போவ ஒனக்கெல்லாம் நாக்க எளவும்”

“பாட்டா ஒண்ணும் பேசாதெங்கொ அரசு அதிகாரிகளும் மேல் மக்களும் வாழக்கூடிய இடம்”. நான் வேண்டினேன். “நாயை அவிழ்த்து விட்டுவிடுவார்களோ என்ற பயம் எனக்கு”.

“எவனானா எனக்கு என்னடா?” கிழவரின் முக பாவனை மாறிவிட்டது. முகத்தில் ரத்தச் சிவப்பு கண்களில் கோப முழக்கம் “நா அலஞ்ச அலச்சல் எனக்குதான் பிலே தெரியும்” கிழவர் என்னைக் கோபமாக முறைத்துக் கொண்டு விறுவிறுவென்று நடந்தார்.

“பாட்டா”

“சோலியெ பாருடா” – அலறல் கேட்டுத் திடுக்கிட்டேன்.

நெஞ்சு நிறைய பளுவை ஏற்றிக் கொண்டு டீக்கடைக்கு வந்தேன். டவுன் பஸ் வரும் திசையை நோக்கி ரோட்டோரத்தில் குந்தி உட்கார்ந்து கொண்டிருந்த கிழவரின் கையில் பழக்குலை இல்லை.

“பாட்டா பழம்?”

“இதிலே போன குழந்தெ புள்ளியளுக்குப் பிச்சுக் கொடுத்தேன்.”

டவுன் பஸ்ஸில் அருகருகே உட்கார்ந்து கொண்டிருக்கும்போது கிழவர் குளிர்ந்த குரலில் நிதானமாகச் சொன்னார்.

“மக்கா எங்கெ ஊருக்கு ரோடு இல்லை கேட்டியோ. ஒரு பாலம் போட்டாதான் ரோடு வரும். வள்ளத்திலெ ஏறி அக்கரை போய் ஒரு மைல் நடந்துதான்டேய் கார் ஏறணும். எங்களுக்குப் படிப்புமில்லை கேட்டியோ. இருந்தாலும் அந்தச் சுற்று வட்டாரத்திலெ ஆரு. எவரு. எங்கெ எங்கெ தங்கியிருக்காங்கென்னு நாங்கொ எதுக்கு தெரிஞ்சு வச்சிருக்கோமென்னு இப்பம் உனக்கு மனசிலாச்சா டேய்?”

டவுன் பஸ் இறங்கிய இடத்தில் இருவரும் இருதிசைகளாகப் பிரிந்தோம்.

“பாயின்ட் டூ பாயின்ட்” பஸ்ஸின் கருப்பைக்குள் நான் சுருண்டேன். பஸ் வந்த வழியே இரைந்து பாய்ந்து அவிழ்க்க. நான் கிழவரின் பின்னால் ஓடிக்கொண்டு இருந்தேன்.

இரவு வீட்டில் எல்லோரும் தூங்கும் நேரத்தில் விழித்துக் கொண்டிருந்த மகன் ஓடி வந்து ஆவலோடு கேட்டான்.

“வாப்பா புரொபசரை பாத்துச் சொன்னீளா?”

அவன் முகத்திலிருந்து என் முகத்தை திருப்பிக் கொண்டேன். நான் என் அறையை நோக்கி நடக்கும்போது. பதிலுக்காக அவன் என்னைப் பின் தொடாந்து வந்தான்.

“சொன்னேன்” சொல்லியபோது ஒரு காரை முள்முனை என் இதயத்தில் துளைத்து ஏறியது. மகிழ்ச்சியால் ஒரு பாட்டை முனகிக் கொண்டு என் மகன் படுக்கையில் விழுந்தான்.

மேஜை வலிப்பைத் திறந்தேன். பேராசிரியர் சீனிவாசன் அவருடைய முகவரி எழுதித் தந்த காகித துண்டைத் தேடி எடுத்தேன்.

“டி-90 அனந்தசயனம் காலனி.”

மூன்று நாய்களை அவிழ்த்து விட்டிருந்த அறிவுஜீவியின் வீட்டை ஒட்டிய இருமாடிக் கட்டிடம் அது.

***

நன்றி: சிறுகதைகள்.காம்

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்